Thursday 23 November 2017

கஃபூரின் கதை


கஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:

‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்!’’
எப்படியிருக்கும் கஃபூருக்கு?

(ஒரு பேச்சுக்குத்தான்! மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)

இனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.

அவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார்? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா? நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா? நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன செய்வார்?

சப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்!

எங்கும் அல்லாஹ்! எதிலும் அல்லாஹ்!!

அவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

ஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.

இப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.

ஆம்! கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா? நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.
அதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.

‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்!’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.

‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.

(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)

Monday 20 November 2017

சிறிய அமல்...! பெரிய பலன்..!! அல்லாஹ்வின் கருணை விசாலமானது!!!


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.” (முஸ்லிம்)
திர்மிதீயில் இடம் பெற்ற ஹதீஸில் கீழ்க்கண்ட துஆவும் சேர்த்து கூறுமாறு வந்துள்ளது:
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன் (யாஅல்லாஹ், பாவமன்னிப்பு தேடுபவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! (திர்மிதீ)

சொர்க்கம் கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல; அதுவும் எட்டு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு அழைக்கப்படுவது என்றால்…! அந்த பாக்கியம் இந்த மிகச் சிறிய அமலால் கிடைத்து விடுகிறது. அதற்காக எந்தத் தொகையும் செலவழிக்க வேண்டியதில்லை. எந்தச் சிரமும் படவேண்டியதில்லை.
இந்தச் சிறிய நற்செயலுக்குப் போய் இவ்வளவு பெரிய சொர்க்கத்தை அல்லாஹ் வழங்கிடுவானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை மிக விசலானமானது. அதையும் இந்த நபிமொழியே நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் நரகத்தைப் பற்றியும் அதன் வாசல்களின் எண்ணிக்கை பற்றியும் இப்படி வந்துள்ளது: “நிச்சயமாக, (ஷைத்தானைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் நரகம்தான் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆகும்.” (15:44)

சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்று திருக்குர்ஆனில் (39:73) பொதுவாக வந்துள்ளது. ஆனால் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கையைப் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனினும் நபிமொழிகளில் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கை எட்டு என வந்துள்ளது. இந்த நபிமொழியிலும் எட்டு வாசல்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நரகத்தின் வாசல்களை ஏழாக அமைத்த அல்லாஹ், சொர்க்கத்தின் வாசல்களையும் ஏழு என அமைக்கவில்லை. மாறாக, ஒன்றை அதிகமாக்கி, எட்டு என அமைத்து, எனது கோபத்தை விட கருணையே விசாலமானது; எனது அருளே அதிகமானது என்பதை உணர்த்துகிறான். எனவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று சொர்க்கம் செல்ல இந்த இலகுவான துஆவை உளூவிற்குப் பிறகு ஓதி வருவோமாக!

Sunday 19 November 2017

சம்மதமா... சம்மதமா...

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்ததை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.

(சம்மதமா... சம்மதமா... என்ற மகஇக பாடலின் ராகம்)

சம்மதமா... சம்மதமா... நீ
இந்தியன் என்றால் சம்மதமா...
சொல்லிது உன்னால் முடியுமா - நீ
உண்டு உறங்கும் விலங்கினமா - இல்லை
கண்டுங்காணாத கல்லினமா...
(சம்மதமா...)

அஸ்ஸாமில் நடந்த அக்கிரமம் - அதைக்
கேட்டால் நெஞ்சம் விம்முதடா...
சொந்த மண்ணின் மைந்தர்களை
வந்தேறிகள் என்று சொன்னானடா...
போடா தீவிரம் வந்ததடா...
அடவாடித்தனம் செய்ததடா...
சொந்த மண்ணில் அகதியடா - அது
வெந்த புண்ணில் ஈட்டியடா...
தேசமாடா... இது தேசமாடா... - முஸ்லிம்
தேகங்கள் என்ன மோசமாடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)

முன்பொரு காலம் இருந்ததடா - நினைத்தால்
முஸ்லிமைக் கொல்வது நடந்ததடா...
இன்னொரு காலம் பிறக்குதடா...
இழிந்த சூழ்நிலை மாறுதடா...
ஏந்தல் நபியின் போதனையை
ஏற்ற முஸ்லிமின் எழுச்சியடா...
போதுமடா... இது போதுமடா... - நாங்கள்
திருப்பிக் கொடுக்கும் காலமடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)

Friday 10 November 2017

ஜும்ஆ தினத்தின் சிறப்புகளும், நன்மைகளும்


ஜும்ஆ தினம்
ஞாயிறு உதிக்கும் தினங்களில்
நல்ல தினம், தலைமை தினம்
என்றார்கள் எம்பெருமானார்
தூய தினத்தின் உத்தமம் அறிந்தால்
தூங்கிக் கழிக்க மாட்டோம்
சோம்பிக் கிடக்க மாட்டோம்
‘என் மீது இந்நாளில் ஸலவாத்தை அதிகரியுங்கள்;
எனக்கு அது காட்டப்படும்’
என்றார்கள் எம்பெருமானார்
வெள்ளிக் கிழமை சிறப்பானது போன்று
வெள்ளி சுபுஹு ஜமாஅத்தும் சிறப்பானது
வெள்ளிதோறும் ஓதும் கஹ்ஃபு சூரா
வெளிச்சம் கொடுக்கும் - அதன் மூலம் கப்ரின்
வேதனையைத் தடுக்கும்
ஜும்ஆவுக்காக என்று குளித்தால் அது நன்மை
அதற்கென்று ஆடையணிந்தால் அது நன்மை
தலைக்கு எண்ணை தேய்த்தால் அது நன்மை
பள்ளிக்குச் சென்று மனிதர்களைத் தாண்டிச் செல்லாமல் 
அமர்ந்தால் அது நன்மை - அவற்றிற்கு
பத்து நாட்களின் சிறு பாவங்கள்
பாசத்துடன் மன்னிக்கப்படும்
வெள்ளியன்று பள்ளி வாயில்களில்
வானவர்கள் வருபவர்களை
வரிசைப்படி பதிவார்கள்
இமாம் மேடையேறினால் ஏட்டை மடிப்பார்கள்
இமாம் உரை கேட்க பள்ளிக்குள் அமர்வார்கள்
அதன்பின் வருபவர்கள் அன்றைய பட்டியலில்
இடம் பெற முடியா இழப்பாளர்கள்
ஜும்ஆவுக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்
ஒரு வருடம் நோன்பு, தொழுகையின் நன்மை
முற்கூட்டியே வருபவருக்கு மொத்த நன்மை
முன்வந்தவர்கள் முன்வரிசையில் அமர வேண்டும்
பின்வந்தவர்கள் பின்வரிசையில் அமர வேண்டும்
நேரம் போக்காமல் திக்ரு, ஸலவாத்தும்
ஈரக் கண்களுடன் துஆவும் இறைஞ்சவேண்டும்
ஈருலக வெற்றி தரும் இறைமறை ஓத வேண்டும்
அந்நாளில் உண்டு ஒரு நேரம்
அந்நேரம் இறைஞ்சுதல் ஏற்றுக்கொள்ளப்படும்
அந்நேரம் எதுவென்று அறிவிக்கவில்லை அல்லாஹ்
ஆனால் அஸ்றுக்குப் பின்னுள்ள அறுதி நேரத்தில்
அதனைத் தேடிக்கொள்ளுங்கள்
என்றார்கள் எம்பெருமானார்
அதனால் அந்நாளில் அருமை துஆக்களை அதிகரிப்போம்!

10.11.2017 அன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.

Thursday 9 November 2017

எனது பார்வையில் ‘துரோகி’ - நூருத்தீன்

புதிய விடியல்  ஆகஸ்ட் 16-31, 2017 இதழில் சகோதரர் நூருத்தீன் அவர்கள் எழுதிய நூலாய்வுரை!


அக்கிரமமான அந்தச் சிறைக்குள் தரதரவென்று நம்மை இழுத்துச் செல்கிறார் துரோகி. அக்கிரமக்காரர்களையும் குற்றவாளிகளையும் அடைக்கத்தானே சிறைச்சாலை... அதென்ன அக்கிரமமான சிறைச்சாலை?

சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் பக்கத்து நாட்டுக்காரனுக்குச் சொந்தமானது. உலக மகா தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டி அங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்களோ குற்றத்திற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள். உள்நாட்டுச் சிறைகளில் அவர்களை அடைத்தால், மனித உரிமை, மண்ணாங்கட்டி என்று யாராவது தேவையில்லாத கூக்குரல் எழுப்புவான்; மனித உரிமைச் சங்கம், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என்று வேலை மெனக்கெட்டு அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுப்பார்கள். பிறகு மிருகத்தைப் போல் கைதிகளை அடித்துச் சாத்தி துவைத்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவையெல்லாம் அனாவசிய தடங்கல்கள்... என்று அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட அநீதக் காரணங்கள். அதனால் கியூபா தீவில், குவாண்டனாமோ பகுதியில் அமெரிக்கா தனக்கான ஒரு சிறைச்சாலையை அமைத்துக் கொண்டது. ‘தீவிரவாதிகள்’ என்று அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்டவர்களால் அக் கொட்டடி நிரப்பப்பட்டது. 9/11 நிகழ்விற்குப் பிறகு அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளுள் மிகப் பெரும் வேதனை இது.

அங்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டார் அமெரிக்க இராணுவ வீரர் டெர்ரி சி ஹோல்ட்புரூக்ஸ். எத்தனையோ நூறு பேரில் அவர் ஒருவர். ஆனால் அவர் நூற்றில் ஒருவர் ஆனதுதான் விந்தை. இராணுவத்தினரை அங்கு அனுப்பும் முன் நியூயார்க் நகரில் அவர்களது மூளையை வழக்கம்போல் சலவை செய்யும் டிடர்ஜென்ட் ஹோல்ட்புரூக்ஸை சரியாக வெளுக்காமல் போனது. அங்கு ஆரம்பித்ததுதான் அவரது முதல் திசை மாறல். சரியான திசைக்கான மாறல்.

காட்டுமிராண்டிகளையும் மனிதகுல விரோதிகளையும் உலக மகா தீவிரவாதிகளையும் சமாளித்து, உரிய முறையில் கவனித்து நல்ல பாடம் புகட்டப்போகிறோம், சேவையாற்றி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் குவாண்டனாமோ மண்ணில் வந்து இறங்கிய ஹோல்ட்புரூக்ஸுக்கு முதல் நொடியிலேயே அதிர்ச்சி. அந்நாட்டு மண், தட்ப வெப்பம், அபாய ஜந்துக்கள் புழங்கும் சூழலில் அமைந்துள்ள சிறை என்று திரைப்படக் காட்சி போல் புழுதி பறக்க விரிகிறது அவரது அனுபவம். கொடுங்கோல் சிறை அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில் நிகழும் உலக மகா அயோக்கியத்தனம், அவர் கற்பனை செய்திருந்ததற்கு மாறாக ஒழுக்கத்தையும் இணக்கத்தையும் இறைவழிபாட்டையும் மேற்கொண்டுள்ள முஸ்லிம் கைதிகள் என்று அவர் கண்டதெல்லாம் பேரதிர்ச்சி.

கைதிகளின் உடைமையான குர்ஆன் கழிவறையில் வீசப்படுவது, விசாரணை என்ற பெயரில் பெண் காவலரின் மாதவிடாய் இரத்தத்தை முஸ்லிம் ஆண் கைதியின் முகத்தில் தேய்ப்பது போன்ற செயல்கள் அவருக்குள் ஏற்படுத்திய விளைவுகளைக் குறிப்பிட பேரதிர்ச்சி என்ற சொல் போதாது. ஆனால் அத்தகு கடும் சூழ்நிலையிலும் மனிதாபிமானத்திற்கு சற்றும் தொடர்பற்ற சித்திரவதைகளுக்கு நடுவிலும் அந்த முஸ்லிம் கைதிகள் கட்டிக் காத்த ஒழுங்குமுறைதான் ஹோல்ட்புரூக்ஸினுள் பல வினாக்களை எழுப்பியது. ஆவலைத் தூண்டியது. தேடலுக்கு வித்திட்டது. யார் இவர்கள்? அதென்ன அரபு மொழி? அப்படி என்னதான் சொல்கிறது இவர்களின் இஸ்லாம்?

அவ்வினாக்களுக்கான விடைகள் அச்சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருந்து கிடைக்கின்றன. தெளிவு பிறக்கிறது. அமெரிக்க அதிகாரிகளிடம் பட்டம் கிடைக்கிறது: ‘துரோகி’!

இஸ்லாத்தின் மீது ஆகப் பெரிய களங்கத்தைச் சுமத்தி அதை வேரறுக்க நினைக்கும் வல்லரசின் திட்டத்திற்கு எதிர்மாறாய் அவர்களின் படைவீரர்களுள் ஒருவரான அவரிடம் மாற்றம் ஏற்பட்டு இஸ்லாம் அவரது வாழ்வியல் நெறியானது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த முஸ்லிம் கைதிகள் அவரிடம் மதத்தைத் திணிக்கவில்லை. இஸ்லாத்தை வற்புறுத்தவில்லை; முஸ்லிமாகிவிடு என்று அறிவுறத்தவும் இல்லை என்பதுதான் இதிலுள்ள அற்புதம். தாங்கள் கற்றறிந்த இஸ்லாத்தைக் கொடுமையான அச்சூழலிலும் அக்கைதிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். எவ்வித சமரசமும் புரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்!

திரைப்படம் போல் விறுவிறுப்பான நிகழ்வுகள், காட்சி விவரிப்புகள் என்று உள்ளத்தைத் தொடும் அருமையான அனுபவம் இந்நூல். தமிழ் வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அளிப்பதில் முக்கியப் பணி ஆற்றியுள்ளது இலக்கியச்சோலை டீம். நிறைய உழைத்துள்ளார் சகோதரர் M.S. அப்துல் ஹமீது. பாராட்டுகளும், நன்றியும் அவர்களுக்கு உரித்தாவன. ஆனால் அச்சுப் பிழைகள் ஒரு குறை. அவற்றை திருத்தி சீரான முறையில் மறுபதிப்பை அவர்கள் வெளியிட வேண்டும் என்பது என் பேரவா.

நூருத்தீன்

Tuesday 7 November 2017

ஃபாசிசக் கொள்கையை பாடையில் ஏற்றுவோம்!




மேடையை தகர்க்கிறாயா?
தடை பூச்சாண்டி காட்டுகிறாயா?
தொடை நடுங்கிப் படை கொண்டு
தொல்லைகள் பல தந்தால்
துவண்டு விடுவோம் என்று எண்ணினாயா?
மடை திறந்த வெள்ளமாய்
மாநாட்டுத் திடல் நோக்கி
மக்கள் வரக் கண்டு
மலைத்துப் போய் நின்றாயா?
தனியோனாம் அல்லாஹ்வின்
நனிமிகு துணை கொண்டு
தடை உடைத்து
தடம் பதித்து
தரணியில் தனக்கென்று
தனி இடம் தக்க வைத்த
தன்மானச் சிங்கத்தை
தகர்த்து விடலாம் என்று
பகல் கனவு காணாதே...
பாரதத்தைப் பிளவு படுத்தும் உன்
பாசிச பாதகக் கொள்கையை
பாடையில் ஏற்றுவதே
பாப்புல் ஃப்ரண்டின் பணி...!

#PopularFrontOfIndiaDelhiConferenceNov052017

கணக்கு சொல்வாயா கண்ணாளா?


பணமதிப்பிழப்பு செய்தாய்
பாமரர்களை படுகுழியில் தள்ளினாய்
வங்கி வாசலில்
பரம ஏழைகளையும் பரிதவிக்க விட்டாய்
பண முதலைகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து
பணக்கொழுப்பைப் பரிசாக்கினாய்
பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றாய் – நீ
நோட்டின் பெயரால் கொன்றாய் – உன் பரிவாரம்
மாட்டின் பெயரால் மனிதனைக் கொல்கிறான்
வெறுப்பை விதைத்து வெப்பத்தைக் கூட்டுகிறான்
பகைமை பாசிசத்தை வளர்த்து
மக்களைப் பிளவு படுத்துகிறான் - ஆக
பயங்கரவாதம் கூடியல்லவா இருக்கிறது…!
கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாய்
எத்தனை கோடி பிடித்தெடுத்தாய்? - இது
கறுப்பு நாளல்ல – நீ
கணக்கு சொல்லவேண்டிய நாள்…!




அகங்காரம்

1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் கடுங்குளிரில் மூழ்கி மாண்டனர்.
இது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ அகங்காரம் கொண்டோர் அவமானப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கொக்கரித்த சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், நீரை வரவழைப்பதே நான்தான் என்று எக்களித்த ஃபிர்அவ்ன் அந்த நீரிலேயே மூழ்கிப் போனான். செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார் தட்டிய காரூன் போன்றவர்கள் இறைத் தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர்.
பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவன் தன்னை ‘முதகப்பிர்‘ (பெருமைக்குரியவன்) என்று அழைக்கிறான். அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ் மட்டுமே முதகப்பிர். எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை என்பது அவனுக்கு மட்டுமே உடையது. ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
அவனுடைய படைப்பினங்கள் ஒன்றுக்கும் அந்த உரிமை இல்லை. ஒரு முஃமினின் அத்தியாவசிய பண்பு பணிவு. எவனது உள்ளத்தில் அனைத்துப் பெருமைகளுக்கும் உரிமை படைத்தவன் வல்ல அல்லாஹ் ஒருவன்தான் என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அவன் எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கு கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து வாழ்வான்.
பணிவு மனிதனை உயர்த்தும். ஆணவம் மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)
“நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே” என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: புகாரீ)
“பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனை நாம் புகழ்வதால் இறைவனுடைய தகுதி கிஞ்சிற்றும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நமது தகுதிதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயரும்.
நமக்கு எது கிடைத்தாலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நமக்குக் கிடைக்கும் எந்த வெற்றியும் நம்மால் ஆனது அல்ல, இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு பறந்து விடும்.
“எவரது உள்ளத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்’ என்று பெருமைக்கு விளக்கம் அளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் பணிவுடனேயே வாழ்ந்தார்கள். பணிவையே மக்களுக்கு போதித்தார்கள். அகங்காரம், பெருமை, கர்வம் போன்றவற்றைக் கொண்டு மக்களை எச்சரித்தார்கள். அவர்களின் பணிவு காரணமாக அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான்.
எனவேதான் பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் விதித்துள்ளது. பெருமைக்காரர்கைளையும், ஆணவக்காரர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மேலும் உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் எவரையும் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)

Sunday 5 November 2017

நூல் வலம் - ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 2017

நான் வாங்கிய நூல்கள்

நேற்று (04.11.2017) ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியைக் காண சென்றிருந்தேன். எப்பொழுதும் போல பிரம்மாண்டமான ஏற்பாடுகள். நேர்த்தியாக, கச்சிதமாக அனைத்தையும் செய்திருக்கிறார்கள். தொழுகைக்காக கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் பெரிய இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.



இலட்சக்கணக்கான புத்தகங்களை எப்படி பார்வையிடுவது என்ற மலைப்பில் நகர்ந்தேன். அனைத்து கடைகளையும் நம்மால் ஒரே மூச்சில் பார்த்து விட முடியாது.



இந்திய பதிப்பகங்களின் கடைகள் அடங்கியுள்ள Hall No. 7க்குச் சென்றேன். ஒவ்வொரு கடையாக ஏறி புத்தகங்களைப் பார்வையிட ஆரம்பித்தேன். திடீரென்று எதிரில் புக் லேண்ட் பதிப்பகம் தென்பட்டது. சகோதரி ஜெசீலா பானு அவர்கள் முகநூலில் எழுதியது நினைவுக்கு வந்தது. அவரது நூல் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்தார்.



அங்குள்ள பணியாளரிடம், “தமிழ் நூல்கள் எங்கே இருக்கின்றன?’‘ என்று கேட்டேன். “இங்கே தமிழ் நூல்கள் கிடையாது” என்றார். நான் ஜெசீலா பானு அவர்களின் நூல் விவரத்தைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அவர் இன்னொரு பணியாளரிடம் கேட்டார். அவர் உடனே அந்த நூலைக் காட்டித் தந்தார். “நம் நாயகம்” என்ற நூல். அதனை வாங்கி விட்டு அடுத்த கடைக்குள் நுழைந்தேன்.



தமிழ் நூல்கள் எங்காவது கண்ணுக்குத் தென்படுகிறதா என்றும் பார்த்துக்கொண்டே சென்றேன். எங்கும் தென்படுகிற மாதிரி தெரியவில்லை. லிபி பதிப்பகம் என்ற மலையாள நூல்கள் கடையில் எனக்குப் பிடித்த “இஸ்லாமும் நேர மேலாண்மையும்” என்ற மலையாள நூலை வாங்கினேன்.



அடுத்தடுத்த கடைகளுக்கு நகர்ந்தபொழுது தாருஸ்ஸலாம் பதிப்பகக் கடை (Darussalam International Islamic Bookshop - UAE) தென்பட்டது. இங்கே நல்ல நல்ல இஸ்லாமிய நூல்கள் கிடைக்குமே என்று உள்ளே நுழைந்தேன். அருமையான தலைப்புகளில் பல நூல்கள் அங்கே வீற்றிருந்தன. Strategies of Prophet Muhammad PBUH என்ற நூலை வாங்கினேன். அங்கே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஒரு பக்கத்தில் தமிழ் நூல்களை வைத்திருந்தார்கள்.



பின்னர் International Islamic Publishing House - Saudi Arabia கடைக்குள் நுழைந்தேன். அங்கும் அருமையான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆங்கில நூல்கள் விரவிக் கிடந்தன. Psychology from the Islamic Perspective என்ற நூலை வாங்கினேன். அங்கும் இதர மொழி நூல்களை பிரிவு பிரிவாக வைத்திருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே TAMIL என்ற பெயர்ப்பலகையின் கீழ் சில தமிழ் நூல்கள் இருந்தன.



மலையாள பதிப்பக உலகின் ஜாம்பவான் DC Books பல கடைகளைப் போட்டிருந்தார்கள். கூட்டம் அங்கே அலை மோதியது. அங்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவாம் என்று என் நண்பர் முஹம்மது ஆதில் சொன்னதை வைத்து அங்கு சென்று தமிழ் நூல்களைத் தேடினேன். ஒன்றும் இல்லை. அங்குள்ள பணியாளர்களிடம் விசாரித்தபொழுது தமிழ் நூல்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் ஏராளமான நூல்கள் அங்கே இருந்தன.



வழக்கம் போல் மலையாள பதிப்பகங்கள் அதிகம் பங்கேற்றிருந்தன. அங்கெல்லாம் மலையாளிகளின் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்து தங்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் நூல்களை பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே தமிழ் ஒலிகளும் கேட்டன. தமிழ் குடும்பங்களும் வந்திருந்தார்கள்.



‘மாத்யமம்’ மலையாள நாளிதழ் கடை போட்டு, அன்றைய நாளிதழை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதளின் கடையையும் கண்டேன். ‘மீடியா ஒன்’ மலையாள தொலைக்காட்சியும் கடை போட்டு, மலையாள இளவல்களை செய்தி வாசிக்க வைத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். மலையாள மக்கள் குதூகலத்துடன் அதனைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். மலையாள வானொலி பண்பலை Flowers FM கடையையும் காண நேர்ந்தது.



மலையாளிகளுக்கு வருடா வருடம் இது ஒரு பாக்கியமாகவே அமைந்துள்ளது. சொந்த நாட்டில் கூட அவர்கள் வாங்க முடியாத நூல்களையெல்லாம் அவர்கள் இங்கே சாதாரணமாக வாங்கலாம். கணிசமான மலையாள முஸ்லிம் பதிப்பக கடைகளும் காணக் கிடைத்தன. அமீரகத்திலுள்ள மலையாள வானொலி பண்பலைகளிலும் இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பரம் செய்யப்படுகிறது.



இதேபோன்று தமிழ் பதிப்பகக் கடைகள் எப்போது வரும் என்ற ஏக்கம் இதயத்துள் எழாமல் இல்லை. ‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் கடந்த வருடங்களில் ‘தேஜஸ்’ மலையாளப் பதிப்பகத்துடன் சேர்ந்து கடை போட்டிருந்தது. இந்த வருடம் சில காரணங்களால் ‘தேஜஸ்’ பதிப்பகம் கடை போடாததனால் ‘இலக்கியச்சோலை’ நூல்களும் இல்லாமல் போனது.



தமிழ் மக்கள் அதிகமாக இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிய வேண்டும். அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அவர்களின் அதீதமான வருகையும், வாசிப்புப் பழக்கமும் மட்டுமே இனி வருங்காலங்களில் தமிழ் பதிப்பகத்தாரை இங்கே கடைகள் எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்.



இந்த ஏக்கத்துடன் நேரமாகிவிட்டதால் விடைபெற மனமில்லாமல் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். புத்தகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறி நனைந்து வெளிவந்த உணர்வு.