Sunday 23 April 2017

“துரோகி” நூலாய்வுரை - ஹுஸைனம்மா


நம்மைச் சுற்றி நடப்பவையே மனநிம்மதியைப் பாதிக்க வைக்கக்கூடியவையாக இருக்க, சிறை அனுபவங்களை – அதுவும் குவாண்டனாமோ அனுபவங்களைச் சொல்லும் புத்தகமாயிற்றே என்று தயங்கி தயங்கித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இப்புத்தகத்தின் தலைப்பே, நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி நம்மை சட்டென உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது!
ஆம். நாமும் “துரோகிகள்” அல்லவா நம் நாட்டில்! புத்தகமும் அதைப் பற்றித்தான் பேசுகிறது. உண்மையான தேசபக்தி கொண்டவர்களை, பொய்முகம் காட்டுபவர்கள் துரோகி என வகைப்படுத்துவதை விவரிக்கிறது.
ஆங்கிலத்தில் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் எழுதிய “Traitor” என்ற புத்தகத்தின் தமிழாக்கமே, “துரோகி”.
தன் சொந்த நடையில், மொழியில் எதையுமே எழுதி விடுவது இலகு. ஆனால், இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து எடுத்துக் கொடுப்பதென்பது அதிகச் சிரமமான பணி. வாக்கியங்களை மொழிபெயர்ப்பதல்ல இங்கு முக்கியம்.  எண்ணங்களை, உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளைக் கடத்த வேண்டும். அவ்வகையில் அதைச் சிறப்புற செய்திருக்கிறார் ஆசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள்.
இப்புத்தகத்தில் மூல ஆசிரியர், தன் வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வொன்றினையும், அது தொடர்பான சம்பவங்களையும் விவரிக்கிறார்.  அவற்றிலிருந்து, நாம் கற்றுக் கொள்பவை, புரிந்து கொண்டவை என்னென்ன என்ற பார்வையில் இப்புத்தகத்தின் ஆய்வுரையை பதிவு செய்கிறேன். புத்தகத்தின் சம்பவங்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கும். ஏனெனில் நாமும் அதுபோல ஒரு ஃபாஸிஸத்தைக் கண்டு கொண்டிருப்பவர்கள்தானே!
சம்பவம் நடந்த குவாண்டனாமோ பகுதியை, சிறைச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே புரிகிறது அவர்களின் சாணக்கியத்தனம்.  “Arm pit of the Universe” என்று அழைக்கப்படும் அளவிற்கு (மன)அழுக்குகள் நிறைந்த இடம்; இராணுவ பாஷையில், வீரர்கள் பணிக்குச் செல்ல சற்றும் விரும்பாத இடம் என்று பொருள் இதற்கு. அந்தளவுக்கு கொடூரம் நிறைந்த சிறைச்சாலை அங்கிருந்தது.
அப்படி பணிக்குச் செல்லவே விரும்பாத ஓர் இடத்திற்கு, ”பயிற்சி” என்ற பெயரில் வீரர்களை மூளைச் சலவை செய்துதான் அழைத்துச் செல்வார்கள். குவாண்டனாமோ சிறைவாசிகள் அனைவரும் அதிபயங்கர கொடூரமானவர்கள்,  நம் நாடான அமெரிக்காவை அழிக்க வந்தவர்கள், இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பரப்புரைகளே பயிற்சி என்ற பெயரில் அளிக்கப்படுவதோடு, இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தையும் அழைத்துச் சென்று காட்டி, ஏற்கனவே வீரர்கள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பு நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள். மேலும், பணியின்போது  உணவுக்கூடங்களில்கூட தேசிய கீதத்தையும், திரைப்படங்களில் வரும் அமெரிக்க போர்க்காட்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வெறியேற்றுவது உங்களுக்கு எதை நினைவூட்டுகின்றது?
வெளியிலிருந்து வந்து யாரும் பார்வையிட முடியாத இடத்தில் சிறைச்சாலை அமைத்து விசாரணை என்ற பெயரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் புரியும் அவர்களேதான் அங்குள்ள மிருகங்களைக் காப்பாற்ற தனிக் கவனம் எடுக்கிறார்கள்! ஃபாஸிஸத்துக்கு உலகம் முழுதும் ஒரே பாணிதான் போல!
வீரர்களிடையே உயரதிகாரிகள் மீண்டும் மீண்டும் “நாம் இஸ்லாமுடன் போரில் உள்ளோம்” என்ற ஆவேசக் கூச்சல்களிட்டு, இஸ்லாம் குறித்த தவறான விளக்கங்களும் கொடுத்து, உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பிரச்சாரம்தான் பலருக்கும் இஸ்லாமைப் பற்றி அறியும் ஆவலைத் தரும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை – அவர்களும், இவர்களும்…. எவர்களும்!
சிறைவாசிகளை இஸ்லாமைப் பின்பற்றுவதை விட்டுவிட்டால் சலுகைகள் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுமளவு நயவஞ்சகர்களாகவும், தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அளவுக்குச் செல்லும் கொடூரமானவர்களாகவும் மாறுமளவு அவர்களது இஸ்லாமிய வெறுப்பு தீவிரமாக இருக்கிறது!
அதேசமயம், இஸ்லாமைப் பின்பற்றுவதாலேயே, பலவிதவிதமான எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், பொறுமை மீறாமல், தொழுகை போன்ற கடமைகளை எள்ளளவும் தவற விடாமல் நிறைவேற்றுவதையும் பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் பேராச்சரியப்பட்டுப் போகிறார்!
இதுவே ஒரு சராசரி மனிதனென்றால், ‘கடவுளே! இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே?’ என்று கடவுளைப் பழிப்பவர்களாகவும், தொடர்ந்து கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியாகவும் மாறியிருப்பார்கள். ஆனால், அங்குள்ள முஸ்லிம்களின் பொறுமையும், ஒற்றுமையும், நிதானமும், காவலர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்கின்றன. கேள்விகள் எழுகின்றன.
பதில்களைத் தேடி அந்தச் சிறைவாசிகளுடன் பேசுகிறார். எது அவர்களை பொறுமை காக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்லாமும், மறுமையும் என்று பதில் உரைக்கிறார்கள் கைதிகள். அது குறித்த மேலதிகத் தேடலில் இஸ்லாமைத் தானும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிறார் ஹோல்ட்ப்ரூக்ஸ்!
இஸ்லாத்தை நோக்கிய பயணத்தில், எதிர்மறை இசை கேட்பதையும், வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற தன் தவறுகளையும் திருத்தியவாறு நடந்து சென்றதை அவர் மிக அழகாக கூறுகிறார்:
“நான் இறைவனுக்காக ஒவ்வொரு கதவாக மூடிக் கோண்டிருந்தேன். அவனோ, எனக்காக அதிகமான கதவுகளைத் திறந்தான்.”
இந்த தஃவாவில் நமக்கும் பாடம் இருக்கிறது. ஹோல்ட்ப்ரூக்ஸ் இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், உடனே சிறைவாசிகள் பக்கம் பக்கமாக பயான் செய்யவில்லை. மாறாக, பதில் கேள்விகள் கேட்டு அவரது சிந்தனையைத் தூண்டி, அவர் உள்ளத்தைத் தயார்ப்படுத்துகிறார்கள். அழகான தஃவா!
அவருக்கு ஏற்கனவே பைபிள், தௌரா வேதம் நன்றாகத் தெரிவதோடு, பகவத் கீதை உள்ளிட்ட மற்ற தெய்வங்கள் குறித்த பல நூல்களையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் கையில் குர்ஆன் கிடைக்கும்போது மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எது சரியானது, சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வர முடிகிறது.
சிறைவாசிகளில், சிலர் உயர்படிப்பு படித்தவர்களாகவும், பதவி வகித்தவர்களாகவும் இருக்கின்றவர்கள். மற்றவர்கள் மனதளவில் சோர்ந்து விடாமல் இருக்க உதவுகின்றனர். கைதிகளாக இருந்தபோதும், தலைமையேற்று  வழிநடத்தும் பண்பும், தலைமைக்குக் கட்டுப்படும் பணிவும் கொண்டவர்களாக இருந்தனர் என்பது புரிகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கொடுஞ்சித்திரவதைகளை அனுபவிப்பதால் கைதிகளும்; தமக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் அதிகாரிகளின் கட்டளையை மீற முடியாமையின் காரணமாக, கைதிகளை அநியாயமான தண்டனைகளுக்கு உட்படுத்த நேரிடுவதால் காவலர்களும் என இரு தரப்புமே மன அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அதனால் ஏற்படும் மன இறுக்கத்தை காவலர்கள் மதுவைக் கொண்டு தணிக்க முற்படுகையில்,  கைதிகளோ இஸ்லாத்தின் காரணமாக தன்னிலை இழக்காமல் இருந்தனர்.
இராணுவத்தில் உள்ள பெண் பணியாளர்களை வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துமளவுக்குத் துணிந்தாலும், “பார்வையின் ஹிஜாபைப்” பேணிக் கொள்ளுமளவு இஸ்லாத்தில் உறுதியாக இருந்த கைதிகளிடம் நமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உண்டு!
நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்த ஹோல்ட்ப்ரூக்ஸ், குவாண்டனாமோவில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதித்துப் போகிறார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்த்து, நான் காப்பாற்ற வந்த அமெரிக்கா இதுவல்ல என மனம் உடைகிறார். தனிப்பட்ட இலாபங்களுக்காக, சிறைவாசிகளை அநியாயமாகத் துன்புறுத்துவது, கொடூரமான சித்திரவதைகள் செய்வது எனத் தவறாகச் செயல்படும் உயர் அதிகாரிகளால், தன் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அஞ்சுகிறார்.
ஆனால் அந்த அதிகாரிகளும், அவர் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதைக் கண்ட சக காவலர்களும் அவரைக் கண்டித்தனர். தாய்நாடான அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களுடன் அனுதாபம் காட்டுவது தாய்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று வாதிட்டனர். தேசபக்தியே அவரை உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற தேடலை ஏற்படுத்தியது. ஆனால், அவரோ, அறியா அப்பாவிகளுக்கு அநீதி இழைப்பது அமெரிக்காவுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கித் தரும் என்று திண்ணமாக நம்பினார். தன் நிலைப்பாடை மாற்றிக் கொள்ளாத அவரை, துரோகியெனவே அழைக்கத் தொடங்கி விட்டனர்.
நாட்டிற்கு நற்பெயர் ஏற்படுத்த முனைபவர் துரோகி, நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர்கள் தியாகிகள் என்ற நியதி எதை ஞாபகப்படுத்துகிறது உங்களுக்கு?
வாசிப்பு பல வாசல்களைத் திறந்து விடும் என்பார்கள். இப்புத்தகத்தின் தாக்கம் மிகப் பெரிது,  மீள முடியாதது. தொடர்ச்சியாக இதைக் குறித்த விஷயங்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். கிடைக்கும் தகவல்களால் அதிர்ச்சியும் ஆற்றாமையும் பொங்குகின்றன.
2002-ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 779 கைதிகளை  இங்கு கொண்டு வந்து குவித்த அமெரிக்க அரசு, அறுதிப் பெரும்பாலானோரை விடுவித்து விட்டது; ஒருசிலரை அவரவர் நாட்டுச் சிறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது. ஜனவரி 2017-ன் செய்திப்படி, 41 கைதிகள் மட்டுமே அங்கிருக்கின்றனர். அதில் 31 பேர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
விடுவிக்கப்பட்டவர்களும்  சரி, அங்கு வேலை பார்த்த வீரர்களும் சரி, இன்னமும் – 15 வருடங்கள் கழிந்த பின்னரும் – மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். சில முன்னாள் சிறைவாசிகள், விடுதலையான பின்னும், தத்தம் நாட்டு காவல்துறையால் தொடர் கண்காணிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், Waterphobia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் தமிழ்நாட்டில் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே காலவரையின்றி  வாடும் கைதிகளின் நிலையை இத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனம் அதிக வேதனையடைகிறது. அவர்களின் அவதிகளைச் சொல்ல இவ்வாறு ஒருவர் முன்வருவார் என நாடு இருக்கும் சூழலில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா என்பவர்,  தன்னோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் கலீம் என்ற கைதியின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டு, மனம் திருந்தி தன் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐந்தே மாதங்களில் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் இங்குள்ள சூழல்!
இங்கே சிலருக்கு முஸ்லிம்களின் பெயர்களைக் கேட்டாலே முதுகந்தண்டு சில்லிடுகிறதாம். அவர்கள், முஸ்லிம் பெயரைத் தாங்கியிருப்பதாலேயே பலர் அனுபவிக்கும் இக்கொடூர அனுபவங்களை வாசித்தறியட்டும். முழு உடலுமே சில்லிட்டு உணர்வற்று உறைந்து போகும்!
ஹுஸைனம்மா

Saturday 15 April 2017

“துரோகி” நூலாய்வு - யாஸ்மின் ரியாஸ்தீன்

எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும் சில புத்தகங்கள் தரும் அதிர்வுகள் அதிர்ச்சிகரமானவை. காலத்தால் மறக்க முடியாதவை. அந்த வரிசையில் இடம் பெற்ற புத்தகம்தான் “துரோகி” எனலாம்.

ஆங்கிலத்தில் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் எழுதி, 2013-ஆம் ஆண்டு வெளி வந்த Traitor? என்ற இப்புத்தகம் தமிழில் “துரோகி” என்ற பெயரில் ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீத் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நல்ல புத்தகங்கள் பல மொழிகளில் வெளி வந்தாலும், அதனை நேரம் ஒதுக்கிப் படித்தாலும் அவரவர் மொழியில் படிக்கும் போது அப்புத்தகத்தில் நம்மை பொருந்தி பார்க்க முடியும், புத்தகத்தின் கருவோடு பயணிக்க முடியும். அப்படி அழகுத் தமிழில் இப்புத்தகத்தை மொழி பெயர்த்து, கதையின் கருவோடு நம்மை பயணிக்கச் செய்து இருப்பது மொழிபெயர்ப்பு ஆசிரியரின் வல்லமையை உணர்த்துகிறது.

வாருங்கள் இனி “துரோகியோடு” பயணிப்போம்.

புத்தகத்தின் பெயரை பார்த்ததும் மேலோட்டமாக அனைவருக்கும் யாருக்கோ யாரோ இழைத்த துரோகம்தான் புத்தகமாக வெளிவந்துள்ளது என்றே தோன்றும். ஆனால் நம் சிந்தனை முற்றிலும் தவறு என்பதை உணர்த்தும் விதமாக, உச்சந்தலையில் அறைந்தாற் போல் புத்தகத்தின் கரு அமைந்துள்ளது சிறப்பானது.

கியூபாவில் அமைந்துள்ள 1898-ஆம் ஆண்டு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட குவாண்டனமோ என்ற தீவும், அங்கு அமைந்துள்ள கொடூரமான சிறை மற்றும் அதில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை சுற்றியே புத்தகத்தின் கரு அமைந்துள்ளது. இரு நாடுகளின் சட்டங்களும் செல்லுபடியாகாத குவாண்டனாமோவை அமெரிக்கா தனது வன்முறைகளின் கூடாரமாக மாற்றியது. அங்கே எவ்வித சட்டங்களும் இல்லை, கேள்வி கேட்க ஆட்களும் இல்லை.

சிறந்த இராணுவ படைவீரனாக உருவெடுத்து நாட்டுக்கு சிறந்த பணியை செய்ய வேண்டும் என்ற முடிவோடு இராணுவத்தில் சேர முயற்சிக்கும் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், இராணுவத்தில் சேர எடுத்துக் கொண்ட சிரத்தைகளும், “சாதாரண மக்களிடம் காட்டும் அவசரத்தை தங்களின் வேலையை முடிப்பதில் அரசு அதிகாரிகள் காட்டுவதில்லை, மிகவும் மெத்தனமாக வேலை பார்க்கிறார்கள்” என்பது  போன்ற உண்மைகளை ஆங்காங்கே தூவிச் செல்வது நம் சூழ்நிலையை பொருத்திப் பார்க்க உதவுகிறது.

இராணுவம் என்பது தன் கனவாக, நாட்டுக்கு சேவை செய்வது தன் மூச்சாக நினைத்து, தன் குடும்பம், நாடு, வீட்டை துறந்து இரவு பகல் பாராமல் தியாகம் செய்ய தயார் ஆகும் ஒவ்வொருவரும் எவ்வாறு மூளைச் சலவை செய்து, அவர்கள் அறியாமலேயே அநியாயத்திற்கு துணை போக பயன்படுத்தப்படுகிறார்கள், மூளைச் சலவை செய்வதற்காகவே 2001-ஆம் ஆண்டு 9/11-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பன போன்ற அரிய பல உண்மைகளை தெள்ளத்தெளிவாக ஹோல்ட்புரூக்ஸ் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அவரது தைரியம் பாராட்டுதலுக்குரியது.

இராணுவத்தில் தேர்வாகி 2003-ஆம் ஆண்டு குவாண்டனாமோவுக்கு பயணிக்கும் ஹோல்ட்புரூக்ஸ், மனித இனமே வாழத் தகுதியில்லாத விஷ ஜந்துக்களின் மத்தியில் நமக்கு ஓர் இடத்தை அமைத்துக் கொண்டதைப் போல் உள்ள பாலைவனம் போன்ற ஒரு இடத்தில், பசுமை  நிறைந்த கியூபாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சிறைச்சாலை உருவானதையும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கண்டு நொந்து போகிறார்.

பல கனவுகளோடு இராணுவத்தில் சேர முற்பட்ட ஹோல்ட்புரூக்ஸ் போன்ற பலருக்கு கிடைத்த தண்டனைதான் பாலைவனத்தில் முளைத்த, எந்தவித கேளிக்கைகளும் அற்ற இந்த குவாண்டனாமோவும், அதில் உள்ள சிறைவாசிகளும்.

எந்தவித தவறும் செய்யாத நிரபராதிகளான பலர் அங்கு குற்றவாளிகளாக அடைக்கப்பட்டிருப்பதும், அவர்களுக்கு ‘லிட்டில் ஜெனரல்’, ‘அழுக்கடைந்த விவசாய மண்டையர்கள்’ என்பது போன்ற பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பதும், ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பகுதி பகுதியாக பிரித்து அடைத்து வைத்திருப்பதும், இறுக்கப்பட்ட கை, கால் விலங்குகளும் அதனால் அவர்கள் அடையும் வேதனைகளும், எதிர்த்து கேள்வி கேட்கும் கைதிகள் அனுதினமும் அங்குமிங்குமாக மாற்றப்படுவதும், இருட்டறையில் அடைத்து வைப்பதும், அவர்களின் தொழுகை போன்ற கடமைகளை செய்ய விடாமல் சித்திரவதை செய்வதும், விசாரணை என்ற பெயரில் வயது வித்தியாசமின்றி விலங்குகளை விட மோசமாக தனியறையில் சித்திரைவதைக்கு ஆளாக்குவதும், பெண் காவலரைக் கொண்டு பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துவதும் அதன் மூலம் அவர்கள் மூளையை மழுங்கச் செய்து வாக்குமூலத்தை வாங்க முற்படுவதும் போன்ற விதவிதமான வன்முறைகளை சிந்திப்பதற்கே இறைவன் அளித்த சிந்திக்கும் திறனை வீணடிக்கிறார்களா என்று சிந்திக்க தோன்றுகிறது.

வாழ்நாளில் சந்திக்கவே விரும்பாத ஒருவரை சந்திப்பதைப் போன்ற உணர்வை அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும், யாரென்றே தெரியாத ஒவ்வொரு சிறைக் கைதிகள் மீது பகைமையை வளர்த்துக் கொண்டு, அவர்களுக்கு தரும் இன்னல்களையும், விசாரணை என்ற பெயரில் கொடுக்கப்படும் துன்புறுத்தலையும் கண்டு ஹோல்ட்புரூக்ஸ் சொல்லொணா வேதனையை அடைகிறார். எந்தவித சட்டங்களும் பின்பற்றப்படாத காட்டுமிராண்டிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார்.

அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும் இவ்வாறு நடந்துக் கொள்ள அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகளும் அதனுடன் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளும்தான்.

இவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள், நம் மக்களை அழிக்க வந்தவர்கள், நம் நாட்டை அழிக்க வந்தவர்கள், உலகில் நடக்கும் அத்தனை பயங்கரவாதத்திற்கும் இவர்கள் போன்ற இஸ்லாமியர்களும், இஸ்லாமும் தான் காரணம் என்பது  போன்ற அர்த்தமற்ற பாடத்தின் மூலம் அவர்களின் மூளை மழுங்கடித்திருப்பது தெரியாமலேயே அவர்கள் இச்சிறைவாசிகளிடம் பகைமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் டெர்ரி கைதிகளுடன் நெருங்கிப் பழகுகிறார்.
எதற்காக அவர்கள் இங்கே வந்தார்கள் என்பது போன்ற தகவல்களை சேகரிக்க முயல்கிறார்.
கைதிகளுடன் தகவல் பரிமாறிக்கொள்ள அரபி கற்றுக் கொள்கிறார்.
அதன் மூலம் அவர்கள் எவ்வித தவறும் செய்யாமலேயே இங்கு அடைக்கப்பட்டதோடு பல துன்பங்களையும் அனுபவித்து வருகிறார்கள் என்பதை சில கைதிகளின் வாக்குமூலத்தை வைத்து உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

திறமைகளை வெளிப்படுத்த  எவ்வித ஆற்றலும் இல்லாத வன்மம் நிறைந்த சிறைச்சாலையில் தங்கள் கால் செருப்பைக் கூட எவ்வாறு மூலதனமாக மாற்றுகின்றனர் என்பதைக் கண்டு வியந்து போகிறார்.

இறைவன் நாடினால் பாலைவனத்திலும் பால் வார்க்கும் என்பதற்கேற்ப சிறைவாசிகளின் அறிவும், திறமையும்,  பொறுமையும், தலைமைக்குக் கட்டுப்படுதல், இஸ்லாத்தின் பால் அவர்கள் கொண்ட பற்று, சுகபோகம் வேண்டுமெனில் இஸ்லாத்தை விட்டு வெளியே வாருங்கள் என்ற அத்துமீறல்களுக்கிடையில் அவர்கள் தரும் சலுகைகளுக்கு சற்றும் இசைந்து தராத அப்பழுக்கற்ற ஈமானைக் கண்டு வியந்து போகிறார். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுகிறார். குர்ஆன், ஹதீஸ் என்று இஸ்லாத்தை ஆராய முற்படுகிறார்.

இஸ்லாத்தில் தனக்கு இருக்கும் சந்தேகங்களை அங்குள்ள கற்றறிருந்த சிறைவாசிகளிடமும், இன்னும் பிற சகோதரர்களிடமும் கேட்கும் போதெல்லாம், உடனே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று யாரும் சொல்லாமல் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், தஃவா எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு முன்மாதிரிகளாகும்.

எந்தவிதமான சூழல் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது, அதனால் அவர் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார், அவர் அடையவிருந்த துன்பத்தில் இருந்து இறைவன் எப்படி காப்பாற்றினான், “துரோகி” என்ற பெயர் அவருக்கு ஏன் உருவானது என்பன போன்ற பல சுவாரசியங்களை உள்ளடக்கியதுதான் “துரோகி”.

தங்களது முழு இளமையையும்,  பலவித கனவுகளையும்  இழந்து, எவ்வித தவறும் செய்யாமலேயே சொந்த  நாட்டில் முளைத்த அமெரிக்க கைக் கூலிகளால் விற்கப்பட்ட இவர்களைப் போன்ற அப்பாவிகள் “நிரபராதிகள்” என்று பல வருடங்கள் கழித்து வெளியே விடப்பட்டாலும் சாதாரண மக்களுடன் இயைந்து வாழ இயலாத மன நிலையில் அவர்களை பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, மன நோய்க்கு உட்படுத்தி உணர்வுகளற்ற உடம்பை மட்டுமே வெளியே வீசி எறிகின்றனர்.

மீண்டும் மீண்டும் ஒரு தவறான கருத்தை மூளைச் சலவை செய்வதன் மூலம் ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக, ஒதுக்கப்பட்ட இனமாக மாற்ற முடியும் என்பதற்கு “துரோகி” ஓர் எடுத்துக்காட்டு.

குவாண்டனாமோவைப் பற்றி ஹோல்ட்புரூக்ஸ் கூறியவையும், மிருகங்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட மனிதர்களுக்கும், மனித உயிர்களுக்கும் இல்லை என்பதும், உண்மையான எதிரி என்ற ஒருவர் இல்லாமலே அவர்களின் சுய லாபத்திற்காக அப்பாவி  முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதும், அதன் மூலம் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் உலக அளவில் பரபரப்பாக வைத்து உலக நாடுகளின் மத்தியில் தங்கள் நாட்டை ஓய்யாரத்தில் அமர்த்த முற்படும் அமெரிக்கா போன்ற பெருமுதலைத் தரகர்களிடம்தான் இந்தியா சிக்கியுள்ளது என்பதை அமெரிக்காவின் பல சதித் திட்டங்களுடன் ஒத்துப் போகும் இந்தியாவின் தற்போதைய பல சூழல்களும், ஆட்சி முறையும் நமக்கு உணர்த்துகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட குவாண்டனமோ போன்றே மனித ஜீவன்களே வாழ முடியாத ஓர் இடமாக - இந்தியாவின் குவாண்டனாமோவாக தமிழகத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் கைக்கூலிகள் எடுக்கும் முயற்சிகள் தான் அணு உலைகளும், மீத்தேன் திட்டங்களும், விவாசயத்திற்கு எதிரான திட்டங்களுமோ என்றே சிந்திக்க வைக்கிறது இப்புத்தகத்தில் வரும் பல உண்மைகள்.

வெளிவரப்படாத பல உண்மைகளை, அக்கிரமங்களை அப்பட்டமாக எழுதிய புத்தகத்தின் ஆசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இறுதியாக, இஸ்லாத்தின் ஒளியை அணைக்க எதிரிகள் பயன்படுத்தும் ஆயுதத்தைக் கொண்டே இஸ்லாத்தின் ஒளியை சுடர் விட்டு எரிய வைக்கிறான் இறைவன் என்பதற்கு டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்கின்ற முஸ்தஃபா சரியான சான்று.

யாஸ்மின் ரியாஸ்தீன்