Showing posts with label துரோகி. Show all posts
Showing posts with label துரோகி. Show all posts

Saturday, 19 January 2019

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் முஸ்தஃபா இல்லை... இல்லை... (துரோகி)யான கதை!

இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் என்னை உடனடியாக படிக்கத் தூண்டிய புத்தகம்தான் "துரோகி".

காரணம்,  அதனுடைய தலைப்பு என்னை கவர்ந்தது. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இரண்டே நாளில் வாசித்து முடித்தேன் அந்தப் புத்தகத்தை.

மிக அற்புதமான அனுபவக் கட்டுரையை தந்துள்ளார் 'டெர்ரி ஹொல்ட்புரூக்ஸ்'. தமிழில் அதனை மிக எளிமையாக தந்திருக்கிறார் M.S.அப்துல் ஹமீது அவர்கள்.

கட்டுரையாளர் ஓர் அமெரிக்க இராணுவ வீரர். எதிர்பாராத விதமாக கியூபாவிலுள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையில் அவர் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார். அங்கு, தான் கண்ட அனுபவத்தையும், அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரிக்கும் அற்புதமான பயணம், இறுதியில் இஸ்லாமில் முடிகிறது.

அவரை இஸ்லாமின் பக்கம் இழுத்த காரணிகளில் மிக முக்கியமானது,
முஸ்லிம்கள்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு, சரியான விளக்கத்தை சிறைக் கைதிகளிடம் காண்பது மட்டுமல்லாமல் நேரடியாக பார்க்கிறார், உணர்கிறார்.

நூலில், குவாண்டனாமோ சிறையையும் அங்கு கைதிகளுக்கு தரப்படும் தண்டனை பற்றிய விவரிப்பும் அதிர்ச்சி ரகம்.

அமெரிக்க மக்களின் ஒட்டுமொத்த சிந்தனைத் தொகுப்பையும் கட்டுரையாளர் மிக அழகாக விளக்குகிறார்.

எழுத்துநடை மிக எளிதாக வேகமாக வாசிக்க தூண்டுகிறது. மொழிபெயர்ப்பு மிக அற்புதம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.

கட்டுரையாளர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் கைதிகளிடம் பேசியதாலே  துரோகியாக்கபட்டார் என்பது சுவாரஸ்யமானது. படித்துப் பாருங்கள். நல்ல அனுபவம்.

மொழிபெயர்ப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதிகை வசந்தன் (நெல்லை நியாஸ்)

Thursday, 9 November 2017

எனது பார்வையில் ‘துரோகி’ - நூருத்தீன்

புதிய விடியல்  ஆகஸ்ட் 16-31, 2017 இதழில் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய நூலாய்வுரை!


அக்கிரமமான அந்தச் சிறைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?

சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு மிருகத்தைப் போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் கியூபா தீவில், குவாண்டனாமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக் கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.

அங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும் முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்ததுதான் அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.

காட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப்போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனாமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம். கொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறைவழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி.

கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது. ஆனால் அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்கு சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக் காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புரூக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள்? அதென்ன அரபு மொழி? அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்?

அவ்வினாக்களுக்கான விடைகள் அச்சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது: ‘துரோகி’!

இஸ்லாத்தின் மீது ஆகப் பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களின் படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச்சூழலிலும் அக்கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்!

திரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந்நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச்சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும், நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால் அச்சுப் பிழைகள் ஒரு குறை. அவற்றை திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.

நூருத்தீன்

Wednesday, 10 May 2017

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்: “துரோகி” நூலாய்வு - ஆமினா முஹம்மத்

நேர்த்திமிகு அடித்தளத்துடன் ஆரம்பித்த கட்டடத்தை மெல்ல மெல்ல சுவாரசியமும் எதிர்பார்ப்பும் கொண்ட ‘துரோகி’ எனும் மாளிகையாய் வடித்து, கட்டுமானம் முதல் பிரவேசம் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் நாம் இணைந்தே இருப்பது போன்ற அனுபவத்தை முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை உருவாக்கியிருக்கும் மாயக்காரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்! அந்த நேர்த்தியை சிதைத்திடாத வண்ணம், ஆங்கில தடம் அறியா வண்ணம் தமிழுக்கு இடப்பெயர்த்திருக்கிறார் எம்.எஸ். அப்துல் ஹமீது. ஆம்... அப்துல் ஹமீது ட்ரய்டரை மொழிபெயர்க்கவில்லை, துரோகியாக இடப்பெயர்த்திருக்கிறார்! 2017 சென்னை புத்தகத்திருவிழா வரவுகளில் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற புத்தகங்களில் ஒன்றாக ‘துரோகி’ இருந்தது. - புதிய விடியல்  ஆசிரியர்

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்!


இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் துரோகி யார்? இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்குவதில் சதி செய்த அமெரிக்காவா? குவாண்டனாமோவின் சிறைவாசிகளா? அவர்கள் மீது டெர்ரி கொண்ட இரக்கத்திற்காக அவரை தொந்தரவு செய்யும் மேலதிகாரிகளா? என்ற தேடல் இன்னும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியது. இந்தக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட புத்தகம்தான் ‘துரோகி’.

முதல் பக்கத்தில் துருதுருவென அமெரிக்க வீதிகளில் வலம் வந்த சராசரி இளைஞனான டெர்ரிதான் பின்னட்டையில் தாடி சகிதம் முஸ்லிம் தோற்றத்தில் காட்சி தந்துள்ளார் என்பதே பெரும் சிலிர்ப்பை உண்டாக்கிச் சென்றது. ஹாலிவுட் படம் போலவே புத்தகத்தை துவக்கியிருக்கிறார் டெர்ரி. தரைமட்டமாக்கப்பட்ட, இரட்டைக் கோபுரங்கள் அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பட்டாளத்தினரில் ஒருவரான டெர்ரி அவ்விடத்தில் சற்று அதிகமாக சிரித்து விட்டார். அவர் சிரிப்பின் காரணம் ‘இதுதான் மனிதகுலத்திற்கு நேர்ந்த மிகப் பெரிய துயரச் சம்பவம்’ என்று அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாசகம். இந்நேரம் பல்லை நறநறவென கடித்து முஸ்லிம்களுக்கெதிரான பகையை நெஞ்சில் முழுக்க நிரப்பி தன் தாய்நாட்டை சீண்டியவர்களை பழி வாங்கும் குரோதத்துடன் டெர்ரி மனித மிருகமாய் மாறியிருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்கா அவனிடம் எதிர்பார்த்தது.

ஆனால் அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு டெர்ரி பலியாகவில்லை. ‘இதுவரை நடந்த மனிதப் பேரிழப்புக்கு அருகில் கூட இது வர முடியாது தெரியுமா?’ எனத் தன் சிரிப்பிற்கான காரணத்தை அவர் தன் சக படைவீரர்களிடம் சொன்னபோது எவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இனி புத்தகம் முழுவதும் இதே நிலைதான்... டெர்ரி தவிர பெரும்பாலும் அனைத்து படைவீரர்களும் மனரீதியாக குவாண்டனாமோ கைதிகளை துன்புறுத்தப் போகும் அரக்கர்களாக மாறியிருந்தனர். சாதாரண சிறை அதிகாரியாக டெர்ரி குவாண்டனாமோ செல்வது, அங்கே சிறைவாசிகளுக்கு நேர்ந்த கொடுமை, டெர்ரி முஸ்லிமானது என அனுபவங்கள் பக்கங்களாக விரிகின்றன. எனினும் ஒவ்வொரு பக்கத்திலும் பேரதிர்ச்சியைத் தருகிறார் டெர்ரி!

குவாண்டனாமோ... கியூபாவின் தீவில் அமெரிக்காவால் கட்டப்பட்ட சிறை. சகல பாதுகாப்புடன் கட்டப்பட்ட கொட்டளம். அப்படி இருந்தும் தலையணை கொண்டு கழுத்து இறுக்கி மூன்று கைதிகள் தற்கொலை செய்து சிறைச்சாலையின் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் காட்ட முனைந்தனர். அதன் பின் விக்கிலீக்ஸ் தன்னிடமிருக்கும் கோப்புகளை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. இன்னும் பல மொழிகளில் துர் அனுபவ நூல்கள் வந்தாலும் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலைத்தளங்களில் இதன் அகோரங்கள் குறித்து பேசப்பட்டாலும் அவை துல்லியமாக இருந்ததில்லை. முதன்முறையாக ‘துரோகி’ மூலம் இருட்டப்பட்ட அறைக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறைக் கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை ஒவ்வொரு பக்கமும் விவரிக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் உஷணத்தீவு அது. விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக மிகைத்திருக்கும் அகோர பூமி. இவையெல்லாவற்றையும் விட வெறுப்பால் உஷ்ணத்திலும் செய்கைகளால் விஷங்களினும் கொடிய மனிதர்களை பயிற்சி சிறைக்கைதிகளிடம் அவர்கள் காட்டவிருக்கும் முகம் கற்பனைக்கும் எட்டிராதது. மரண ஓலங்கள் கூட நாட்டுக்குக் கேட்காது. மேல்முறையீடு, மனு என எதுவும் குவாண்டனாமோ அகராதியில் இல்லை. படங்களில் கூட காட்சிப்படுத்தப்படாத கொடூரங்களின் அரங்கேற்றம் நாள்தோறும் நடந்தது. காதைக் கிழிக்கும் இசையை மிகையழுத்த ஒலியில் நீண்ட நேரம் ஒலிக்கச் செய்வதும், சதையையும் எலும்பையும் இறுக்கும் அளவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் கைதிகளை விடுவதும், விலங்குகளை ஏவி கைதிகளை துன்புறுத்துவதுமாக சித்திரவதைகள் பல வண்ணங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டன!

சாத்தான்களின் கண்காணிப்பில்தான் பாவப்பட்ட சிறைக்கைதிகள் விடப்பட்டுள்ளனர். ஆம்... இவர்கள் அப்பாவிகள் என்பது அமெரிக்காவுக்கும் கூட தெரியும் என்று விக்கிலீக்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. இந்த உண்மை நிலை மனோவியல் ரீதியாக பயிற்சியளிக்கப்பட்ட எந்த அதிகாரிக்கும் புரியாது. ஆனால் நாம் முன்பே சொன்னது போல் ஆரம்பம் முதலே இதில் நாட்டமில்லாத டெர்ரி மனிதத் தன்மையுடன் கைதிகளிடம் நடந்துகொண்டார். இத்தனை சித்திரவதைகளுக்குப் பின்னும் சிறைவாசிகள் முகத்தில் படரும் புன்னகை டெர்ரியை வெகுவாக ஈர்த்தது. பாங்கோசையை சிதைத்து ஒலிக்கச் செய்வதன் மூலமும், இஸ்லாத்தைப் பற்றி தவறாக பேசுவதன் மூலமும் மனரீதியாகவும் அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

எனினும் அந்த அழுத்தங்கள் பெயரளவு முஸ்லிம்களையும் தன் மார்க்கத்தில் வலுவுள்ளவர்களாக மாற்றிய உளவியல்களையும் கவனிக்கத் தவறவில்லை டெர்ரி. இவையெல்லாம் சேர்த்து இன்னும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆர்வத்தை டெர்ரிக்கு தூண்டியது. அதுதான் டெர்ரிக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது. கைதிகளின் மீது இரக்கம் கொண்ட டெர்ரி மற்ற அதிகாரிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்ததை மற்றோர்கள் துல்லியமாக கவனித்துவிட்டார்கள். இதன் மூலம் டெர்ரிக்கும் அடி உதை விழுந்தது. அதையும் மீறி அவர் மனம் கைதிகள் பற்றி சிந்திக்கலாயிற்று! அது அவரை தூய மார்க்கத்தின் பால் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தியது. டெர்ரி ‘முஸ்தஃபா அப்துல்லாஹ்’வானார்.

‘துரோகி’யின் பக்கங்கள் 203 உடன் நிறைவு பெற்றாலும் அடுத்தடுத்த வாசிப்புக்கு அழைத்துச் செல்ல தூண்டியிருக்கிறது. அதில் முக்கியமாக டெர்ரி தான் சந்தித்ததாகக் கூறும் வித்தியாசமான மனிதர் டேவிட் ஹிக்ஸ். சிறையில் உள்ளோர் தாம் குற்றமற்றவர்கள் என்பதை சொல்வது வழக்கம். ஆனால் டெர்ரி சந்தித்த டேவிட் ஹிக்ஸ் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். உசாமாவுடன் தான் பழகியதையும் அல் கொய்தாவில் தாம் பயிற்சி பெற்றதையும் மறைக்காமல் பகிர்ந்து தன் நிலையை ஒப்புக்கொண்டிருந்ததாக டெர்ரி குறிப்பிட்டிருந்தார். இந்த டேவிட் ஹிக்ஸ் குவாண்டனாமோவிற்கு வந்த முதல் கைதிக் குழுவில் ஒருவர். அவர் மீதான குற்றத்தை விலக்கி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். டேவிட் ஹிக்ஸ் எழுதிய “குவாண்டனாமோ: எனது பயணம்” என்ற நூலும் சித்திரவதைக் கூடத்தின் சித்திரத்தை அப்பட்டமாக விளக்குகிறது. இன்னும் முன்னாள் கைதிகளின் நூல்கள் அதிகம் காணக் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைப்பின் அதையும் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

சமூகத்தின் தேவை, தேவையின் விழிப்புணர்வு, விழப்புணர்வின் இலக்கு, இலக்கின் பயணம் என அனைத்தையும் ஒருங்கே திட்டமிட்டு சிந்தனையை சரியான திசைக்குக் கொண்டு செல்லும் இலக்கியச்சோலையின் மற்றுமொரு மைல்கல் ‘துரோகி’.

அபாயகரமான உலகை நோக்கிய அகோரப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தை சிலமணி நேர வாசிப்பு கொடுத்து விட்டுச் செல்கிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆமினா முஹம்மத்

இக்கட்டுரை புதிய விடியல் ஏப்ரல் 16-30, 2017 இதழில் வெளியானது.

Sunday, 23 April 2017

“துரோகி” நூலாய்வுரை - ஹுஸைனம்மா


நம்மைச் சுற்றி நடப்பவையே மனநிம்மதியைப் பாதிக்க வைக்கக்கூடியவையாக இருக்க, சிறை அனுபவங்களை – அதுவும் குவாண்டனாமோ அனுபவங்களைச் சொல்லும் புத்தகமாயிற்றே என்று தயங்கி தயங்கித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இப்புத்தகத்தின் தலைப்பே, நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி நம்மை சட்டென உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது!
ஆம். நாமும் “துரோகிகள்” அல்லவா நம் நாட்டில்! புத்தகமும் அதைப் பற்றித்தான் பேசுகிறது. உண்மையான தேசபக்தி கொண்டவர்களை, பொய்முகம் காட்டுபவர்கள் துரோகி என வகைப்படுத்துவதை விவரிக்கிறது.
ஆங்கிலத்தில் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் எழுதிய “Traitor” என்ற புத்தகத்தின் தமிழாக்கமே, “துரோகி”.
தன் சொந்த நடையில், மொழியில் எதையுமே எழுதி விடுவது இலகு. ஆனால், இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து எடுத்துக் கொடுப்பதென்பது அதிகச் சிரமமான பணி. வாக்கியங்களை மொழிபெயர்ப்பதல்ல இங்கு முக்கியம்.  எண்ணங்களை, உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளைக் கடத்த வேண்டும். அவ்வகையில் அதைச் சிறப்புற செய்திருக்கிறார் ஆசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள்.
இப்புத்தகத்தில் மூல ஆசிரியர், தன் வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வொன்றினையும், அது தொடர்பான சம்பவங்களையும் விவரிக்கிறார்.  அவற்றிலிருந்து, நாம் கற்றுக் கொள்பவை, புரிந்து கொண்டவை என்னென்ன என்ற பார்வையில் இப்புத்தகத்தின் ஆய்வுரையை பதிவு செய்கிறேன். புத்தகத்தின் சம்பவங்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கும். ஏனெனில் நாமும் அதுபோல ஒரு ஃபாஸிஸத்தைக் கண்டு கொண்டிருப்பவர்கள்தானே!
சம்பவம் நடந்த குவாண்டனாமோ பகுதியை, சிறைச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே புரிகிறது அவர்களின் சாணக்கியத்தனம்.  “Arm pit of the Universe” என்று அழைக்கப்படும் அளவிற்கு (மன)அழுக்குகள் நிறைந்த இடம்; இராணுவ பாஷையில், வீரர்கள் பணிக்குச் செல்ல சற்றும் விரும்பாத இடம் என்று பொருள் இதற்கு. அந்தளவுக்கு கொடூரம் நிறைந்த சிறைச்சாலை அங்கிருந்தது.
அப்படி பணிக்குச் செல்லவே விரும்பாத ஓர் இடத்திற்கு, ”பயிற்சி” என்ற பெயரில் வீரர்களை மூளைச் சலவை செய்துதான் அழைத்துச் செல்வார்கள். குவாண்டனாமோ சிறைவாசிகள் அனைவரும் அதிபயங்கர கொடூரமானவர்கள்,  நம் நாடான அமெரிக்காவை அழிக்க வந்தவர்கள், இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பரப்புரைகளே பயிற்சி என்ற பெயரில் அளிக்கப்படுவதோடு, இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தையும் அழைத்துச் சென்று காட்டி, ஏற்கனவே வீரர்கள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பு நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள். மேலும், பணியின்போது  உணவுக்கூடங்களில்கூட தேசிய கீதத்தையும், திரைப்படங்களில் வரும் அமெரிக்க போர்க்காட்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வெறியேற்றுவது உங்களுக்கு எதை நினைவூட்டுகின்றது?
வெளியிலிருந்து வந்து யாரும் பார்வையிட முடியாத இடத்தில் சிறைச்சாலை அமைத்து விசாரணை என்ற பெயரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் புரியும் அவர்களேதான் அங்குள்ள மிருகங்களைக் காப்பாற்ற தனிக் கவனம் எடுக்கிறார்கள்! ஃபாஸிஸத்துக்கு உலகம் முழுதும் ஒரே பாணிதான் போல!
வீரர்களிடையே உயரதிகாரிகள் மீண்டும் மீண்டும் “நாம் இஸ்லாமுடன் போரில் உள்ளோம்” என்ற ஆவேசக் கூச்சல்களிட்டு, இஸ்லாம் குறித்த தவறான விளக்கங்களும் கொடுத்து, உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பிரச்சாரம்தான் பலருக்கும் இஸ்லாமைப் பற்றி அறியும் ஆவலைத் தரும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை – அவர்களும், இவர்களும்…. எவர்களும்!
சிறைவாசிகளை இஸ்லாமைப் பின்பற்றுவதை விட்டுவிட்டால் சலுகைகள் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுமளவு நயவஞ்சகர்களாகவும், தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அளவுக்குச் செல்லும் கொடூரமானவர்களாகவும் மாறுமளவு அவர்களது இஸ்லாமிய வெறுப்பு தீவிரமாக இருக்கிறது!
அதேசமயம், இஸ்லாமைப் பின்பற்றுவதாலேயே, பலவிதவிதமான எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், பொறுமை மீறாமல், தொழுகை போன்ற கடமைகளை எள்ளளவும் தவற விடாமல் நிறைவேற்றுவதையும் பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் பேராச்சரியப்பட்டுப் போகிறார்!
இதுவே ஒரு சராசரி மனிதனென்றால், ‘கடவுளே! இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே?’ என்று கடவுளைப் பழிப்பவர்களாகவும், தொடர்ந்து கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியாகவும் மாறியிருப்பார்கள். ஆனால், அங்குள்ள முஸ்லிம்களின் பொறுமையும், ஒற்றுமையும், நிதானமும், காவலர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்கின்றன. கேள்விகள் எழுகின்றன.
பதில்களைத் தேடி அந்தச் சிறைவாசிகளுடன் பேசுகிறார். எது அவர்களை பொறுமை காக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்லாமும், மறுமையும் என்று பதில் உரைக்கிறார்கள் கைதிகள். அது குறித்த மேலதிகத் தேடலில் இஸ்லாமைத் தானும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிறார் ஹோல்ட்ப்ரூக்ஸ்!
இஸ்லாத்தை நோக்கிய பயணத்தில், எதிர்மறை இசை கேட்பதையும், வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற தன் தவறுகளையும் திருத்தியவாறு நடந்து சென்றதை அவர் மிக அழகாக கூறுகிறார்:
“நான் இறைவனுக்காக ஒவ்வொரு கதவாக மூடிக் கோண்டிருந்தேன். அவனோ, எனக்காக அதிகமான கதவுகளைத் திறந்தான்.”
இந்த தஃவாவில் நமக்கும் பாடம் இருக்கிறது. ஹோல்ட்ப்ரூக்ஸ் இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், உடனே சிறைவாசிகள் பக்கம் பக்கமாக பயான் செய்யவில்லை. மாறாக, பதில் கேள்விகள் கேட்டு அவரது சிந்தனையைத் தூண்டி, அவர் உள்ளத்தைத் தயார்ப்படுத்துகிறார்கள். அழகான தஃவா!
அவருக்கு ஏற்கனவே பைபிள், தௌரா வேதம் நன்றாகத் தெரிவதோடு, பகவத் கீதை உள்ளிட்ட மற்ற தெய்வங்கள் குறித்த பல நூல்களையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் கையில் குர்ஆன் கிடைக்கும்போது மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எது சரியானது, சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வர முடிகிறது.
சிறைவாசிகளில், சிலர் உயர்படிப்பு படித்தவர்களாகவும், பதவி வகித்தவர்களாகவும் இருக்கின்றவர்கள். மற்றவர்கள் மனதளவில் சோர்ந்து விடாமல் இருக்க உதவுகின்றனர். கைதிகளாக இருந்தபோதும், தலைமையேற்று  வழிநடத்தும் பண்பும், தலைமைக்குக் கட்டுப்படும் பணிவும் கொண்டவர்களாக இருந்தனர் என்பது புரிகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கொடுஞ்சித்திரவதைகளை அனுபவிப்பதால் கைதிகளும்; தமக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் அதிகாரிகளின் கட்டளையை மீற முடியாமையின் காரணமாக, கைதிகளை அநியாயமான தண்டனைகளுக்கு உட்படுத்த நேரிடுவதால் காவலர்களும் என இரு தரப்புமே மன அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அதனால் ஏற்படும் மன இறுக்கத்தை காவலர்கள் மதுவைக் கொண்டு தணிக்க முற்படுகையில்,  கைதிகளோ இஸ்லாத்தின் காரணமாக தன்னிலை இழக்காமல் இருந்தனர்.
இராணுவத்தில் உள்ள பெண் பணியாளர்களை வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துமளவுக்குத் துணிந்தாலும், “பார்வையின் ஹிஜாபைப்” பேணிக் கொள்ளுமளவு இஸ்லாத்தில் உறுதியாக இருந்த கைதிகளிடம் நமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உண்டு!
நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்த ஹோல்ட்ப்ரூக்ஸ், குவாண்டனாமோவில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதித்துப் போகிறார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்த்து, நான் காப்பாற்ற வந்த அமெரிக்கா இதுவல்ல என மனம் உடைகிறார். தனிப்பட்ட இலாபங்களுக்காக, சிறைவாசிகளை அநியாயமாகத் துன்புறுத்துவது, கொடூரமான சித்திரவதைகள் செய்வது எனத் தவறாகச் செயல்படும் உயர் அதிகாரிகளால், தன் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அஞ்சுகிறார்.
ஆனால் அந்த அதிகாரிகளும், அவர் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதைக் கண்ட சக காவலர்களும் அவரைக் கண்டித்தனர். தாய்நாடான அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களுடன் அனுதாபம் காட்டுவது தாய்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று வாதிட்டனர். தேசபக்தியே அவரை உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற தேடலை ஏற்படுத்தியது. ஆனால், அவரோ, அறியா அப்பாவிகளுக்கு அநீதி இழைப்பது அமெரிக்காவுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கித் தரும் என்று திண்ணமாக நம்பினார். தன் நிலைப்பாடை மாற்றிக் கொள்ளாத அவரை, துரோகியெனவே அழைக்கத் தொடங்கி விட்டனர்.
நாட்டிற்கு நற்பெயர் ஏற்படுத்த முனைபவர் துரோகி, நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர்கள் தியாகிகள் என்ற நியதி எதை ஞாபகப்படுத்துகிறது உங்களுக்கு?
வாசிப்பு பல வாசல்களைத் திறந்து விடும் என்பார்கள். இப்புத்தகத்தின் தாக்கம் மிகப் பெரிது,  மீள முடியாதது. தொடர்ச்சியாக இதைக் குறித்த விஷயங்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். கிடைக்கும் தகவல்களால் அதிர்ச்சியும் ஆற்றாமையும் பொங்குகின்றன.
2002-ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 779 கைதிகளை  இங்கு கொண்டு வந்து குவித்த அமெரிக்க அரசு, அறுதிப் பெரும்பாலானோரை விடுவித்து விட்டது; ஒருசிலரை அவரவர் நாட்டுச் சிறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது. ஜனவரி 2017-ன் செய்திப்படி, 41 கைதிகள் மட்டுமே அங்கிருக்கின்றனர். அதில் 31 பேர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
விடுவிக்கப்பட்டவர்களும்  சரி, அங்கு வேலை பார்த்த வீரர்களும் சரி, இன்னமும் – 15 வருடங்கள் கழிந்த பின்னரும் – மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். சில முன்னாள் சிறைவாசிகள், விடுதலையான பின்னும், தத்தம் நாட்டு காவல்துறையால் தொடர் கண்காணிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், Waterphobia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் தமிழ்நாட்டில் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே காலவரையின்றி  வாடும் கைதிகளின் நிலையை இத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனம் அதிக வேதனையடைகிறது. அவர்களின் அவதிகளைச் சொல்ல இவ்வாறு ஒருவர் முன்வருவார் என நாடு இருக்கும் சூழலில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா என்பவர்,  தன்னோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் கலீம் என்ற கைதியின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டு, மனம் திருந்தி தன் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐந்தே மாதங்களில் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் இங்குள்ள சூழல்!
இங்கே சிலருக்கு முஸ்லிம்களின் பெயர்களைக் கேட்டாலே முதுகந்தண்டு சில்லிடுகிறதாம். அவர்கள், முஸ்லிம் பெயரைத் தாங்கியிருப்பதாலேயே பலர் அனுபவிக்கும் இக்கொடூர அனுபவங்களை வாசித்தறியட்டும். முழு உடலுமே சில்லிட்டு உணர்வற்று உறைந்து போகும்!
ஹுஸைனம்மா

Saturday, 15 April 2017

“துரோகி” நூலாய்வு - யாஸ்மின் ரியாஸ்தீன்

எத்தனையோ புத்தகங்கள் படித்தாலும் சில புத்தகங்கள் தரும் அதிர்வுகள் அதிர்ச்சிகரமானவை. காலத்தால் மறக்க முடியாதவை. அந்த வரிசையில் இடம் பெற்ற புத்தகம்தான் “துரோகி” எனலாம்.

ஆங்கிலத்தில் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் எழுதி, 2013-ஆம் ஆண்டு வெளி வந்த Traitor? என்ற இப்புத்தகம் தமிழில் “துரோகி” என்ற பெயரில் ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீத் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனை நல்ல புத்தகங்கள் பல மொழிகளில் வெளி வந்தாலும், அதனை நேரம் ஒதுக்கிப் படித்தாலும் அவரவர் மொழியில் படிக்கும் போது அப்புத்தகத்தில் நம்மை பொருந்தி பார்க்க முடியும், புத்தகத்தின் கருவோடு பயணிக்க முடியும். அப்படி அழகுத் தமிழில் இப்புத்தகத்தை மொழி பெயர்த்து, கதையின் கருவோடு நம்மை பயணிக்கச் செய்து இருப்பது மொழிபெயர்ப்பு ஆசிரியரின் வல்லமையை உணர்த்துகிறது.

வாருங்கள் இனி “துரோகியோடு” பயணிப்போம்.

புத்தகத்தின் பெயரை பார்த்ததும் மேலோட்டமாக அனைவருக்கும் யாருக்கோ யாரோ இழைத்த துரோகம்தான் புத்தகமாக வெளிவந்துள்ளது என்றே தோன்றும். ஆனால் நம் சிந்தனை முற்றிலும் தவறு என்பதை உணர்த்தும் விதமாக, உச்சந்தலையில் அறைந்தாற் போல் புத்தகத்தின் கரு அமைந்துள்ளது சிறப்பானது.

கியூபாவில் அமைந்துள்ள 1898-ஆம் ஆண்டு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட குவாண்டனமோ என்ற தீவும், அங்கு அமைந்துள்ள கொடூரமான சிறை மற்றும் அதில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை சுற்றியே புத்தகத்தின் கரு அமைந்துள்ளது. இரு நாடுகளின் சட்டங்களும் செல்லுபடியாகாத குவாண்டனாமோவை அமெரிக்கா தனது வன்முறைகளின் கூடாரமாக மாற்றியது. அங்கே எவ்வித சட்டங்களும் இல்லை, கேள்வி கேட்க ஆட்களும் இல்லை.

சிறந்த இராணுவ படைவீரனாக உருவெடுத்து நாட்டுக்கு சிறந்த பணியை செய்ய வேண்டும் என்ற முடிவோடு இராணுவத்தில் சேர முயற்சிக்கும் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், இராணுவத்தில் சேர எடுத்துக் கொண்ட சிரத்தைகளும், “சாதாரண மக்களிடம் காட்டும் அவசரத்தை தங்களின் வேலையை முடிப்பதில் அரசு அதிகாரிகள் காட்டுவதில்லை, மிகவும் மெத்தனமாக வேலை பார்க்கிறார்கள்” என்பது  போன்ற உண்மைகளை ஆங்காங்கே தூவிச் செல்வது நம் சூழ்நிலையை பொருத்திப் பார்க்க உதவுகிறது.

இராணுவம் என்பது தன் கனவாக, நாட்டுக்கு சேவை செய்வது தன் மூச்சாக நினைத்து, தன் குடும்பம், நாடு, வீட்டை துறந்து இரவு பகல் பாராமல் தியாகம் செய்ய தயார் ஆகும் ஒவ்வொருவரும் எவ்வாறு மூளைச் சலவை செய்து, அவர்கள் அறியாமலேயே அநியாயத்திற்கு துணை போக பயன்படுத்தப்படுகிறார்கள், மூளைச் சலவை செய்வதற்காகவே 2001-ஆம் ஆண்டு 9/11-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பன போன்ற அரிய பல உண்மைகளை தெள்ளத்தெளிவாக ஹோல்ட்புரூக்ஸ் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதிந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. அவரது தைரியம் பாராட்டுதலுக்குரியது.

இராணுவத்தில் தேர்வாகி 2003-ஆம் ஆண்டு குவாண்டனாமோவுக்கு பயணிக்கும் ஹோல்ட்புரூக்ஸ், மனித இனமே வாழத் தகுதியில்லாத விஷ ஜந்துக்களின் மத்தியில் நமக்கு ஓர் இடத்தை அமைத்துக் கொண்டதைப் போல் உள்ள பாலைவனம் போன்ற ஒரு இடத்தில், பசுமை  நிறைந்த கியூபாவுக்கு மத்தியில் இப்படி ஒரு சிறைச்சாலை உருவானதையும், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மனிதர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கண்டு நொந்து போகிறார்.

பல கனவுகளோடு இராணுவத்தில் சேர முற்பட்ட ஹோல்ட்புரூக்ஸ் போன்ற பலருக்கு கிடைத்த தண்டனைதான் பாலைவனத்தில் முளைத்த, எந்தவித கேளிக்கைகளும் அற்ற இந்த குவாண்டனாமோவும், அதில் உள்ள சிறைவாசிகளும்.

எந்தவித தவறும் செய்யாத நிரபராதிகளான பலர் அங்கு குற்றவாளிகளாக அடைக்கப்பட்டிருப்பதும், அவர்களுக்கு ‘லிட்டில் ஜெனரல்’, ‘அழுக்கடைந்த விவசாய மண்டையர்கள்’ என்பது போன்ற பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பதும், ஒவ்வொருவரின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப பகுதி பகுதியாக பிரித்து அடைத்து வைத்திருப்பதும், இறுக்கப்பட்ட கை, கால் விலங்குகளும் அதனால் அவர்கள் அடையும் வேதனைகளும், எதிர்த்து கேள்வி கேட்கும் கைதிகள் அனுதினமும் அங்குமிங்குமாக மாற்றப்படுவதும், இருட்டறையில் அடைத்து வைப்பதும், அவர்களின் தொழுகை போன்ற கடமைகளை செய்ய விடாமல் சித்திரவதை செய்வதும், விசாரணை என்ற பெயரில் வயது வித்தியாசமின்றி விலங்குகளை விட மோசமாக தனியறையில் சித்திரைவதைக்கு ஆளாக்குவதும், பெண் காவலரைக் கொண்டு பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துவதும் அதன் மூலம் அவர்கள் மூளையை மழுங்கச் செய்து வாக்குமூலத்தை வாங்க முற்படுவதும் போன்ற விதவிதமான வன்முறைகளை சிந்திப்பதற்கே இறைவன் அளித்த சிந்திக்கும் திறனை வீணடிக்கிறார்களா என்று சிந்திக்க தோன்றுகிறது.

வாழ்நாளில் சந்திக்கவே விரும்பாத ஒருவரை சந்திப்பதைப் போன்ற உணர்வை அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும், யாரென்றே தெரியாத ஒவ்வொரு சிறைக் கைதிகள் மீது பகைமையை வளர்த்துக் கொண்டு, அவர்களுக்கு தரும் இன்னல்களையும், விசாரணை என்ற பெயரில் கொடுக்கப்படும் துன்புறுத்தலையும் கண்டு ஹோல்ட்புரூக்ஸ் சொல்லொணா வேதனையை அடைகிறார். எந்தவித சட்டங்களும் பின்பற்றப்படாத காட்டுமிராண்டிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்ந்து போகிறார்.

அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரும் இவ்வாறு நடந்துக் கொள்ள அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகளும் அதனுடன் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளும்தான்.

இவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள், நம் மக்களை அழிக்க வந்தவர்கள், நம் நாட்டை அழிக்க வந்தவர்கள், உலகில் நடக்கும் அத்தனை பயங்கரவாதத்திற்கும் இவர்கள் போன்ற இஸ்லாமியர்களும், இஸ்லாமும் தான் காரணம் என்பது  போன்ற அர்த்தமற்ற பாடத்தின் மூலம் அவர்களின் மூளை மழுங்கடித்திருப்பது தெரியாமலேயே அவர்கள் இச்சிறைவாசிகளிடம் பகைமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் டெர்ரி கைதிகளுடன் நெருங்கிப் பழகுகிறார்.
எதற்காக அவர்கள் இங்கே வந்தார்கள் என்பது போன்ற தகவல்களை சேகரிக்க முயல்கிறார்.
கைதிகளுடன் தகவல் பரிமாறிக்கொள்ள அரபி கற்றுக் கொள்கிறார்.
அதன் மூலம் அவர்கள் எவ்வித தவறும் செய்யாமலேயே இங்கு அடைக்கப்பட்டதோடு பல துன்பங்களையும் அனுபவித்து வருகிறார்கள் என்பதை சில கைதிகளின் வாக்குமூலத்தை வைத்து உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

திறமைகளை வெளிப்படுத்த  எவ்வித ஆற்றலும் இல்லாத வன்மம் நிறைந்த சிறைச்சாலையில் தங்கள் கால் செருப்பைக் கூட எவ்வாறு மூலதனமாக மாற்றுகின்றனர் என்பதைக் கண்டு வியந்து போகிறார்.

இறைவன் நாடினால் பாலைவனத்திலும் பால் வார்க்கும் என்பதற்கேற்ப சிறைவாசிகளின் அறிவும், திறமையும்,  பொறுமையும், தலைமைக்குக் கட்டுப்படுதல், இஸ்லாத்தின் பால் அவர்கள் கொண்ட பற்று, சுகபோகம் வேண்டுமெனில் இஸ்லாத்தை விட்டு வெளியே வாருங்கள் என்ற அத்துமீறல்களுக்கிடையில் அவர்கள் தரும் சலுகைகளுக்கு சற்றும் இசைந்து தராத அப்பழுக்கற்ற ஈமானைக் கண்டு வியந்து போகிறார். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுகிறார். குர்ஆன், ஹதீஸ் என்று இஸ்லாத்தை ஆராய முற்படுகிறார்.

இஸ்லாத்தில் தனக்கு இருக்கும் சந்தேகங்களை அங்குள்ள கற்றறிருந்த சிறைவாசிகளிடமும், இன்னும் பிற சகோதரர்களிடமும் கேட்கும் போதெல்லாம், உடனே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள் என்று யாரும் சொல்லாமல் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், தஃவா எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு முன்மாதிரிகளாகும்.

எந்தவிதமான சூழல் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது, அதனால் அவர் என்னென்ன துன்பங்களை அனுபவித்தார், அவர் அடையவிருந்த துன்பத்தில் இருந்து இறைவன் எப்படி காப்பாற்றினான், “துரோகி” என்ற பெயர் அவருக்கு ஏன் உருவானது என்பன போன்ற பல சுவாரசியங்களை உள்ளடக்கியதுதான் “துரோகி”.

தங்களது முழு இளமையையும்,  பலவித கனவுகளையும்  இழந்து, எவ்வித தவறும் செய்யாமலேயே சொந்த  நாட்டில் முளைத்த அமெரிக்க கைக் கூலிகளால் விற்கப்பட்ட இவர்களைப் போன்ற அப்பாவிகள் “நிரபராதிகள்” என்று பல வருடங்கள் கழித்து வெளியே விடப்பட்டாலும் சாதாரண மக்களுடன் இயைந்து வாழ இயலாத மன நிலையில் அவர்களை பலவித சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, மன நோய்க்கு உட்படுத்தி உணர்வுகளற்ற உடம்பை மட்டுமே வெளியே வீசி எறிகின்றனர்.

மீண்டும் மீண்டும் ஒரு தவறான கருத்தை மூளைச் சலவை செய்வதன் மூலம் ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக, ஒதுக்கப்பட்ட இனமாக மாற்ற முடியும் என்பதற்கு “துரோகி” ஓர் எடுத்துக்காட்டு.

குவாண்டனாமோவைப் பற்றி ஹோல்ட்புரூக்ஸ் கூறியவையும், மிருகங்களுக்கு தரும் முக்கியத்துவம் கூட மனிதர்களுக்கும், மனித உயிர்களுக்கும் இல்லை என்பதும், உண்மையான எதிரி என்ற ஒருவர் இல்லாமலே அவர்களின் சுய லாபத்திற்காக அப்பாவி  முஸ்லிம்கள் எதிரிகளாக சித்தரிக்கப்படுவதும், அதன் மூலம் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் உலக அளவில் பரபரப்பாக வைத்து உலக நாடுகளின் மத்தியில் தங்கள் நாட்டை ஓய்யாரத்தில் அமர்த்த முற்படும் அமெரிக்கா போன்ற பெருமுதலைத் தரகர்களிடம்தான் இந்தியா சிக்கியுள்ளது என்பதை அமெரிக்காவின் பல சதித் திட்டங்களுடன் ஒத்துப் போகும் இந்தியாவின் தற்போதைய பல சூழல்களும், ஆட்சி முறையும் நமக்கு உணர்த்துகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட குவாண்டனமோ போன்றே மனித ஜீவன்களே வாழ முடியாத ஓர் இடமாக - இந்தியாவின் குவாண்டனாமோவாக தமிழகத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் கைக்கூலிகள் எடுக்கும் முயற்சிகள் தான் அணு உலைகளும், மீத்தேன் திட்டங்களும், விவாசயத்திற்கு எதிரான திட்டங்களுமோ என்றே சிந்திக்க வைக்கிறது இப்புத்தகத்தில் வரும் பல உண்மைகள்.

வெளிவரப்படாத பல உண்மைகளை, அக்கிரமங்களை அப்பட்டமாக எழுதிய புத்தகத்தின் ஆசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீத் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இறுதியாக, இஸ்லாத்தின் ஒளியை அணைக்க எதிரிகள் பயன்படுத்தும் ஆயுதத்தைக் கொண்டே இஸ்லாத்தின் ஒளியை சுடர் விட்டு எரிய வைக்கிறான் இறைவன் என்பதற்கு டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்கின்ற முஸ்தஃபா சரியான சான்று.

யாஸ்மின் ரியாஸ்தீன்

Thursday, 9 February 2017

சிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்கள் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் குதுப்தீன் (முகநூல் பதிவு)



எதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.

காதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.
ஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான்! (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)
அதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...
ஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...
காந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...
கருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...
இப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.
செக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக "தூக்கிலிடுபவரின் குறிப்புகள்" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.
இரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...
# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.
# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.
# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.
# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.
# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை
ஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...
ஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....
தன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.
இலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.
அவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.
சிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, "முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
அந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.
அறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்!
#தோழமைக்கு_கிட்டாத_வாய்ப்பு

காஜா குதுப்தீன்

Thursday, 12 January 2017

பர்வின் பானு அனஸ் அவர்களின் “துரோகி” அனுபவம்! (முகநூல் பதிவு)



நீண்ட காலங்களுக்கு பிறகு வழமையான புதியதொரு அனுபவம்.

காலையில் எடுத்த புத்தகம் கையை விட்டு இறங்க மறுத்தது. முடித்துவிட்ட பின் இனந்தெரியாத சோகமும் கையறுநிலையும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான மனநிலை ஒட்டிக்கொண்டது.

பொதுவாக மொழிபெயர்க்கப்படும் புத்தகங்ஙகளின் உயிர்ப்பு தன்மை நீர்த்துப் போகாமல் இருப்பது ஆசிரியரின் திறனில் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்ப்ருக்ஸுடன் நாமும் பயணம் செய்து குவாண்டனாமோ நிகழ்வுகளுக்கு சாட்சியாகியது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது.

இறுதியில் சிலருக்கு கிடைத்த விடியல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பிய "முஸ்தஃபா" போன்றே நம் மனமும் ஏங்குகின்றது.

நன்றி : பர்வின் பானு அனஸ்

அநியாயமாக குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட ‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி “துரோகி” நூலுக்கு எழுதிய முன்னுரை!

‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி



அழகிய மணம் கொண்ட, வண்ணமயமான மரத்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு மரம் வளர்ந்தால் அது மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிழல், பழம், மனம் கவரும் மணங்கள், கண் கவரும் வண்ணங்கள் போன்ற பல பலன்களைத் தருகிறது.

இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். இந்த மரம் ஒவ்வொரு முறை வளரும்பொழுதும் நசுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டால், அத்தோடு மக்களிடம் இந்த மரம் பெரும் தீங்கிழைக்கும் என்றும், கொடிய விஷமுள்ளது என்றும், இது வளர்ந்தால் அதன் விஷத்தன்மையால் பிறரை அழித்து விடும் என்றும், ஆதலால் இம்மரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன நடக்கும்? கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அந்த மரத்தை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். அதனை வெறுக்கத் தொடங்குவார்கள். அதன் அழகையும், அது தரும் பலனையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒரு முறை அம்மரத்தை விட்டு விலகி விட்டார்களானால் இனி அந்த மரத்தின் பக்கமோ, அதன் அழகின் பக்கமோ அவர்கள் திரும்பவே மாட்டார்கள். ஆனால் ஹோல்ட்புரூக்ஸ் போன்ற ஒரு படைவீரர் இந்த மரத்தைப் பற்றி கேள்விப்படுகிறார். மரங்களோ, தாவரங்களோ ஒருபொழுதும் வளராத ஒரு இடத்தில் வைத்து, இடங்களிலெல்லாம் மிக மோசமான ஒரு இடத்தில் வைத்து அம்மரத்தின் பலன்களை அவர் கேள்விப்படுகிறார்.

ஆம்! அதுதான் குவாண்டனாமோ!

குவாண்டனாமோ என்ற அந்த இடத்தில் மக்களிடையே பகைமையும், வெறுப்புமே குடிகொண்டிருந்தன.

குவாண்டனாமோவில் சிறைவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்சு ஆடைகளும், அந்தச் சிறைவாசிகளை சித்திரவதைப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் கொடிய விலங்குகளும் ஹோல்ட்புரூக்ஸுக்கு சிறைவாசிகளை அணுகுவதற்கு தடையாக இருந்திடவில்லை. அவர் அவர்களைத் தயங்காமல் அணுகி இஸ்லாம் பற்றிப் பேசினார். அவரது அணுகுமுறைகளிலும், கேள்விகளிலும் அவர் மிகுந்த தைரியசாலியாகத் திகழ்ந்தார்.

அவரது சுதந்திரமான, வெளிப்படையான சிந்தனை கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளாலும், பாரபட்சங்களாலும் அவரது சிந்தனையில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

சிறைவாசிகளிடம் காட்டப்படும் அதிகாரத்தின் மேலுள்ள மோகமும், திமிரும் அவரை என்றுமே மிகைத்ததில்லை. மற்ற படைவீரர்கள் அந்த அதிகார மோகத்தில் வீழ்ந்து கிடந்தனர். ஆனால் அவரோ சிறைவாசிகள் மேல் அவதூறாக வீசப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தார். ஏனெனில் அவர் மற்ற படைவீரர்கள் காணாததைக் கண்டார். மற்ற படைவீரர்கள் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தார்.

அத்தோடு அவர் தனது ஆய்வை, தனது தேடலை பிடிவாதமாக தொடர்ந்தார். அந்த மரத்தை அவர் நேசித்ததே அதற்குக் காரணம். அந்த மரம் ஏற்படுத்திய நல்ல பல விளைவுகளை அவர் அந்தச் சிறைவாசிகளிடம் கண்டார். அவர் அந்த மரத்தைத் தனதாக்க விரும்பினார். அதேபோன்று அந்த மரம் தன்னை உள்வாங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

பாவம் செய்த ஒரு பணியாள் மன்னிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் அன்பு நிறைந்த எஜமானனைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வானோ அதே மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

அஹமத் அர்ராஷிதி (முன்னாள் சிறைவாசி 590)

எல்லையில் ராணுவ வீரன் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் ஹாஜா குதுப்தீன் (முகநூல் பதிவு)



"படை வீரர்களை மூளைச் சலவை செய்து கேள்வி கேட்காத ஒரு நிலைக்கு கொண்டு வரும் தந்திரம்தான் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளாகும்.

இராணுவத்தில் எதைப் பற்றியும் யோசிக்காத, கேள்வி கேட்காத படை வீரர்கள்தான் ஒரு பணியை முடிக்க பெரிதும் உதவியாக இருப்பார்கள்.

படைவீரர்கள் என்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கருவிகள் போன்றவர்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்."

- டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்,

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ராணுவ வீரன், 'துரோகி' நூலில்...

நன்றி : ஹாஜா குதுப்தீன் (நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்)

செய்யத் காலிதின் பார்வையில் “துரோகி”! (முகநூல் பதிவு)




குவாண்டனாமோ - மனித உயிர்கள் உடலாலும், மனதாலும் சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க தயார்படுத்தப்பட்ட கொடுஞ்சிறை.

மனிதன் மனிதனாக வாழ முடியாத, சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க பணிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், இவர்கள் யாரும் மனிதர்களே அல்ல என்று தன் உயர் அதிகாரிகளால் போதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்னும் அமெரிக்க கிருத்தவ இராணுவ வீரனின் தேடல் இறைவனின் அருட்கொடையாம் இஸ்லாத்தை பரிசாக பெறச் செய்கிறது.

விறுவிறுப்பாக பயணிக்கிறது துரோகி. வாசிக்க துவங்கிய எவரும் 204 பக்கங்களை முடிக்காமல் செல்ல முடியாத ஈர்ப்பு புத்தகத்தின் பக்கங்களில் உண்மை புதைந்து கிடப்பதை காணலாம்.

'தேடுங்கள் கிடைக்கப்படும்' என்ற பைபிளின் வசனம் பொய்யாகுமா???.

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் தன் தேடலின் வெகுமதியை பெற்றுக்கொண்டார்.

நன்றி ; செய்யத் காலித்

Saturday, 7 January 2017

துரோகி



“தேசியவாதமும் இஸ்லாமும்”, “இம்பாக்ட் பக்கம்”, “மனதோடு மனதாய்...”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” ஆகிய நூல்களுக்குப் பிறகு எனது அடுத்த  மொழிபெயர்ப்பு நூல் - “துரோகி”!

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்ற அமெரிக்க இராணுவ வீரர் எழுதிய Traitor என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.

ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.

எங்கே? குவாண்டனாமோ சிறையில்!

யார் மூலமாக? கைதிகள் மூலமாக!

விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!

ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.



நூலாசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் நம்மை வேறோர் உலகுக்கு கொண்டு செல்கிறார். அங்கே புற்பூண்டுகள் இல்லை. மரம் செடி கொடிகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக மனிதர்கள். தாடி வைத்த மனிதர்கள். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து தலை முதல் தோள் வரை சாக்குத் தொப்பி அணிவிக்கப்பட்டு சரக்குகள் ஏற்றும் விமானத்தில் விலங்கிட்டு தூக்கி வரப்பட்ட மனிதர்கள்.

இராட்சத சிலந்திகளும், பெருச்சாளிகளும் உலா வரும் அந்த இடத்தில், மனித சஞ்சாரமே கூடாத அந்த இடத்தில் மனிதத்தை மிதித்து உருவாக்கப்பட்ட இருண்ட கண்டம்.

அங்கே அன்பு இல்லை. அரவணைப்பு இல்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டு வரப்பட்ட சித்திரவதைக் கருவிகளும், சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிடுசிடு மூஞ்சிகளும் உள்ள கொடூரமான இடம்.



அங்கே கடுமைக்குப் பதில் கருணை பிறக்கிறது இந்நூலாசிரியருக்கு. இஸ்லாத்தின் மேல் வெறுப்புக்குப் பதில் விருப்பம் பிறக்கிறது. அதுவும் அந்த அப்பாவி கைதிகளின் அன்றாட நடவடிக்கை மூலமாக!

கல் நெஞ்சும் கரையும் சோகங்கள் ஒவ்வொரு கைதியிடமும். கைதிகளின் கதறல் கதைகளைச் சொல்கிறார். அவரும் கண்ணீர் வடிக்கிறார். நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார் இந்நூலில்.

கூடவே அமெரிக்கப் பட்டாளத்தின் சீழ் பிடித்த மனநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் படம் போட்டுக் காட்டுகிறார்.

இறுதியில் அவரது கண்ணீர் கண்ணியமிகு இஸ்லாத்தில் கொண்டு போய் அவரைச் சேர்க்கிறது.