Wednesday 9 October 2013

உழைப்பு!


ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களும், மனைவி ஹாஜரா அம்மையாரும், பால்குடி மாறா பிஞ்சுக் குழந்தை இஸ்மாயீலும் மலைகள் நிரம்பிய மக்காவை நோக்கி பயணித்தனர். ஹஸ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டி.

மனித வரலாற்றிலேயே திருப்புமுனையாக அமைந்த மாண்புமிகு பயணமாக இருந்தது அது. மக்காவை அடைந்ததும் ஒரு மொட்டை மலைக்குன்றுக்கருகே ஹாஜரா அம்மையாரையும், குழந்தை இஸ்மாயீலையும் விட்டு விட்டுச் செல்லுமாறு ஜிப்ரயீல் பணித்தார். ஆளே இல்லாத அந்தப் பாலை வெளியில் இப்றாஹீம் (அலை) ஒரு சிறிய பந்தல் போல குடில் அமைத்து இருவரையும் அங்கே அமர்த்தி விட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள்.

சிறிதளவு பேரீச்சம் பழங்களும், தண்ணீரும் ஹாஜரா அம்மையாரின் கையில் இருந்தன. இது அல்லாஹ்வின் கட்டளை என்றறிந்த அம்மையார் அந்த அல்லாஹ் தங்களைக் கைவிட மாட்டான் என்று தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டார்.

கையிலிருந்த உணவும், தண்ணீரும் தீர்ந்த பின்னர் என்ன செய்வதென்று அறியாது விழித்த ஹாஜரா அம்மையார், குழந்தையின் அழுகுரல் கேட்டு விக்கித்து நின்றார். தண்ணீர் தேடி ஸஃபா மலைக்குன்றை நோக்கி ஓடினார். அங்கே ஒன்றும் இல்லாததால் மர்வா குன்றை நோக்கி ஓடினார். இப்படியே ஏழு முறை ஓடிய பிறகு ஒரு மலக்கின் அசரீரி ஒலி கேட்டது. குழந்தையின் காலடியில் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடுவதாக அந்த அசரீரி கூறியது. அந்த ஊற்றே ‘ஸம்ஸம்’ என்றறியப்படுகிறது.

இந்த ஓட்டம் ‘ஸஈ’ என்ற பெயரில் இன்று ஹஜ் கிரியைகளில் ஒன்றாகச் செய்யப்படுகிறது. ஸஈ என்ற அரபிப் பதத்திற்கு ஓட்டம் என்ற பொருளை விட, ‘உழைப்பு’ என்ற பொருள்தான் பொருத்தமானது.

ஆம். தாகத்தில் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைக்கு தண்ணீர் கிடைப்பதற்காக பரிதவித்த பெற்ற தாய் செய்த உழைப்பு. ஏழு முறை செய்த உழைப்பு.

உடல் ரீதியாகவோ, மனோரீதியாகவோ உழைப்பு செய்யாத எந்த மனிதனுக்கும் எதுவும் கொடுக்கவியலாது என்பது இறைநியதி. உழைப்பு இல்லாமல் ஒருவருக்கு ஒன்று கிடைக்கிறதென்றால் அவர் அதிர்ஷ்டசாலி. ஆனால் அதே மனிதருக்கு வேறு பல விஷயங்கள் கடுமையான உழைப்புகளின் பலனாகவே கிட்டியிருக்கும்.

இதைத்தான் திருக்குர்ஆனும் மனிதனுக்கு அவன் முயற்சி செய்து உழைத்ததைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை என்று கூறுகிறது.

சிரமங்களும், கவலைகளும், உழைப்பும் இப்பூவுலகில் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் அமைப்புகளாகும். உடல் ரீதியாகவோ, மனோ ரீதியாகவோ கஷ்டப்படாமலோ, சிரமப்படாமலோ இவ்வுலகில் யாரும் வாழ முடியாது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதற்கு சாட்சி பகரும்.

அனைத்து சிரமங்களையும், கஷ்டங்களையும் பட்டு, இம்மைக்கும் மறுமைக்கும் கடுமையாக உழைத்துதான் ஒரு மனிதன் இவ்வுலகில் மரணித்து, நாளை மறுமையில் அல்லாஹ்வின் திரு சன்னிதானத்தில் சங்கமம் அடைய வேண்டும். இதுதான் இறைநியதி.

MSAH

2 comments: