Wednesday 23 December 2020

அல்லாஹ்வின் அருள்மொழி!

உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் பேசப்படுகின்றன. மொழி என்பது கலாச்சாரம், வாழ்க்கை ஆகியவற்றின் கண்ணாடி போன்றது. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் அனைத்தையும் பிரதிபலிக்கின்ற ஊடகம்தான் மொழி.
அல்லாஹ் மனிதனுக்கு அளித்துள்ள ஒரு மகத்தான அருள் இந்த மொழி என்பது. இதனை அல்லாஹ் இப்படிக் கூறுகின்றான்: “அளவற்ற அருளாளன். இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.” (55:1-4)
தான் நினைப்பதைப் பிறருக்கு எத்தி வைக்கும் ஆற்றலை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கினான். தான் விரும்பியதை, தான் வெறுப்பதை, தனக்கு தேவையுள்ளதை என்று எல்லாவற்றையும் மனிதன் பிறருக்குத் தெரிவிப்பதற்கு அல்லாஹ் பல்வேறு மொழிகளை மனிதனுக்கு நல்கியுள்ளான்.
இந்த மொழியின் மூலம் மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். பந்தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். ஒருவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், நாட்டில் எந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்lபதை அவன் பேசும் மொழியை வைத்து, அந்த மொழியை அவன் உச்சரிக்கும் விதத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
உலகிலுள்ள மொழிகளில் சிலவற்றுக்கு மொழிச் செறிவும் இலக்கியச் செறிவும் அதிகம் உண்டு. மிகத் தொன்மையான தமிழ் அதில் ஒன்று. அதேபோன்று அனைத்து சிறப்புகளும் அமைந்துள்ள மொழிதான் அரபி.
நமது தமிழைப் போலவே அரபியும் ஒரு செம்மொழி. அதன் சொல்வளம் வியக்கத்தக்கது.
ஆண்டு என்பதற்கு 24 சொற்களையும்
ஒளி என்பதற்கு 21 சொற்களையும்
இருள் என்பதற்கு 52 சொற்களையும்
கதிரவன் என்பதற்கு 29 சொற்களையும்
நீர் என்பதற்கு 170 சொற்களையும்
ஒட்டகம், வாள் போன்ற வார்த்தைகளைக் குறிக்க 1000 சொற்களையும்
கொண்டுள்ளது அரபி.
“நாகரிக உலகின் மத்திய காலக்கட்டத்தில் பல நூற்றாண்டுகள் அரபி ஒரு கற்பிக்கும் மொழியாக, கலாச்சார மொழியாக, முற்போக்குக் கருத்துகளை முன்னிறுத்திய மொழியாக விளங்கியது. 9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை தத்துவம், மருத்துவம், வானியல், புவியியல் பற்றிய அநேகப் படைப்புகள் அரபியில் படைக்கப்பட்டது போல் வேறு எந்த மொழியிலும் படைக்கப்படவில்லை” என்கிறார் கீழ்த்திசை மொழியியல் வல்லுநர் பிலிஃப் கே. ஹிட்டி.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அரபி மொழியோடு அவனுக்கு ஆழமான தொடர்பு இருக்கவேண்டும். ஏனெனில் இது அவனது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு, வாழ்வின் அனைத்துத் திசைகளுக்கும் வழிகாட்டியாக அவன் தேர்ந்தெடுத்துள்ள மார்க்கமான தீனுல் இஸ்லாமை அல்லாஹ் மனிதனுக்குக் கற்றுக் கொடுப்பது அரபி மொழியில்தான்.
(அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்தக் குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
இன்று 26 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபி இருக்கிறது. சுமார் 30 கோடி மக்கள் அரபி மொழியைப் பேசுகின்றனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் அரபியும் ஒன்று. சின்னஞ் சிறிய வார்த்தைகளில் பென்னம் பெரும் கருத்துகளைச் சொல்லும் தனிச் சிறப்பு மிக்க மொழியாக அரபு மொழி விளங்குகிறது.
(குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும். இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)
இந்த அற்புத மொழியைக் கற்பது நமது கடமை என்றும்
அதனைக் கற்றால்தான் நம்முடைய தீனை
முழுமையாகக் கற்க முடியும் என்றும்
அதனை நமது வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஒரு முஸ்லிம் எண்ணவேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். அரபி மொழியை முழுமையாகக் கற்கவேண்டும்.
டிசம்பர் 18 - சர்வதேச அரபிமொழி தினம்!