Wednesday 10 May 2017

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்: “துரோகி” நூலாய்வு - ஆமினா முஹம்மத்

நேர்த்திமிகு அடித்தளத்துடன் ஆரம்பித்த கட்டடத்தை மெல்ல மெல்ல சுவாரசியமும் எதிர்பார்ப்பும் கொண்ட ‘துரோகி’ எனும் மாளிகையாய் வடித்து, கட்டுமானம் முதல் பிரவேசம் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் நாம் இணைந்தே இருப்பது போன்ற அனுபவத்தை முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை உருவாக்கியிருக்கும் மாயக்காரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்! அந்த நேர்த்தியை சிதைத்திடாத வண்ணம், ஆங்கில தடம் அறியா வண்ணம் தமிழுக்கு இடப்பெயர்த்திருக்கிறார் எம்.எஸ். அப்துல் ஹமீது. ஆம்... அப்துல் ஹமீது ட்ரய்டரை மொழிபெயர்க்கவில்லை, துரோகியாக இடப்பெயர்த்திருக்கிறார்! 2017 சென்னை புத்தகத்திருவிழா வரவுகளில் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற புத்தகங்களில் ஒன்றாக ‘துரோகி’ இருந்தது. - புதிய விடியல்  ஆசிரியர்

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்!


இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் துரோகி யார்? இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்குவதில் சதி செய்த அமெரிக்காவா? குவாண்டனாமோவின் சிறைவாசிகளா? அவர்கள் மீது டெர்ரி கொண்ட இரக்கத்திற்காக அவரை தொந்தரவு செய்யும் மேலதிகாரிகளா? என்ற தேடல் இன்னும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியது. இந்தக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட புத்தகம்தான் ‘துரோகி’.

முதல் பக்கத்தில் துருதுருவென அமெரிக்க வீதிகளில் வலம் வந்த சராசரி இளைஞனான டெர்ரிதான் பின்னட்டையில் தாடி சகிதம் முஸ்லிம் தோற்றத்தில் காட்சி தந்துள்ளார் என்பதே பெரும் சிலிர்ப்பை உண்டாக்கிச் சென்றது. ஹாலிவுட் படம் போலவே புத்தகத்தை துவக்கியிருக்கிறார் டெர்ரி. தரைமட்டமாக்கப்பட்ட, இரட்டைக் கோபுரங்கள் அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பட்டாளத்தினரில் ஒருவரான டெர்ரி அவ்விடத்தில் சற்று அதிகமாக சிரித்து விட்டார். அவர் சிரிப்பின் காரணம் ‘இதுதான் மனிதகுலத்திற்கு நேர்ந்த மிகப் பெரிய துயரச் சம்பவம்’ என்று அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாசகம். இந்நேரம் பல்லை நறநறவென கடித்து முஸ்லிம்களுக்கெதிரான பகையை நெஞ்சில் முழுக்க நிரப்பி தன் தாய்நாட்டை சீண்டியவர்களை பழி வாங்கும் குரோதத்துடன் டெர்ரி மனித மிருகமாய் மாறியிருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்கா அவனிடம் எதிர்பார்த்தது.

ஆனால் அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு டெர்ரி பலியாகவில்லை. ‘இதுவரை நடந்த மனிதப் பேரிழப்புக்கு அருகில் கூட இது வர முடியாது தெரியுமா?’ எனத் தன் சிரிப்பிற்கான காரணத்தை அவர் தன் சக படைவீரர்களிடம் சொன்னபோது எவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இனி புத்தகம் முழுவதும் இதே நிலைதான்... டெர்ரி தவிர பெரும்பாலும் அனைத்து படைவீரர்களும் மனரீதியாக குவாண்டனாமோ கைதிகளை துன்புறுத்தப் போகும் அரக்கர்களாக மாறியிருந்தனர். சாதாரண சிறை அதிகாரியாக டெர்ரி குவாண்டனாமோ செல்வது, அங்கே சிறைவாசிகளுக்கு நேர்ந்த கொடுமை, டெர்ரி முஸ்லிமானது என அனுபவங்கள் பக்கங்களாக விரிகின்றன. எனினும் ஒவ்வொரு பக்கத்திலும் பேரதிர்ச்சியைத் தருகிறார் டெர்ரி!

குவாண்டனாமோ... கியூபாவின் தீவில் அமெரிக்காவால் கட்டப்பட்ட சிறை. சகல பாதுகாப்புடன் கட்டப்பட்ட கொட்டளம். அப்படி இருந்தும் தலையணை கொண்டு கழுத்து இறுக்கி மூன்று கைதிகள் தற்கொலை செய்து சிறைச்சாலையின் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் காட்ட முனைந்தனர். அதன் பின் விக்கிலீக்ஸ் தன்னிடமிருக்கும் கோப்புகளை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. இன்னும் பல மொழிகளில் துர் அனுபவ நூல்கள் வந்தாலும் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலைத்தளங்களில் இதன் அகோரங்கள் குறித்து பேசப்பட்டாலும் அவை துல்லியமாக இருந்ததில்லை. முதன்முறையாக ‘துரோகி’ மூலம் இருட்டப்பட்ட அறைக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறைக் கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை ஒவ்வொரு பக்கமும் விவரிக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் உஷணத்தீவு அது. விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக மிகைத்திருக்கும் அகோர பூமி. இவையெல்லாவற்றையும் விட வெறுப்பால் உஷ்ணத்திலும் செய்கைகளால் விஷங்களினும் கொடிய மனிதர்களை பயிற்சி சிறைக்கைதிகளிடம் அவர்கள் காட்டவிருக்கும் முகம் கற்பனைக்கும் எட்டிராதது. மரண ஓலங்கள் கூட நாட்டுக்குக் கேட்காது. மேல்முறையீடு, மனு என எதுவும் குவாண்டனாமோ அகராதியில் இல்லை. படங்களில் கூட காட்சிப்படுத்தப்படாத கொடூரங்களின் அரங்கேற்றம் நாள்தோறும் நடந்தது. காதைக் கிழிக்கும் இசையை மிகையழுத்த ஒலியில் நீண்ட நேரம் ஒலிக்கச் செய்வதும், சதையையும் எலும்பையும் இறுக்கும் அளவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் கைதிகளை விடுவதும், விலங்குகளை ஏவி கைதிகளை துன்புறுத்துவதுமாக சித்திரவதைகள் பல வண்ணங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டன!

சாத்தான்களின் கண்காணிப்பில்தான் பாவப்பட்ட சிறைக்கைதிகள் விடப்பட்டுள்ளனர். ஆம்... இவர்கள் அப்பாவிகள் என்பது அமெரிக்காவுக்கும் கூட தெரியும் என்று விக்கிலீக்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. இந்த உண்மை நிலை மனோவியல் ரீதியாக பயிற்சியளிக்கப்பட்ட எந்த அதிகாரிக்கும் புரியாது. ஆனால் நாம் முன்பே சொன்னது போல் ஆரம்பம் முதலே இதில் நாட்டமில்லாத டெர்ரி மனிதத் தன்மையுடன் கைதிகளிடம் நடந்துகொண்டார். இத்தனை சித்திரவதைகளுக்குப் பின்னும் சிறைவாசிகள் முகத்தில் படரும் புன்னகை டெர்ரியை வெகுவாக ஈர்த்தது. பாங்கோசையை சிதைத்து ஒலிக்கச் செய்வதன் மூலமும், இஸ்லாத்தைப் பற்றி தவறாக பேசுவதன் மூலமும் மனரீதியாகவும் அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

எனினும் அந்த அழுத்தங்கள் பெயரளவு முஸ்லிம்களையும் தன் மார்க்கத்தில் வலுவுள்ளவர்களாக மாற்றிய உளவியல்களையும் கவனிக்கத் தவறவில்லை டெர்ரி. இவையெல்லாம் சேர்த்து இன்னும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆர்வத்தை டெர்ரிக்கு தூண்டியது. அதுதான் டெர்ரிக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது. கைதிகளின் மீது இரக்கம் கொண்ட டெர்ரி மற்ற அதிகாரிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்ததை மற்றோர்கள் துல்லியமாக கவனித்துவிட்டார்கள். இதன் மூலம் டெர்ரிக்கும் அடி உதை விழுந்தது. அதையும் மீறி அவர் மனம் கைதிகள் பற்றி சிந்திக்கலாயிற்று! அது அவரை தூய மார்க்கத்தின் பால் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தியது. டெர்ரி ‘முஸ்தஃபா அப்துல்லாஹ்’வானார்.

‘துரோகி’யின் பக்கங்கள் 203 உடன் நிறைவு பெற்றாலும் அடுத்தடுத்த வாசிப்புக்கு அழைத்துச் செல்ல தூண்டியிருக்கிறது. அதில் முக்கியமாக டெர்ரி தான் சந்தித்ததாகக் கூறும் வித்தியாசமான மனிதர் டேவிட் ஹிக்ஸ். சிறையில் உள்ளோர் தாம் குற்றமற்றவர்கள் என்பதை சொல்வது வழக்கம். ஆனால் டெர்ரி சந்தித்த டேவிட் ஹிக்ஸ் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். உசாமாவுடன் தான் பழகியதையும் அல் கொய்தாவில் தாம் பயிற்சி பெற்றதையும் மறைக்காமல் பகிர்ந்து தன் நிலையை ஒப்புக்கொண்டிருந்ததாக டெர்ரி குறிப்பிட்டிருந்தார். இந்த டேவிட் ஹிக்ஸ் குவாண்டனாமோவிற்கு வந்த முதல் கைதிக் குழுவில் ஒருவர். அவர் மீதான குற்றத்தை விலக்கி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். டேவிட் ஹிக்ஸ் எழுதிய “குவாண்டனாமோ: எனது பயணம்” என்ற நூலும் சித்திரவதைக் கூடத்தின் சித்திரத்தை அப்பட்டமாக விளக்குகிறது. இன்னும் முன்னாள் கைதிகளின் நூல்கள் அதிகம் காணக் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைப்பின் அதையும் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

சமூகத்தின் தேவை, தேவையின் விழிப்புணர்வு, விழப்புணர்வின் இலக்கு, இலக்கின் பயணம் என அனைத்தையும் ஒருங்கே திட்டமிட்டு சிந்தனையை சரியான திசைக்குக் கொண்டு செல்லும் இலக்கியச்சோலையின் மற்றுமொரு மைல்கல் ‘துரோகி’.

அபாயகரமான உலகை நோக்கிய அகோரப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தை சிலமணி நேர வாசிப்பு கொடுத்து விட்டுச் செல்கிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆமினா முஹம்மத்

இக்கட்டுரை புதிய விடியல் ஏப்ரல் 16-30, 2017 இதழில் வெளியானது.

No comments:

Post a Comment