Monday 27 February 2017

ஒரு நீதிபதியின் கதி...!



2002ம் ஆண்டு பிப்ரவரி 27ல் தொடங்கிய கொடூரமான குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை முடிந்து இன்றோடு 15 வருடங்கள் ஆகின்றன. சாதாரண முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெற்ற கொடூரங்கள் ஒரு புறம். பதவியிலிருந்த முஸ்லிம் நீதிபதிகளுக்கும் அதே நிலைதான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிப்ரவரி 28ம் தேதி மாலை 4 மணியளவில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி காதிரி அவர்களின் வீட்டைச் சுற்றிலும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஃபாசிசக் கயவர்கள் கொள்ளையடிப்பிலும், தீ வைப்பிலும் ஈடுட்டுக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் இல்லாத இரண்டு போலீஸ் காவலர்கள் மட்டுமே அவரது வீட்டைச் சுற்றிலும் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

நீதிபதி காதிரியின் தாயாருக்கு 85 வயதாகிறது. அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அவருடைய மனைவி, கல்லூரிக்குச் செல்லும் இரு மகள்கள் என்று அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.

அப்போது இராஜஸ்தான் தலைமை நீதிபதி ஏ.பி. ராவனி நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இருந்ததை அறிந்த நீதிபதி ராவனி ஓய்வு பெற்ற ஒரு துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு நீதிபதி காதிரியின் வீட்டுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

ஒரு மணி நேரம் கழித்து நீதிபதி ராவனி மீண்டும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்கள் அமைந்துள்ள அருகிலுள்ள துலியாகோட் பகுதியில் கொள்ளையடிப்புகளும், தீ வைத்தல்களும் நடப்பதாக நீதிபதி காதிரி அவரிடம் கூறினார்.

அதன் பிறகு நீதிபதி ராவனி பலமுறை முயற்சி செய்தும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கவலையுற்ற அவர் மறுநாள் (மார்ச் 1) காலை குஜராத் நீதிமன்றத்தின் புரோடோகால் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். நீதிபதி காதிரி தன் குடும்பத்தாருடன் பின்னிரவில் அருகிலுள்ள நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டார் என்று அவர் கூறினார்.

காலை 11.30 மணியளவில் நீதிபதி காதிரி நீதிபதி ராவனியைத் தொடர்பு கொண்டார். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தன் குடும்பத்தாருடன் நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டதாக கூறினார். வாஸ்த்ராபூரிலுள்ள நீதிபதிகள் பங்களாவுக்கு தன்னை மாறிச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

பணியிலிருக்கும் ஒரு நீதிபதியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாறி இருக்கச் சொல்லும் அளவுக்கு பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது என்றால் அது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும், அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் நீதிபதி ராவனி மிக்க வருத்தத்துடன் கூறினார்.

இன்னொரு அதிர்ச்சியான செய்தியை நீதிபதி ராவனி அறிந்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், எம்.ஆர்.டி.பி.யின் முன்னாள் தலைவருமான நீதிபதி திவேச்சா அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரது வீடு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நீதிபதி திவேச்சா மூலம் அறிந்து நொறுங்கிப் போனார் நீதிபதி ராவனி.

நீதிபதி காதிரியின் வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் படை வன்முறைக் கும்பலின் அளவை நோக்கும்போது மிகக் குறைவானது என்றும், வீட்டிலிருந்து மாறியிருப்பதே புத்திசாலித்தனம் என்றும் இராணுவ உளவுத்துறையினர் நீதிபதி காதிரியிடம் கூறினர்.

அவர் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பியிருக்க வேண்டாம் என்றும், இராணுவ விருந்தினர் மாளிகையில் வந்து தங்கும்படியும், அது அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதால் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதி காதிரியிடம் நீதிபதி ராவனி இவ்வாறு கூறினார்: “சகோதரரே, களத்திலுள்ள யதார்த்தம் என்னவெனில் சட்டத்தின் தத்துவம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாம் தைரியசாலிகளாக இருக்கலாம். ஆனால் நாம் நாட்டின் எல்லையில் போராடும் படைவீரர்கள் இல்லை. அங்கேதான் ஓர் அங்குலம் பின்வாங்கினாலும் அது கோழைத்தனமாகக் கருதப்படும். இப்பொழுது இங்குள்ள சூழ்நிலைக்கு நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே புத்திசாலித்தனம்.”

இந்தச் சமயத்தில் அந்தக் குடும்பத்திற்கு உறவினர்களின் உதவியும், ஆதரவும் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் அவர்கள் உறவினர்களை அண்ட முடியாத கொடுமையான சூழ்நிலை. இராணுவத்தினர் உடல் ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் மனோரீதியான தைரியத்தையும், ஆதரவையும் அவர்களால் தர இயலாது.

இறுதியில் மாலை 4 மணியளவில் இராணுவப் பாதுகாப்புடன் நீதிபதி காதிரி தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு அவருடைய சகோதரியின் கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

உயிருக்கு அஞ்சிய பல முஸ்லிம் வழக்கறிஞர்கள் நீதிபதி ராவனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து தருமாறு கெஞ்சினர். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த தனது செல்வாக்கு அங்கே செல்லாக்காசு என்றுணர்ந்த அவர், தனது இயலாமையை அவர்களிடம் தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலை முழுவதையும் நேரடிக் களத்திற்கே சென்று பதிவு செய்த அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்திடம் நீதிபதி ராவனி மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நேரடி சாட்சி பகர்ந்தார். மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமும் இந்நிகழ்வுகள் குறித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

இருந்தும் என்ன பயன்? ஒரு விளைவும் ஏற்படவில்லை. மொத்த இனப்படுகொலையையும் நடத்த விட்டு கள்ள மவுனம் சாதித்த அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று பிரதமர். இதுதான் இன்றைய இந்தியா!

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஃபாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சில செயல்களில் ஈடுபடுவதோ, உணர்ச்சி வயப்பட்டு துள்ளுவதோ, கவர்ச்சிப் பேச்சாளர்களிடம் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதோ தீர்வாகாது.

ஒரு தலைமையின் கீழ் மக்களை ஒருங்கிணைத்து, பலப்படுத்தி, இலக்கை நிர்ணயித்து, திட்டங்களைத் தீட்டி, அதனை சன்னம் சன்னமாக நிறைவேற்றும் நீண்ட பயணத்தை மேற்கொண்டாலொழிய இது சாத்தியமாகாது.

(இலக்கியச்சோலை வெளியீடான “மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Saturday 25 February 2017

போவோமா ஊர்கோலம்...?


அமைதியான அதிகாலை வேளை. மஸ்ஜிதில் கூட்டாக ஸுப்ஹு தொழும்பொழுது மனதில் எப்பொழுதும் ஒரு தெளிவும், திருப்தியும் பிறக்கும். ஸலாமுக்குப் பிறகு திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல் எல்லாம் முடிந்து வெளிவந்தேன்.

இலேசாக விடிந்திருந்தது. மெல்ல கடற்கரை நோக்கி நடந்தேன். வழியில் தேநீர்க்கடையில் சூடான மஞ்சள் வாடாவும், சோத்து வாடாவும் வாடா... வாடா என்றன. ஒரு மஞ்சள் வாடாவை துண்டுத்தாளில் எடுத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தேன்.

அதைத் தின்று இஞ்சித் தேநீரைக் குடித்தாலே தனி சுகம். இந்தச் சுகம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது. நான் ஊரில் இருப்பதே கொஞ்ச நாட்கள்தான். அதனால் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் இந்தத் தேநீர்க் கடையைத் தவற விடுவதே கிடையாது.

வாடா சாப்பிட்டு, இஞ்சித் தேநீரை அருந்தியவுடன் வயிறு நிரம்பிய ஒரு திருப்தி. விடியற்காலையின் பேய்ப்பசி அடங்கியது. துட்டை கொடுத்து விட்டு வெளியே வந்தேன்.

மெல்ல நடக்க ஆரம்பித்தேன். எனது ஆமை வேக நடையைப் பார்த்து "வாக்கிங்போற மூஞ்சப்பாரு..." என்று என் மனமே நக்கல் செய்தது.

எனவே நடையின் வேகத்தைக் கூட்டினேன். மூச்சிரைத்தது. கடற்கரை நெருங்கியது. கடற்கரை மணலில் கால் வைத்ததும் அதிகாலைக் குளிரில் ஜில் என்றிருந்தது. மனதுக்குள் ஒரு துள்ளல். கால்களை மணலில் புதைத்து புதைத்து நடக்கும்பொழுது சிறு குழந்தையின் குதூகலம். அப்படியே மணலில் உருண்டு புரளலாம் போலிருந்தது.

நேரே தெற்கு நோக்கி நடந்தேன். கடற்கரையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் அதிகமாக தெற்கு நோக்கித்தான் நடப்பார்கள். அதாவது திருச்செந்தூர் பக்கம். அந்த அழகான நீண்ட கடற்கரையின் பட்டுப் போன்ற மணலில் நடப்பதில் அத்தனை ஆனந்தம் காயலர்களுக்கு.

சென்னை மெரீனாவுக்கு அடுத்தபடியாக அழகான நீண்ட கடற்கரை இதுதான் என்று அறிஞர் அண்ணா காயல் கடற்கரையைப் பாராட்டினாராம். சிறு வயதில் கேள்விப்பட்டது.

நானும் எனக்கெதிராக வரும் ஆண்களும் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொண்டோம். மிக நீண்ட தூரம் நடந்து விட்டு திரும்பினேன். கடற்கரையின் நுழைவுப் பக்கம் வந்தேன். நல்ல வியர்த்திருந்தது.

அப்படியே கடலின் அருகில் கடலைப் பார்த்து அமர்ந்தேன். ஓஓவென்று அலையின் சப்தம். யாருக்கும் காத்திராத அலைகள். "காலமும், கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" (Time and tide never wait for anybody) என்பது எவ்வளவு பெரிய உண்மை!

இதுவரை என்றைக்காவது கடல் தன் அலையை நிறுத்தியிருக்கிறதா? முதல்வர் வருகிறார்...ஏன், பிரதமரே வருகிறார்,,, கொஞ்சம் நிறுத்து... அவர் வந்தபின் உன் வேலையைத் தொடங்கு என்று போக்குவரத்தை நிறுத்தி, மக்களுக்கு இடையூறு தருவது போன்று கடலிடம் சொல்ல முடியுமா?

அதெல்லாம் உன் சாலையில் வைத்துக்கொள்.. என்னிடம் நடக்காது... முதல்வர் வந்தால் எனக்கென்ன, முத்தமிழறிஞர் வந்தால் எனக்கென்ன என்று முகத்திலடித்தாற்போல் முழங்கி விடும்.

கடலலை ஓயாமல் அடிப்பது போல், காலமும் ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் அரிதே.

பூமியில் உள்ள அனைத்தையும் அல்லாஹ் மனிதனுக்காகவே படைத்துள்ளான். இதனை நாம் இப்படியும் சிந்திக்கலாம்.

காலமும், கடல்களும், காடுகளும், மலைகளும், மரங்களும், நதிகளும், செடிகளும், கொடிகளும் வெறும் வளங்களை அளிக்க மட்டுமா இவ்வளவு அழகாக படைக்கப்பட்டிருக்கின்றன? அவை தரும் வளங்கள் மட்டுமல்ல, அவை உருவாக்கும் சூழ்நிலைகளும், இயற்கையும் எல்லாம் மனிதன் பயன் பெறவும் ஆறுதலும், மகிழ்ச்சியும் பெறவுமே அல்லாஹ் படைத்துள்ளான்.

"உங்கள் உள்ளங்களுக்கு இடைக்கிடை ஓய்வு கொடுங்கள். உள்ளத்தை நிர்ப்பந்தித்தால் அது குருடாகி விடும்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

"அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?" என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் காஃப் அத்தியாயத்தில் 6வது வசனத்தில் கேட்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அறிவுள்ளவனுக்கு அவன் சித்த சுவாதீன மற்றவனாக இல்லாவிட்டால் நான்கு நேரங்கள் இருக்க வேண்டும். தன் இறைவனோடு உரையாடும் நேரம். தன்னை விசாரணை செய்யும் நேரம். இறைப் படைப்புகள் பற்றி சிந்திக்கும் நேரம். உணவு, குடிப்பு போன்ற தன் தேவைகளுக்கான நேரம்.'' (இப்னுஹிப்பான்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி இறைப் படைப்புகளைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி சிந்திப்பதற்கு கண்ணால் காண்பது என்பது மிகச்சிறந்த வழி.

ஐவேளை அல்லாஹ்வை வணங்குவது மட்டும் ஒரு முஃமினின் கடமை அல்ல. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள உலகையும், அதிலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் இரசித்து இலயித்து தனது உள்ளத்தில் உள்வாங்கி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி அதனைக் குறித்து சிந்தித்து இறைவனின் பேராற்றலை உணர்ந்து ஆனந்தமான வாழ்க்கையை வாழ முஃமின் பணிக்கப்பட்டுள்ளான்.

முந்தைய சமுதாயங்கள் வாழ்ந்த இடங்களை, இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு பயணம் மேற்கொள்ள திருக்குர்ஆன் போதிக்கிறது. இது இறை நினைவை (திக்ர்) உறுதி செய்யும்.

இஸ்லாமிய வரலாற்றில் உலகைச் சுற்றி வந்த பயணி இப்னு பதூதா. இவர் பயணம் செய்த நாடுகள், நகரங்கள் குறித்து இவர் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் இன்று வரலாற்றுப் பெட்டகங்களாகப் போற்றப்படுகின்றன. இப்னு பதூதா காயல் பதியும் வந்து சென்று இங்கே அப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு வந்த துறைமுகத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார் அவரது பயணக் குறிப்பில். அது இன்று நமக்கு பெரிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது.

இப்படி இறைவனின் படைப்புகளைக் காண்பதற்காகவே, அது குறித்து சிந்திப்பதற்காகவே உலகம் முழுவதும் சுற்றிய முஸ்லிம்கள் ஏராளம்.

எனவே நமது சுற்றுலாப் பயணங்களும் இதனை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். வெறும் ஜாலிக்காக என்று இருக்கக் கூடாது.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பார்ப்பதிலும், அது தரும் செய்திகளை உள்வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட என்னருமை எழுத்தாள நண்பர் சாளை பஷீர் இப்படிப்பட்ட பயணங்களை மேற்கொண்டு அதனைப் பல்வேறு வகைகளில் பதிவு செய்தும் வருகிறார். இன்ஷா அல்லாஹ் நாளை அது வரலாறாக மாறும்.

இறைவன் அலங்கரித்து வைத்துள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழச்சி கொள்ளும் சுற்றுலாவை அரபியில் "ஸியாஹத்" என்று அழைப்பார்கள். அதன் பொருள்" தண்ணீர் பூமியில் சுமூகமாக ஓட வேண்டும்" என்பதாகும்.

மனோகரமான அருவிகளும், நதித் தடாகங்களும், இயற்கையான சுத்த நீரையும், குளிர்ச்சியையும் தருவதைப் போலவே சுற்றுலாப் பயணங்கள் உள்ளத்திற்கும், குடும்பத்திற்கும் குளிர்ச்சியையும், ஆறுதலையும் தரும்.

ஷஹீத் செய்யித் குதுப் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் இவ்வாறு கூறுகிறார்: "பூந்தோட்டங்கள் உள்ளத்தில் ஒளியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உயிரோட்டமாக்குகிறது. அழகான காட்சிகள் இதயத்தை உயிர்வாழச் செய்கின்றன. ஒரு பூவின் நிறம் அல்லது அதன் அமைப்பு மிகப் பெரிய கலைஞர்கைளயும் பலமிழக்கச் செய்துவிடும்.''

இப்னு கல்தூன் என்ற இஸ்லாமிய வரலாற்றாய்வாளர் சுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், "கடிதங்கள், ஓவியங்கள், வரைபடங்கள் விளக்க முடியாததை ஒருவரை நேருக்கு நேர் சந்திப்பதும், ஓர் இடத்தை நேரில் சென்று பார்ப்பதும் ஏற்படுத்துகின்றன" என்கிறார்.

சுற்றுலாவில் வித்தியாசமான இடங்களில் வித்தியாசமான செயற்பாடுகளைத் தெரிவு செய்யுங்கள். அதாவது சுற்றலா பல்வேறு நோக்கங்கைளக் கொண்டது.

மகிழ்ச்சி, ஓய்வு, ஆரோக்கியம், விளையாட்டு, கல்வி, உறவுமுறை, ஆன்மீகம், அந்தஸ்து, தொழில் என அதன் நோக்கங்கள் பரந்து பட்டது. சுற்றுலா என்பது மகிழ்ச்சி, ஓய்வு, மாற்றம், பயன் எனப் பல அம்சங்கள் நிரம்பியது என்பதை மறுத்தலாகாது.

குழந்தைகள் – பெற்றோர்களுக்கிடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டால் சுற்றுலாவின் பயன் கிட்டவே கிட்டாது. எனவே எந்தெவாரு விஷயத்திலும் கடுமையாக நடக்காமல் மிகச் சூசகமாக நடந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தங்கள் வழக்கமான இருப்பிடத்தை விட்டு தற்காலிகமாக வேறு இடத்திற்குச் செல்வதும், சென்ற இடத்தில் அவர்களின் செயற்பாடுகளையும், அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளையும் சுற்றுலா எனப் பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டுகளை பெற்றோர் ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். இது அவர்களின் இயல்பூக்கங்கள் வெளிப்பட வாய்ப்பளிக்கும். பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் குழந்தை நல்ல விளையாட்டுகளை விளையாட வேண்டும்.

இமாம் கஸ்ஸாலி, விளையாட்டை குழந்தைகளின் தன்னியல்பான செயற்பாடாகக் கருதவில்லை. அதற்கு அடிப்படைத் தொழிற்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார். அதாவது, விளையாட்டினால் குழந்தை உடலையும், உறுப்புகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. விளையாட்டு குழந்தைக்கு குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குகின்றது. பாடசாலையில் பாடங்களினால் சோர்வடைந்து வீடு திரும்பும் குழந்தைக்கு இது ஆறுதலாக இருக்கின்றது என்று கூறுகிறார்.

படைத்தவனின் படைப்புகளை ரசிப்போம். அதில் அமுங்கிக் கிடக்கும் அல்லாஹ்வின் பேராற்றலை உணர்வோம். அவன் மேல் அதிகப் பற்றுவைப்போம். அதுவே அழியா வெற்றியை அள்ளித்தரும்.

http://www.kayalnews.com/essays/experience-new/5124-2014-08-24-20-31-31

Wednesday 22 February 2017

வெற்றியின் இரகசியம்!


முஸ்லிம்கள் ஷாம் தேசத்தில் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தபோது ரோமப் பேரரசர் ஹிராக்ளியஸ் தன் தளபதிகளை அழைத்து கேட்டார்:

“கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களே, புனித நீரின் புதல்வர்களே, நான் உங்களிடம் இந்த அரபுகள் குறித்து எச்சரித்திருந்தேன். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் மீதாணையாக, சத்திய பைபிளின் மீதாணையாக, எனது அரியணையின் கீழுள்ள அனைத்து நிலங்களையும் இந்த அரபுகள் ஆள்வார்கள். அழுவது பெண்களுக்குரியது. இந்தப் பூமிப் பந்தின் எந்தவொரு அரசனும் எதிர்கொள்ள முடியாத ஒரு படை வந்துள்ளது. நான் என் செல்வ வளத்தையும், மனித வளத்தையும் உங்களை, உங்கள் மதத்தை, உங்கள் பெண்களைக் காப்பதற்காக செலவிட்டுள்ளேன். உங்கள் பாவங்களை எண்ணி வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்பு கோருங்கள். உங்கள் ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களை அடக்கி ஒடுக்காதீர்கள். யுத்தங்களில் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கர்வத்தைக் கைவிடுங்கள். பொறாமையைப் பொசுக்கி விடுங்கள். இந்த இரண்டும் ஒரு தேசத்தை எதிரிகளின் முன்பு தலைகுனிய வைத்து விடும். நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.”

“என்ன வேண்டுமோ கேளுங்கள், சீசரே” என்று எல்லோரும் ஏகோபித்துக் கூறினார்கள்.

ஹிராக்ளியஸ் கேட்ட கேள்வி இதுதான்:

“உங்களுக்கு அரபுகளை விட படைபலமும், பணபலமும் அதிகம். பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்கள் படைபலத்தையும், போர் வீரியத்தையும் கண்டு அஞ்சுகின்ற வேளையில், ஏன் அரபுகளிடம் மட்டும் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள்? அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள்? அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது?”

ரோமர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. கிறிஸ்தவத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த ஒரு வயதான கிறிஸ்தவப் பாதிரி எழுந்தார். “நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்:

“சீசரே, நம் மக்கள் மதத்தை மாற்றிவிட்டனர். நிறைய புதுமைகளை உட்புகுத்தி விட்டனர். இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையில் மூழ்கி விட்டனர். ஒருவருக்கொருவர் அடக்கியாள்கின்றனர். நல்லதை யாருமே ஏவுவதில்லை. தீயதை யாருமே விலக்குவதில்லை. நீதியோ, நியாயமோ, நன்மையோ அதன் ஒரு சுவடு கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வழிபாட்டு நேரங்களை மாற்றி விட்டனர். வட்டியை விழுங்குகின்றனர். விபச்சாரத்தில் வித்தகம் புரிகின்றனர். கள்ள உறவுகள், கூடா ஒழுக்கங்களில் மூழ்கி விட்டனர். ஒவ்வொரு பாவமான காரியமும், வெட்ககரமான செயலும் அவர்களிடம் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதற்கு மாறாக, இந்த அரபுகள் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். மார்க்கத்தை மாசுமருவின்றி மார்போடு அணைக்கின்றனர். இரவு நேரங்களில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகற்பொழுதுகளில் படைத்தவனுக்காக பசித்திருக்கின்றனர். தங்கள் இறைவனை நினைவு கூராமல் ஒரு கணம் கூட அவர்களை விட்டுக் கடந்ததில்லை. தங்கள் தலைவர் முஹம்மதுக்கு வாழ்த்துகளை வழங்காமல் வார்த்தைகளைத் தொடர்ந்ததில்லை. அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வரம்பு மீறல்கள் முதலியன முஸ்லிம்களிடம் முகவரி தேடுகின்றன. அவர்கள் அகங்காரிகள் அல்லர். நம்மை அவர்கள் தாக்கினால் நம்மை தப்பிக்க விடமாட்டார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் நம்மை விட்டு தப்பித்து ஓட மாட்டார்கள். இந்த வையகம் தற்காலிகமானதுதான்; வரும் மறுவுலக வாழ்வே முடிவில்லாதது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. சென்ற இடமெல்லாம் செழிக்கிறது. வெற்றி கிடைக்கிறது.”

(இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” என்ற நூலிலிருந்து...)

Wednesday 15 February 2017

உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்பு!

விஞ்ஞானி அப்துல் கலாம் நாஸா மையத்தில் கண்ட ராக்கெட் விடும் திப்பு படையின் ஓவியம்

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்!

இந்தத் தருணத்தில் உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்புவையும், அவர் தந்தை ஹைதர் அலீயையும் நினைவு கூர்வோம்.



சொந்த மண்ணில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதி நினைவுகூர்வதை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் தனது ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் ஆச்சரியத்துடன் விவரித்திருப்பது வருமாறு:

''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப்ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஓர் ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படைவீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படைவீரர்கள் அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஓர் இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' (அக்னிச் சிறகுகள்)

சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால இராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்பு சுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



6000 படைவீரர்களைக் கொண்ட, 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் “நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தொட்டில்” எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதையும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

துரோகத்தால் மாவீரன் திப்பு வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

Thursday 9 February 2017

சிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்கள் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் குதுப்தீன் (முகநூல் பதிவு)



எதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.

காதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.
ஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான்! (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)
அதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...
ஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...
காந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...
கருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...
இப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.
செக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக "தூக்கிலிடுபவரின் குறிப்புகள்" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.
இரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...
# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.
# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.
# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.
# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.
# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை
ஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...
ஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....
தன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.
இலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.
அவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.
சிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, "முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
அந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.
அறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்!
#தோழமைக்கு_கிட்டாத_வாய்ப்பு

காஜா குதுப்தீன்

Saturday 4 February 2017

மரகத மணிகள்


முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (அல் அஹ்ஜாப் 33:23)

எல்லோருக்கும் அல்லாஹ் ஷஹாதத் என்ற பாக்கியத்தை வழங்கிடுவதில்லை. தான் நாடியவருக்கே அல்லாஹ் இந்த மாபெரும் பாக்கியத்தை வழங்குகிறான்.

யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தை சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்கு பதிலடி கொடுத்த காலித் (ரலி), தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா? அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்!”

சுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீத் ஆனார்கள்.

இந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி காலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ? உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.

அதற்கு காலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “காலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள். உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”

உடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்து கொள்ள முடியுமா? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா?” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் இஸ்லாம் தழுவினார். மறுநாள் நடந்த போரில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.

காலித் (ரலி) அவர்களின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாம் தழுவிய ஜர்ஜாஹுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த காலித் (ரலி) அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திடவில்லை.

காலித் (ரலி) மரணத் தறுவாயில் இருக்கும்பொழுது அழுது கொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன். எத்துணை வாள்களையும், அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும். அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும், அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே! என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள்! இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே! என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே!”

அந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணமும் நிகழ்ந்தது. வெற்றியாளர்களாக அல்லாஹ் குறிப்பிடுவதும் இந்த ஷஹீதுகளைத்தான். அதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அத் தவ்பா 9:20)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார் - உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். (அனஸ் இப்னு மாலிக் (ரலி), புகாரீ)

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2015 (மனதோடு மனதாய்...)