Monday 20 November 2017

சிறிய அமல்...! பெரிய பலன்..!! அல்லாஹ்வின் கருணை விசாலமானது!!!


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.” (முஸ்லிம்)
திர்மிதீயில் இடம் பெற்ற ஹதீஸில் கீழ்க்கண்ட துஆவும் சேர்த்து கூறுமாறு வந்துள்ளது:
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன் (யாஅல்லாஹ், பாவமன்னிப்பு தேடுபவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! (திர்மிதீ)

சொர்க்கம் கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல; அதுவும் எட்டு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு அழைக்கப்படுவது என்றால்…! அந்த பாக்கியம் இந்த மிகச் சிறிய அமலால் கிடைத்து விடுகிறது. அதற்காக எந்தத் தொகையும் செலவழிக்க வேண்டியதில்லை. எந்தச் சிரமும் படவேண்டியதில்லை.
இந்தச் சிறிய நற்செயலுக்குப் போய் இவ்வளவு பெரிய சொர்க்கத்தை அல்லாஹ் வழங்கிடுவானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை மிக விசலானமானது. அதையும் இந்த நபிமொழியே நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் நரகத்தைப் பற்றியும் அதன் வாசல்களின் எண்ணிக்கை பற்றியும் இப்படி வந்துள்ளது: “நிச்சயமாக, (ஷைத்தானைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் நரகம்தான் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆகும்.” (15:44)

சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்று திருக்குர்ஆனில் (39:73) பொதுவாக வந்துள்ளது. ஆனால் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கையைப் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனினும் நபிமொழிகளில் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கை எட்டு என வந்துள்ளது. இந்த நபிமொழியிலும் எட்டு வாசல்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நரகத்தின் வாசல்களை ஏழாக அமைத்த அல்லாஹ், சொர்க்கத்தின் வாசல்களையும் ஏழு என அமைக்கவில்லை. மாறாக, ஒன்றை அதிகமாக்கி, எட்டு என அமைத்து, எனது கோபத்தை விட கருணையே விசாலமானது; எனது அருளே அதிகமானது என்பதை உணர்த்துகிறான். எனவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று சொர்க்கம் செல்ல இந்த இலகுவான துஆவை உளூவிற்குப் பிறகு ஓதி வருவோமாக!

No comments:

Post a Comment