Friday 10 November 2017

ஜும்ஆ தினத்தின் சிறப்புகளும், நன்மைகளும்


ஜும்ஆ தினம்
ஞாயிறு உதிக்கும் தினங்களில்
நல்ல தினம், தலைமை தினம்
என்றார்கள் எம்பெருமானார்
தூய தினத்தின் உத்தமம் அறிந்தால்
தூங்கிக் கழிக்க மாட்டோம்
சோம்பிக் கிடக்க மாட்டோம்
‘என் மீது இந்நாளில் ஸலவாத்தை அதிகரியுங்கள்;
எனக்கு அது காட்டப்படும்’
என்றார்கள் எம்பெருமானார்
வெள்ளிக் கிழமை சிறப்பானது போன்று
வெள்ளி சுபுஹு ஜமாஅத்தும் சிறப்பானது
வெள்ளிதோறும் ஓதும் கஹ்ஃபு சூரா
வெளிச்சம் கொடுக்கும் - அதன் மூலம் கப்ரின்
வேதனையைத் தடுக்கும்
ஜும்ஆவுக்காக என்று குளித்தால் அது நன்மை
அதற்கென்று ஆடையணிந்தால் அது நன்மை
தலைக்கு எண்ணை தேய்த்தால் அது நன்மை
பள்ளிக்குச் சென்று மனிதர்களைத் தாண்டிச் செல்லாமல் 
அமர்ந்தால் அது நன்மை - அவற்றிற்கு
பத்து நாட்களின் சிறு பாவங்கள்
பாசத்துடன் மன்னிக்கப்படும்
வெள்ளியன்று பள்ளி வாயில்களில்
வானவர்கள் வருபவர்களை
வரிசைப்படி பதிவார்கள்
இமாம் மேடையேறினால் ஏட்டை மடிப்பார்கள்
இமாம் உரை கேட்க பள்ளிக்குள் அமர்வார்கள்
அதன்பின் வருபவர்கள் அன்றைய பட்டியலில்
இடம் பெற முடியா இழப்பாளர்கள்
ஜும்ஆவுக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்
ஒரு வருடம் நோன்பு, தொழுகையின் நன்மை
முற்கூட்டியே வருபவருக்கு மொத்த நன்மை
முன்வந்தவர்கள் முன்வரிசையில் அமர வேண்டும்
பின்வந்தவர்கள் பின்வரிசையில் அமர வேண்டும்
நேரம் போக்காமல் திக்ரு, ஸலவாத்தும்
ஈரக் கண்களுடன் துஆவும் இறைஞ்சவேண்டும்
ஈருலக வெற்றி தரும் இறைமறை ஓத வேண்டும்
அந்நாளில் உண்டு ஒரு நேரம்
அந்நேரம் இறைஞ்சுதல் ஏற்றுக்கொள்ளப்படும்
அந்நேரம் எதுவென்று அறிவிக்கவில்லை அல்லாஹ்
ஆனால் அஸ்றுக்குப் பின்னுள்ள அறுதி நேரத்தில்
அதனைத் தேடிக்கொள்ளுங்கள்
என்றார்கள் எம்பெருமானார்
அதனால் அந்நாளில் அருமை துஆக்களை அதிகரிப்போம்!

10.11.2017 அன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.

No comments:

Post a Comment