Tuesday 15 November 2016

கரை சேர்க்கும் கப்பலோட்டிகள்!


1857ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் “சென்ட்ரல் அமெரிக்கா” என்ற அமெரிக்க கப்பல் வட கரோலினா கடலில் மூன்று நாள் சூறாவளியில் சிக்கி அலைக்கழிந்தது. அது தறி கெட்டு மூழ்கத் தொடங்கிய போது அதிலிருந்த 152 பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக உயிர் காக்கும் படகுகளில் ஏற்றி அனுப்பினார் அந்தக் கப்பலின் மாலுமி.

கப்பலில் எஞ்சியுள்ள 400 பயணிகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் அந்த மாலுமியும், இதர ஊழியர்களும் தவித்தனர். அந்தக் கப்பலோட்டிகளுக்கு தங்களது உயிரும் உடலும் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டில் தங்களின் வருகைக்காக காத்திருக்கும் வயதான பெற்றோரின், இளம் மனைவியரின், பால் வடியும் குழந்தைகளின் முகங்களும் நினைவிற்கு வரவில்லை. கப்பலிலுள்ள 400 பயணிகள்தான் நினைவில் நின்றார்கள். ஆனால் ஹடீராஸ் முனையில் அந்த கப்பல் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மூழ்கி விட்டது.

முடிந்த வரை காப்பாற்றி விட்டோம், இனி நாம் தப்புவதில் தவறில்லை என மாலுமியும், சக கப்பலோட்டிகளும் முடிவு செய்து நீந்தி வெளியேறி இருந்தாலும் உலகம் அவர்களை பழித்திருக்காது. 44 வயதே நிரம்பிய அந்தத் தலைமை மாலுமியின் பெயர் கமாண்டர் வில்லியம் லூவிஸ் ஹெண்டன் (William Lewis Herndorn).

ஒரு கப்பல் பயணம் தொடங்கிவிட்டால் அதன் முழு பொறுப்பும் அந்த மாலுமிக்கும், அதில் பணி புரியும் சக ஊழியர்களுக்குமே சாரும். அதே போன்றுதான் சமூக சேவகர்களும்.

சமூகம் என்ற கப்பலை சுமூகமாக ஓட்டிச் சென்று, காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூக சேவகர்களுக்கு இருக்கிறது.

சமூக சேவகர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். இப்படி பல திறமை உடையவர்களை, பல கலைஞர்களை, பலதரப்பட்ட மக்களை ஒரே குழுவாக ஆக்கி, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சமூகத்தின் இடர்பாடுகளை நீக்கி இதன் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

அந்தக் குழு கட்டுக்கோப்பாக செயல்படுவதற்கு, அனைத்து சமூக ஊழியர்களும் ஓர் ஒழுங்குடன் பணியாற்றுவதற்கு, அவர்களை சமுதாய முன்னேற்றத்தின்பால் அழைத்துச் செல்வதற்கு ஓர் உறுதியான தலைமை தேவை. அந்தத் தலைமையும், ஊழியர்களும் சேர்ந்து ஒரு குழுவாக மாறி செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழு அதன் இலட்சியத்தை அடையும். இதனைத்தான் இஸ்லாமும் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (சூரா அன்னிசா 4:59)

ஒரு கப்பலை மாலுமி எப்படி செலுத்துவாரோ அதே போன்று அந்தக் குழுவை தலைமை வழிநடத்திச் செல்லும். அந்தத் தலைமைக்குக் கீழ் கப்பலின் ஊழியர்களாக சமூக ஊழியர்கள் செயல்பட வேண்டும். கப்பல் கடலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று தன் இலக்கை அடைவதற்கு அந்த மாலுமியும், அதன் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகப் பணியாற்றுவது போன்று இவர்களும் பணியாற்ற வேண்டும்.

கடல் சீற்றம், புயல், கொட்டும் மழை என்பன போன்ற அமைதியற்ற சூழல் இந்தக் குழுவுக்கும் நேரிடலாம். இத்தகைய காலகட்டங்களில் இறையச்சமும், கூர்மதியும், துணிவும், தன் இழப்பை துச்சமென கருதும் தீரமும் கொண்ட மாலுமிகளாலும், கப்பலின் ஊழியர்களாலும்தான் சமூகம் என்ற கப்பலைக் காப்பாற்ற முடியும்.

கப்பல் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். அவர்களின் குணம், திறமை, மனோநிலை, ஆர்வம் எல்லாம் மாறுபடும். அவர்களெல்லோரையும் அரவணைத்துச் சென்று, கப்பலைக் கரை சேர்ப்பதுதான் மாலுமிகளின் பணி.

நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த தோழர்களும் ஒரே மாதிரியாக இருந்திடவில்லை. பலவிதத்தில் மாறுபட்டு நின்றார்கள். வட துருவங்களும், தென் துருவங்களும் அங்கே இருந்தன. நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினாலும் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அபூபக்கர் (ரலி) போன்றோரும், சில வேளைகளில் மனக் கஷ்டமும், நிராசையும் அடைந்த உமர் (ரலி) போன்றோரும் அங்கே இருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் பேரப் பிள்ளைகளை முத்தமிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘‘எனக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இன்று வரை நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” எனக் கூறிய நாட்டுப்புறத்து அரபியைப் போன்றோரும் அங்கே இருந்தனர். முதலிரவில் தன் மனைவியிடமிருந்து பிரிந்து சென்று போர்க்களத்தில் ஷஹீதான நபித்தோழர் ஹன்ழலா (ரலி) போன்ற வீரத் தியாகிகளும் அங்கே இருந்தனர். இஸ்லாத்திற்காக கொடூரமான சித்திரவதைகளைத் தாங்கிய பிலால் (ரலி) போன்ற பொறுமையின் சிகரங்களும் அங்கே இருந்தனர்.

இப்படி அத்தனை வித்தியாசமான குணங்களையும் உட்கொண்டு, அவர்களுடன் தோளோடு தோள் நின்று, பொறுமையுடன் அவர்களை வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதாவது, அவர்களைத் தூய்மைப்படுத்தி பண்படுத்தினார்கள். வெவ்வேறு நோக்கத்தில் இருந்தவர்களை ஒரே இலட்சியத்தின்பால் இட்டுச் சென்றார்கள்.

இப்படிப்பட்ட தலைமையும், சமூக ஊழியர்களும் கப்பலோட்டிகளாக மாறி சமூகம் என்ற கப்பலை முன்னேற்றம் என்ற கரையில் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும்.

விடியல் வெள்ளி  ஜனவரி 2015 (மனதோடு மனதாய்...)

ஆக்கமும், தூக்கமும்!


அறிஞர் அண்ணாவின் வருகைக்காக இரவு நேரத்தில் ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்கள் காத்திருந்தனர். அண்ணாவின் வருகை காலதாமதம் ஆனதால் அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். அண்ணா வந்தார். சில வினாடிகளாவது பேசுங்கள் என்றனர்.

மக்கள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணா இவ்வாறு பேசினார்: “காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, உதயசூரியனுக்கு போடுங்கள் முத்திரை…”

அண்ணாவின் பேச்சுத் திறனை வெளிப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல இது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த மக்கள் பத்தரை மணியாகும்பொழுதே தூங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு முன்பே உறங்கும் வழக்கம் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் பத்தரை மணிக்கு இப்படி யாராவது உறங்குவார்களா? 11 மணிக்கு முன்பு உறங்குவது என்பதை யோசிக்கக்கூட முடியாத காலத்தில் இருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற பழக்கம் இன்று மாறி விட்டது.

இந்தக் கலாச்சார ஓட்டத்தில் முஸ்லிம்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்கள்.

ஆம்! இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் இரவு மிகவும் தாமதமாக உறங்குகிறார்கள். இரவு மிக நீண்ட நேரம் டிவி அல்லது இண்டர்நெட், மொபைல் போன் என்று நேரம் கழிகிறது. ஃபஜ்ரு தொழுதோ, தொழாமலோ அதிகாலையில் தூங்குகிறார்கள்.

களைப்பாறி அமைதி பெறுவதற்காகவே இரவை அமைத்துள்ளதாக அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இஸ்லாம் ஒன்றைக் கற்றுத் தந்தால் அதில் அனைத்து நன்மைகளும் அடங்கியிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம். அந்தப் புனித இஸ்லாம் நம்மை முற்கூட்டியே உறங்கி முற்கூட்டியே விழிக்கச் சொல்கிறது. அன்றாடப் பணிகளை அதிகாலையிலேயே ஆரம்பிக்கச் சொல்கிறது.

இஷாத் தொழுகைக்குப் பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரீ)

நம்மில் எத்தனை பேர் நபிகளார் கற்றுத் தந்த உறங்கும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கிறோம்?

உறங்கும் ஒழுங்குமுறைகள்

1. அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் தூங்குவதற்கு சென்ற சமயம் நபியவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்களோ எழும்ப எத்தனித்தோம். “உங்கள் இடத்திலேயே இருங்கள்” எனக் கூறிவிட்டு வந்து எங்களுக்கிடையில் அமர்ந்தார்கள். அவர்களின் கால் பாதத்தின் குளிர் எனது நெஞ்சில் உணரும் அளவுக்கு (நெருக்கமாக) அமர்ந்தார்கள். பின்பு, “வேலையாளை விட மிகச் சிறந்ததொன்றை உங்கள் இருவருக்கும் சொல்லட்டுமா?’‘ எனக் கேட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் படுக்கை விரிப்புக்குச் சென்று தூங்கப் போனால், 33 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும், 33 தடவை 'அல்ஹம்துலில்லாஹ்' என்றும், 34 தடவை 'அல்லாஹு அக்பர்' என்றும் கூறுங்கள். இதுவே வேலையாளை விட உங்களுக்கு சிறந்ததாகும்” எனக் கூறினார்கள். (புகாரீ)

2. ''நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரீ 3275)

3. நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின் னாஸ்'' ஆகிய (112, 113, 114) மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (ஆயிஷா (ரலி), புகாரீ 5017)

4. தூங்கும் முன் “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” (இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்) (புகாரீ 6325) என்ற துஆவை ஓத வேண்டும்.

5. “நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக்க, வஃபவ்வள்து அம்ரீ இலைக்க, வஅல்ஜஃது ளஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வரஹ்பத்தன் இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க, அல்லாஹும்ம ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த வபிநபிஇய்யிக் கல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (பராஃ இப்னு ஆஸிஃப் (ரலி), புகாரீ 247)

''இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாவார். ஃபஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போலாவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உஸ்மான் (ரலி), முஸ்லிம்)

நாம் இரவு தூங்கினால் கூட அதனையும் அல்லாஹ் நமக்கு நன்மையாக மாற்றி விடுகின்றான். ஒன்று தூய்மையாக்குகின்றான். இன்னொன்று இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையை வழங்குகின்றான். அப்பேற்பட்ட அருளாளனான அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நாம் மாறு செய்யலாமா?

விடியல் வெள்ளி  அக்டோபர் 2014 (மனதோடு மனதாய்...)

Sunday 6 November 2016

அதிகாலையில் எழுதலும், தொழுதலும்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி அன்னை ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் ரிஸ்க் என்னும் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் ரிஸ்க் எனும் வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள். அண்ணலார் இஷாவுக்குப் பிறகு உலக காரியங்கள் ஒன்றிலும் ஈடுபடாமல் உடனே உறங்கிவிடுவார்கள். தஹஜ்ஜுதுக்கு எழுந்து விடுவார்கள். ஸுபுஹு தொழுகைக்குப் பிறகு அவர்கள் தூங்கியதே இல்லை. தங்கள் குடும்பத்தாரையும் அவ்வாறு தூங்காமல் தடுத்துள்ளார்கள். அதற்கோர் உதாரணத்தைத்தான் மேற்கண்ட நபிமொழியில் கண்டோம்.

இரவு தாமதமாக உறங்குவதால் என்னென்ன தீய விளைவுகள் உடலுக்குள் ஏற்படுகின்றன என்று இன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேபோன்று அதிகாலையிலேயே தங்கள் பணிகளைத் துவங்குபவர்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் அண்ணலார் சொல்லியிருக்கிறார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்: “வானவர்களே! என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள் மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் அளிப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்பு கொடுப்பேன்.” (அஹ்மத்)

ஃபஜ்ரு தொழுகை பற்றி அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கண்ட உண்மைகள்: 1. அதிகாலையில் எழும் மனிதனை எந்த அலைவரிசையும் குறுக்கீடு செய்வதில்லை. அந்தச் சமயத்தில் உலா வரும் தூய்மையான காற்றுக்கு “பிரபஞ்சக் காற்று” என்று பெயர். அதற்கு ஆற்றல்கள் பல இருக்கின்றன. ஆயுளைக் கூட்டும் வல்லமை அந்தக் காற்றுக்கு உண்டு. 2. தன் மீது தனக்கே நம்பிக்கை ஏற்படும். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்காது. அவர்களின் அன்றைய பணிகள் வெற்றி பெறும்.

“நீங்கள் அதிகாலையில் எழுந்தால் உங்களுக்கு அன்று கிடைப்பது இரண்டு நாள்” என்று சொல்வார்கள். இதைத்தான் “இரட்டை நாள் தியரி” என்பார்கள். பறவைகள் அதிகாலையிலேயே எழும்பி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். அதேபோன்று அதிகாலையிலேயே எழும் மனிதன் சுறுசுறுப்பாக தன் பணிகளைத் துவக்குவான். அவனது முழு ஆற்றலும் அப்பொழுது வெளிப்படும்.

நேரம் செல்லச் செல்ல அவனுக்கு சோர்வு ஏற்படும். நண்பகல் வேளையில் அவன் முழுவதுமாக சோர்ந்திருப்பான். அந்த நேரத்தில் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்தால் அவன் மீண்டும் உற்சாகம் பெறுகிறான். பிற்பகலிலிருந்து அவன் புதிய ஒரு நாளைத் துவக்குகிறான். ஆக, ஒரு நாள் என்பது இரண்டு நாட்கள் போன்று செயல்படுகிறது. இதனை அன்றே அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் செய்து காட்டினார்கள். நண்பகல் வேளையில் அவர்கள் சிறிது நேரம் உறங்குவார்கள். இந்தத் தூக்கத்திற்கு “கைலூக்கா” என்று பெயர். இந்த நேரத்தில் உறங்குவது ஸுன்னத் ஆகும்.

அண்ணலார் எங்கு செல்வதாக இருந்தாலும் அதிகாலையில்தான் புறப்படுவார்கள். அனைத்துப் போர்களுக்கும் அதிகாலையிலேயே புறப்பட்டார்கள். அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தையும் அறிவையும் அள்ளித் தரும். அதிகாலையில் காற்று மண்டலத்தில் ஓஸோன் கலந்திருக்கும். அந்த நேரத்தில் மலர்களின் சுகந்தமும், பனிக்காற்றில் உள்ள இரும்புச் சத்தும் மூச்சுக் காற்றில் கலந்து சுவாசிக்கப்படும்போது மூளைக்கு நிறைய ஆக்சிஜன் செல்லும். இரத்த ஓட்டம் சுத்தம் அடையும். நினைவாற்றல் பெருகும். உள்ளம் உற்சகாம் அடையும்.

விடியல் வெள்ளி  நவம்பர் 2014 (மனதோடு மனதாய்...)

கடன் வாங்கலும் கொடுக்கலும்


முன்னுரை

பேராசைப்பட்ட மனிதன் பணத்திற்கு பின்னால் ஓடுகிறான். மனோ இச்சைகளுக்கு அடிமையாகி தான்தோன்றித்தனமாக திரிகிறான். எந்த வழியிலாவது சம்பாதித்து எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்று துடிக்கிறான். இப்படிப்பட்ட மோசமான காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” (புகாரீ)

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் அடிக்கின்ற அலையில் முஸ்லிம்களும் அடித்துச் செல்லப்படுகின்றனர். தங்களது உண்மையான இலட்சியங்களை மறந்து, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை எவை, தடுக்கப்பட்டவை எவை என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதில் பட்டதுதான் கடன் வாங்குவதும், கடனில் மூழ்குவதும். இஸ்லாம் பொய், மோசடி, ஏமாற்றுதல், கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருத்தல், ஹராம், ஹலால் போன்றவற்றிற்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை நாம் பார்க்கும்பொழுது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒரு முஸ்லிம் தனது வருமானத்தின் வழிகளையும், செலவுகளின் வழிகளையும் அறிந்திருக்க வேண்டும்.

நமது வருமானம் ஹலாலான வழிகளில் இருக்கிறதா? செலவுகள் ஆடம்பரம், அனாச்சாரம் இல்லாத அனுமதிக்கப்பட்ட வழியில் இருக்கிறதா? நமது வாக்குறுதிகளை சரியாக பின்பற்றுகிறோமா? ஒப்புக்கொண்டபடி நாம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கிறோமா?

இஸ்லாம் இவை குறித்து கூறியதைப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் கூறும் வணிக நெறிமுறைகள்

وَاَحَلَّ اللّٰهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبٰوا‌ؕ

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்; வட்டியைத் தடை செய்திருக்கிறான். (2: 275)

வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் திருப்திப்பட்டு செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ۚ

உங்களில் ஒருவருக்கொருவர் இசைந்து ஏற்படுத்திக் கொள்கிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! (சூரா அந் நிசா 4:29)

நேர்மையாக வியாபாரம் செய்யும் வியாபாரிக்குரிய அந்தஸ்து என்ன தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களுடனும் இருப்பார்.” (திர்மிதீ)

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நல்லவன், அவன் நல்லவற்றையே ஏற்றுக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் எந்த விடயங்களை தூதர்களுக்கு ஏவினானோ அந்த விடயங்களையே முஃமின்களுக்கும் ஏவினான்.

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ؕ 

“தூதர்களே! நல்லவற்றைச் சாப்பிட்டு நல்லமல் புரியுங்கள்” (23:51) என்றும்,

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ

“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்” (2:172) என்றும் அல்லாஹ் கூறினான்.

பின்னர் நீண்ட பிரயாணத்தில் ஈடுபட்ட ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டு, அவன் உடலெங்கும் புழுதி படிந்த நிலையிலும், பரட்டைத் தலையுடனும், வானத்தின் பக்கம் தனது கைகளையுயர்த்தி, ‘என் இறைவனே! என் இறைவனே!’ என அழைக்கிறான். ஆனால் அவனது உணவு ஹராம், பானம் ஹராம், ஆடை ஹராம். ஹராமிலேயே அவன் போஷிக்கப்பட்டிருக்கின்றான். அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (அஹ்மத், முஸ்லிம், திர்மிதீ)

இந்த ஹதீஸ் “அல் தய்யிப்” என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தய்யிப் என்றால் தூய்மையானதும், நல்லதும். தூய்மையும், நல்லதும் நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கடைப்பிடிக்கப்படவேண்டியவை. முஸ்லிம்கள் என்ற நிலையில், நாம் உணவிலும், உடையிலும் ஹலாலைப் பேண வேண்டும். நமது பேச்சு சுத்தமாக இருக்க வேண்டும். நமது எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும்.

4. நல்ல அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேற்கண்ட ஹதீஸ் கூறும் அடுத்த அம்சம் ஏற்றுக்கொள்ளப்படுதல். அல்லாஹ் நல்லதிலிருந்தும், தூய்மையானவற்றிலிருந்தும் வந்ததை மட்டுமே ஏற்றுக்கொள்கிறான்.

ஒரு முறை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “ஸஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு 40 நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்: “பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது. (மிஷ்காத்)

5. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் நரகத்திற்கே செல்வான்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமில் வளர்ந்த சதை சுவனம் செல்லாது. ஹராமில் வளர்ந்த சதை நரக நெருப்புக்கே உரித்தானதாகும்.” (அஹமத், தாரிமீ, பைஹகீ)

அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராம் புகட்டப்பட்ட உடல் சுவனத்தினுள் நுழையாது.” (பைஹகீ)

6. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
7. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
8. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
9. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
10. ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

எடுத்துக்காட்டாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட்டாலும் இன்னும் ஏராளமான தீமைகள் ஹராமான வருவாயில் உள்ளன. எனவேதான், ஹராமை விட்டும் தவிர்ந்திருக்கும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) உருவாக்கிய உன்னத சமுதாயம்

நபி (ஸல்) அவர்களுடன் வழக்கமாக ஃபஜ்ர் தொழுகையில் ஒரு நபித்தோழர் கலந்துகொள்வார். அவர் சில தினங்களாக ஃபஜ்ர் ஜமாஅத் முடிந்தவுடனே வேகவேகமாக கிளம்பிச் செல்கிறார். இதனைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ஒருமுறை இதுகுறித்து கேட்டார்கள்.

அதற்கு அந்த நபித்தோழர் இவ்வாறு பதில் கூறினார்: “அல்லாஹ்வின் தூதரே, எனது வீட்டோடு இணைந்து ஒரு பேரீத்தம் பழத் தோட்டம் உள்ளது. அதில் ஒரு மரம் எனது வீட்டு முற்றத்தை நோக்கி சாய்ந்துள்ளது. அதன் மேல் பகுதியிலுள்ள பழுத்த பழம் என் வீட்டின் முற்றத்தில் விழும். என் குழந்தைகள் காலையில் தூங்கி கண் விழிக்கும்பொழுது இந்தப் பழத்தைக் கண்டால் அறியாமல் எடுத்து சாப்பிட்டு விடுவார்கள். ஆதலால் அவர்கள் கண் விழிக்கும் முன்பு நான் ஓடிச் சென்று அந்தப் பழங்களையெல்லாம் பொறுக்கி மாற்றி வைப்பேன். அதனால்தான் நான் ஜமாஅத் முடிந்தவுடன் எழுந்து ஓடோடிச் செல்கிறேன்.”

ஹலால், ஹராம் விடயத்தில் நபித்தோழர்கள் காட்டிய பேணுதலைப் பார்த்தீர்களா? ஆனால் நாம் நம்முடைய விடயத்தில், நம் குடும்பத்தினரின் விடயத்தில் இத்தகைய பேணுதலைக் காட்டுகிறோமா? நம்முடைய உடலிலோ, நம் குடும்பத்தினரின் உடலிலோ எள்ளளவும் ஹராம் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கிறோமா?

நமது அன்றாட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு உள்ளன? நமது கொடுக்கல்-வாங்கல்களில், நமது வியாபாரங்களில் நாம் பொய் சொல்கிறோமா? பொருட்களை மிகைப்படுத்திக் கூறி விற்கிறோமா? பொருட்களின் குறைகளை மறைத்து விற்கிறேமா? கலப்படம் செய்கிறோமா?

நமது வருமானங்களின் வழிகளில் ஏமாற்று, மோசடி இருக்கின்றனவா? பிறரது பணம் நமது பொருளாதாரத்தோடு கலந்து கிடக்கிறதா? பைத்துல்மால், மஸ்ஜித், நிறுவனங்கள் போன்றவற்றின் பணங்கள் நம் கையில் புரளும்பொழுது மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்கிறோமா?

அனாதைகளின் சொத்துகளுக்கு பாதுகாவலராக இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருக்கிறோமா? வாரிசு சொத்துகளை பாகப்பிரிவினை செய்யும்பொழுது நீதமுடன் நடந்துகொள்கிறோமா? நமது நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும்பொழுது நேர்மையாக நடந்துகொள்கிறோமா?

மத்யன்வாசிகளின் இழிநிலை

வரலாற்றில் ஒரு சமுதாயம் முழுமையாக அழிக்கப்பட்டது. எதற்காக? நம்பிக்கை மோசடி, பொருளாதார மோசடி செய்ததற்காக அந்தச் சமுதாயத்தை அல்லாஹ் தடம் தெரியாமல் அழித்தான். அதுதான் மத்யன்வாசிகள்.

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ
كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌ ؕ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْد

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தைக் கொண்டு நாம் காப்பாற்றினோம். அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக் கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! (11:94,95)

சினாய் மலைக்கு கிழக்கு பாகத்தில் வாழ்ந்தவர்கள்தாம் மத்யன்வாசிகள். ஷுஐப் (அலை) அவர்களை அல்லாஹ் இந்த மக்களுக்கு நபியாக அனுப்பினான்.

இந்த மக்கள் அளவையிலும், நிறுவையிலும் பிறரை ஏமாற்றி வாழ்ந்தார்கள். சிலை வணக்கம் புரிந்தார்கள். ஷுஐப் (அலை) அவர்கள் அந்த மக்களிடம் கொடுக்கல்-வாங்கல்களில் நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார். பல காலமாக அவர் செய்த உபதேசங்களை அவர்கள் உதாசீனப்படுத்தினார்கள்.

ஷுஐப் (அலை) அவர்கள் நீங்கள் மாறவே இல்லை என்றால் உங்கள் அழிவு நிச்சயம் என்று எச்சரிக்கலானார்கள். வரலாற்றிலிருந்து அதற்கான உதாரணங்களை எடுத்துக் கூறினார்கள். நூஹ் (அலை), ஹூத் (அலை), ஸாலிஹ் (அலை), லூத் (அலை) ஆகிய நபிமார்களின் சமுதாயங்கள் அழிக்கப்பட்டதைப் பற்றிக் கூறினார்கள்.

அளவையிலும், நிறுவையிலும் அவர்கள் மோசடி செய்வதை நிறுத்தும்படியும், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரும்படியும் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.

ஓர் இரவில் ஒரே ஒரு பேரிடி சப்தம். அவர்கள் தங்கள் வீடுகளில் வீழ்ந்தனர். மறுநாள் காலையில் கோரமாக அவர்கள் வாழ்ந்த இடம் காட்சியளித்தது. அப்படி ஒரு சமுதாயம் அங்கே வாழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் போனது.

ஆனால், ஷுஐப் (அலை) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் அல்லாஹ் அந்த பூகம்பத்திலிருந்து காப்பாற்றினான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை மோசடி, ஏமாற்று அதிகமாக இருக்கும் இக்காலகட்டத்தில் நாம் இந்த அலைகளில் அடித்துச் செல்லாமல் எதிர்நீச்சல் போட்டு நேர்மையாக வாழ்ந்தால் அல்லாஹ் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றுவான் - ஷுஐப் நபியையும், அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றியதைப் போல.

கடன் குறித்த கடும் எச்சரிக்கை

நீங்கள் எவ்வளவு கடன் பிறருக்கு கொடுக்க வேண்டியுள்ளது?

திருப்பிக் கொடுக்கும் உண்மையான தேதியைக் கூறி கடன் வாங்கினீர்களா?
உங்களிடம் கடன் திருப்பிக் கொடுப்பதற்கான பணம் இருந்தும் தாமதப்படுத்துகிறீர்களா?

அப்படியானால் நாம் ஷஹாதத் என்ற உன்னதமான அந்தஸ்தை அடைந்தால் கூட நமது பாவங்கள் அழிக்கப்படாது.

இன்றைய காலகட்டத்தில், கடன் வாங்குவதும், வங்கிகளில் லோன்கள் எடுப்பதும், கடனாளியாகவே காலம் காலமாக இருந்து வருவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.

வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கும், புதிய கார்கள் வாங்குவதற்கும், ஃபர்னிச்சர்கள் வாங்குவதற்கும், இன்னபிற சொகுசு வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதற்கும் கடன் வாங்குவது என்பது சர்வ சகஜமாகி விட்டது.

ஆனால் இஸ்லாம் இதனை பயங்கரமாக பார்க்கிறது. கடன் குறித்து கடுமையாக எச்சரிக்கிறது. முடிந்தவரை கடன் இல்லாமல் வாழ அறிவுறுத்துகிறது. இருந்தும் முஸ்லிம்களின் கண்கள் திறக்கவில்லை.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு ஷஹீதின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும், கடனைத் தவிர.” (முஸ்லிம்)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விசுவாசியின் கடன் தீர்க்கப்படும் வரை அவரது ஆன்மா தொங்கிக் கொண்டிருக்கும்.” (அஹமத், திர்மிதீ, இப்னு மாஜா)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “கையில் போதுமான பணம் இருந்தும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதில் தாமதம் காட்டுவது அநீதியாகும்.” (புகாரீ)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கடனிலிருந்து அடிக்கடி பாதுகாப்பு கோரியிருக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடிக்கடி இந்தப் பிரார்த்தனையை செய்வார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ

“யா அல்லாஹ், அனைத்து பாவங்களிலிருந்தும், கடன் படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.”

இதனைக் கவனித்த ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே, கடன் படுவதிலிருந்து அடிக்கடி தாங்கள் பாதுகாவல் தேடி துஆ செய்வதைப் பார்க்கிறேனே…” என்று கேட்டார். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: “ஒரு மனிதன் கடன் பட்டால், அவன் பேசும்பொழுது பொய் பேசுவான். வாக்குறுதி கொடுத்தால் அதனைக் கடைப்பிடிக்க மாட்டான்.” (புகாரீ)

அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு அதிகமாக கடன் இருப்பதாக கவலையுடன் முறையிட்டார். அதற்கு அண்ணலார், ”உனது கவலைகளையும், கடன்களையும் தீர்க்கும் சில வாக்கியங்களை சொல்லித் தரட்டுமா?” என்று கேட்டார்கள்.

“அது என்ன வாக்கியங்கள்?” என்று அந்த நபித்தோழர் ஆர்வத்துடன் கேட்க, நபிகளார் கீழ்க்கண்ட துஆவை காலையிலும், மாலையிலும் ஓதுமாறு கூறினார்கள்:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنَ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ

“யா அல்லாஹ், கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நம்பிக்கையின்மையிலிருந்தும், சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். அதிகரிக்கும் கடனிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.”

அந்த மனிதர் இந்தப் பிரார்த்தனையை காலையிலும், மாலையிலும் கேட்க ஆரம்பித்தார். அல்லாஹ் அவரது கவலைகளையும், கடன்களையும் போக்கி விட்டான். (அபூதாவூத்)

கடன் உள்ள மனிதர் அந்தக் கடன் திருப்பி செலுத்தப்படும் வரை சுவனத்தினுள் நுழைய மாட்டார்.

முஹம்மத் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடீரென்று தங்கள் கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பின்னர் தங்கள் நெற்றியில் தங்கள் உள்ளங்கையை வைத்து இவ்வாறு கூறினார்கள்: “ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான விடயம் எனக்கு இறக்கப்பட்டுள்ளது!” என்று கூறினார்கள்.

நாங்கள் அமைதி காத்தோம். அச்சமாகவும் இருந்தது. அடுத்த நாள் காலை நான் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே, என்ன கடுமையான விடயம் உங்களுக்கு இறக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டேன். அதற்கு அண்ணலார் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: “என் ஆன்மா எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, மீண்டும் அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, அவனுக்குக் கடன் இருக்குமானால், அவனது கடன் அடைக்கப்படும் வரை அவன் சுவர்க்கம் புக மாட்டான்.” (நஸயீ)

கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் சிலர் ஏமாற்றுவதால் கடன் கொடுப்பவர்கள் விரக்தியடைகின்றனர். இப்படி சிலர் செய்யும் தவறுகளால் உண்மையான தேவையுடையவர்களுக்கும் கடன் கிடைக்காமல் போகிறது.

தேவையற்ற கடன் என்பது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கும். கடும் தண்டனைக்கு காரணமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன்னிடம் போதிய வசதியிருந்தும் யார் மக்களிடம் பணம் கேட்கிறார்களோ அவர்கள் நரகத்தின் தீக்கனலைத் தவிர வேறொன்றையும் கேட்கவில்லை.”

நபித்தோழர்கள் அண்ணலாரிடம், “அல்லாஹ்வின் தூதரே, போதுமான வசதி என்றால் என்ன அளவு?” என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணலார், “மதிய உணவும், இரவு உணவும் போதுமான அளவு இருப்பது” என்று பதிலளித்தார்கள். (அபூதாவூத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தன்னிடம் போதிய வசதியிருந்தும் யார் மக்களிடம் பணம் கேட்கிறார்களோ அவர்கள் மறுமை நாளில் தங்கள் முகங்களில் கீறல்களோடும், தழும்புகளோடும் வருவார்கள்.” (அஹமத்)

ஆக, அத்தியாவசியத் தேவை இல்லாமல் கடன் வாங்குவதை கடும் கண்டனத்திற்குரியதாக இஸ்லாம் பார்க்கிறது. 
இந்த அடிப்படையில், கடன் வாங்குவதற்கு கீழ்க்கண்ட மூன்று நிபந்தனைகள் உள்ளன:

1. கடனைத் திருப்பிக் கொடுப்பேன் என்ற திட உறுதி கொண்டிருக்க வேண்டும்.
2. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்கும் தகுதியும், திறனும் அவரிடம் இருக்க வேண்டும்.
3. கடன் வாங்கும் நோக்கம் ஷரீஅத் அனுமதித்த காரியத்திற்காக இருக்க வேண்டும்.

தேவையிருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும். அப்படி கடன் வாங்கி விட்டால் அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக திருப்பி செலுத்துவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஸ்டீஃபன் ஆர் கவே தனது “The 7 Habits of Highly Effective People” என்ற நூலில் வெற்றி பெற்ற மனிதர்களின் ஏழு குணாதிசயங்களைக் கூறுகிறார். அதில் அவர் கூறும் மூன்றாவது குணாதிசயம்தான் “Put First Things First”. அதாவது, முதலில் செய்ய வேண்டியதை முதலில் செய்ய வேண்டும். இதுதான் வாழ்க்கை மேலாண்மை என்ற Life Management.

நாம் கடன் பட்டு விட்டால் அதனைத் திருப்பிக் கொடுப்பதுதான் நமது முதலும், முன்னுரிமையும் கொடுக்கும் விடயமாக மாற வேண்டும். அத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடன் குறித்து கற்றுத் தந்த துஆக்களை தொடர்ந்து ஓதி அல்லாஹ்விடம் கடனிலிருந்து மீள மன்றாடி வர வேண்டும்.
கடன் கொடுப்பதன் நன்மைகள்

கடன் வாங்குவதில் இவ்வளவு கடுமை காட்டும் இஸ்லாம், உண்மையான தேவையுடையோருக்கு கடன் கொடுப்பதற்கு ஊக்குவிக்கிறது. திருக்குர்ஆனின் மிக நீண்ட வசனம் கடன் கொடுக்கல்-வாங்கல் பற்றித்தான் அலசுகிறது. அந்த நீண்ட வசனத்தின் ஒரு பகுதிதான் இது:

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ

“ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல்-வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.” (2: 282)

மேற்கண்ட வாசகத்துடன் தொடங்கும் இந்த நீண்ட வசனத்தில் கடன் கொடுக்கல்-வாங்கலில், அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரிய தொகையாக இருந்தாலும், அது பதிவு செய்யப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இந்தப் பணப் பரிமாற்றம் இரண்டு சாட்சிகளின் முன் நடத்தப்பட வேண்டும்.

தேவையுள்ள மனிதர்களுக்கு கடன் கொடுப்பது என்பது அதிகம் நன்மையைப் பெற்றுத் தரும் ஒரு செயல்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மிஃராஜ் பயணத்தின்போது நான் சுவனத்தின் வாசலில் ஒரு வாசகம் கண்டேன். அதாவது, “யார் தர்மம் கொடுக்கிறாரோ அவருக்கு 10 மடங்கு நன்மை வழங்கப்படும். யார் கடன் கொடுக்கிறாரோ அவருக்கு 18 மடங்கு நன்மை வழங்கப்படும்.”

நான் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “ஏன் கடன் கொடுப்பவருக்கு அதிக நன்மைகள் வழங்கப்படுகின்றன?” என்று கேட்டேன். அதற்கு அவர், “தர்மம் வாங்குபவர் ஏதாவது கொஞ்சம் கையில் வைத்திருப்பார். ஆனால் கடன் வாங்குபவரோ அவருக்கு ஒரு கடும் தேவை ஏற்படும்பொழுது மட்டுமே கடன் கேட்கிறார்” என்று கூறினார்.” (இப்னு மாஜா)

அதே சமயம், கடன் கொடுப்பவர் கடன் வாங்குபவரிடம் எதற்காக இந்தக் கடன் என்று விசாரிக்க வேண்டும். அது உண்மையிலேயே அவருக்கு அத்தியாவசியத் தேவை என்றால் மட்டுமே அவருக்கு கடனுதவி செய்ய வேண்டும்.

கடன் வாங்கும் நோக்கம் தேவையற்ற விடயத்திற்காகவோ, அல்லது சொகுசு வசதிக்காகவோ இருக்கும் என்றால் அவருக்கு கடன் கொடுக்காமல் இருப்பதோடு, அவர் மனதில் படும்படி அந்தக் கடனைத் தவிர்க்க உபதேசிக்கவும் வேண்டும்.

இப்படி அந்தச் சகோதரை கடன் வாங்காமல் ஆக்குவதுதான் அந்தச் சமயத்தில் அவருக்கு நாம் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

“கர்ழே ஹஸனா” என்ற அழகிய கடன்

நம்மிடம் கடன் வாங்கியவர் உண்மையிலேயே அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறுகிறார் என்றால், அது நமக்கு உண்மை என்று தெரிய வந்தால் நாம் அவருக்கு அந்தக் கடன் தொகையை தள்ளுபடி செய்தோ, அல்லது தரவேண்டிய தொகையைக் குறைத்தோ, அல்லது திருப்பித் தரவேண்டிய தேதியைத் தள்ளிப் போட்டோ சலுகைகள் வழங்கி உதவலாம்.

கடன் தொகையைத் தள்ளுபடி செய்வது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனையே அழகிய கடன் என்று அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.

மேலும் அல்லாஹ்வுக்காக அழகிய கடன் கொடுத்தால் அதை அல்லாஹ் இரட்டிப்பாக்குகிறான்.

مَنْ ذَا الَّذِىْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِيْمٌ ۚ

“அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான். மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.” (அல் குர்ஆன் 57:11)

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ‏ 

“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும். (அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.” (அல் குர்ஆன் 57:18)

உண்மையான தேவையுடையவர்களுக்கும், கடனை வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் அவர்கள் திருப்பித் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அழகிய கடன் கொடுத்து உதவுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரரை ஆக்கிரமிக்க மாட்டார் அல்லது எதிரியிடம் பிடித்துக் கொடுக்கவும் மாட்டார். யார் ஒருவர் தன் முஸ்லிம் சகோதரரின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கிறாரோ, அவருடைய தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து கொடுப்பான். யார் ஒருவர் தன் முஸ்லிம் சகோதரரின் கஷ்டத்தை நீக்குகிறாரோ, நானை மறுமையில் அல்லாஹ் அவரது கஷ்டத்தை நீக்கிக் கொடுப்பான்.” (அபூதாவூத்)

முடிவுரை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் ஒருவர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்குகிறாரோ, அவருக்கு அந்தக் கடனை அல்லாஹ் திருப்பி அளிப்பான். யார் ஒருவர் அழித்து விட வேண்டும் (திருப்பிக் கொடுக்கவே கூடாது) என்ற எண்ணத்தில் கடன் வாங்குகிறாரோ, அவரை அல்லாஹ் அழித்து விடுவான்.” (புகாரீ)

கடன் குறித்து இவ்வளவு கடுமையான நிலைப்பாடை இஸ்லாம் எடுத்திருக்கிறது. எனவே முடிந்தவரை கடனிலிருந்து தவிர்ந்திருப்பதே நல்லது. நமது வருமானத்திற்கேற்ற செலவுகளைச் செய்வதே சாலச் சிறந்தது.

பேராசை கொள்வது, பிறரைக் கண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புவது, தேவைகளை அதிகரித்துக் கொள்வது போன்றவையே கடன் வாங்கும் சூழ்நிலைக்கு மக்களை அதிகம் தள்ளுகின்றன.

இஸ்லாம் கூறிய எளிய வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமது தேவைகளைக் குறைத்து உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழ வேண்டும்.

நம் மனைவி, மக்களுக்கும் ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உபதேசம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் மீறி நாம் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடன் வாங்கியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே கடன் வாங்க வேண்டும்.

அப்பொழுது கடன் வாங்குபவரும், கடன் கொடுப்பவரும் கீழ்க்கண்ட இஸ்லாம் கூறிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. கடனை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்ய வேண்டும். (கடன் பத்திரம், எழுத்து, மின்னஞ்சல், வாட்ஸ் அப், ….)
2. இரண்டு சாட்சிகளை ஏற்படுத்த வேண்டும்.
3. திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற உண்மையான உள்ளத்துடனும், திட உறுதியுடனும் கடன் வாங்க வேண்டும்.
4. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய முறையான திட்டம் (Plan) நம்மிடம் இருக்க வேண்டும்.
5. கடனைத் திருப்பிக் கொடுக்க முடிகிற உண்மையான தேதியைக் கூற வேண்டும்.
6. கடனை அடைப்பதையே நமது முதலும், முன்னுரிமையுமான செயலாக மாற்ற வேண்டும். (First Things First)
7. குறிப்பிட்ட தேதியில் எப்பாடு பட்டாவது கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும்.

அல்லாஹ் நம்மையெல்லாம் கடன் சுமையிலிருந்தும், நரகத்திலிருந்தும் பாதுகாத்து, சுவனத்தை அருள் புரிவானாக!

Sunday 23 October 2016

ஊடகப் புரட்சியாய் உதித்த விடியல்!


1996 பிப்ரவரி மாதம். ஏழு கிணறிலுள்ள பிடாரியம்மன் கோயில் தெருவில் ஒரு கட்டடத்தின் மாடியில் சிறிய வீடு. அங்குதான் விடியலின் பயணமும் துவங்கியது. அதுதான் அலுவலகம். அதுதான் தங்குமிடம்.

சொந்தமாக கணிணி இல்லை. இராயபுரத்திலுள்ள ஒரு DTP மையத்தில் கட்டுரையை எடுத்துக்கொண்டு காலையில் சென்றால் மாலையில் திரும்பும்பொழுது ஒரு பக்கமோ இரண்டு பக்கமோ டைப் செய்து தருவார்கள். அந்த DTP மையத்தில் அந்த அளவுக்கு பரபரப்பு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் காத்திருக்கவேண்டும். இடையில் அவ்வப்பொழுது கிடைக்கும் இடைவெளியில் விடியலுக்கான கட்டுரைகள் தட்டச்சு செய்யப்படும்.

இப்படி மார்ச்சில் தொடங்கிய பயணம்… முதல் இதழின் பக்கங்கள் மெல்ல மெல்ல தட்டச்சு செய்யப்பட்டு, படங்களுக்கு இடைவெளி விட்டு பக்க வடிவமைப்பு (லே அவுட் செட்டிங்) செய்யப்பட்டு (அப்பொழுதெல்லாம் ஸ்கேன் செய்து படங்களை ஏற்றும் வசதியை நாம் கொண்டிருக்கவில்லை) ஒரு வழியாக 48 பக்கங்கள் தயாரானது ஏப்ரல் இறுதியில். பக்க வடிவமைப்பு எல்லாம் பக்காவாக வந்திருந்தது. தேவையான படங்கள் ஒட்டப்பட்டு ஃபிலிம் எடுக்கப்பட்டு அந்த DTP மையத்திலேயே இருந்த அச்சகத்தில் சிறிய ஆஃப் செட் இயந்திரத்தில் ஓட்டப்பட்டது.

2000 பிரதிகள் அச்சிடப்பட்டன. “யாரைத் தாக்க இந்த ஆயுதங்கள்?” - இதுதான் முதல் விடியலின் முதல் அட்டைப்படக் கட்டுரையின் தலைப்பு. அன்று புரூலியாவில் மர்மமான முறையில் விண்ணிலிருந்து ஆயுதங்கள் வந்து விழுந்தன. ‘புரூலியாவில் ஆயுத மழை’ என்று அதனை அழைத்தனர்.

அன்றைய தேதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி அது. அதன் ஆழ அகலத்தை கட்டுரை மிக அழகாக அலசியிருந்தது. இதர பகுதிகளும் மிக அழகாக வந்திருந்தன.

இப்படித்தான் 1996 மே மாதம் முதல் விடியல் முகிழ்ந்தது. முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அத்தியாயம் ஆரம்பமானது.

புரட்சி அத்தியாயம் என்று குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அட்டைப்படம் முதல் உள்ளடக்கம் வரை விடியல் செய்த புரட்சிகள் ஏராளம்.
விடியல் கையெழுத்துப் பிரதி

அதுவரை விடியல் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருந்தன. தட்டச்சு செய்து, சைக்ளோஸ்டைல் பிரதிகள் எடுத்து ஜும்ஆக்களில் விற்போம். அவற்றில் இடம் பெற்ற செய்திகளின் கனத்தைப் பார்த்து அதற்கென்று ஒரு வாசகர் வட்டம் உருவாகியிருந்தது.

அந்த வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜும்ஆ விற்பனைக்கென்று முதல் விடியல் மாத இதழின் சில நூறு பிரதிகளை சில நகரங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

ஏற்கனவே சேர்த்திருந்த சில நூறு சந்தாக்களின் முகவரிகள் கையில் இருந்தன. ஒவ்வொரு இதழுக்கும் பிரவுன் நிற தாள் ஒட்டி, முகவரியைக் கையால் எழுதி, மறுநாள் காலையில் தபால் அலுவலகம் சென்று (தபால் பதிவு எண் பெற்றிராததால்) சாதாரண தபால் தலைகள் ஒட்டி அனுப்பி வைத்தோம். இப்படித்தான் முதல் விடியல் சந்தாதாரர்களைச் சந்தித்தது.

ஆனால் வந்த வரவேற்பு… அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மகத்தான வரவேற்பு. முதல் விடியலின் உள்ளடக்கமும், அட்டைப்படமும், அட்டைப்படக் கட்டுரையும், தலையங்கமும், இதர கட்டுரைகளும், பக்க வடிவமைப்பும் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. சென்ற இடங்களிலெல்லாம் அது சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. மேலும் பிரதிகள் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கொடுப்பதற்கு நம்மிடம் பிரதிகள் இல்லை.

முதல் இதழ் வெளிவந்த கையோடு நாம் பெரியமேடு பேரக்ஸ் சாலையில் அலுவலகம் எடுத்து மாறினோம். ஆனால் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு, கணிணி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஓர் உள்ளூர் தொலைபேசி அழைப்பு செய்ய வேண்டும் என்றாலும் தெருக் கோடியிலுள்ள எஸ்டிடி பூத்தில் காத்திருக்க வேண்டும்.

முஸ்லிம் ஊடகப் புரட்சி

அன்றைய நாளில் முஸ்லிம் பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் பூக்கள், பழங்கள், மஸ்ஜித்கள் போன்றவையே மொட்டையாக இடம் பெற்றிருக்கும். ஒரு தலைப்பு கூட இருக்காது. ஆனால் விடியல் அன்றைய ஆங்கில இதழ்களின் பாணியில் அட்டைப்படங்களைக் கொண்டு வந்தது.

ஃப்ரண்ட்லைன், அவுட்லுக் போன்ற முன்னணி ஆங்கில இதழ்களைப் போன்று ஆழமான அட்டைப்படக் கட்டுரைகளைக் கொண்டு வந்தது. விடியலின் வருகைக்குப் பிறகுதான் பிற முஸ்லிம் இதழ்கள் இதனைக் கவனத்தில் கொண்டன. அட்டைப்படங்களிலும், உள்ளடக்கங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

தலையங்கம்

ஒரு பத்திரிகையின் முத்தாய்ப்பாக அமைவது அதில் இடம் பெறும் தலையங்கம்தான். இதிலும் விடியல் முத்திரை பதித்தது.

இஸ்லாத்தைத் தீர்வாகச் சொல்லிடும் தலையங்கங்களை விடியல் தீட்ட ஆரம்பித்ததும் சமுதாயத்தில் ஒரு புதிய பார்வை பிறந்தது. அழகிய சொற்றொடர்களை அமைத்து, அன்றைய முக்கிய நிகழ்வை மையப்படுத்தி, அதற்கு இஸ்லாம் இயம்பும் தீர்வை ஆணித்தரமாக கூறியது தலையங்கம். இதுவும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

“இன்றைய பிரச்னைகளும் இஸ்லாம் வழங்கிடும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களில் இந்தத் தலையங்கங்களின் தொகுப்பு இலக்கியச்சோலை மூலம் நூலாகவும் வெளிவந்துள்ளது.

வளர்ச்சி வேகம்

விடியல் வளர்ந்து வந்த சமயத்தில் இடையில் சில பல நெருக்கடிகளால் நிறுத்தப்பட்டாலும், மீண்டும் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு கிடைத்தது. முறைப்படி தபால் துறையில் விடியல் பதிவு செய்யப்பட்டு தபால் பதிவு எண் கிடைத்தது. இப்படி ஒரு பத்திரிகைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அதிகரித்தன.

2000 பிரதிகளில் ஆரம்பித்த விடியல் பயணம் 3000, 5000, 8000, 10000 பிரதிகள் எனக் காலத்தின் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வளர ஆரம்பித்தது. அத்தோடு நல்ல உறுதியான வாசகர் வட்டம் ஒன்று உருவானது.
கணிணி, நகல் இயந்திரம், ஸ்கேன்னர் என்று DTP வசதிகளும் விடியல் அலுவலகத்தில் வந்தன.

பேர் சொல்லிய பேஜ் லேஅவுட்

விடியலின் உள்பக்க வடிவமைப்புகள் (பேஜ் லேஅவுட்கள்) பரவலாக பேசப்பட்டன. கச்சிதமான தலைப்புகளுடன், ஒவ்வொரு பக்கத்தையும் படங்களைக் கொண்டும், முக்கிய சொற்றொடர்களைக் கொண்டும் அலங்கரித்தது அனைவரையும் கவர்ந்தது.

ஒருமுறை தத்துவக் கவிஞர் இ. பதுருதீன் அவர்களை விடியலை அச்சிடும் ஆசியா கிராஃபிக்ஸ் அச்சகத்தில் சந்தித்தபொழுது விடியல் உள்ளடக்கம் குறித்து அவர் சிலாகித்துக் கூறினார். “எதைச் சொல்வது என்பதை விட எப்படிச் சொல்வது என்பது மிக முக்கியம். அதனை விடியல் அழகுறச் செய்கிறது. அதன் உள்பக்க வடிவமைப்புகள் மிக அழகாகவும், கருத்தாகவும் அமைந்திருக்கின்றன” என்று அவர் கூறினார்.

20 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அவர் அன்று விடியலைப் பாராட்டிக் கூறியது இன்றும் என் நினைவுகளில் நின்று நிழலாடுகின்றது.

பாபரி மஸ்ஜித் & கிலாஃபத் சிறப்பிதழ்

1999ம் வருடம் டிசம்பர் இதழை பாபரி மஸ்ஜித் சிறப்பிதழாக கொண்டு வந்தோம். முதன் முதலாக நால்வண்ணத்தில் அட்டைப்படம் வந்ததும் அந்த இதழில்தான். அதுவரை இரு வண்ணத்தில்தான் விடியலின் அட்டைப் படம் வந்துகொண்டிருந்தது.

இந்தச் சிறப்பிதழின் அட்டைப்படத்தில் இடிக்கப்படாத முழுமையான பாபரி மஸ்ஜித் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாக நால்வண்ணத்தில் நின்றிருந்தது. பாபரி மஸ்ஜித் பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணப் பெட்டகமாக அந்தச் சிறப்பிதழ் இன்றும் திகழ்ந்து வருகின்றது. அந்தச் சிறப்பிதழின் மகுடமாக இடம் பெற்றது அயோத்தியா நேரடி களச் செய்தி.

அதுவரை தென்னிந்தியாவிலிருந்து யாரும் அயோத்தியா சென்று நேரடியாக களச் செய்தி எடுத்ததில்லை. அன்றைய சூழலில் அது சாத்தியமான செயலும் அல்ல. இருந்தாலும் நமது செய்தியாளர்கள் பல தடைகளைத் தாண்டி துணிச்சலுடன் அயோத்தியா சென்றார்கள். பல சிரமங்களுக்கிடையில் நேரடி களச் செய்தியைப் பதிவாக்கினர். அது அச்சிறப்பிதழில் வெளிவந்தவுடன் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

அதேபோன்று 2000ம் வருடம் அக்டோபர் மாத இதழை கிலாஃபத் சிறப்பிதழாகக் கொண்டு வந்தோம். அதுவும் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது.

உள்பக்கங்களில் நால்வண்ணப் புரட்சி

விடியல் சர்க்குலேஷன் 20,000 பிரதிகளை எட்டிய பொழுது இந்தியா டுடே அச்சகத்தை அணுகினோம். இந்தியா டுடே அச்சகத்திலுள்ள வெப் ஆஃப்செட்டைப் பொறுத்தவரை உள்பக்கங்களும் நால்வண்ணத்தில் அச்சிட வேண்டும். குறைந்தது 25,000 பிரதிகள் அச்சிட வேண்டும்.

அல்லாஹ் மேல் தவக்குல் வைத்து துணிந்து இறங்கினோம். இந்தியா டுடே அலுவலகத்தில் 25,000 பிரதிகள் அச்சிட்டோம். உள்பக்கங்கள் அனைத்தும் நால்வண்ணத்தில் பளபள தாள்களில் அச்சிடப்பட்டன. இதுவும் முஸ்லிம் ஊடக வரலாற்றில் ஏற்பட்ட அடுத்த புரட்சி.

அதுவரை முஸ்லிம் இதழ்கள் உள்பக்கங்களில் நால்வண்ணம் கொண்டு வந்ததில்லை. ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாக நம்மாலும் கொண்டு வர முடியும் என்று முஸ்லிம் ஊடக உலகுக்கு வழி காட்டியது விடியல். அன்றிலிருந்து முஸ்லிம் மாத இதழ்களில் அதிக சர்க்குலேஷன் உள்ள பத்திரிகையாகவும் விடியல் மாறியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

நடுப்பக்கக் கட்டுரை (இம்பாக்ட் பக்கம்)

இம்பாக்ட் இண்டர்நேஷனல் என்றொரு ஆங்கிலப் பத்திரிகை லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதனைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே First Things First என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.

இன்றைய பிரச்சினைகளை அலசி, அதற்கு இஸ்லாமியத் தீர்வை மிக அழகாகச் சொல்லியிருப்பார்கள் அந்தப் பக்கத்தில்.

அதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று அவா கொண்டோம். அதனால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை விடியலில் நடுப்பக்கக் கட்டுரையாகக் கொண்டு வந்தோம். அந்தப் பக்கத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைத்தோம்.

வாசகர்களிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாசகர்கள் இதனை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்று விழைந்தனர். ஆதலால் “தேசியவாதமும் இஸ்லாமும்” என்ற பெயரில் முதல் பாகமும், “இம்பாக்ட் பக்கம்” என்ற பெயரில் இரண்டாம் பாகமும் இலக்கியச்சோலை வெளியீடுகளாக வெளிவந்தன.

எல்லா இஸ்லாமியப் பத்திரிகைகளுக்கும் ஏற்படும் நெருக்கடி இம்பாக்ட் இண்டர்நேஷனல் பத்திரிகையையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் நிதி நெருக்கடி! நிதி நெருக்கடியினால் அந்தப் பத்திரிகையை நிறுத்தி விட்டனர். அத்தோடு நாமும் நடுப்பக்கக் கட்டுரையை நிறுத்தி விட்டோம்.

இப்படிப் பயணித்த விடியலின் வளர்ச்சியில் எண்ணற்ற சகோதரர்களின் தியாகங்கள் அடங்கியிருக்கிறது. அவர்களின் உழைப்பு, நேரம், முயற்சிகள் அனைத்தும் விடியலின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றன.

புதிய விடியல்

தமிழகத்தில் விதையூன்றி, வேரிட்டு, கிளை பரப்பி வளர்ந்த விடியல் இன்று புதிய விடியலாக பரிணமித்திருக்கிறது. புதிய விடியல் புதிய ரத்தத்துடன் இன்னும் வீரியமாக தன் பயணத்தைத் தொடர்கின்றது.

வாசகர்களின் நீண்ட கால கோரிக்கையும் கனவும் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் முதல் நிறைவேற இருக்கிறது. ஆம்! புதிய விடியல் மாதமிரு இதழாக அக்டோபர் 2016 முதல் பயணிக்க இருக்கிறது.

இந்த வளர்ச்சியின் தூண்களாக அன்றும் இன்றும் இருந்து வரும் பல்லாயிரக்கணக்காக வாசகர்களின் வழித்துணையுடனும், நல்லாதரவுடனும் புதிய விடியல் இன்னும் பல புரட்சிகளைச் செய்யும் இன்ஷா அல்லாஹ்!

அதற்கு அல்லாஹ் என்றும் துணை நிற்பானாக!

புதிய விடியல்  செப்டம்பர் 2016 (21வது வருட சிறப்பிதழ்)

Saturday 22 October 2016

சமூக மாற்றத்தில் பெண்கள்

அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் அருட்கொடைகளை அள்ளி வழங்கியிருக்கிறான். ஆனால் எல்லோருக்கும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அமையும் என்று சொல்ல முடியாது.

நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை வளமாகப் பயன்படுத்தி தனக்கும், சமூகத்திற்கும் அதன் பலன்களை அடையச் செய்ய வேண்டும். அந்த வகையில் சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது.

திருக்குர்ஆன் நமது கூட்டுப் பொறுப்பை இவ்வாறு கூறுகிறது:

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆல இம்ரான் 3:104)

இந்த வசனத்தில் மூன்று விடயங்கள் கூறப்படுகின்றன:

1. நன்மையின் பக்கம் அழைப்பது, தீமையை விட்டும் தடுப்பது என்ற பணி.
2. கூட்டாக செய்ய வேண்டிய பொறுப்பு.
3. இதன் மூலம் வெற்றி பெறுதல்.

இந்த வசனம் ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் அனைவரும் இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டுத்தான் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். எல்லா தொழுகைகளிலும் நாம் கூறும் ஒரு வசனம்தான் இது:

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அன்ஃபால் 8:162)

இதனை நபிமார்களும், அவர்களின் மனைவிமார்களும், ஸஹாபிகளும், ஸஹாபி பெண்மணிகளும் நிறைவேற்றி முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வோடுள்ள உறவு

தொழுகை, திக்ர், நோன்பு, ஸதக்கா போன்ற அமல்களின் மூலமாக அல்லாஹ்வோடுள்ள உறவைப் பலப்படுத்தலாம். இவற்றில் சுன்னத்தான அமல்கள் நிறைவேற்றுவதை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவற்றை பகிரங்கப்படுத்தும்பொழுது பெருமை வர வாய்ப்புண்டு.

நம்மிடம் தவறுகள் நிகழும்பொழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும். அத்தோடு தான தர்மங்கள் செய்தால் மனம் தூய்மைப்படுத்தப்படும். தீய சிந்தனைகளிலிருந்து நம் மனம் விடுபடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். இறைநினைவுக்குரிய உதாரணம் இதுதான்: ஒரு மனிதரை அவருடைய எதிரி துரத்துகிறான். அந்த மனிதர் ஓடிச் சென்று ஒரு பாதுகாப்பான கோட்டைக்குள் அபயம் தேடினார். இதேபோன்று அல்லாஹ்வின் நினைவில் அபயம் தேடாதவன் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேட முடியாது.”

அல்லாஹ்வின் நினைவை வளர்ப்பது எப்படி?

அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அறிவும், அவனது வல்லமைகள் குறித்த தெளிவான விளக்கமும் எந்த அளவு நம்மிடம் உள்ளதோ அந்த அளவு ஷைத்தானின் தீங்குகளிலிருந்தும், தீய சிந்தனைகளின் ஆதிக்கங்களிலிருந்தும் நாம் பாதுகாப்பு பெற முடியும்.

அல்லாஹ்வின் வல்லமைகள் குறித்து அறிவதற்கு அவனது  திருநாமங்கள் எனப்படும் அஸ்மாவுல் ஹுஸ்னா குறித்து அறிந்திருக்க வேண்டும்.

குணங்களும், இயல்புகளும்

நாம் மாற வேண்டியுள்ளது. நம்மை நாமே மாற்றிக் கொள்ளாமல் மற்றவை எல்லாம் தன்னால் மாறி விடும் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும்.

اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (13:11)

மாற்றம் நம்முடைய இயல்பில், ஆளுமையில், அறிவில் உருவாக வேண்டும். நம்மிடமுள்ள நன்மைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுத்து வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி செய்யும்பொழுது நாம் உன்னத ஆளுமையின் சொந்தக்காரர்களாக மாறுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் குணத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் என்னுடைய நேசத்துக்குரியவர்.”
அப்போது மட்டுமே மற்றவர்களில் இஸ்லாமிய ஆளுமையை உருவாக்கி எடுப்பதற்கு நமக்கு சாத்தியமாகும்.

வெட்கம்

வெட்கம் ஈமானின் ஒரு கிளை. வெட்கம் ஓர் உன்னத பண்பாகும். ஒரு பெண்ணிடம் இந்தப் பண்பு உருவாகும்பொழுது அவள் தவறிழைக்கும் வாய்ப்புகள் உண்டாகாது. தவறானவற்றைப் பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. அதன் காரணமாக அவளது ஆளுமையும், கற்பும் பாதுகாக்கப்படும்.

பெண்களைப் பொறுத்தவரையில் இந்தப் பண்பு அவர்களுக்கு அலங்காரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பண்பு அதிகமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா அணிந்த கன்னிப் பெண்களை விட வெட்கம் உடையவர்களாக இருந்தார்கள். (புகாரீ)

குடும்ப ஒத்துழைப்பு

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். (அத் தஹ்ரீம் 66:6)

சமூக மாற்றத்தின் முன்மாதிரி குடும்பத்திலிருந்துதான் துவங்க வேண்டும். குடும்பங்களின் கூட்டணியே சமூகம். ஒவ்வொரு குடும்பமும் இஸ்லாமியமயமாகும்பொழுது அது சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.

கணவன்-மனைவி உறவு

குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையிலான நம்பிக்கை மிக முக்கியமானது. ஒரு பெண் தன் கணவனின் ஒவ்வொரு விடயத்தையும் கவனிப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்குரிய மனைவி ஆக வேண்டும். இதில் நமக்கு அன்னை ஹாஜரா (அலை) அவர்களும், அன்னை கதீஜா (ரலி) அவர்களும் முன்மாதிரிகளாவர்.

هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் பகரா 2:187)

நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இருக்கும்பொழுதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக திகழும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உலகம் அனத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நற்குணமுடைய பெண். கணவன் அவளைப் பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். (இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்)”. (ஹாகிம்)

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்." (அந் நூர் 24:31)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌

"நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)." (அன்னிசா 4:34)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: "பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், "கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறு செய்யமாட்டாள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைப் பார்த்து கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஸுனனுத் திர்மிதீ)
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் குளித்து சுத்தமாகி உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது ஸலாம் சொல்லி, நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துகளுடன் அவரை வரவேற்று உபசரியுங்கள்.

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்.

மகிழ்ச்சிகரமான செய்தியை முதலில் தெரிவியுங்கள். கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள். (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள். கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும், குறிப்பாக மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள்.

தாம்பத்தியத்திற்காக கணவன் அழைக்கும்பொழுது மறுக்காமல் செல்லுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது." (புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், தாரமி)

இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியைப் பற்றியுமே பேசிக் கொண்டிருக்காமல் நல்லறங்களைப் பற்றி, நல்ல அமல்களைப் பற்றி பேசுங்கள். ஏனெனில்,

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏ 

பொருட்செல்வமும் பிள்ளைச் செல்வமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்று நன்றி செலுத்துதல் வேண்டும். கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்."

"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்‘ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானீ, அஹ்மத்)

"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, பைஹகீ)

"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

சமூக செயல்பாடுகளில் நம் குழந்தைகள்

நம்முடைய குழந்தைகள் நமக்கு அமானிதங்கள். அவர்களுக்கு மிகச் சிறந்த கல்வி அளித்து, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை அல்லாஹ்வின் நீதிமான்களான அடியார்களாக மாற்றுவது நம்முடைய பொறுப்பாகும்.

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏ 

இம்ரானின் மனைவி, “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார். (3:35)

நம் பிள்ளைகளின் செயல்பாடுகளும், கல்வியும் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும், அந்த அடிப்படையிலேயே அவர்களைப் பழக்கப்படுத்தி எடுக்க வேண்டும் என்பது ஒரு தாயின் மேற்பார்வையிலேயே நடக்க வேண்டும் என்பதை மேலே கூறப்பட்டுள்ள வசனத்தின் மூலமாக நாம் அறியலாம்.

நம்முடைய பிள்ளைகளிடம் சமூக செயல்பாடுகளில், சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஓர் உன்னத உதாரணம்தான் சமீபத்தில் மரணமடைந்த பாகிஸ்தானைச் சார்ந்த அப்துல் ஸத்தார் ஈதி.

வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்பராக இருந்த ஈதிக்கு மதிய உணவு கொடுத்து விடும்பொழுது அவருடைய தாய் இரண்டு பேருக்கான உணவைக் கொடுத்து விடுவார்களாம். தான் உண்ணும்பொழுது பசியில் வாடும் ஓர் ஏழைக்கும் அந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தாயின் நோக்கம்.

தனது சிறு வயதில் அந்தத் தாய் அளித்த இந்தத் தூண்டுதல் அப்துல் ஸத்தாரை சமூக சேவையில் ஒரு பெரிய புரட்சியே செய்ய காரணமாக அமைந்தது.

அவர் தனது ஈதி ஃபவுண்டேஷன் மூலமாக 20,000 ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்தார். 50,000 அனாதைகளை அரவணைத்தார். 40,000 நர்சுகளை நாடு முழுவதும் நியமித்தார். 380 ஆரோக்கிய மையங்களை நிறுவினார். 1500 ஆம்புலன்ஸ் வண்டிகளை மக்களுக்கு சேவகம் புரிய அர்ப்பணித்தார்.

இந்த ஃபவுண்டேஷனின் சேவைகள் பாகிஸ்தானில் மட்டும் குறுகி நிற்கவில்லை. மாறாக, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்கள் வரை அது பரந்து விரிந்தது.

இது ஒரு தாயின் தூண்டுதலின் பலனாகும். இதுபோன்று எல்லா தாய்மார்களும் செய்தால்…?

நம்முடைய குழந்தைகளை இந்த முறையில் பயிற்றுவித்து எடுத்தால் உலகத்தை நாமும் புரட்டிப் போடலாம்.

Wednesday 19 October 2016

சோதனைகள் பலவிதம்!


சிறிதளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றின் சேதத்தாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமை காப்போருக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக. (சூரா அல் பகரா 2:155)

அல்லாஹ் மனிதனின் வாழ்க்கை நியதியை இந்த வசனத்தில் எடுத்துரைக்கிறான். மனிதனை சோதனைகள் சூழவே இந்த உலகுக்கு அனுப்புகிறான். அவனை சோதனைகளுக்குட்படுத்தி பரீட்சித்துப் பார்க்கிறான்.

இன்னொரு வசனத்தில், “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும், உங்கள் (செயல்பாடுகள் குறித்த) செய்திகளைப் பரிசீலிக்கும் வரையிலும் உங்களை நாம் சோதிப்போம்” (47:31) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சோதனை என்பது பயம், பசி போன்ற துன்பங்களாலும் ஏற்படலாம். மகிழ்ச்சியாலும் ஏற்படலாம். இன்பத்திலும் சோதனை உண்டு. துன்பத்திலும் சோதனை உண்டு.

சோதனை என்பதற்கு நம்மில் பலரிடம் தவறான கண்ணோட்டம் இருக்கிறது. துன்பம் வந்தால் மட்டும்தான் சோதனை என்று எண்ணுகிறோம். உதாரணத்திற்கு வறுமையை எடுத்துக் கொள்ளலாம். வறுமை நீங்கி வளம் வந்துவிட்டால் எனக்குள்ள சோதனைகள் எல்லாம் நீங்கிவிட்டன என்று மனிதன் பெருமிதத்துடன் கூறுகிறான்.

அப்படியல்ல. அடுத்த கட்ட சோதனை ஆரம்பமாகின்றது என்று அதற்கு அர்த்தம். அதாவது, எடுத்து சோதித்த இறைவன் இப்பொழுது கொடுத்து சோதிக்கிறான்.

ஒரு வகையில் சொல்லப்போனால் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் தோற்றுப் போகிறான். துன்பத்தில் உழலும்போது அல்லாஹ், அல்லாஹ் என்று கையேந்துவான். பொறுமை காப்பான். அப்படிப் பொறுமையுடையோருக்கு நல்ல செய்தியை - நன்மையை அல்லாஹ் அளிக்கிறான்.

ஆனால் இன்பத்தில் திளைக்கும்பொழுது அல்லாஹ் உட்பட எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (சூரா யூனுஸ் 10:12)

பணம், பதவி, புகழ் என்று வந்துவிட்டால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற மனநிலைக்கு மனிதன் மாறுகிறான். இவையும் சோதனைதான் என்பதை மறந்து விடுகிறான். ஆசாபாசங்களிலும், கேளிக்கை கூத்துகளிலும் ஈடுபடுகிறான். தன் பொருளாதாரச் செழிப்பைக் காட்ட ஆடம்பரமாக செலவழிக்கிறான். டாம்பீகமாக திருமணத்தை நடத்துகிறான். கோடிகள் செலவழித்து வீடுகளைக் கட்டுகிறான்.

ஏழைகளுக்கு உதவுவதில்லை. வறியவர்களுக்கு வாரி வழங்கவில்லையென்றாலும் கோரியதையாவது கொடுக்கலாம். அதுவும் செய்வதில்லை. பணம் சேரச் சேர அவன் உள்ளம் இறுகுகிறது. இறுமாப்பு கொள்கிறது. நன்மைகள் செய்வதில் நாட்டம் வருவதில்லை.

அதனால்தான் ஒரு வகையில் துன்பத்தில் வரும் சோதனையை விட இன்பத்தில் வரும் சோதனையில்தான் மனிதன் அதிகம் ஏமாந்து போகின்றான் என்று மேலே குறிப்பிட்டோம்.

வறுமையில் உழலும்பொழுது எப்படி பொறுமை காட்டுகிறானோ அதேபோன்று வசந்தம் வரும்பொழுது தியாகம் காட்டவேண்டும். அதனைத்தான் “உங்களில் தியாகம் புரிவோரையும், பொறுமை காப்போரையும் நாம் அடையாளம் காணும் வரையிலும்…” என்று அல்லாஹ் கூறுகிறான்.

தன் செல்வங்கள் தனக்குரியதல்ல, அவை இறைவன் தனக்களித்த சோதனைப் பொருட்கள் என்பதை மனிதன் உணர வேண்டும். அந்தச் செல்வங்களிலிருந்து அவனது தேவைகளை நடுநிலையாக நிறைவேற்றிவிட்டு, மீதியை தானதர்மங்களில் அவன் வாரி வழங்கிடவேண்டும். ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். வறுமையில் கல்வி கற்க முடியாத சிறார்களைத் தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும். வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஏழைக் குமர்களைக் கரை சேர்க்க வேண்டும். பசி, பட்டினியை சமுதாயத்திலிருந்து போக்குவதற்கு முயற்சிகள் புரிய வேண்டும்.

இவற்றையெல்லாம் மனிதன் செய்கிறானா என்று அல்லாஹ் சோதிக்கிறான். தன்னைப் பிரதிநிதியாக்கி அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு உதவ நாடுகிறான், அதற்காகத்தான் தனக்கு பொருள்களை வாரி வழங்குகிறான் என்று மனிதன் உணர வேண்டும்.

அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன என்று நிச்சயமாகக் கூறுவான். நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான். (சூரா ஹூது 11:10)

புதிய விடியல்  ஜனவரி 2016 (மனதோடு மனதாய்...)

மனிதனின் பரிதாப நிலை!


புஸ்ர் பின் ஜஹ்ஹாஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தமது உள்ளங்கையில் உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். பிறகு அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

“ஆதமின் மகனே! (மனிதனே!) என்னை உன்னால் எப்படி தோற்கடிக்க முடியும்? இதை (உமிழ்நீரை)ப் போன்ற ஒன்றிலிருந்தே உன்னைப் படைத்துள்ளேன். இறுதியாக உன்னைச் சீராக்கிச் செம்மைப்படுத்தினேன். ஆனால் நீயோ இரண்டு மேலாடைகளை அணிந்துகொண்டு, சப்தம் வரும் அளவுக்கு பூமியை மிதித்து (மிடுக்கோடு) நடந்தாய். செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் நீ தானதர்மம் செய்வேன் என்கிறாய். அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?”

இவ்வாறு மனிதனின் நிலையை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஓர் உதாரணத்தைக் காட்டி அற்புதமாக விளக்கினார்கள்.

மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை தங்கள் உமிழ்நீரை உமிழ்ந்து உதாரணம் காட்டினார்கள். மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டு, பின்னர் பிறர் உதவியுடன் தத்தித் தத்தி வளர்கிறான். சொந்தக் காலில் நின்று, சுயபுத்தி வந்தவுடன் செருக்காகி விடுகிறான். தன்னை விட்டால் ஆளில்லை என்ற இறுமாப்பு அவனிடம் வந்து விடுகிறது. தனது வருமானமெல்லாம் தன் திறமையால் தனக்குக் கிடைத்தது என்று பெருமை கொள்கிறான்.

செருக்குடனும், செல்வச் செழிப்புடனும் பூமியில் மிடுக்காக நடக்கிறான். இதனைத்தான் “சப்தம் வரும் அளவுக்கு மனிதன் பூமியை மிதித்து மிடுக்கோடு நடந்தான்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூளினார்கள்.

பணம் பணம் என்று மனிதன் அலைகிறான். செல்வத்தை சேர்த்து சேர்த்து பூட்டி வைக்கிறான். ஆடம்பரமாக செலவழிக்கிறான். ஆனால் தானதர்மங்களில் ஈடுபடுவதில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

இதனைத்தான் “செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டான் மனிதன்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவழியை விட்டும் தவறிய வழியில் அவனது நேரங்கள் தொலைவதைப் பற்றி அவனுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை. பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தைக் கொல்வதற்குரிய நவீன மின்னணு சாதனங்களை வாங்குகிறான்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடையான காலத்தை வீணாக்குகிறான். காலம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிற மனிதன் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறான். நிறைய கால அவகாசம் உள்ளவன் நேரம்தான் இருக்கிறதே... பிறகு பார்ப்போம் என்று நேரங்களை வீணாக்கி விடுகிறான்.

“பிறகு”, “பிறகு” என்று தள்ளிப்போடும் மனப்பான்மை (Procrastination) உள்ளவன் நிகழ்காலத்தை நிராகரிக்கிறான். எதிர்காலத்தைப் பாழாக்குகிறான்.

“காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடியுங்கள்” என்று ஓர் அறிஞன் கூறினான்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலத்தை வீணான விஷயங்களில் வீணாக்கி விட்டு மரண வேளையில் எனக்கு காலம் கிடைக்காதா என்று மனிதன் தவிக்கிறான். இதனைத்தான் “உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் தானதர்மம் செய்வேன் என்கிறான் மனிதன், அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்பதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உத்தம நபியவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளங்கையில் உமிழ்ந்து காட்டி விளக்கிய மனிதனின் பரிதாப எதார்த்தத்தை அவன் புரிந்துகொள்வானா?

புதிய விடியல்  நவம்பர் 2015 (மனதோடு மனதாய்...)