Monday 20 March 2017

பல்ஆம் இப்னு பாஊரா

உலகில் எந்த ஒரு மனிதனையும், சக மனிதர்கள் மிக எளிதாக அடையாளப்படுத்துவது அவன் பெற்றிருக்கிற வெற்றியைக் கொண்டுதான்.
அது அவன் சார்ந்திருக்கிற துறை ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். அல்லது குடும்ப ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். நிர்வாக ரீதியிலாகவோ அல்லது அரசியல் தொடர்பானதாகவோ, அல்லது ஆன்மீக ரீதியிலான வெற்றியாகக்கூட இருக்கலாம்.

எந்த வெற்றியாக இருந்தாலும் அதன் பின்னணியில் அவன் மேற்கொண்ட முடிவுகளும், அதை அவன் கையாண்ட விதமும்தான் அடிப்படையாக அமைந்திருக்கும்.

இறைமார்க்கம் இஸ்லாமும் அதைத்தான் வெற்றிக்கான இலக்காக, படிக்கல்லாக வகுத்துத் தந்துள்ளது.

இப்லீஸ் மல்வூனாக மாறுவதற்கும், பர்ஸீஸா வழிகேட்டில் வீழ்வதற்கும், பல்ஆம் இப்னு பாவூரா நாயை விட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட தவறான முடிவுகள்தான் காரணமாக அமைந்ததாக அல்குர்ஆன் விளக்கிக் கூறுகின்றது.

எனவே, வாழ்வில் ஒரு மனிதன் மேற்கொள்கிற முடிவுதான் அவன் வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. அதுதான் அவன் வாழ்க்கையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதை நாம் விளங்க வேண்டும்.
ஒவ்வொரு இபாதத்தின் முடிவிலும் கபூலிய்யத்தின் கவலை வேண்டும். நாம் செய்யும் வணக்கத்திற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையானால் வணக்கம் பயனற்றுப் போய்விடும்.

அமல் என்பதும், அங்கீகாரம் என்பதும் தனித்தனியான நிஃமத்தாகும். அல்லாஹ் சிலருக்கு அமல் செய்யும் நஸீபை வழங்குவான். ஆனால் அங்கீகாரம் வழங்கமாட்டான்.

ஆயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்த இப்லீஸின் வணக்கத்திற்கு அல்லாஹ்விடம் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ்வின் கபூலிய்யத் கிடைக்காமல் தங்களின் ஈமானை இழந்த வணக்கசாலிகள் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது.

ஸஃலபா எனும் நபித்தோழர் முதல் பல்ஆம் இப்னு பாஊரா எனும் இறைநேசர் வரை பட்டியல் நீளமானது.

அல்லாஹ்வின் அங்கீகாரம் கிடைக்க சில நேரங்களில் ஒரு சின்ன அமலும் காரணமாக ஆகிவிடலாம். தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய ஒரு விபச்சாரியின் அமல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றதால் அவளுக்கு சுவனத்தை பெற்றுத் தந்தது.

அமலுக்கான அங்கீகாரம் யாருக்கு கிடைக்கும்?

இதோ அல்லாஹ்வின் வசனத்தை கவனியுங்கள்...

إِنَّمَا يَتَقَبَّلُ اللَّـهُ مِنَ الْمُتَّقِينَ

"மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக்கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்துதான்" என்று (ஹாபீல்) கூறினார்.

இணைவைப்பும் இறைமறுப்பும் மட்டுமே ஈமான் பறிபோக காரணமாக சொல்ல முடியாது. பல நேரங்களில் ஈமான் பறி போக பாவங்களும் காரணமாக அமைந்துவிடும்.

பல்ஆம் இப்னு பாவூராவின் வாழ்வு இதற்கு சரியான சான்று. நபி மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்ஆம் பின் பாஊரா என்பவர் மிகப் பிரபல்யமான துறவியாக இருந்தார்.

வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபாட்டுடன் இருந்தார்.

அவருக்கு அல்லாஹ் தனது மகத்தான பெயராகிய அல் இஸ்முல் அஃழம் என்பதை கற்றுக் கொடுத்திருந்தான்.

அந்தப் பெயர் கூறி பிரார்த்தித்தால் கேட்டது கிடைக்கும்; பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக அவர் கேட்டு அல்லாஹ் எதையும் கொடுக்காமல் இருந்ததில்லை.

அந்த அளவுக்குப் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்படுபவராக இருந்தார்.

வாழ்நாளில் அவர் செய்த எந்த துஆவும் மறுக்கப்பட்டதில்லை என்பதும், இஸ்முல் அஃழம் எனும் அல்லாஹ்வின் விசேஷ திருநாமத்தை அறிந்திருப்பதும், தவ்ராத் வேதம் முழுவதும் மனனம் செய்த நான்கு பேரில் ஒருவராக அவர் இருந்ததும் அவர் பெற்ற அற்புதங்களில் உள்ளதாகும்.

ஆனால் அவர் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரம் மற்றும் பகட்டின் பக்கம் சாய்ந்து அதன் இன்பங்களையும், சுகபோகங்களையும் எதிர்நோக்க ஆரம்பித்து பாவங்களில் குதித்தார்.

இறுதியில் நபி மூஸா (அலை) அவர்களுக்காகவும், அவர்களுடன் இருந்தவர்களுக்கு எதிராகவும் பிரார்த்தனை செய்ய எழுந்து நின்றார்.

இறுதியில் அகப் பார்வையை இழந்து அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாகி அழிவில் போய் விழுந்தார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகள் அகற்றப்பட்டன. அவரது நாக்கு வெளியே தள்ளி நெஞ்சு வரை வந்து தொங்கியது.

(சுருக்கம் அறிவிப்பு : இப்னு மஸ்ஊத் (ரழி), முஸன்னஃப் அப்தில் ரசாக், இப்னு அப்பாஸ் (ரழி), தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 7:175-177, விரிவுரை பாகம் : 3 பக்கம் : 954-965.)

அல்லாஹ் அவருக்கு ஒரு அத்தாட்சியல்ல, பல அத்தாட்சிகளை வழங்கியதாக கூறுகின்றான்.

இந்தளவு தூரம் இறைநெருக்கம் பெற்ற ஒருவரை அல்லாஹ் ஈமானை பிடுங்கி சபித்த வார்த்தையை கவனியுங்கள்:

(நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக் காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான். அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.

நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது என்று கூறுகின்றான்.

பல்ஆம் நேரடியாக இணைவைப்பு, இறைமறுப்பு போன்ற காரியங்களில் ஈடுபடவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கு எதிராக துஆவுக்காக கையேந்தினார் எனும் பாவமே அவரின் ஈமான் இழப்புக்கு காரணமாகிவிட்டது. அவர் பல்ஆமின் ஈமான் பறிப்புக்கு காரணத்தை பின்னர் வந்த ஒரு நபி அல்லாஹ்விடம் கேட்டபோது, “நான் கொடுத்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருக்கவில்லை” என்று அல்லாஹ் சொன்னானாம்.

இங்கே நாய்க்கு ஒப்பிட்டுக் கூறியதானது நாயானது உணவையும், உடல் ஆசையையும் அடைவதில் மட்டுமே குறியாக இருக்கும். நல்லறிவு, நல்வழி ஆகிய உயர் தளத்தை விட்டு வெளியேறி ஆசைகளை முன்னிறுத்தி மன விருப்பத்தைப் பின்பற்றி வாழ்பவன் ஏறத்தாழ நாயின் குணத்தைப் பெற்றவனாகின்றான்.

“நான் உங்கள் மீது மிகவும் அஞ்சுவது ஒரு (வகை) மனிதரைப் பற்றித்தான். அவர் குர்ஆனை ஓதுவார். அதன் பொலிவு அவரிடம் காணப்படும். அவர் இஸ்லாத்துக்கு பக்க பலமாக இருப்பார். (இந்நிலையில் அவரது பாவங்களின் காரணமாக) அல்லாஹ் அவரை தான் நாடியவாறு (வழிகேட்டின் பக்கமாக) மாற்றிவிடுவான். அவரிடமிருந்து அந்தப் பொலிவு கழன்று விடும். அவர் அதை தனது முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விடுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாக ஹுதைஃபா பின் அல் யமான் (ரழி) கூறுகிறார். (இப்னு ஹிப்பான், தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:959)

அல்லாஹ்வின் அன்பை வளர்க்கும் அற்புத அமல்!


கியாமுல் லைல் என்னும் தஹஜ்ஜுத் தொழுகையை ஒருவர் தொழுவதன் மூலம் இரவை உயிர்ப்பிக்கிறார். இஹ்யாவுல் லைல் என்ற இரவை உயிர்ப்பிப்பது இறைவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களைப் பார்த்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக; அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக. (அல் முஸ்ஸம்மில் 73:1-4)

மற்ற உபரித் தொழுகைகளை நேரமிருந்தால் தொழுது கொள்ளலாம். ஆனால் இத்தொழுகை தொழ வேண்டுமெனில் நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆம்! இரவுத் தூக்கத்தின் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலே ஒழிய இந்த வணக்கத்தை நிறைவேற்றிட முடியாது.

இதனால் இறைவனே இறைமறையில் இத்தொழுகையைப் பற்றிய மாண்புகளைக் கூறி இவ்வாறு ஆர்வமூட்டுகிறான்:

(நபியே!) இன்னும் இரவில் (ஒரு சில) பகுதியில் உமக்கு உபரியான (நபிலான) தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழுது வருவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன் 'மகாமே மஹ்மூதா' என்னும் (புகழ் பெற்ற) தளத்தில் உம்மை எழுப்பப் போதுமானவன். (சூரா பனீ இஸ்ராஈல் 17:79)

அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தை துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கையார்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தர்மங்களில்) செலவும் செய்வார்கள். (சூரா அஸ்ஸஜ்தா 32:15,16)

நிச்சயமாக இரவில் எழுந்திருந்து வணங்குவது (நாவு, மனம், செவி, பார்வை ஆகியவற்றையும்) ஒருமுனைப்படுத்துவதில் சக்தியானது. இன்னும் வாக்கையும் நேர்படச் செய்கிறது. (சூரா அல் முஸ்ஸம்மில் 73:6)

இந்த அற்புத அமலின் சிறப்புகளை அறிந்தவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடுவதற்காக ஆர்வத்துடன் எழுந்து அவன் முன் நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“ரமளானுக்குப் பிறகு நோற்கப்படக்கூடிய நோன்புகளில் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பாகும். மேலும் கடமையான தொழுகைகளுக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.” (முஸ்லிம், திர்மிதீ, நஸஈ, அஹ்மத்)

“நான் நபி ﷺ அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரவில் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தில் ஒரு முஸ்லிம் இம்மை மறுமையின் நற்பேறுகளைக் கேட்பானேயானால் நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் கேட்டதை வழங்கி விடுவான். இது அனைத்து இரவுகளிலுமாகும்” என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

தனியோனாம் அல்லாஹ் தஹஜ்ஜுத் வேளையில் எங்கிருப்பான் என்பதை நபி ﷺ அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“நம் இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ)

மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“மக்களே! ஸலாம் கூறுவதை விசாலமாக்கிக் கொள்ளுங்கள். மேலும் (ஏழைகளுக்கு) உணவு வழங்குங்கள். மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இரவில் (எழுந்து) தொழுங்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் ரலியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நபி ﷺ அவர்கள் இரவில் எழுந்து தொழுவார்கள். அதனால் அவர்களின் பாதங்கள் வீங்கி விடும். ‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? தங்களுக்குத் தான் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டனவே...’ என்று நான் வினவினேன். அதற்கு நபி ﷺ அவர்கள் ‘நான் (இறைவனுக்கு) நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்று பதிலளித்தார்கள்.” (புகாரீ, முஸ்லிம்)

அல்லாஹ்வின் அன்பையும், அருளையும் பெறுவதற்காக பாடுபட்ட அருமை நபித்தோழர்களும், முத்தகீன்களான முன்னோர்களும் கியாமுல் லைல் தொழுவதில் பெரும் கவனம் செலுத்தியுள்ளார்கள். அதனை அனுபவித்து செய்துள்ளார்கள். மேலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரகசியமாக செய்து வந்துள்ளார்கள்.

முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்ற அறிஞர் கூறுகிறார்: “வாழ்க்கையில் மூன்று விஷயங்களைத் தவிர வேறு எதுவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியவை அல்ல. அவை: 1. கியாமுல் லைல். 2. முஃமினான சகோதரரைச் சந்திப்பது. 3. ஜமாஅத்துடன் தொழுவது.”

அல் காஸிம் இப்னு மாஈன் என்ற அறிஞர் அறிவிக்கிறார்: “இமாம் அபூஹனீஃபா அவர்கள் இரவு முழுவதும் நின்று வணங்குபவர்களாக இருந்தார்கள். “அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும் மிக்க கசப்பானதுமாகும். (54:46)” என்ற இறைவசனத்தை திரும்பத் திரும்ப அழுது கொண்டே ஓதிக்கொண்டிருப்பார்கள். அதிகாலை வரை அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டி கெஞ்சிக்கொண்டிருப்பார்கள்.”

இப்றாஹிம் இப்னு ஷம்மாஸ் என்ற அறிஞர் அறிவிக்கிறார்: “இமாம் அஹமத் இப்னு ஹம்பல் அவர்கள் தங்கள் இளம் வயதில் இரவு நேரங்களில் நின்று வணங்கிக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”

ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் புகாரீ அவர்கள் ஸஹர் நேரம் வரும் வரை கியாமுல் லைல் தொழுது கொண்டிருப்பார்கள். அப்பொழுது திருக்குர்ஆனின் பாதிக்கும், மூன்றில் ஒரு பகுதிக்கும் நடுவில் ஓதுவார்கள்.

‘ஷேகுல் இஸ்லாம்’ இப்னு தைமியா அவர்களின் இரவு வணக்கங்களைப் பற்றி அல்லாமா இப்னு அப்துல் ஹாதி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: “இரவு நேரங்களில் அவர்கள் மக்களை விட்டும் அகன்று இருப்பார்கள். இரவு நேரங்களை தொழுகையிலும், திருக்குர்ஆன் ஓதுவதிலும், பாவமன்னிப்பு கோருவதிலுமே அவர்கள் செலவழிப்பார்கள். அவர்கள் தொழ ஆரம்பித்தால், அவர்களின் உடல் குலுங்க ஆரம்பிக்கும். இடது பக்கமும், வலது பக்கமும் மாறி மாறி சாய்ந்து கொண்டிருக்கும்.”

ஷேக் இப்னுல் கய்யூம் அவர்களைப் பற்றி இப்னு ரஜப் அவர்கள் கூறியதாவது: “அவர்கள் இறைவணக்கத்தில், தஹஜ்ஜுதில், நீண்ட தொழுகைகளில் சிறந்து விளங்கினார்கள். இப்படிப்பட்ட வணக்கசாலியையும், குர்ஆன், ஹதீத், ஷரீஆ ஆகியவற்றில் இவ்வளவு அறிவுள்ளவரையும் நான் கண்டதேயில்லை.”

கியாமுல் லைலுக்கு உறுதுணை செய்யும் விஷயங்கள்!

1. அல்லாஹ்வுக்கு உண்மையாக, நேர்மையாக இருத்தல்.
2. கியாமுல் லைல் தொழ விரும்பும் மனிதர் அல்லாஹ் கியாமுக்கு அழைக்கிறான் என்பதை உணர வேண்டும்.
3. கியாமுல் லைலின் சிறப்புகளை, மாண்புகளை அறிந்திருத்தல்.
4. ஸலஃபுகளும், நேர்வழி பெற்ற மக்களும் எப்படி கியாமுல் லைலை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை அறிதல்.
5. வலது பக்கம் சாய்ந்து படுத்தல்.
6. தூய்மையான நிலையில் (தஹாரத்) உறங்குதல்.
7. முற்கூட்டியே உறங்கச் செல்வது.
8. உறங்குவதற்கு முன் சொல்லப்படவேண்டிய திக்ருகளைச் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல்.
9. ளுஹருக்கு முன்போ அல்லது பின்போ சிறிது நேரம் உறங்குதல் (கைலூக்கா).
10. அதிகமாக மிதமிஞ்சி சாப்பிடுவதையும், குடிப்பதையும் தவிர்த்தல்.
11. கியாமுல் லைல் தொழுவதற்கு நமது ஆன்மாவுடன் போராடுதல்.
12. பாவங்களைத் தவிர்த்தல்.
13. கியாமுல் லைல் தொழுவது குறித்து சோதனை செய்தலும், தொழாவிட்டால் கண்டித்தலும் வேண்டும்.

இப்படிப்பட்ட உன்னத வணக்கத்தை – இரவை உயிர்ப்பிக்கும் கியாமுல் லைல் வணக்கத்தை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பரபரப்பான உலகில் நமது பாவங்களைக் கூறி அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி மன்றாடுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நாம் அல்லாஹ்வின் அன்பைப் பெற முடியும். அப்போது மட்டுமே நாம் வெற்றி பெற்றவர்களாக மாற முடியும். அல்லாஹ் நம்மை வெற்றியாளர்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!