Tuesday 5 December 2017

முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் எழுதிய ‘எளிய முறை கணிதம்’ - எனது அணிந்துரை




என் அருமை நண்பர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களின் கன்னி முயற்சி இது. அதுவும் புதிய முயற்சி. சமுதாயத்திற்குத் தேவையான அரிய முயற்சி.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் இது போன்று பல துறைகளில் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருப்பவர். நேர நிர்வாக நிபுணர்.

துபையில் ஒரு முறை இவர் நேர மேலாண்மை வகுப்பு எடுக்கும்பொழுதுதான் நான் முதன் முதலாக இவரைப் பார்த்தேன். அப்பொழுது எந்த அறிமுகமும் இல்லை. இருந்தும் நான் மின்னஞ்சலில் கேட்டவுடன் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உடனே அனுப்பி எனக்கு உதவினார்.

நான் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூல் எழுதும் முயற்சியில் இருந்த நேரம் அது. அவர் அனுப்பித் தந்தது எனக்கு மிக்க உதவியாக இருந்தது. பல புதிய பார்வைகளைத் தந்தது.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களைக் கண்டு பல முறை நான் வியந்திருக்கிறேன். தன் தொழிற்பணிப் பளுவுக்கு இடையில் நேரத்தை நன்கு நிர்வாகம் செய்து சமுதாயப் பணிகளைச் செய்வதோடு, சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் இம்மாதிரி புதிய முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னை மாதிரி சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளபடியே உத்வேகம் அளிக்கிறது.

எளியமுறை கணிதம் மூலம் மாணவச் செல்வங்களுக்கு மிக எளிதாக கணிதம் பயில ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூல். கணித வாய்ப்பாடு என்பது பல மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளை எளிய முறையில் மனப்பாடம் செய்வதற்கு நிறைய உத்திகளைச் சொல்லும் இந்நூல் ஒர வரப்பிரசாதமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

நூலாசிரியரின் இந்நூல் பெரும் வெற்றி பெற்று, இதேபோன்று சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பல நூல்களை அவர் எழுதிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

M.S. அப்துல் ஹமீத்
19.03.2017
துபை