Showing posts with label வேர்கள். Show all posts
Showing posts with label வேர்கள். Show all posts

Monday, 19 May 2014

“வேர்கள்” வரலாறு!

“ரூட்ஸ்” என்ற நாவல் எழுதியதன் மூலம் உலகப் புகழ் பெற்ற அலெக்ஸ் ஹேலி

“வேர்கள்” நூலின் மூல நூலான “ரூட்ஸ்” (Roots) என்ற ஆங்கில நாவலுக்கான வரலாறு மிக்க சுவாரஸ்யமானது. அதனை அறிய வேண்டுமென்றால் நாவலாசிரியரின் வரலாறை கொஞ்சம் அலசினால்தான் பொருத்தமாக இருக்கும்.

அலெக்ஸ் ஹேலி என்ற அமெரிக்கக் கறுப்பர்தான் இந்த நூலை எழுதினார் என்பது வாசகர்களுக்குத் தெரியும். அவர் 1921ம் ஆண்டு, ஆகஸ்ட் 11 அன்று நியூயார்க்கில் இதாகா என்ற இடத்தில் சிமோன் ஹேலி-பெர்த்தா ஜார்ஜ் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இளவயதில் கடலோரக் காவற்படையில் பணிபுரிந்தார். பின்னர் பத்திரிகைத்துறைக்கு வந்தார். பின்னர் கைதேர்ந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் மாறினார். ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest), பிளேபாய் (Playboy) ஆகிய பிரபலமான பத்திரிகைகளில் பணியாற்றினார்.

மால்கம் எக்ஸின் வரலாறை எழுதுவதற்கு இவர் பணிக்கப்பட்டார். மால்கம் எக்ஸ் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் மிக்க பரபரப்பாக இருந்ததால் அலெக்ஸ் ஹேலியிடம் ஓர் இடத்தில் அமர்ந்து பேட்டி கொடுப்பதற்கெல்லாம் அவருக்கு நேரம் இருக்கவில்லை. எனவே மால்கம் எக்ஸ் செல்லுமிடமெல்லாம் அலெக்ஸ் ஹேலியும் சென்றார்.

மால்கம் எக்ஸ் (வலது) தன் வாழ்க்கை வரலாறைச் சொல்லச் சொல்ல அலெக்ஸ் ஹேலி அதனை டைப் அடித்து பதிவு செய்கிறார்

அந்தப் பயணத்தின்போது காரில் வைத்து மால்கம் எக்ஸிடம் இவர் பேட்டியெடுப்பார். இப்படி 1963 முதல் 1965ம் ஆண்டு பிப்ரவரியில் நியூயார்க்கில் அவுடுபோன் அரங்கத்தில் வைத்து மால்கம் எக்ஸ் சுட்டுக்கொல்லப்படும் வரை ஹேலி அவரிடம் எடுத்த 50க்கும் மேற்பட்ட ஆழமான பேட்டிகளின் தொகுப்புதான் “மால்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு” (The Autobiography of Malcolm X) என்ற நூல்.

இதுதான் அலெக்ஸ் ஹேலியின் முதல் நூல். இந்நூல் 1965ம் ஆண்டு வெளியாகி, விற்பனையில் சாதனை படைத்தது. முதல் நூலிலேயே அலெக்ஸ் ஹேலி மிகப் பிரபலமானார். 1966ம் ஆண்டு இந்த நூலுக்காக அலெக்ஸ் ஹேலி அனிஸ்ஃபீல்டு-வோல்ஃப் புத்தக விருது (Anisfield-Wolf Book Award) வாங்கினார்.

 மாலிக் அல் ஷாபாஸ் என்ற மால்கம் எக்ஸ்

1977 வரை இது 60 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை கூறுகிறது. 1998ம் ஆண்டு டைம் என்ற ஆங்கிலப் பத்திரிகை இந்நூல் இருபதாம் நூற்றாண்டின் அதிக பிரசித்தி பெற்ற, செல்வாக்கு பெற்ற நூல் என்று பறைசாற்றியது.

இதனை ஏன் இங்கே குறிப்பிடுகின்றேன் என்றால் ரூட்ஸ் நாவலின் துவக்கப் புள்ளி இங்கேதான் ஆராம்பாகிறது. மால்கம் எக்ஸ் பல பல்கலைக் கழகங்களில் கருத்தரங்குகளில் உரையாற்ற அழைக்கப்பட்டார். அங்கே ஆற்றிய உரைகளிலெல்லாம் மால்கம் எக்ஸ் சொன்ன ஒரு வரலாற்று உண்மைதான் அலெக்ஸ் ஹேலிக்கு இந்தப் புதினத்தை உருவாக்கத் தூண்டியது.

அதாவது, அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு அடிமைகளாக அமெரிக்காவில் விற்கப்பட்டவர்கள், அங்கே ஆப்பிரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

சிறு வயதில் அறியாமல் செய்த தவறுகளுக்காக மால்கம் X சிறையில் இருந்தபொழுது சிறை நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்து விட்டார். அப்படி பலதரப்பட்ட நூல்களையும் படித்தபொழுதுதான் அவர் இந்த உண்மையைக் கண்டறிந்தார்.

மால்கம் எக்ஸுடன் கூடவே செல்லும் அலெக்ஸ் ஹேலி இந்தச் செய்தியைக் கேட்டார். மீண்டும் மீண்டும் கேட்டார். ஆச்சரியப்பட்டுப் போனார். தானும் ஒரு கறுப்பர்தானே... தன்னுடைய மூதாதையர்களும் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டு வந்தவர்கள்தானே... அவர்களெல்லாம் முஸ்லிம்களா... அப்படியென்றால் நான் முஸ்லிம்களின் வழி வந்தவனா... என்று சிந்திக்க ஆரம்பித்தார். இந்தக் கூற்று உண்மையானதுதானா என்று ஆராயவேண்டும் என்று அப்பொழுதே முடிவெடுத்தார்.

அப்பொழுதுதான் அவருக்கு அவர்களின் மூதாதையர்கள் பற்றி அவருடைய குடும்பத்தார், குறிப்பாக அவருடைய பாட்டி அடிக்கடி நாட்டுப்புறப் பாடல் போல் பாடுவது நினைவுக்கு வந்தது. அதிலேயே அவரின் மூதாதையர்களின் பெயர்களெல்லாம் வந்து விடும். தன் மூதாதையர்கள் பற்றி மேலும் பல விவரங்களை அறிந்திட அவர் தன் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து பழைய வரலாறுகளையெல்லாம் கிளற ஆரம்பித்தார்.

நூலகத்தில் சென்று அன்றைய ஆப்பிரிக்க - அமெரிக்க வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அன்றைய ஆப்ரிக்க - அமெரிக்க வாழ்விடங்கள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கம் என்று அத்தனையையும் ஆராய ஆரம்பித்தார்.



இப்படியே 12 வருடங்கள் கடும் ஆராய்ச்சியை மேற்கொண்டார். மூன்று கண்டங்களிலுள்ள பலப்பல நாடுகளுக்குச் சுற்றினார். கிட்டத்தட்ட 50 நூலகங்களில் ஆய்வு செய்தார். இறுதியாக தன் முன்னோர்களின் வரலாறைத் தோண்டியெடுத்தார். தன் ஏழாவது தலைமுறை மேற்கு ஆப்ரிக்காவில் காம்பியா என்ற நாட்டில் ஜுஃபுர் என்ற செழிப்பு மிக்க ஒரு சிறிய கிராமத்தில் பாரம்பரியமிக்க ஒரு முஸ்லிம் குடும்பத்தில் முடிந்ததைக் கண்டுபிடித்தார்.

தன் ஏழாவது முப்பாட்டனாரின் பெயர் குண்டா கிண்டே என்பதை அறிந்தார். அதனை வரலாற்றுப் புதினமாக வடித்தெடுத்தார். அதுதான் “ரூட்ஸ்” என்ற ஆங்கிலக் காவியம்.

நாவல் ஆப்ரிக்காவில் குண்டா கிண்டேயிடமிருந்து தொடங்கும். குண்டா கிண்டே என்ற காக்கை போன்ற கறுப்புக் குழந்தை பிறப்பதுதான் முதல் காட்சி. முதல் அத்தியாயம். கி.பி. 1750லிருந்து தொடங்கும் நெஞ்சைப் பிழியும் அந்தக் கொடூர வரலாறு 1922ல் அமெரிக்காவில் முடிவடையும்.

ரூட்ஸ் திரைப்படமாக... (குண்டா கிண்டேவைக் கட்டி வைத்து சாட்டையால் அடிக்கும் வெள்ளை மிருகம்)

ஆப்ரிக்காவிலிருந்து குண்டா கிண்டே என்ற அந்த முஸ்லிம் அமெரிக்காவுக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்டு, அங்கே அடிமையாக விற்கப்படுகிறார். அவரது வழித்தோன்றல் அடிமைத் தலைமுறையாக வளர்ந்து, கிறிஸ்தவத் தலைமுறையாக மாற்றப்பட்டு, அமெரிக்காவோடு கால ஓட்டத்தில் கலந்து, கரைந்து விடுகிறது.

இந்த வரலாற்றுப் புதினத்தைப் படித்துவிட்டு பல கறுப்பர்கள் தங்கள் மூல மார்க்கம் இஸ்லாம் என்று அறிந்து இஸ்லாத்தைத் தழுவினர். திக்குத் தெரியாமல் சிதறி, சீரழிந்து கிடந்த அமெரிக்கக் கறுப்பர்களுக்கு தங்களுக்கும் ஒரு பாரம்பரியமிக்க வரலாறு உண்டு என்ற தன்னம்பிக்கை தலைதூக்கியது. படிக்கத் தெரியாத கறுப்பர்கள் கூட தங்கள் முன்னோர்களின் வரலாறைத் தாங்கிய இந்த நூலை வாங்கி பைபிள் போல பட்டுத் துணியில் போர்த்திப் பாதுகாத்தனர்.

1976ல் ரூட்ஸ் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் ரூட்ஸ் இடம் பெற்றது. இதுவரை 37 மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதன் வீச்சின் வேகத்தை உணர்த்தும்.

இந்த நூலுக்காக அலெக்ஸ் ஹேலிக்கு 1977ல் பெருமைக்குரிய “சிறப்பு புலிட்ஸர் பரிசு” (Special Pulitzer Prize) வழங்கப்பட்டது.



அதே வருடம் இந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டு தொலைக்காட்சித் தொடராக ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடரும் நூலைப் போலவே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைக் கண்டவர்களின் எண்ணிக்கையும் சாதனைப் பட்டியலில் சேர்ந்தது. அதாவது, 13 கோடி பேர் இந்தத் தொடரைக் கண்டுகளித்தனர்.

அமெரிக்காவில் வாழும் ஆப்ரிக்கக் கறுப்பர்களின் வரலாறு நீண்ட பாரம்பரியம் கொண்டது, அது அழிந்திடவில்லை என்பதை இந்தப் புதினம் வலியுறுத்தி நின்றது. இந்த வரலாற்றுக் காவியம் இன்னொரு தீப்பொறியையும் கிளறிவிட்டது. அதாவது “பரம்பரையியல்” அல்லது “மூதாதையர் பற்றிய ஆய்வியல்” என்ற Genealogy பற்றிய ஆராய்ச்சியை அது தூண்டி விட்டது.



அலெக்ஸ் ஹேலி ஒருமுறை சொன்னார்: “நான் சந்தித்த கறுப்பர்களில் பெரும்பாலோர் - வசதிமிக்கவர்கள், வசதி குறைந்தவர்கள் எல்லோரும் அதில் அடங்குவர் - என்னிடம் சொன்னது, “நான் உங்களுக்காக பெருமைப்படுகிறேன்.” நான் இந்த நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றே உணர்கிறேன். கறுப்பர்களைத் தலைகுனிய வைக்க நான் ஒருபொழுதும் விடமாட்டேன். நான் சம்பாதித்த பணம், சம்பாதிக்கப் போகும் பணம் ஆகிவையெல்லாம் இவர்களை ஒப்பிடும்பொழுது எனக்கு ஒன்றுமே இல்லை.”

ரூட்ஸ் புதினத்திற்காக அலெக்ஸ் ஹேலி மேற்கொண்ட கடும் ஆராய்ச்சிக்காகவும், அந்த நூல் கொண்டுள்ள ஆழமான இலக்கியச் செறிவுக்காகவும் 1977ல் National Association for the Advancement of Colored People (NAACP) என்ற மனித உரிமைகள் அமைப்பு அலெக்ஸ் ஹேலிக்கு ஸ்பிங்கம் விருது (Spingam Award) வழங்கி கௌரவித்தது. இனப்பாகுபாட்டையும், நிறவெறியையும் அழித்தொழிப்பதற்காக 1909ல் உருவாக்கப்பட்ட ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைகள் அமைப்புதான் NAACP என்பது.

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் உள்ள டென்னஸ்ஸி பல்கலைக்கழக நூலகத்தில் ரூட்ஸ் புதினத்திற்காக அலெக்ஸ் ஹேலி சேகரித்த அரிய பதிவுகள் ஆவணப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் அவர் ரூட்ஸ் புதினத்திற்காக எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள், முன்வரைவுகள், சட்டக் குறிப்புகள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை காணப்படுகின்றன.

1979ல் மீண்டும் ஏபிசி டிவி ரூட்ஸ் புதினத்தின் அடுத்தபடியாக உள்ள தொடரை வெளியிட்டது. அலெக்ஸ் ஹேலி காம்பியாவின் ஜுஃபுர் கிராமத்திற்குச் சென்றது வரை அதில் இடம் பெற்றிருந்தது.

தன் முன்னோர்களின் வேர்களைக் கண்டுபிடித்த அலெக்ஸ் ஹேலி, தன் ஏழாவது முப்பாட்டனார் ஜுஃபுர் கிராமத்திலுள்ளவர் என்பதை அறிந்தவுடன் வாகன வசதிகள் இல்லாத அந்தக் கிராமத்திற்கு மிகுந்த சிரமங்களுக்கிடையில் செல்வார். அவர்களின் மொழி அவருக்குத் தெரியாததால் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒன்றாக அழைத்துச் செல்வார்.

அவர்களின் சுத்தமான ரத்தத்தின் முன் கலப்படமுற்ற தன் ரத்தத்தை எண்ணி வெட்கப்பட்டு கூனிக் குறுகி அவர் நிற்பார். அந்த உணர்ச்சியை அப்படியே நாவலிலும் வடித்திருப்பார். இதனைப் படிப்பவர்களுக்கு உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் வராமல் இருக்காது.

ரூட்ஸ் திரைப்படத்தில் அலெக்ஸ் ஹெலியின் வெவ்வேறு வயதுக்காரர்களாக கிறிஸ்டாஃப் செயின்ட் ஜான், டாமொன் இவான்ஸ், ஜேம்ஸ் ஏர்ள் ஜோன்ஸ் ஆகிய புகழ்பெற்ற நடிகர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளனர்.



அலெக்ஸ் ஹேலியின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு முக்கியமான உணர்ச்சிப் பெருக்கு நிகழ்வுதான் அன்னபோலிஸ் துறைமுகம்.

குண்டா கிண்டேயும், அவருடன் கடத்தப்பட்ட கறுப்பர்கள் அனைவரும் பயணித்த கப்பல் 1767ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னபோலிஸ் துறைமுகத்தில் வந்து இறங்கியது. அலெக்ஸ் ஹேலி அங்கே சென்று பழைய ஆவணங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து அந்தக் கப்பலைக் கண்டுபிடித்தார்.

அவருடைய ஏழாவது தலைமுறை முப்பாட்டனாரை விலங்கிட்டு ஏற்றி வந்த அந்தக் கப்பலின் பெயர் “தி லார்ட் லிகோனியர்” (The Lord Ligonier). அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் பட்டியலை ஒருவழியாகக் கண்டுபிடித்தார். அதில் சரக்குகள் பட்டியலில் குண்டா கிண்டே என்ற பெயரும் இருந்தது. அந்தப் பெயரைப் பார்த்ததும் அப்படியே கண் குத்தி நின்றார் அலெக்ஸ் ஹேலி.



அது 1967, செப்டம்பர் 29ம் தேதி. அதாவது அந்தக் கப்பல் அங்கே வந்து சரியாக 200 வருடங்கள் கழித்து அலெக்ஸ் ஹேலி தன் முப்பாட்டனார் வந்த கப்பலைக் கண்டுபிடித்துவிட்டார். தன் வாழ்வின் உச்சகட்ட உணர்ச்சிப் பெருக்குள்ள நாள் அதுதான் என்று பின்னர் அலெக்ஸ் ஹேலி குறிப்பிடுகிறார்.
நாவலில் இந்தக் காட்சியை அவர் அதியற்புதமாக வர்ணித்திருப்பார். படிப்போருக்கு அதே உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டு, கண்களில் நீர் சுரக்கும் அளவுக்கு அந்த வரிகளில் கனம் இருக்கும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை என்றென்றும் நினைவுகூரும் விதமாக அன்னபோலிஸின் நடுவில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேலி தன் காலடியில் குழுமியிருக்கும் குழந்தைகளுக்கு கதை படித்துக் கொடுப்பது போன்று அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸ் ஹேலி சிலையாக...

ஹேலி ரூட்ஸ் நாவலை நியூயார்க்கிலுள்ள ஹாமில்டன் கல்லூரியில் வைத்துதான் எழுத ஆரம்பித்தார். எழுத்தின் இடைவேளையில் சிறிது இளைப்பாறும் பொருட்டு அங்கே சிறிய அளவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பியானோ வாசிப்பதைக் கேட்டு ரசிப்பார். பின்னர் ரூட்ஸ் உலகளாவிய அளவில் புகழ்பெற்றவுடன் அதே கல்லூரியில் அந்த நூலை எழுத ஆரம்பித்ததை நினைவுகூரும் முகமாக ஒரு சிறப்பு மேஜை அமைக்கப்பட்டது.

அலெக்ஸ் ஹேலியை கௌரவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த மஞ்சள் நிற மேஜையில் ஹேலி ரூட்ஸ் புதினம் எழுதிக் கொண்டிருப்பது போல் ஒரு பெயிண்டிங் வரைந்து வைக்கப்பட்டுள்ளது.

ரூட்ஸ் புதினம் அலெக்ஸ் ஹேலியின் தாய் வழி வேர்களைத் தேடிய புதினம். 1970களின் இறுதியில் அலெக்ஸ் ஹேலி தன் தந்தை வழிப் பாட்டியின் வேர்களைத் தேட ஆரம்பித்தார். அதனை ஆய்வு செய்து ஒரு நாவலை எழுத ஆரம்பித்தார். “குயீன்” (அரசி) என்று அந்த நாவலுக்குப் பெயர் வைத்தார்.



அவருடைய பாட்டியின் பெயர் குயீன். ஆனால் இந்த நாவலை அவர் முடிப்பதற்கு முன்பே பிப்ரவரி 10, 1992ம் ஆண்டு வாஷிங்டனில் வைத்து தனது 70வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் பிறந்து வளர்ந்த இடமான டென்னஸ்ஸீயிலுள்ள ஹென்னிங் என்ற இடத்தில் அவர் அடக்கப்பட்டார்.

இறப்பதற்கு முன்பு டேவிட் ஸ்டீவன்ஸ் என்பவரிடம் இந்த நாவலை முடிக்கும்படி அவர் கேட்டிருந்தார். பின்னர் அது “அலெக்ஸ் ஹேலியின் குயீன்” (Alex Haley’s Queen) என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. 1993ல் இது திரைப்படமாகவும் வெளிவந்தது.

ரூட்ஸ் நாவலின் வீச்சும், வேகமும் அது தமிழில் வேர்களாக முகிழ்ந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்ட வேர்கள் தமிழ் புதினத்தைப் படித்த பலர் அதிலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களை மறக்காமல் நினைவில் வைக்கும் அளவுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

வேர்கள் வெளிவந்த புதிதில் ஹிந்து மத பிராமண வகுப்பிலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு பெண் இதனைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் அழுதுகொண்டிருந்ததாக அவருடைய கணவர் என்னிடம் சொன்னபொழுது மலைத்துப்போய் விட்டேன்.



வேர்களின் இறுதியில் அலெக்ஸ் ஹேலி குறிப்பிடுவதைப்போல ஒரு தோல்வியின் வரலாறு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை எண்ணி வியந்திருக்கிறேன். அதன் வீச்சு இன்னும் குறையவில்லை. அது ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் தணியவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு துபையில் வசிக்கும் நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த முஹம்மது அனஸ் என்ற வேர்களைப் படித்த வாசகர் மெட்ரோ ரயிலில் பயணித்தபொழுது நடந்த ஓர் அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதன் சுருக்கம் இதுதான்:

“மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் பக்கத்து இருக்கையில் ஓர் ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன். “காம்பியா” என்றார்.

எனக்கு காம்பியா நாட்டைப் பற்றி எதிலோ படித்த ஞாபகம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம், “காம்பியா, செனகலின் பக்கத்து நாடா?” என்று கேட்டேன். ஆப்ரிக்கர்களுக்கே உண்டான ஒரு துள்ளலில் என் கையில் ஒரு தட்டு தட்டி, “மிகச் சரியாக சொன்னீர்கள். காம்பியா, செனகலின் நடுவே அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

நான் அவரிடம், “ரூட்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நாட்டைப் பற்றிப் படித்திருக்கிறேன்” என்றேன். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “என்ன... நீங்கள் அந்தப் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு காம்பியா நாட்டவனிடமும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான வரலாறு அந்தப் புத்தகத்தில் இருக்கிறது...” என்று அங்காலாய்த்தார். அதற்கு பிறகு அவர் இன்னும் மனது விட்டு என்னிடம் பேச ஆரம்பித்து விட்டார்.”

இவ்வாறு முஹம்மது அனஸ் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அதில் இலக்கியச்சோலை நூல்களும் இடம் பெற்றிருந்தன. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி என்ற வாசகர் “வேர்கள்” நூலை அங்கே வாங்கிப் படித்துவிட்டு அது ஏற்படுத்திய தாக்கத்தில் ஓர் ஆய்வுரையையே அனுப்பி விட்டார்.

அதன் சுருக்கம் வருமாறு:

“நூலின் மையக் கருத்தும், மொழிபெயர்ப்பின் மொழிநடையும், சம்பவங்களின் சுவாரஸ்யமும், நூல் முழுதும் இழையோடும் வரலாற்றுக் கொடுமையின் சோகமும் வாசிப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதை உணர முடிந்தது.

புத்தகத்தைப் படித்ததிலிருந்து மனம் மிக பாரமாக இருப்பதை உணர்ந்தேன். தனது பரம்பரையின் வேர்களைத் தேடும் ஒரு பத்திரிகையாளரின் பரம்பரைத் தொடர் வரலாற்று நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. சக மனிதர்களை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல், விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி, ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்து நாடோடிகளாக்கிய குரூர புத்திக்கு சொந்தக்காரர்கள் (மேலை நாட்டவர்கள்), இன்று மனித உரிமைகள் பற்றி பேசுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

நூலின் காட்சி அமைப்புகள், நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல. ஆப்பிரிக்க காம்பியாவின் ஜுஃபூர் கிராமமும், மாண்டிங்கா மக்களின் கலாச்சாரமும், அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பலும், புதிய அமெரிக்க பூமியின் பண்ணைகளும், அடிமைச் சேரிகளும், ஆப்பிரிக்காவின் மனித ஆவணக் காப்பகங்களான கிரியட்டுகளும் இன்றும் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

கதையின் பாத்திரங்களும் தலைமுறை வாரியாக மனதில் பதிந்து விட்டன: குண்டா கிண்டே - கிஸ்ஸி - கோழி ஜார்ஜ் - டாம் லீ - சியாமா - பெர்த்தா - அலெக்ஸ் ஹேலி.

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது வேர்களைத் தேடும் ஆர்வம் வருவதைத் தவிர்க்க இயலாது. என் தகப்பனார் அவர்கள் எங்களது குடும்பத் தலைமுறைகளை சார்ட் வடிவில் பட்டியலிட்டு என்னிடம் இனி வரும் தலைமுறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஸஜரா அல்லது ஸில்ஸிலா என்ற பெயரில் தங்களது குடும்ப தலைமுறை ஆவணத்தைப் பாதுகாக்கும் பழக்கம் அரபுகளிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நம்மிடையே அமெரிக்க, ஐரோப்பிய, கீழை நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்த தகவல்களை விட ஆப்பிரிக்காவைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஆப்பிரிக்க முஸ்லிம்களைப் பற்றி அறியும் ஆவலை “வேர்கள்” நிச்சயமாகத் தூண்டும் என நம்புகிறேன்.

இப்போதெல்லாம் துபை வீதிகளில் எந்த ஒரு ஆப்பிரிக்கரைப் பார்த்தாலும் இவர் ஒரு காம்பியனாக, மாண்டிங்காவாக இருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் நண்பரோடு பணி புரியும் ஒரு செனகல் நாட்டுக் காரரிடம் “வேர்கள்” பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வத்தோடு ரூட்ஸ் நூலில் இடம் பெற்றுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும், அடிமைகளை ஏற்றும் துறைமுகங்கள் செனகலில்தான் இருப்பதாகவும் கூறினார்.

“நீங்கள் மாண்டிங்காவா?” எனக் கேட்டதற்கு, “இல்லை. நான் உலோஃப் இனத்தைச் சேர்ந்தவன்” என அவர் கூறியதும், எனக்கு கப்பலில் குண்டாவுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவர் ஒரு உலோஃப் தான் என்பது நினைவுக்கு வந்து போனது.

வேர்கள் மூலமாக என் சிற்றறிவுக்கு எட்டும் சில படிப்பினைகளாக நான் கருதுவது:

1. ஒரு சமூகத்தை அழிக்க முதலில் எதிரிகள் செய்வது அவர்களின் கலாச்சார அடையாளங்களை அழிப்பது. அதுதான் குண்டாவின் விஷயத்தில் நடந்தது. அடுத்த தலைமுறைகளுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.

2. மேலை நாடுகளின் அடிமை முறை உடல் ரீதியாக களையப்பட்டு விட்டதாக பிரகடனப் படுத்தப்பட்டாலும், உள ரீதீயான சிந்தனை அடிமைத்தனத்தை (Ideological Slavery) அவர்கள் இன்றும் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் (குறிப்பாக முஸ்லிம் உம்மாவின் மீது) என்பதற்கு முஸ்லிம் நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கலாச்சாரத் தாக்கங்களும், போர்களும், ஹாலிவுட் கற்பனைகளும், குழந்தைகளை அடிமைப்படுத்தும் கேம்களும், கார்ட்டூன்களும், மீடியாக்களும், KFCகளும், போதைப் பொருட்களும், முதலாளித்துவ சந்தை முறைகளும், நவீன வங்கி முறைகளும், நவீன தொழில்நுட்ப போதைகளும், இன்னும் நமக்கே அறியாமல் நம்மை ஆட்கொண்டுள்ள எத்தனையோ ஆதிக்கங்களும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.”

இவ்வாறு அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி அதில் குறிப்பிட்டிருந்தார்.

“வேர்கள்” ஏற்படுத்திய தாக்கத்தின் அடுத்த விளைவு காயல்பட்டினத்தில் துளிர் பள்ளி அரங்கில் “வேர்கள்” பற்றிய நூலாய்வுரை நிகழ்ச்சி நடத்துவது வரை சென்றுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இந்த நூல் இன்னும் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களை இஸ்லாத்தின்பால் சுண்டியிழுத்த இந்த ரூட்ஸ் புதினத்தின் ஆசிரியரான அலெக்ஸ் ஹேலி இறுதி வரை இஸ்லாத்தைத் தழுவவில்லை என்பது அடிக்குறியிட்டு சொல்லப்படவேண்டிய ஒன்று.

இங்கேதான் ஹிதாயத் என்னும் நேர்வழியின் அருமையும், பெருமையும் விளங்குகிறது. ஹிதாயத் என்னும் நேர்வழியை அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவருக்குத்தான் கொடுப்பான். அது அலெக்ஸ் ஹேலியின் விஷயத்தில் நடைபெறவில்லை.

அந்த வகையில் நம்மையெல்லாம் அவனது நேர்வழியில் வைத்திருக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

MSAH

Vidiyal Velli May 2014

Friday, 21 March 2014

துளிரில் சிறப்புடன் நடந்து முடிந்த உலக வரலாற்று புகழ் பெற்ற நூல்களின் ஆய்வு!

2014 மார்ச் 16 ஞாயிறு அன்று துளிர் அறக்கட்டளை அறிவுத்துளிர் குடும்ப நண்பர்கள் வட்டம், நிரஞ்சனம் மனநல மன்றம் ஆகிய துளிரின் உள் அமைப்புகளின் சார்பில் உலக வரலாற்றில் புகழ் பெற்ற 'ரோடு ட்டூ மக்கா' எனும் தலைப்பில் முஹம்மது அஸத் வெளியிட்ட ஆங்கில நூலை 'எனது பயணம்' எனும் தலைப்பில் எஸ்.ஓ. அபுல் ஹஸன் கலாமி தமிழில் மொழியாக்கம் செய்த நூலும், 'ரூட்ஸ்' எனும் தலைப்பில் அலெக்ஸ் ஹேலி எழுதிய 'வேர்கள்' எனும் தலைப்பில் எம்.எஸ். அப்துல் ஹமீது தமிழில் மொழியாக்கம் செய்த புதினமும் ஆய்வு செய்யப்பட்டது.


மாலை 5.15 மணிக்கு துளிர் சிற்றரங்கில் நூலாய்வு நிகழ்வு துவங்கியது. அல்ஹாஃபிழ் முஹம்மது இர்ஃ;பான் திருக்குர்ஆன் சூரா 'அபஸா' விலிருந்து சில வரிகளை ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். விழிப்புலன் இழந்த போதும் தனது ஆற்றலால் குர்ஆனை மனனம் செய்து இருக்கும் அவருக்கு துளிரின் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

துளிர் நிறுவனர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹமது வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் 16 ஆண்டு காலம் அறிவுத்திறனற்ற இயலா நிலை குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணியாற்றி வரும் துளிர் பொது தளங்களிலும் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கருத்தரங்குகள், இலக்கிய கூட்டங்கள், விவாத அரங்குகளையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இந்த நூலாய்வு நிகழ்வும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். கொமைந்தார் இஸ்மாஈல் நூலாய்வு உரை நிகழ்த்தும் பேராசிரியர்களை அறிமுகம் செய்து பேசினார்.

"ROAD TO MAKKAH" - “எனது பயணம்” நூலாய்வு

முதலாவதாக "ROAD TO MAKKAH" - “எனது பயணம்” என்ற நூலாய்வு நிகழ்விற்கு ஹாஜி எஸ்.எம். உஜைர், ஹாஜி எஸ்.ஐ. தஸ்தகீர் ஆகியோர் தலைமை ஏற்றனர். ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் ஆங்கில துறை தலைவர் முனைவர் ஏ. நிஃமதுல்லாஹ் நூலாய்வு உரையாற்றினார்.


அவர் தனது உரையில் கூறியதாவது:

சிலுவைப் போருக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முழுக்க தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்தி விட்டது. இன்று வரை அந்த வெறுப்பும், அருவருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனதில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.

இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டுவிஸ் (முஹம்மது அஸத்) அவர்கள் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஅபாவை வலம் வருகிறார். சவூதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர். மக்காவை நோக்கிய பயணம் இந்த அய்ரோப்பியரை இஸ்லாமியராக மட்டுமல்ல, அரபியாகவும் ஆக்கி விடுகிறது.

அன்றைய பாகிஸ்தானுக்குச் செல்கிறார். மாபெரும் கவிஞர் அல்லாமா இக்பாலோடு தொடர்பு ஏற்படுகிறது. புதிய பாகிஸ்தானின் அரசியல் ஆலோசகர் ஆகிறார். ஐ.நா. சபையில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற அமைச்சர் ஆகிறார்.

இவ்வளவுக்குப் பின் அமெரிக்கா செல்கிறார். இவர் தம் பழைய நண்பர்கள் இவரை விசித்திரமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் அறியாமையை உடைத்தெறிய முன் வருகிறார் அஸத். அதுவரை தன் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பாதிருந்த அவருக்கு இப்போது அது அவசியமாகி விட்டது.

ஆம்! இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், அரபு பற்றியும் அவர்களுக்கு அறிவித்திடத் துடிக்கிறார்.

எழுதுகோலால் கற்பித்த அல்லாஹ்வின் பேருதவியோடு 'ரோடு ட்டூ மக்கா' என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது.

ஆம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும், இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.

இந்நூலை ஒருவர் படித்து முடித்தால் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும் அவரால் நிச்சயம் உண்மையை உய்த்து உணர முடியும்.
இதோ அந்த அரிய நூல் தமிழில்!

காயல்பட்டினம் சகோதரர் ஹாஜி அபுல் ஹஸன் கலாமி, அஸத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார். பெருநூலாய் இருப்பினும் பொருளும், சுவையும் விடாமல் படித்து முடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த நூலை வெளியிட்டுள்ள சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


இவ்வாறு தெரிவித்த முனைவர் நிஃமத்துல்லாஹ், இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் எளிதில் புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த நூல் என்றும், இந்த அரிய நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


அதன் பின் நூலை மொழியாக்கம் செய்த ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹஸன் கலாமி ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:

சில ஆண்டுகளுக்கு முன் முஹம்மது அஸத் எழுதிய 'ரோடு ட்டூ மக்கா' நூலை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த நூலை படித்த போது அது ஒருவரின் சுயசரிதையோ அல்லது வீர செயல்களின் வர்ணணையோ அல்ல என்றும், ஒர் ஐரோப்பியர் இஸ்லாத்தை தெரிதலையும் முஸ்லிம் சமூகத்தோடு அவர் இரண்டற இணைதலையும் விளக்கிடும் கதைதான் அது என்றும் எனக்கு புரிந்தது.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்த முயற்சிக்காக நான் பல வருடங்கள் செலவிட்டேன். 'ரோடு ட்டூ மக்கா' எனும் ஆங்கில நூலை பல முறை திரும்ப திரும்ப படித்தேன். நான் தமிழாக்கம் செய்த இந்த புத்தகத்திற்கு 'எனது பயணம்' என்று பெயர் வைத்தேன். அதனை சாஜிதா புக் சென்டர் நிறுவனத்தார் வெளியிட்டார்கள். 

இவ்வாறு கூறிய அவர், இந்த நூலாய்வு நிகழ்வினை ஏற்பாடு செய்து என்னை கவுரவப்படுத்திய துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்த நிகழ்வில் துளிரின் அழைப்பினை ஏற்று எல்லா தரப்பினரும் கலந்து கொண்டமைக்கு பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். இந்த நூலாய்வு நிகழ்வில் மாற்று மத சகோதர சகோதரிகளின் பங்களிப்பும் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் தனது ஏற்புரையில் தெரிவித்தார்.

“ரூட்ஸ்” - “வேர்கள்” நூலாய்வு

இரண்டாவதாக “ரூட்ஸ்” - “வேர்கள்” எனும் நூலாய்வு நிகழ்விற்கு ஆர்.எஸ். லத்தீஃப், ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா) எஸ்.இ. அமானுல்லாஹ் ஆகியோர் தலைமை ஏற்றனர்.


ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை இணை பேராசிரியர் முனைவர் ஏ. அஷ்ரஃப் அலீ தனது நூலாய்வு உரையில் கூறியதாவது:

மால்கம் எக்ஸ் இஸ்லாத்தை முன் வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காக போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் எக்ஸ் தன்னுடைய வேகமான இஸ்லாமியப் பிரச்சாரத்தின் போது 'கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல. அஃது ஆப்பிரிக்கா!' என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார். அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன. இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.





பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் எக்ஸ் கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. 

அதாவது அவரது 'வேரை' அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது. தனது பயணத்தை, ஆராய்ச்சியை “ரூட்ஸ்” என்று புதினமாக வடித்தார். இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு “வேர்கள்” என்ற பேரில் காயல்பட்டினத்தை சேர்ந்த எம்.எஸ். அப்துல் ஹமீது மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக! இந்த நூல் 'இலக்கியச்சோலை' வெளியீடாக வந்துள்ளது.

இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நூலாய்விற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபை) இருக்கும் எம்.எஸ். அப்துல் ஹமீதை பார்வையாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அஹமத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களை கேட்டார். 

அப்போது அவர் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரியப்படுத்தினார்: 

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும் ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் மால்கம் எக்ஸ் நூல் மூலமாக அறிந்தேன். அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன் முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்க கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலை படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் முயற்சியை துவங்கினேன். ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கி மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று கூறிய எம்.எஸ். அப்துல் ஹமீது, இந்நூலை நூலாய்விற்கு தெரிவு செய்த துளிர் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

(முன்னதாக இந்த நூலை நான்கு முறை படித்து முடித்து விட்ட காயல் எஸ்.இ. அமானுல்லாஹ் “வேர்கள்” குறித்த அறிமுகவுரையை நிகழ்த்தினார்.

மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ். அப்துல் ஹமீதுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை அவர் சார்பில் அவரின் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈலும், அவரின் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டனர்.)

நன்றி: http://www.kayalnews.com

Wednesday, 19 March 2014

“வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா!


கடந்த 16.03.2014 ஞாயிறன்று காயல் பட்டினம் துளிர் பள்ளி அரங்கில் “வேர்கள்” & “எனது பயணம்” நூலாய்வு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

“The Road to Makkah” எனும் தலைப்பிலான நூலை, காயல் பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ - “எனது பயணம்” எனும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். “Roots” எனும் ஆங்கில புதினத்தை நான் “வேர்கள்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளேன்.




உலகப் புகழ் பெற்ற இந்த நூல் மொழியாக்கங்களின் அறிமுகம் மற்றும் ஆய்வுரை விழா, இம்மாதம் 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணிக்கு, துளிர் பள்ளி காணொளிக் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

“வேர்கள்” நூலை முனைவர் A. அஷ்ரஃப் அலீ (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும், “எனது பயணம்” நூலை முனைவர் A. நிஃமத்துல்லாஹ் (தலைவர், ஆங்கிலத் துறை, ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, நெல்லை) அவர்களும் ஆய்வு செய்து விழாவில் நூலாய்வுரை நிகழ்த்தினார்கள்.


நான் துபையில் இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆதலால் நூலைப் பற்றிய அறிமுகவுரையை “வேர்கள்” நூலை நான்கு முறை படித்து முடித்துவிட்ட காயல் அமானுல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

நான் துபையிலிருந்து தொலைபேசி மூலம் சிறிது நேரம் உரையாற்றினேன். அது விழாவில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.

ஹாஜி எஸ்.ஓ. அபுல்ஹஸன் கலாமீ அவர்களுக்கும், எனக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை என் சார்பாக என் மாமனார் MIW முஹம்மது இஸ்மாஈல் அவர்களும், என் இளைய மகன் முஹம்மது ஸஜீதும் பெற்றுக்கொண்டார்கள்.


கலந்துகொண்டவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததாக கூறினார்கள். இந்த நிகழ்ச்சிக்குத் தூண்டுகோலாய் அமைந்த நண்பர் சாளை பஷீர் அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து துளிர் பள்ளியில் சிறப்பாக நடத்தி முடித்த வழக்கறிஞர் அஹமது அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் உண்டு.

Wednesday, 27 November 2013

‘வேர்கள்’ பற்றிய ஒரு நுனிப்புல்லின் பார்வை

“வேர்கள்” நூல் பற்றி
நெல்லை ஏர்வாடி அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி
அவர்கள் எழுதிய வாசகர் உரை


சமீபத்தில் நடைபெற்ற ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தாங்கள் மொழிபெயர்த்து எழுதியுள்ள “ வேர்கள்” புத்தகம் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்.

சுப்ஹானல்லாஹ். நூலின் மையக் கருத்தும், மொழிபெயர்ப்பின் மொழிநடையும், சம்பவங்களின் சுவாரஸ்யமும், நூல் முழுதும் இழையோடும் வரலாற்றுக் கொடுமையின் சோகமும் வாசிப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதை உணர முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என வழக்கம் போல சோம்பேறிப்படும் நான், கதையின் சுவாரஸ்யத்தால் உந்தப்பட்டு, நேரம் கிடைக்கும்போதும், குறிப்பாக மெட்ரோவில் அலுவலகத்திற்கு போகும்போதும் வரும்போதும் என்று முழு மூச்சில் படித்து 4 அல்லது 5 நாட்களில் முடித்து விட்டேன். மாஷா அல்லாஹ்.

புத்தகத்தைப் படித்ததிலிருந்து மனம் மிக பாரமாக இருப்பதை உணர்ந்தேன். தனது பரம்பரையின் வேர்களைத் தேடும் ஒரு பத்திரிகையாளரின் பரம்பரைத் தொடர் வரலாற்று நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்களின் பூர்வீக மதம் இஸ்லாம்தான் என்பது நெஞ்சைச் சுடும் நிஜமாக புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சக மனிதர்களை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல், விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி , ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்து நாடோடிகளாக்கிய குரூர புத்திக்கு சொந்தக்காரர்கள் (மேலை நாட்டவர்கள்), இன்று மனித உரிமைகள் பற்றி பேசுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

இதை எண்ணும்போது, சில வருடங்களுக்கு முன்பு மேலை நாட்டவர்கள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில், முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது அவர்கள் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. “ சரித்திரம் முழுக்க இரத்தம் தோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரர்களுக்கு மனித உரிமைகள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

இந்நூலைப் படிக்கும் போது அது நிதர்சனமாகத் தெரிகிறது. மேலும் நூலின் காட்சி அமைப்புகள், நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல.

ஆப்பிரிக்க காம்பியாவின் ஜூஃபூர் கிராமமும், மாண்டிங்கா மக்களின் கலாச்சாரமும், அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பலும், புதிய அமெரிக்க பூமியின் பண்ணைகளும், அடிமைச் சேரிகளும், ஆப்பிரிக்காவின் மனித ஆவணக் காப்பகங்களான கிரியட்டுகளும் இன்றும் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

கதையின் பாத்திரங்களும் தலைமுறை வாரியாக மனதில் பதிந்து விட்டன. [உமரோ – குண்டா கிண்டே – கிஸ்ஸி – கோழி ஜார்ஜ் – டாம் லீ – சியாமா - பெர்த்தா – அலெக்ஸ் ஹேலி ( மூல நூல் ஆசிரியர்) ].

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது வேர்களைத் தேடும் ஆர்வம் வருவதைத் தவிர்க்க இயலாது.  என் தகப்பனார் அவர்கள் எங்களது குடும்பத் தலைமுறைகளை சார்ட் வடிவில் பட்டியலிட்டு என்னிடம் இனி வரும் தலைமுறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஸஜரா அல்லது ஸில்ஸிலா என்ற பெயரில் தங்களது குடும்ப தலைமுறை ஆவணத்தைப் பாதுகாக்கும் பழக்கம் அரபுகளிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நம்மிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கீழை நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்த தகவல்களை விட ஆப்பிரிக்காவைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஆப்பிரிக்க முஸ்லிம்களைப் பற்றி அறியும் ஆவலை ‘வேர்கள்’ நிச்சயமாகத் தூண்டும் என நம்புகிறேன்.

இப்போதெல்லாம் துபாய் வீதிகளில் எந்த ஒரு ஆப்பிரிக்கரைப் பார்த்தாலும் இவர் ஒரு காம்பியனாக, மாண்டிங்காவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் நண்பரோடு பணி புரியும் ஒரு செனகல் நாட்டுக் காரரிடம் ‘வேர்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வத்தோடு ‘ரூட்ஸ்’ நூலில் இடம் பெற்றுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும், அடிமைகளை ஏற்றும் துறைமுகங்கள் செனகலில் தான் இருப்பதாகவும் கூறினார்.

நீங்கள் மாண்டிங்காவா? எனக் கேட்டதற்கு, இல்லை. நான் உலோஃப் இனத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறியதும் எனக்கு கப்பலில் குண்டாவுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவர் ஒரு உலோஃப் தான் என்பது நினைவுக்கு வந்து போனது.

மேலும் அவர் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் குறித்த பல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் அவர்களின் ஜமாஅத் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

‘வேர்கள்’ மூலமாக என் சிற்றறிவுக்கு எட்டும் சில படிப்பினைகளாக நான் கருதுவது : ஒன்று – ஒரு சமூகத்தை அழிக்க முதலில் எதிரிகள் செய்வது அவர்களின் கலாச்சார அடையாளங்களை ( Identity) அழிப்பது. அது தான் குண்டாவின் விஷயத்தில் நடந்தது. அடுத்த தலைமுறைகளுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.

இன்றும் கூட நாமும் நம்மை அறியாமலேயே நமது தனித்துவ அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம். உடையில் தொடங்கி மொழி வரை… (இதில் தொப்பியும் லுங்கியும் தாடியும் அரபியும் தமிழும் அடங்கும்...)

கமால் அத்தா துர்க்கின் காலம் தொடங்கி இன்று வரை இந்த சதி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் உங்கள் ஊர் (காயல் பட்டணம்) மற்றும் கீழக்கரை சகோதரர்கள் எங்கு சென்றாலும் தமிழ் முஸ்லிம்களுக்குரிய அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது வரவேற்கத் தக்கது.

அடுத்ததாக, மேலை நாடுகளின் அடிமை முறை உடல் ரீதியாக களையப்பட்டு விட்டதாக பிரகடனப் படுத்தப்பட்டாலும், உள ரீதீயான சிந்தனை அடிமைத்தனத்தை (Ideological Slavery) அவர்கள் இன்றும் திணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் (குறிப்பாக முஸ்லிம் உம்மாவின் மீது) என்பதற்கு முஸ்லிம் நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கலாச்சாரத் தாக்கங்களும், போர்களும், ஹாலிவுட் கற்பனைகளும், குழந்தைகளை அடிமைப்படுத்தும் கேம்ஸ், கார்ட்டூன்களும், மீடியாக்களும், KFC களும், போதைப் பொருட்களும், முதலாளித்துவ சந்தை முறைகளும், நவீன வங்கி முறைகளும், நவீன தொழில்நுட்ப போதைகளும் ( Facebook addiction…etc.) இன்னும் நமக்கே அறியாமல் நம்மை ஆட்கொண்டுள்ள எத்தனையோ ஆதிக்கங்களும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

இவற்றை உணர்ந்து எச்சரிக்கையாக, எந்த தஜ்ஜாலிய சக்திகளின் மாய வலையிலும் விழுந்துவிடாமல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், அவர்கள் தந்த வாழ்க்கை நெறிக்கும் மாத்திரம் கட்டுப்பட்டவர்களாக, என்றும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமைகளாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. இதற்கு இந்த வேர்களைத் தூண்டுகோலாக இறைவன் ஆக்கித் தருவானாக.

‘வேர்கள்’ மூலம் சமூகத்தின்  சிந்தனையைத்  தூண்டி வேர்களைத் தேட வைத்த உங்களின் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

உங்களின் இஸ்லாமிய இலக்கியப் பணி மூலம் இன்னும் பல வேர் விட்டு வளரும் விருட்சங்கள் வெளிவர பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,

உங்கள் வாசகன்,

அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி

Monday, 18 November 2013

வேர்கள் - வாசகர் உரை

நாகர்கோவில் கோட்டாறைச் சார்ந்த
முஹம்மது அனஸ் அவர்கள்
முகநூலில் எழுதிய உரை



ஒரு சில நாட்கள் முன்பு துபையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன், என் பக்கத்து இருக்கையில் ஒரு ஆப்ரிக்கர் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் நானும் ஆப்ரிக்காவின் உகாண்டாவில் வேலை பார்த்த அந்த பசுமையான நினைவுகளும் ஆப்ரிக்கர் மீதான ஒரு பாசமும் இன்னும் மனதில் நீங்காமல் இருப்பதால் அந்த ஆப்ரிக்கரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன்.

பேச்சு கொடுத்த உடன் அவரும் சரளமாக பேச ஆரம்பித்தார். அவருடைய சொந்த நாடு எது என்று கேட்டேன், "காம்பியா" என்றார். என்னுடைய நாட்டைப் பற்றி விசாரித்தார், நானும் சொன்னேன். ஆப்ரிக்காவில் நானும் சில ஆண்டுகள் பணியாற்றினேன் என்று சொன்னேன். ரொம்ப ஆச்சரியப்பட்டார். அவருடைய நாட்டைப் பற்றி விசாரித்தேன். ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கே அமைந்திருப்பதாக சொன்னார்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, எனக்கு "காம்பியா" நாட்டைப் பற்றி எதிலோ படித்த நியாபகம் வந்தது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், நினைவுக்கு வந்தது. உடனே அவரிடம் காம்பியா, செனகலின் பக்கத்து நாடா என்று கேட்டேன். ஆப்ரிக்கர்களுக்கே உண்டான ஒரு துள்ளலில் என் கையில் ஒரு தட்டு தட்டி மிகச் சரியாக சொன்னீர்கள், காம்பியா, செனகலின் நடுவே அமைந்திருக்கிறது, உங்களுக்கு எப்படி தெரியும் என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்.

நான் அவரிடம் "The Roots" என்ற புத்தகத்தில் அந்த நாட்டைப் பற்றிப் படித்திருக்கிறேன் என்றேன். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. என்ன நீங்கள் அந்த புத்தகத்தை படித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு காம்பியா நாட்டவனிடமும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான வரலாறு அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று அங்காலாய்த்தார். அதற்கு பிறகு அவர் இன்னும் மனது விட்டு என்னிடம் பேச ஆரம்பித்து விட்டார். சிறிது நேரத்தில் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட, இருவரும் கை குலுக்கிக் கொண்டு விடை பெற்றோம்.

அவர் சொன்ன அந்த விஷயம், காம்பியா நாட்டவனிடம் சொல்ல வேண்டிய அந்த அளவுக்கு மிக முக்கியமான அந்த வரலாறு, ஒவ்வொரு காம்பியா நாட்டவன் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு.

"The Roots" ஆங்கிலத்தில் பிரபல எழுத்தாளர் "Alex Haley" அவர்களால் எழுதப்பட்டது. (இவர் மால்கம் X அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தன்னுடைய எழுத்தின் மூலம் உலகறியச் செய்தவர்). இந்த புத்தகத்தை அழகுத் தமிழில், பிரபல எழுத்தாளரும், பன்னூல் ஆசிரியருமான "M.S. அப்துல் ஹமீத்" அவர்கள் "வேர்கள்" என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். "இலக்கியச்சோலை" பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது.



இந்த புத்தகத்தின் தலைப்பே அதன் கருவைச் சொல்லி விடுகிறது. ஆப்ரிக்காவின் ஒவ்வொரு நாடுகளிலும் இருந்து, அமெரிக்காவுக்கும், மற்ற மேலை நாடுகளுக்கும் கடத்திச் செல்லப்பட்டு அடிமைச் சந்தையில் விற்கப்பட்ட அந்த கறுப்பின மக்களின் வரலாற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

அலெக்ஸ் ஹேலி ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்கர். இந்த புத்தகத்தில் அவர் தன்னுடைய வேரைத் தேடிச் செல்கிறார். அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் வரலாற்றை இந்த புத்தகத்தில் அவர் விவரிக்கிறார். படிப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கக் கூடிய உண்மை சம்பவங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

இன்றைய உலகில் ஜனநாயகவாதிகளாக, மக்கள் உரிமையை பேணக் கூடியவர்களாக வேடம் போட்டு அலையும் வல்லரசுகள், இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்கள், "நிறவெறி" எவ்வளவு கொடூரமானது, ஒரு அடிமையின் வாழ்வு எவ்வளவு துயரம் நிறைந்ததாக இருக்கும், இப்படி எல்லாவற்றையும் கண் முன் காட்சியாக்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் M.S. Abdul Hameed அவர்கள். படித்த பிறகு பல நாட்கள் என் சிந்தனைகளை இந்த நூல் ஆக்கிரமித்திருந்தது.

எல்லோரும் படிக்க வேண்டிய மிக அருமையான நூல்.

முஹம்மது அனஸ்

Sunday, 27 October 2013

வேர்கள் - மொழிபெயர்த்தோன் உரை



அமெரிக்கக் கறுப்பர் மால்கம் Xன் வாழ்க்கை வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதன் முதலில் தந்தவர்கள் விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியர் மு. குலாம் முஹம்மத் அவர்கள்.

அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்ற உண்மையையும், ஆப்ரிக்காவில் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்ற ஆச்சரியமான உண்மையையும் நான் “மால்கம் X” நூல் மூலமாக அறிந்தேன்.

அத்தோடு அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” என்ற புதினத்தைப் பற்றியும் முதன்முதலில் அந்நூல் மூலம் அறிந்தேன். அப்பொழுதே “ரூட்ஸ்” நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

பிற்றை நாட்களில் அந்த நூலைப் படிக்கும்பொழுது நெஞ்சமெல்லாம் கனத்தது. ஆப்ரிக்கக் கறுப்பர்கள் அமெரிக்கர்களால் பட்ட அவலங்கள் ஏட்டில் வடிக்க முடியாதவை. அந்த நாவலைப் படிக்கும் யாரையும் அது உலுக்காமல் விட்டதில்லை.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்திடும் எனது ஆசையை அண்ணன் குலாம் முஹம்மத் அவர்களிடம் தெரிவித்தபொழுது, மகிழ்ச்சியுடன் இசைவு தந்தார்கள். அத்தோடு ஆலோசனைகள் பல தந்து, ஆர்வமும் ஊட்டினார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.

எனினும் உடனடியாக இந்த வேலையைத் தொடர முடியவில்லை. இப்பொழுதுதான் இந்தப் பணி நிறைவடைந்திருக்கிறது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

ஆங்கிலத்தில் 729 பக்கங்களைக் கொண்டது இந்நாவல். 120 அத்தியாயங்களைக் கொண்டது. அதனை அப்படியே மொழிபெயர்த்தால் தமிழில் 1000 பக்கங்களுக்கு மேல் வரும். அதனால் முடிந்தவரை சுருக்கியிருக்கிறேன் - மூலத்தின் வேகம் குறையாமல்.

இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

M.S. அப்துல் ஹமீது


நூல்                       : வேர்கள்
மூலநூல்             : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர்  : Alex Haley
தமிழில்                : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை                  : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

வேர்கள் - பதிப்புரை



அடிமைகளாய் ஆக்கப்பட்டார்கள் ஒரு பெரும் கூட்டம் மக்கள் உலகில். காரணம், அவர்கள் நிறத்தால் கறுப்பர்கள் என்பதே!

அவர்களை அடிமைகளாக ஆக்கியவர்கள், அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையில் உயர்ந்தார்கள். காரணம், அவர்கள் நிறத்தால் வெள்ளையர்கள்.

இந்த நிறவெறிக் கொடுமைகளுக்கெதிராகப் போராடிய மாவீரரே மால்கம் X என்ற மாலிக் அல் ஷாபாஸ் ஷஹீத்.

மால்கம் X இஸ்லாத்தை முன்வைத்து கறுப்பர்களின் விடுதலைக்காகப் போராடியவர். பல லட்சம் கறுப்பர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைந்தவர்.

மால்கம் X தன்னுடைய வேகமான இஸ்லாமிய பிரச்சாரத்தின்போது, “கறுப்பர்களின் சொந்த நாடு அமெரிக்கா அல்ல, அஃது ஆப்ரிக்கா!” என்ற வாதத்தை முன்வைத்தார். இதில் வரலாற்றிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டினார்.

அவரது ஆதாரங்கள் நிறைந்த உரைகள் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்தன.

இந்த ஆதாரங்களின் உண்மைத் தன்மைகளை சோதிக்க விரும்பினார் அலெக்ஸ் ஹேலி.

பல வினாக்களை மால்கம் Xஐ நோக்கி வீசினார். மலைக்கும் அளவில் மால்கம் X பதில்களைத் தந்தார்.

வரலாற்றில் மால்கம் Xக்கு தன்னை விட அதிக அறிவு இருப்பதைக் கண்டார் அலெக்ஸ் ஹேலி. ஆகவே, வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டே மால்கம் Xஐக் கேள்வி கேட்டார்கள். மால்கம் X அவர்கள் அதிரும்படி ஆதாரங்களை அள்ளிச் சொரிந்தார்.

பின்னர் அலெக்ஸ் ஹேலி மால்கம் X கூறும் வரலாற்று இடங்களை தானே நேரில் சென்று கண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். அது அவரது சொந்த பூர்வீகத்தைக் கண்டெடுக்கும் பெரும் சாதனைப் பயணமாக முடிந்தது. அதாவது, அவரது வேரை அவர் காணும் நல்ல முயற்சியாக முடிந்தது.

தனது பயணத்தை, ஆராய்ச்சியை புதினமாக வடித்தார்.

பல லட்சம் வாசகர்களைக் கவர்ந்தார். அது திரைப்படமாக வந்தது. அது பல லட்சம் கறுப்பர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தது.

இவற்றையெல்லாம் என்னிடம் நேரிலும், மால்கம் X நூல் மூலமும் கேட்டுக் கொண்டிருந்தார் தம்பி அப்துல் ஹமீது. அவர் நான் நடத்தும் விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியர். அவர் இந்த வரலாற்றில் அதிகமான ஆர்வம் காட்டினார்.

இதனைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தர வேண்டும் என்றேன். கடினமாக உழைத்து நம் மனக் கோட்டைகளை நிதர்சனமாக்கி இருக்கின்றார்.

பெரும் பணி இது. சளைக்காமல் செய்திருக்கின்றார்!

அல்லாஹ் அவருக்கு நிரம்ப நற்கூலிகளை நல்கிடுவானாக!

இதுபோன்ற இலக்கியங்களை அடிமைகள் விடுதலையில் ஆர்வம் கொண்ட சகோதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தமிழில் கொண்டுவரத் தயாராக இருந்தாலும் இந்தப் பணிகள் இஸ்லாமிய வட்டங்களிலிருந்து வந்திட வேண்டும்.

அந்தப் பணியைச் சமுதாயத்தின் சார்பில் சாதித்திருக்கின்றார் தம்பி அப்துல் ஹமீது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

இந்த நூல் இலக்கியச்சோலை வெளியீடாக வருவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இலக்கியச்சோலையின் இலக்கியப் பணிகளும், இஸ்லாமியப் பணிகளும் தொடர்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கம் போல் வாசகர்கள் தங்கள் ஆதரவைத் தந்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவண்,                                                                                                             சென்னை

மு. குலாம் முஹம்மத்                                                                                  12.12.2005



நூல்                       : வேர்கள்
மூலநூல்             : Roots : The Saga of an American Family
மூல ஆசிரியர்  : Alex Haley
தமிழில்                : எம்.எஸ். அப்துல் ஹமீது
விலை                  : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com