Sunday 9 December 2018

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி!

பல்லாண்டு காலமாக பெரும் பகுதி மக்கள் இந்த இந்திய தேசத்தில் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர். ஆரியர்களின் வருகைக்குப் பின் இந்திய தேசம் இந்த ஒடுக்குமுறைகளை மதத்தின் பெயரால் கண்டது.

ஜாதியப் பிளவுகளை ஏற்படுத்தி மனிதனைப் பிறப்பாலேயே பிரித்த மாபெரும் கொடுமை அரங்கேறியது. சொந்த மண்ணின் மைந்தர்களை அடிமைப்படுத்தி வந்தேறிகளான ஆரியர்களின் ஆதிக்கம் ஆரம்பமானது.
ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து கிளர்ந்தெழுந்த புத்தர்களும், ஜைனர்களும் கழுவிலேற்றப்பட்டு கொல்லப்பட்டனர். புத்த விகார்களும், ஜைன கோவில்களும் இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டன.

இப்படி ஆரிய ஆதிக்கம் கோலோச்சிய பொழுது மக்கள் ஒடுக்கப்பட்டு வாழ்ந்தனர்.

இஸ்லாம், கிறித்தவம் போன்ற பிற மதங்கள் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த பொழுது தீண்டாமைக் கொடுமையாலும், ஜாதிக் கொடுமைகளாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த மதங்களை தங்கள் விடுதலை மார்க்கங்களாக தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.

ஒடுக்கப்பட்டோரின் எழுச்சி அவ்வப்பொழுது ஏற்பட்டுத்தான் வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அது ஆரியத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டது.

ஆரிய ஆதிக்கத்திற்கெதிராக வரலாற்றில் தோன்றியவர்களில் முக்கியமானவர்கள் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா பூலே போன்றவர்கள்.
தென்னிந்தியாவில் பல புரட்சியாளர்கள் தோன்றினாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பாதிப்புகளை ஏற்படுத்தியவர் தந்தை.பெரியார்.

ஒடுக்கப்பட்டோர் எழுச்சி வரலாறு 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. 1777ல் சென்னையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று அதைப் பற்றி தலித் தலைவர் இரட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அப்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலித் ஒருவரின் மரணத்துக்காக ஒரு விசாரணை நடைபெற்று, அதன்பின் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தலித் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ள.

அன்றிலிருந்து தொடர் போராட்டங்கள் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கபடாதது மாற்றம் வருவதற்கான வாய்ப்பை தடுத்துவிட்டது. 1840ல் ஆதிதிராவிடன் எனும் வார்த்தை "பூர்வகுடி திராவிடன்" எனும் பொருள் தரும் வகையில் அறிமுகம் ஆகிறது. 1880ல் ஆதி திராவிடர் மகாஜன சபையும், 1890ல் பறையர் மகாஜன சபையும், 1891ல் திராவிடர் மகாஜன சபையும் உருவாகின்றன. ஆக, 1880ல் இருந்து 1891க்குள் மூன்று முக்கிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றைய தலித் இயக்கங்கள் எல்லாமே இவற்றின் வாரிசுகள்தான்.

தந்தை பெரியாரின் ஆரிய ஆதிக்கத்திற்கெதிரான புரட்சி அறிஞர் அண்ணா மூலம் அரசியல் எழுச்சி கண்டது. 1939ல் திராவிடர் கழகம் பிறக்கிறது. அறிஞர் அண்ணாவின் முயற்சியால் 1949ல் திமுக பிறக்கிறது. அதன்பின் திராவிட இயக்கம் வலுவான அரசியல் சக்தியாக மாறுகிறது.

ஒடுக்கப்பட்டோருக்கு அரசியல் ஏன் அவசியம்?

ஒடுக்கப்பட்டோர் தங்கள் உரிமைப் போராட்டங்களை ஓர் எல்லை வரையே நகர்த்திச் செல்ல முடியும். அரசியல் அதிகாரம் கைவரப் பெறவில்லையெனில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை முழுமையாகப் பெற முடியாது.

அதிகாரம் படைத்தோரின் ஒரு கையெழுத்து ஒரு சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றுகிறது. ஆக, அதிகாரம் மூலமே முழுமையான விடிவு சாத்தியப்படும்.

அதிகராம் பெற வேண்டுமெனில் அரசியலில் ஈடுபடவேண்டும். நேர்மையான அரசியல் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய தேசம் விடுதலை அடைந்து 72 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று ஒடுக்கப்பட்டோரின் அரசியல் பங்களிப்பு என்பது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.

விளிம்பு நிலை மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் இந்த அரசியலைக் கையில் எடுக்க வேண்டும். அதுவும் பாசிட்டிவ் பாலிட்டிக்ஸ் என்ற நேர்நிலை அரசியலைக் கையில் எடுக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அனைவருக்கும் நீதியும், சமத்துவமும் கிடைக்கும் ஒரு சமுதாயம் உருவாகும். ஒடுக்கப்பட்டோர் முழுமையாக அனைத்து உரிமைகளும் பெறும் நாள்தான் இந்தியா வல்லரசாகும் நாளின் துவக்கம் எனக் கூறலாம்.

ஆக, இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி பெற வேண்டும். அதன் அதிகாரத்தைக் கைப்பற்றி அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும்.

Saturday 17 November 2018

தீரன் திப்புவே... - கவிதை

தீரன் திப்புவே...
நீ இன்றிருந்தால்
எங்களுக்கு எவ்வளவு
உதவியாக இருந்திருக்கும்!
நீ இன்றிருந்தால்
குஜராத்தில்
கர்ப்பிணிளைக்கூட
கருவைக் கிழித்து
நெருப்பில் எறிந்து
கரியாக்கினார்களே..
அது நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
நெல்லிப் படுகொலைகளும்
பகல்பூர் படுகொலைகளும்
ஹாஷிம்புராவும்
நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
ஃபாசிசத்தை வேரோடும்
வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிந்திருப்பாயே...
நீ இன்றிருந்தால்
இந்த மனித குல எதிரிகளை
மண்ணில் போட்டு
மாய்த்திருப்பாயே...
அப்பேற்பட்ட ஆங்கிலேயர்களே
உன்னைக் கண்டு
குலை நடுங்கினார்களே...
இந்தப் படுபாவி ஃபாஸிஸ்டுகள்
எம்மாத்திரம் உனக்கு?
எங்களின் ஆதர்ஷ புருஷன் நீ...
எங்களின் எடுத்துக்காட்டு நீ.,..
எங்களின் முன்மாதிரி நீ...
நீ காட்டிய வழியிலேயே...
நீ அடைந்த வழியிலேயே...
நாங்களும் செல்ல
நாடுகிறோம்...
ஆம்...
உன் தீரத்தில் சிறிதளவேணும்
எங்களுக்குக் கிடைக்காதா
என்று ஏங்குகிறேம்...
அதற்காகவே
அல்லும் பகலும்
அயராதுழைக்கிறோம்...
உன்னைப் போன்று தீரர்களாக
உருவாவதற்கு உழைக்கிறோம்
ஒற்றுமையை விழைகிறோம்...
நீ விதைத்த வீரம்
எங்கள் நரம்புகளிலும்
மங்காது ஓடுகிறதென்று
இன்ஷா அல்லாஹ்
ஒரு நாள் நிரூபிப்போம்...
MSAH

மாவீரன் திப்பு சுல்தான்


மாவீரன் திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை இருந்தன. போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகளையும், ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளையும் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட்-ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்பு பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்களும், பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் அமைய வேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

தலைமைத்துவத்தின் இலக்கணம்!

"குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு, உயர்வான குறிக்கோளை அடைந்து சாதனை படைப்பதுவே மேதைத் தன்மையின் இலக்கணம் என்று உலக வரலாற்றில் எடுத்துக்காட்டு வைக்க வேண்டுமாயின், முஹம்மது நபியின் வாழ்வைத் தவிர வேறு எவருடைய வாழ்வைக் காட்ட முடியும்?" - பிரெஞ்சுப் பேரறிஞர் லாமார்ட்டின்

தலைவரின் தகுதிகள்!

"முஹம்மது என்ற ஒருவரிடத்தில், 
இறைத்தூதர்,
தத்துவ வித்தகர், 
சட்டம் இவற்றுபவர்,
போர் வீரர்,
கருத்தை ஆள்பவர்,
அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர்,
பிம்பங்களற்ற
மத நம்பிக்கையின் செயலாக்கம் தருபவர்,
உலக ஆட்சியையையும் உள்ளங்களின் ஆட்சியையும் நிறுவியவர் எனும் பன்முகத் திறமைகள் இருந்தன. இதனால்தான், முழுமையான மனிதத்துவம் என்பதன் அளவீடு எனும்போது, முஹம்மதை விட உயர்வானவர் வேறு எவர் இருப்பார் என்று நாம் பெருமயாகக் கேட்க முடிகின்றது!"
(Source: Historie de le Turquie, Paris 1854, Vol. 11, Pages:276&277)

நபிமார்களின் தேவை

ஒரு வாழ்க்கையைத்தான் இன்னொரு வாழ்க்கை பின்பற்றுகிறது. நம்மை ஈர்ப்பதற்கு நமக்கு உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
போராட்டங்கள் நிறைந்த அன்றாட வாழ்க்கையில் சரி எது, தவறு எது என்று சுட்டிக்காட்ட, நம்மிடம் முரண்பட, நம்மிடம் கேள்விகள் கேட்க, நமது கேள்விகளுக்கு பதிலளிக்க, தவறான புரிதல்களைத் திருத்த, நம் கரம் பற்றி அழைத்துச் செல்ல, நமக்கு முன்மாதிரியாக இருக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
அதனால்தான் வேதங்களின் எண்ணிக்கையை விட இறைத்தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது, பல நபிமார்கள் புதிய இறைவேதம் வழங்கப்படாமல் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

நம்பிக்கை...

ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைந்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துபட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கி வர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான்.

"ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கி வரப் போகின்றாயா?" என்று அதட்டிக் கேட்டார் அவர். ஆனால் அந்தப் போராளியோ, விட்டபாடில்லை. அடம் பிடித்தான். வேறு வழியின்றி, அந்த அதிகாரி, தன் படைகளிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

துப்பாக்கித் தோட்டாவைப் போன்று விரைந்து சென்ற அவ்வீரன், சில நிமிடங்களிலேயே தன் தோழனின் உடலைத் தோளில் சுமந்தவனாக எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் வநது சேர்ந்தான்.

"ஆகா, இந்தப் பிரேதத்தை எடுத்து வரவா உன் உயிரைப் பணயம் வைத்தாய்?" என்று கேட்டார் அதிகாரி.

"எஸ், ஸார். எனக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. நான் அவனிடம் சென்று பார்த்தபோது, அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான்: "நண்பா... எனக்கு நன்றாகத் தெரியும், நான் சாகுமுன் நீ வருவாய் என்று." உடனே நான் குனிந்து அவனைத் தூக்கித் தோளில் வைத்தேன். அந்தோ... அப்போதுதான் அவனுடைய உயிர்
பிரிந்தது. இப்போது சொல்லுங்கள், நான் உயிரைப் பணயம் வைத்துச் சென்றதில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா?"
என்றான் அந்தப் போர்வீரன்.

நம்பிக்கை என்பது கண்மூடித்தனம் என்று யார் சொன்னது?

நம்பிக்கை என்பது, பிறர் கண்ணால் பார்க்க முடியாதவற்றை இதயத்தின் உணர்வால் பார்ப்பதாகும். மக்கள் தாம் நுகரும் நன்மைகளுக்காக, அன்பினாலும் பக்தியினாலும் நன்றிப் பெருக்காலும் பார்ப்பதுதான் நம்பிக்கையாகும்.

(“அண்ணலார் கற்றுத்தந்த தலைமைத்துவம்” நூலிலிருந்து...)

இஹ்ஸான் ஜாஃப்ரியை படுகொலை செய்த அன்று நடந்தது என்ன?


குஜராத் இனப்படுகொலை 2002
பிப்ரவரி 28 2002 அஹமதாபாத்
குல்பர்க் சொஸைட்டி

காலை 10.30 மணியளவில் வார்டு எண் 19ன் காங்கிரஸ் உறுப்பினர் அம்பலால் நாடியா, வார்டு எண் 20ன் உறுப்பினர் கன்னுலால் சோலங்கி ஆகியோருடன் இஹ்ஸான் ஜாஃப்ரியைக் காண வந்தார் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே. போலீஸ் படையை உடனே அனுப்பி வைப்பதாகவும், அவர் முழுவதுமாகப் பாதுகாக்கப்படுவார் என்றும் அவர்கள் இஹ்ஸான் ஜாஃப்ரியிடம் உறுதியளித்தனர்.

காவல்துறை ஆணையர் சென்ற 5 நிமிடத்தில், அதாவது காலை 10.35 மணியளவில், குல்பர்க் சொஸைட்டிக்கு கொஞ்சம் வெளியே இருந்த ஸாஹிர் பேக்கரியும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பகல் 11.15-11.30 மணியளவில் குல்பர்க் சொஸைட்டியில் கல்வீச்சு தொடங்கியது. 45 நிமிடங்கள் கழித்து, அதாவது பகல் 12.15-12.30 மணியளவில், குல்பர்க் சொஸைட்டியின் பின்பக்கம் உள்ள கட்டடங்களிலிருந்தும், பங்களாக்களிலிருத்தும் கற்கள், அமில பல்புகள், கண்ணாடிக் குப்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை குல்பர்க் சொஸைட்டி மீது வீசப்பட்டன.

பகல் மணி 12.30க்கும்.12.45க்கும் இடைப்பட்ட வேளையில், ஒரு முஸ்லிமல்லாதவருக்குச் சொந்தமான பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து கற்களும், பெரும் பாறாங்கற்களும் எறியப்பட்டன. குல்பர்க் சொஸைட்டியின் குடியிருப்பு வளாகங்கள் இதனால் பெருத்த சேதமடைந்தன. இந்த வளாகங்கள் சேதமடையாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் ஒருவேளை தங்களைக் காத்திருக்கலாம்.

பெரும் பெரும் கற்கள், அமில பல்புகள், எரியும் துணிப் பந்துகள் ஆகியவை மதியம் 1-1.15 மணி வரை வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. மதியம் ஒரு மணியளவில், அந்த சொஸைட்டியில் வசிக்கும் யூசுஃப் என்பவர் வன்முறையாளர்களிடம் பிடிபட்டார். கயவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டி, தீ வைத்துக் கொளுத்தினர்.

குடியிருப்பில் வசிப்பவர்களிடையே பீதி அதிகமானது. இந்தச் சமயத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் 80 நபர்கள் இருந்தனர்.

பிற்பகல் 2.30-2.45 மணியளவில், "குசி ஜாவோ"(உள்ளே செல்லுங்கள்) என்ற கத்தல்களுக்கிடையே, திடீரென்று சொஸைட்டியின்பின்பக்கம், இருப்புப் பாதைக்கு அருகிலுள்ள கதவு உடைக்கப்பட்டது.

பிற்பகல் மணி 2.30க்கும் 2.45க்குமிடையில், வன்முறைக் கும்பலின் குறியான இஹ்சான் ஜாஃப்ரி அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் மிகவும் சிரத்தை  எடுத்துக் கட்டிய அவரது வீட்டின் முன்பு, 45 நிமிடங்களாக, அவர் மிகக் கொடுமையாக துண்டு துண்டாக வெட்டப்பட்டார். இறுதியில் அவரது தலையும் வெட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வப்பட்டார் "வந்தே மாதரம் ", "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரது விரல்களைத் துண்டு துண்டாக வெட்டிய பின், அந்தப் பகுதி முழுவதும் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டும் வந்தார். அடுத்ததாக அவரது கரங்களும், கால்களும் வெட்டப்பட்டன.

அதன்பின், கூர்மையான ஒரு கருவியை அவரது கழுத்தில் மாட்டி, இழுத்துச் சென்றது அந்தக் கொலைகாரக் கும்பல். பின்னர், அவர் தீயில் வீசப்பட்டார்.

பொதுச் சேவையிலேயே தன் வாழ் அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு நேர்ந்த கொடூர முடிவு இது. இந்தத் தாக்குதலில், இஹ்சான் ஜாஃப்ரியுடன் அவரது மூன்று சகோதரர்களும், இரண்டு மருமகன்களும் கொல்லப்பட்டனர்.

-oOo-

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக சொஸைட்டிக்கு வந்தனர். குல்பர்க் சொஸைட்டிக்கு பின்பக்கம் ஒரு இருப்புப்பாதை செல்கிறது. அதற்கு அப்புறமுள்ள பணியாளர்கள் குடியிருப்புகளிலிருந்து 5000-6000 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் வந்தது. ஐக்ரூப் சிங் ராஜ்புட் என்பவன்தான் இந்தக் கும்பலுக்குத் தலைமையேற்று வந்தான்.

பாஜக அஹமதாபாத் முனிசிபாலிட்டியில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தபொழுது, இவன் துணை மேயராக இருந்தான். இந்தக் கும்பலிடமிருந்தும் கல்லெறிதல் தொடங்கியது.

ஆக, குல்பர்க் சொஸைட்டியின் அனைத்துத் திசைகளிலிருந்தும் கல்மழை பொழிந்தது.

இதற்கிடையில் ஜாஃப்ரி 200 தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். காவல்துறை ஆணையர் பாண்டே, காந்தி நகரிலுள்ள அமர்சிங் சௌத்ரி, நரேஷ் ராவல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று பலரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஒரு நேரடி சாட்சி சொல்கிறார்: “பிற்பகல் 2.30 மணியளவில் கதவருகில் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்த ஜாஃப்ரி ஸாஹிபை 4 பேர் வெளியே இழுத்து வந்தனர். அந்த நால்வர் பெயர்கள் வருமாறு: சமன்புராவில் கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் நாராயன் கப்ரா,
“பாயாஜி" ரமேஷ் சோட்டி, ராஜஸ்தான் மளிகைக் கடை உரிமையாளரின் மகன் மனிஷ் ஜெய்ன், சம்பாபென் என்பவரின் மகன் கிருஷ்ணா.(காவல்துறையின் புலன் விசாரணைகளின்போது நேரடி சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களிலும் இந்த நால்வரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.)

“ஜாஃப்ரி ஸாஹிபை வெளியே இழுத்து வரும்பொழுதே ஒரு வாளால் அவரை மூன்று துண்டுகளாக வெட்டினர். ஜாஃப்ரி ஸாஹிபை தீ வைத்துக் கொளுத்திய பிறகு, அந்த வன்முறைக் கும்பல் டயர்களை எரிக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல் ஜாஃப்ரி ஸாஹிப் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் உடைத்து, எல்லா புறங்களிலும் தீ வைத்தது. உள்ளே 35 குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக் கூத்தாடின. ஆனால் அக்குழந்தைகளால் வெளியே வர முடியாது. பிற்பகல் 3.15 மணியளவில் ஜாஃப்ரியின் வீடு முழுவதும் புகைமண்டலமாக நிரம்பியது. பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த அனைவரும் மூச்சு விட முடியாமல் திணறினர்.

வெளியே வந்தால் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லப்பட்டதன் பேரில் சில பெண்கள் வெளியே வந்தனர். இந்தக் குழுமத்தின் முன் வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சிகள், கையில் வாளுடன் வந்த தினேஷ் பிரபுதாஸ் ஷர்மா என்பவன் யூஸுஃப் என்பவரைக் கொல்வதை நேரில் கண்டனர்.

ஒரு நேரடி சாட்சியின் மகளின் ஆடைகளை லாதியா என்பவன் கிழித்தெறிந்தான். பின்னர் அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தான். ஏற்கனவே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட லாலா மோகன்சிங் தர்பார் என்பவன் வேறொரு பெண்ணைக் கொன்றான்.

மாலை 4.45 மணியளவில், ஒரு சிறிய தோட்டத்தில் சிறு அறையில் ஒளிந்திருந்த ஒரு நேரடி சட்சிக்கு "ஓடு... ஓடு..." என்ற சப்தங்கள் கேட்டன. போலீஸ் வத்திருக்கும் என்று அந்த நேரடி சாட்சி யூகித்துக் கொண்டார்.

மூச்சு முட்டலில் திணறிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றுமாறு இந்த நேரடி சாட்சி காவல்துறை ஆணையர் டான்டனிடம் கோனார். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்ற தயங்கினார்.

இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜாஃப்ரியின் வீட்டிலிருந்த தொட்டிகளும், தோட்டத்திலும், அடுத்த வீடுகளிலுமிருந்த தொட்டிகளும் முதலில் காலி செய்யப்பட்டு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஆக்கினார்கள் கயவர்கள். இதனால் தீயை அணைக்க முடியாமல் ஆக்கினார்கள்.

தீ படு வேகமாகப் பரவியது. ஆனால் அந்தக் காவல்துறை துணை ஆணையாளர் டான்டன் உயிர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

போலீஸ் வந்து அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 5.15 மணியளவில், ஜாஃப்ரியின் விட்டிலிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியிருந்த அனைவரும் இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாயினர் குர்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்த குஜராத் அரசின், அதன் காவல்துறையின் பாதகத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

முதல்வர் (மோடி), உள்துறை அமைச்சர், காவல்துறை ஆணையர் என்று அனைவரையும் ஜாஃப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தத் தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. 5 மணி நேரம் மிகக் கொடூரமான கொலைவெறி தாண்டவமாடியது.

சமன்புராவிலுள்ள குல்பர்க் சொஸைட்டி அமைதாபாத் நகரில் இதயப் பகுதியில் இருக்கிறது. மாநிலத்தில் வேறு எங்கோ தூர தொலைவில் இது இல்லை.

(“மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Tuesday 16 October 2018

சிரியா திமஷ்கின் கிழக்கு வாசல் (இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்)


சிரியா திமஷ்கின் (டமஸ்கஸ்) கிழக்கு வாசல்...
இதன் வழியாகத்தான் கி.பி. 635-ம் ஆண்டு
‘அல்லாஹ்வின் போர்வாள்’ காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் டமஸ்கஸ் நகருக்குள் வெற்றியாளராக நுழைந்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பான "இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்" (ஃபத்ஹுஷ் ஷாம்) என்ற நூலில் இந்த சரித்திர வெற்றி நிகழ்வு விரிவான வீர வரலாற்றுக் காவியமாக இடம் பெறுகிறது.
இது ஓர் ‘இலக்கியச்சோலை’ வெளியீடு!

Saturday 25 August 2018

காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்!


முஹம்மத் ஸலாஹ்... இன்று கால்பந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் மந்திரப் பெயர் இதுதான். எகிப்து நாட்டைச் சார்ந்த முஹம்மத் ஸலாஹின் நாமம் சொந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும், உணவு விடுதிகளிலும், தெரு வீதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆம்! கால்பந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதல்லவா… 25 வயதாகும் முஹம்மத் ஸலாஹ் இன்று உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர். இவர் மைதானத்தில் இறங்கினால் “முஹம்மத் ஸலாஹ்… முஹம்மத் ஸலாஹ்” என்ற முழக்கத்தில் மொத்த அரங்கமும் அதிர்கிறது. ஆவேசமாக அவரை வரவேற்கிறது.

எகிப்து நாட்டு கால்பந்து அணியில் பங்கு பெற்றுள்ள முக்கிய வீரர்தான் முஹம்மத் ஸலாஹ். எதிர்வரும் 201ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு எகிப்து தேர்வாகி விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த நட்சத்திர வீரர் என்றால் அது மிகையல்ல.

இவர் ஐரோப்பாவின் லிவர்பூல் கால்பந்து கிளப்பில் சேர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுதான் இப்பொழுது உலக கால்பந்து ரசிகர்களையே இவர் பக்கம் ஈர்த்துள்ளது.

இவர் ஆடுகளத்தில் காண்பிக்கும் ஆவேசமும், மின்னல் வேக ஓட்டமும், நுணுக்கமான விளையாட்டுத் திறனும், மைக்ரோ நொடியில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி கோல் போடும் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறது. அவர் கோல் போட்டதும் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் தங்களையறியாமலேயே மெய்சிலிர்த்து எழுந்து நிற்கின்றனர். ஆவேசமாக அவருக்கு வாழ்த்துகளைப் பங்களிக்கின்றனர்.
கோல் போட்டதும் ரசிகர்கள் அருகில் ஓடிச் சென்று அவர்களை வாரியணைக்கும் விதமாக இரு கரங்களையும் விரித்து அவர்களின் வாழ்த்துகளை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸலாஹ். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார்.

அவரின் சக அணியினரின் வாழ்த்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஸலாஹ் மெதுவாக மைதானத்தின் நடுவட்டத்திற்கு வருகிறார். இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி பிரார்த்திக்கிறார். அப்பொழுது ஒட்டுமொத்த மைதானமும் அவரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. பின்னர் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, பூமியில் தன் நெற்றியைப் பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார். அங்கேதான் முஹம்மத் ஸலாஹ் தன் இறைநம்பிக்கையை வெகு ஆழமாக வெளிப்படுத்துகிறார்.



சாஷ்டாங்கத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுந்ததும் மீண்டும் ரசிகர்களிடமிருந்து பழைய ஆரவாரம் மைதானத்தை ஆட்கொள்கிறது. மீண்டும் ரசிகர்கள் அவரை வாழ்த்திப் பாடத் தொடங்குகின்றனர்.
முஹம்மத் ஸலாஹ் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்தக் காட்சி நிரந்தரமாகி விட்டது. மைதானத்தில் இறங்கி ஆட்டம் தொடங்கும் முன்பும் இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி அவர் பிரார்த்திக்கிறார். பின்னர் ஒவ்வொரு கோலுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பூமியில் நெற்றி பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார்.

இஸ்லாமில் தொழுகையில் ஸஜ்தா என்ற சாஷ்டாங்கம் இருக்கிறது என்பதை நாமறிவோம். தொழுகைக்கு வெளியே மகிழ்ச்சியான கட்டங்களில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் சாஷ்டாங்கம் இருக்கிறது. அந்த சாஷ்டாங்கத்தில் வீழ்ந்துதான் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலுக்குப் பிறகும் தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்.

புகழின் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டிருந்தாலும் அந்தப் புகழுக்குக் காரணமான, புகழைத் தந்துகொண்டிருக்கும் இறைவனை மறவாமல் நன்றி செலுத்தும் பாங்கைப் பார்க்கும்பொழுது உண்மையிலேயே உடலெல்லாம் புல்லரித்துத்தான் போகிறது.

ஐரோப்பிய கால்பந்து நட்சத்திர வீரராக மிளிரும் முஹம்மத் ஸலாஹ் லிவர்பூலில் முதல் சீசனில் இதுவரை 49 கால்பந்துப் போட்டிகளில் விளையாடி 43 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் இந்த ஆண்டுக்கான ஆட்ட நாயகனாக முஹம்மத் ஸலாஹ் ஆவதற்கு அவரது அணியின் சக வீரர்களும் ஓட்டளித்திருக்கிறார்கள். கால்பந்து எழுத்தாளர்கள் சங்கமும் (Football Writers’ Association) ஓட்டளித்திருக்கிறது.
ஒவ்வொரு போட்டி முடியும்பொழுதும் அவரது நட்சத்திர அந்தஸ்து கூடிக்கொண்டே போகிறது. அவர் தன் இறைநம்பிக்கையை இப்படிப் பொதுத்தளத்தில் வெளிப்படுத்துவது அவரை சமூக, கலாச்சாரத்தின் முக்கிய பிரமுகராக மாற்றியிருக்கிறது.

முஹம்மத் ஸலாஹ் இன்று பிரிட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாம் குறித்த அச்சமும், வெறுப்பும் பிரிட்டனில் புரையோடிப் போயுள்ள காலகட்டம் இது. சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் படி இஸ்லாமிற்கெதிரான ஒரு வெறுப்பு சூழ்நிலை எங்கும் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் வடக்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஒரு முஸ்லிம் பிரிட்டனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கிறார்.

அவர் இஸ்லாமிய மாண்புகளை உள்ளடக்கியவர் என்றும், இறைநம்பிக்கையை இறுகப் பற்றிப் பிடிப்பவர் என்றும் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் பிரிட்டனின் துணைப் பொதுச் செயலாளர் மிக்தாத் வெர்சி கூறுகிறார். “அவரிடம் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அணியின் கதாநாயகன் அவரே. மொத்த லிவர்பூலும் உண்மையிலேயே மனம் விரும்பி அவரைச் சூழ்ந்து அணிவகுத்து நிற்கிறது. இஸ்லாமோஃபோபியாவுக்கு அவர்தான் தீர்வு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது இல்லாமலாவதற்கு இவர் முக்கிய பங்கு வகிக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.

எகிப்தில் இன்று முஹம்மத் ஸலாஹ் ஒரு தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறார். அது கடந்த வருடம் அக்டோபரில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசி நிமிடத்தில் அவர் அடித்த பினால்டி கிக்கில் விழுந்த கோல் மூலம் உறுதியானது. அதன் மூலம் எகிப்து அணி எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கிறது. 1990க்குப் பிறகு இப்பொழுதுதான் எகிப்து கால்பந்து அணி உலகக் கோப்பை போட்டிக்குள் நுழைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்வு நடந்த எகிப்தின் அலெக்ஸாந்திரியா நகரிலுள்ள மைதானம் முழுவதும் அன்று ரசிகர்கள் ஸலாஹ்வைத் தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து கொண்டாடினார்கள்.

எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எண்ணற்ற சுவர்கள் இன்று ஸலாஹ்வின் படத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. கெய்ரோவில் ஸலாஹ்வின் உருவப்பட சுவர் சித்திரம் உள்ள ஓர் உணவு விடுதி இன்று சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எகிப்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்றாலும் அவர் போட்டியிடுவதற்கு கணிசமான ஆதரவைப் பெற்றிருந்தார் என்கிற அளவுக்கு அவர் புகழ் உயர்ந்து நிற்கிறது.

பிரிமியர் லீகும், ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளும் எப்பொழுதும் எகிப்தில் மிகவும் பிரபலம். இன்று ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவின் தேநீர் கடைகளிலும், ஷிஷா பார்களிலும் லிவர்பூல் கால்பந்துப் போட்டிகளைக் காண்பதற்காக ஆர்வமாக ஒன்று கூடுகிறார்கள். அதற்குக் காரணம் முஹம்மத் ஸலாஹ்!

ஸலாஹ்வின் புகழ் அவர் கால்பந்து நட்சத்திர வீரர் என்பதால் மட்டுமல்ல. வாரி வழங்குவதில் பாரி வள்ளலாக திகழ்கிறார் என்பதும் ஒரு காரணம். “அவர் தொடர்ச்சியாக நற்காரியங்களுக்கு பொருளாதார உதவி செய்து வருகிறார். அவர் பிறந்த ஊருக்கும் நிறைய செய்து வருகிறார்” என்று அவரின் பயிற்சியாளர் ஸயீத் அல் ஷிஷ்னி கூறுகிறார். இந்த ஸயீத் அல் ஷிஷ்னிதான் ஸலாஹின் திறமையை அவர் குழந்தையாக இருக்கும்பொழுது கண்டுபிடித்தவர். அவரது சொந்தக் கிராமமான நைல் நதி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நக்ரிக் என்ற கிராமத்தில் முஹம்மத் ஸலாஹை குழந்தைப் பருவத்திலேயே ஒரு நட்சத்திர கால்பந்து வீரராகக் கண்டார் ஸயீத் அல் ஷிஷ்னி.

நக்ரிக்கிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு ஸலாஹ் ஒரு டயாலிஸிஸ் இயந்திரம் கொடையளித்துள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடையளித்துள்ளார். பொது விளையாட்டு மையம் ஒன்றைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். ஒரு கல்விக் கூடத்தையும், ஒரு மஸ்ஜிதையும் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். எகிப்தின் வலுவற்ற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள முதலீட்டு நிதிக்கு பணம் கொடுத்துள்ளார். இப்படி ஸலாஹின் நன்கொடைகள் நாடு முழுவதும் விரிகின்றன.

கடந்த ஏப்ரலில் போதை மருந்துப் பழக்கத்திற்கெதிராக அரசு நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சார காணொளியில் பங்குபெற்று அதற்கு ஆதரவு தெரிவித்தார். அந்தக் காணொளி வெளிவந்த மூன்று நாட்களுக்குள் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து விட்டது என்று எகிப்தின் சமூக ஒற்றுமை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“ஒரு முஸ்லிமல்லாத நாட்டில், இஸ்லாமோஃபோபியா வளர்ந்து வரும் ஒரு நாட்டில் அதைப் பற்றி கிஞ்சிற்றும் அஞ்சாமல் முழங்காலில் அமர்ந்து நெற்றியை பூமியில் பதித்து இவர் வணங்குவதை எகிப்திய மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அதனைக் கருதுகிறார்கள்” என்று எகிப்தின் கால்பந்து விமர்சகர் அஹமத் அட்டா கூறுகிறார்.

அதேபோன்று இங்கிலாந்தில் லிவர்பூல் பகுதியில் வசிக்கும் சிரிய, யமனிய, வங்க தேச முஸ்லிம்களும் உணர்கிறார்கள். லிவர்பூலில் உட்பகுதியில் அமைந்திருக்கும் டாக்ஸ்டெத் என்ற நகரத்திலுள்ள அல் மஸ்ரா மஸ்ஜிதின் இமாம் அபூ உஸாமா அத்தஹபி, “முஸ்லிம்கள் ஓர் அழுத்தத்தில் உள்ளார்கள்” என்கிறார்.

சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரங்களும், குற்றங்களும் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளன என்று அங்குள்ள காவல்துறை புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. 2015ல் பாரிஸ் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்புகள், 2016ல் லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவற்றின் விளைவாக இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்தல்கள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 47 சதவீதம் அதிகரித்திருந்தன என்று டெல் மாமா என்ற நிறுவனத்தின் அறிக்கை அறிவிக்கிறது. 2012 முதல் 2016 வரையுள்ள கணக்கைப் பார்த்தால் இது 75 சதவீதம் அதிகரித்திருக்கின்றது என்று அங்குள்ள காவல்துறை பதிவுகள் பறைசாற்றுகின்றன.

“ஸலாஹ் அந்த அழுத்தத்தைக் குறைத்துள்ளார்” என்று அல் மஸ்ரா மஸ்ஜித் இமாம் அத்தஹபி கூறுகிறார். “ஒவ்வொரு முஸ்லிமும் அவரால் பெருமிதம் கொள்கின்றனர்” என்று லிவர்பூலில் உள்ள அல் ரஹ்மா மஸ்ஜிதின் அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் அலீ அடென் கூறுகிறார். “சில நேரங்களில் நாங்கள் இங்கே இரண்டாந்தர குடிமக்களாக உணர வைக்கப்படுவோம். இந்தச் சூழ்நிலையில் மத்திய கிழக்கிலிருந்து ஒரு முஸ்லிம் எங்கள் நகரத்திற்கு வந்து புகழ் பெறுகிறார் என்பது பெருமிதமே” என்கிறார் அவர்.
“முஸ்லிம் சமூகத்திற்கும், லிவர்பூல் நகரத்திற்கும் ஒரு நல்லிணக்கப் பாலமாக அவர் விளங்க முடியும்” என்று இமாம் அத்தஹபி கூறுகிறார்.
“அவர் தரையில் வீழ்ந்து ஸுஜூது செய்வதால் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலும் முஸ்லிம்களின் மேல் படிந்துள்ள கறையை நீக்குகிறது” என்று முன்னாள் கால்பந்து வீரர் அன்வருத்தீன் கூறுகிறார்.

ஸலாஹைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள ஒரு பாடலில், “அவர் இன்னும் சில கோல்கள் போடுவாரானால், நானும் முஸ்லிமாகி விடுவேன்” என்ற வரிகள் வருகின்றன.

இதுதான் ஒரு முஸ்லிமின் இலட்சியமாக இருக்க வேண்டும். தன் சொல்லால், செயலால் அவன் வெளிப்படுத்துபவை காண்போரை இஸ்லாமின் பால் ஈர்க்க வேண்டும். முஹம்மத் ஸலாஹ் தனக்குக் கிடைத்துள்ள இந்தப் பேரையும், புகழையும் இப்பொழுது போல் எப்பொழுதும் இதே போன்று மற்றவர்களை இஸ்லாமின் பால் ஈர்ப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

MSAH

புதிய விடியல்

Saturday 5 May 2018

கொடையளிப்பதன் முக்கியத்துவம்!


கொடை என்பது தேவையுடையோருக்கு பணம் அளிப்பது மட்டுமல்ல. உங்கள் குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக, சமுதாயத்திற்காக உங்களையே கொடுப்பதுதான் உண்மையான நன்கொடை. 

அதாவது இந்தப் பூமியில் ஆக்கபூர்வமான சக்தியாக உங்கள் நன்கொடை அமைய வேண்டும். நாம் செல்லுமிடமெல்லாம் நல்லவற்றைப் பரப்புவது, நேர்மையை வெளிப்படுத்துவது, நம்மிடருந்து அதிகபட்சமாக என்னவெல்லாம் அளிக்க முடியுமோ அவையனைத்தையும் வழங்குவது. அதாவது, நம் இதயத்தைக் கொடுப்பது, புன்னகை புரிவது, நல்ல வார்த்தைகள் கூறுவது - இவைதான் நன்கொடைகள்.

உண்மையில் தொடர்ச்சியாக கொடையளிப்பவர்கள்தான் தங்களைத் தாங்களே தேவையுடையவர்களாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை? அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும்! பிறர் துன்பங்களை நீக்க வேண்டும் என்று அவர்கள் அவசியப்படுகிறார்கள். அதன் மூலம் மறுமை நாளில் அல்லாஹ் தங்களின் துன்பங்களை நீக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுவர்க்கத்தின் விலை

சுவர்க்கத்தினுள் நுழைவதற்குரிய விலையே நீங்கள்தான். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெறும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறீர்கள்.
உங்கள் ஆன்மாவின் ஆழத்திலிருந்து அடுத்தவருக்கு அன்பைப் பொழியுங்கள். பிறரிடம் நம்பிக்கையை விதையுங்கள். பிறருக்காக பிரார்த்தனை புரியுங்கள். உங்கள் குழந்தைகளிடமும், வாழ்க்கைத் துணையுடனும், நீக்ஙள் நேசிக்கும் ஒருவருடனும் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தருணம் என்பது பிறர் மதிப்புமிக்கதாகக் கருதும் நேரம் என்பதாகும்.

யாராவது உங்களிடம் உதவி கோரினால், நீங்கள் தளர்வாக இருந்தாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். யாராவது உங்களிடம் பண உதவி கோரினால், நீங்கள் பணக்காரராக இல்லாவிட்டாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். உங்கள் சமுதாயத்தை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு உங்கள் திறமையையும், அறிவையும் பயன்படுத்துங்கள். நீங்கள் தனித்துவமிக்கவர்கள். எங்கோ யாரோ உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களுக்காக சமைத்திடுங்கள். உங்கள் அண்டை வீட்டாருக்கு உணவைப் பாத்திரத்தில் வைத்து கொடுங்கள். கொடுத்த பாத்திரத்தைத் திரும்பக் கேட்காதீர்கள்.

நன்மைக்காகப் போராடும் பாதையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களுடையது அல்ல; அது அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.

கொடுத்துக் கொடுத்துக் களைத்துப் போய் விட்டீர்கள் என்றால், உங்கள் கண்களின் கீழுள்ள வளையங்கள் கருத்துப் போய்விட்டன என்றால், பணிச் சுமையின் காரணமாக உங்கள் தோள்கள் துவண்டு வளைந்து விட்டதென்றால், உங்கள் ஆன்மாவை ஊக்கப்படுத்துவதற்கும், உங்கள் உடலை வலுப்படுத்துவதற்கும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் உற்சாகமாக எழுந்து அதிகம் அதிகம் கொடையளியுங்கள்.
வெகு விரைவிலேயே நீண்ட தூக்கத்துக்கும், நிரந்தர ஓய்வுக்கும் நேரம் வந்து விடும்!

உங்களுக்கென்று பொருட்களைச் சேகரித்து குவித்துக் கொண்டே இருக்காதீர்கள். ஏனெனில் இறுதி நாளில், “எவ்வளவு சேகரித்து வைத்துள்ளாய்?” என்று உங்களிடம் கேட்கப்படாது. மாறாக, “எவ்வளவு கொடையளித்தாய்?” என்றுதான் கேட்கப்படும்.

“அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான் என்றால், அது ஒருபொழுதும் உங்களை அழிப்பதற்காக அல்ல. உங்களுக்கு பெரிய அளவிலுள்ள அன்பளிப்புகளை அளிப்பதற்காகவே உங்கள் கைவசமுள்ள சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு, உங்கள் கரங்களை அவன் வெறுமையாக்குகிறான்.” (இப்னு அல் கய்யூம்)

Source: "A Temporary Gift: Reflections on Love, Loss, and Healing" By Asmaa Hussein

Thursday 15 March 2018

இதுவும் கடந்து போகும்!

ஒரு ராஜா ஒரு முறை நாட்டிலுள்ள அறிஞர்களை ஒன்று கூட்டி, தான் சோகமாக இருக்கும்போது மகிழ்ச்சியை வரவழைக்கக்கூடிய ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் எழுதித் தருமாறு ஆணையிட்டார்.

அறிஞர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து ஒரு வாசகத்தை ஒரு மோதிரத்தில் பொறித்து ராஜாவிடம் பணிவாகக் கொடுத்தனர்.

ராஜா மோதிரத்தில் பொறிக்கப்பட்ட வாசகத்தைப் படித்தார். அவர் முகம் பிரகாசித்தது. அந்த வாசகம் என்ன தெரியுமா?

“இதுவும் கடந்து போகும்!”

ஆம்! என்ன சோகம் வந்தாலும் அதவும் நம்மைக் கடந்து போய், அடுத்த ஒரு கணத்தில் அகமகிழ்ச்சி வரத்தான் செய்யும். ஆழ்ந்த கவலையில்,கொடும் துன்பத்தில், கடும் சிக்கலில் சிக்கியுள்ளவர்கள் “இதுவும் கடந்து போகும்!” என்ற எண்ணத்தை மனதினுள் நிறைத்தால் துன்பமும், சிக்கலும், கவலையும் காணாமற்போகும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம்தானே!

“ஆதலின் நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 94: 5, 6)

அன்றாடம் ஓத வேண்டிய அத்தியாவசிய துஆக்கள்

தூக்கத்திலிருந்து விழித்தவுடன் ஓதும் துஆ

الحَمْـدُ لِلّهِ الّذي أَحْـيانا بَعْـدَ ما أَماتَـنا وَإليه النُّـشور

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக!

ஆடை அணிகின்ற போது ஓதும் துஆ

الحمدُ للهِ الّذي كَساني هذا (الثّوب) وَرَزَقَنيه مِنْ غَـيـْرِ حَولٍ مِنّي وَلا قـوّة

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாத (ஸ்ஸவ்ப) வரஸகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இ(ந்த ஆடையானதை (அவனுடைய உதவியோடு) என்னிடமிருந்து எவ்வித பிரயாசையும், எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனை அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!

கழிவறையில் நுழைகின்ற போது ஓதும் துஆ

بِسْمِ الله ) اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ)

(பிஸ்மில்லாஹி) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஃகுப்ஸி வல் ஃகபாயிஸ்

பொருள்: (அல்லாஹ்வின் பெயரால் பிரவேசிக்கிறேன்) யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

غُفْـرانَك
குஃப்ரானக.

பொருள்: உன்னிடம் பாவம் பொறுத்தருள வேண்டுகிறேன்.

உளூ செய்யுமுன் கூறப்பட வேண்டிய துஆ

بِسْمِ الله
பிஸ்மில்லாஹ்.

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

உளூ முடிந்து பின் கூறப்படும் துஆ

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه
اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين الله أكبر

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு. அல்லாஹும் மஜ்அல்னீ மினத்தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்.

பொருள்: வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு எவரும், எதுவும் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உயரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். யா அல்லாஹ்! தவ்பா - பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக!

வீட்டிலிருந்து புறப்படும் போது ஓதும் துஆ

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் புறப்படுகிறேன். என் காரியங்கனை முழுமையாக ஒப்படைத்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

வீட்டினுள் நுழையும் போது ஓதும் துஆ

بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا

பிஸ்மில்லாஹி வலஜ்னா, வ பிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்கனை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

மஸ்ஜிதில் நுழையும்போது ஓதும் துஆ

أَعوذُ باللهِ العَظيـم وَبِوَجْهِـهِ الكَرِيـم وَسُلْطـانِه القَديـم مِنَ الشّيْـطانِ الرَّجـيم،[ بِسْـمِ الله، وَالصَّلاةُ وَالسَّلامُ عَلى رَسولِ الله]، اللّهُـمَّ افْتَـحْ لي أَبْوابَ رَحْمَتـِك

அஊது பில்லாஹில் அழீம், வபி வஜ்ஹிஹில் கரீம், வஸுல்தானிஹில் கதீமி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள்: மகத்தான அல்லாஹ்வைக் கொண்டு, சங்கையான அவனுடைய முகம், பூர்வாங்கமான அவனுடைய அதிகாரம் ஆகியவற்றைக் கொண்டு தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

மஸ்ஜிதிலிருந்து வெளியேறுகின்ற போது ஓதும் துஆ

بِسمِ الله وَالصّلاةُ وَالسّلامُ عَلى رَسولِ الله، اللّهُـمَّ إِنّـي أَسْأَلُكَ مِـنْ فَضْـلِك، اللّهُـمَّ اعصِمْنـي مِنَ الشَّيْـطانِ الرَّجـيم

பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபழ்லிக, அல்லாஹும் மஃஸிம்னீ மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால், அருளும் சாந்தியும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகுக! யா அல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னுடைய பேரருளிலிருந்து உன்னிடம் கேட்கிறேன். யா அல்லாஹ்! தூக்கியெறியப்பட்ட ஷைத்தானிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக!

Monday 26 February 2018

குண்டு வெடிப்புகள் - பிரவீன் சுவாமி பார்த்த விதம்

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்கிறதென்றால் -
கொல்லப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
குற்றம் சாட்டப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
கூண்டில் அடைக்கப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!

இப்படி ஒரு கொடூரத்தை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருப்பீர்களா? இந்தக் கொடுமையைக் கண்டு கொதித்தெழாமல் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்ற மீடியாவை நாம் மனசாட்சியுள்ள துறை என்று கூற முடியுமா?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை இன்று ஊனமாகிப்போய்விட்டது. தூணில் ஓட்டை விழுந்து விட்டது.

இந்தியாவிலேயே மதச்சார்பற்ற, நடுநிலையான, தரமான பத்திரிகை என்று அறியப்படுவது தி ஹிந்து ஆங்கில நாளிதழும், அதன் சகோதரப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைன் மாதமிரு இதழும்.

“பிரவீன் சுவாமி போன்றவர்களைக் கொண்டிருக்கும் தி ஹிந்து பத்திரிகையை இன்னுமா நடுநிலையான, மதச்சார்பற்ற பத்திரிகை என்று கூறுகிறீர்கள்?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார் ஒரு புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர். 

இவர் தி ஹிந்து மும்பை பதிப்பில் பணியாற்றியவர். அதிலிருந்து வெளியேறிய அவர் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற, நடுநிலையான இளைஞர்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கும்பொழுதுதான் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

யார் இந்தப் பிரவீன் சுவாமி?

தரமான செய்தியாளர் என்று நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் தவறாமல் இவரது கட்டுரைகள் மேற்படி பத்திரிகைகளில் இடம் பெற்று விடும். அத்துணையிலும் அழகாக, நயம்பட அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டு விடுவார்.

இத்தனைக்கும் குண்டுவெடிப்பின் இடத்தில் குண்டு வீச்சின் சூடு கூட தணிந்திருக்காது. அது பற்றிய விசாரணை தொடங்கியிருக்காது. ஆனாலும் தமிழகத்தில் வெளிவரும் நாலாந்தரப் பத்திரிகை மாதிரி அவரது ஆட்காட்டி விரல் முஸ்லிம்களையே சுட்டி நிற்கும்.

இவருக்கு எங்கிருந்து இந்த ‘ஞானோதயம்’ வருகிறது? இருக்கவே இருக்கிறார்கள் உளவுத்துறையினர். அவர்கள் இவரைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றனரா? அல்லது இவர் அவர்களைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றாரா? யாருக்கும் தெரியாத ரகசியம் இது.

உளவுத்துறையினர் சொல்வதை அப்படியே விழுங்கி, இவர் பங்குக்கு வயிற்றுக்குள் ரசாயனம், அமிலம், மசாலா எல்லாம் சேர்த்து செய்தியாக வாந்தியெடுத்து விடுவதில் வல்லவர் இவர்.

2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டுகள் வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தபொழுது இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : “அமைதிக்கு எதிரான சதி”

“இந்தியா-பாக். நட்பை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர்” என்பது அவர் எழுதிய செய்திக் கட்டுரையின் சாராம்சம். இதற்கு என்னென்னவோ ஆதாரங்களை எடுத்துக் கையாண்டிருந்தார்.

இப்பொழுது என்ன ஆயிற்று? அந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. ஜும்ஆ தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்தச் சம்பவத்தை எதிர்த்து கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்களின் உயிர்கள் அங்கே பலியாகியிருக்க, நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்குப் பின்னால்” 

துணைத் தலைப்பு: “வகுப்புவாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத் ஆந்திரப் பிரதேச தலைநகரை உலுக்குகிறது”

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும், அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு எனவும், மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்குப் பிறகு வன்முறைகள் குறைந்திருப்பதைச் சகிக்க முடியாமல் லஷ்கர் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் செய்த பயங்கரம்தான் இது என்றும் அதில் பிரகடனப்படுத்துகிறார் பிரவீன் சுவாமி.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதிலும் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதிமன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசிமானந்தா.

2007 அக்டோபர் 12ம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் மாதம் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம்போல் தி ஹிந்து பத்திரிகையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “பாப்புலர் இஸ்லாமிற்கு எதிரான போர்”

இவர் இங்கே ‘பாப்புலர் இஸ்லாம்’ என்று கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றும் நடைமுறைகள் என்பதாகும். அதாவது தர்காவைப் பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006ல் மாலேகானில் ஒரு தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் அவர்கள்தான் காரணம் என்கிறார்.

இதனை நம்ப வைப்பதற்காக அஜ்மீரில் அடக்கப்பட்டிருக்கும் காஜா முயீனுத்தீன் சிஷ்டியின் வரலாறிலிருந்து தன் புரட்டைத் துவங்குகிறார். இந்தியா முழுவதும் வகுப்புவாதப் போரைத் துவங்கவே இவை நடத்தப்படுவதாக அதில் கூறுகிறார்.

இப்படிக் கூறி முஸ்லிம்களிடையே பிளவையும், பிரிவையும் உருவாக்க அவர் அந்தக் கட்டுரையில் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அஜ்மீர் தர்காவிலும், 2006ல் மாலேகான் தர்காவிலும், 2008ல் மாலேகானில் நடந்த இன்னொரு சம்பவத்திலும் குண்டுகளை வைத்தது நாங்கள்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அசிமானந்தா அம்பலப்படுத்துகிறார்.

“ரிப்போர்ட்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒருபொழுதும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது கிடையாது” என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப் படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலை பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்கரவர்த்தி கூறுகிறார்.

“பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார்” என்கிறார் அவர்.

பிரவீன் சுவாமி அதிகமாகக் கூறும் ஆதாரமே “புலனாய்வுத்துறையினர் இப்படி நம்புகின்றனர்” என்பதுதான்.

உளவுத் துறையினர் பிரவீன் சுவாமி மாதிரி பத்திரிகையாளர்களைப் பயன்படுத்தி ஜிஹாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஊடகங்களில் ஊதிப் பெருக்குவதும், மிகைப்படுத்திக் கூறுவதும், எப்பொழுதும் நாட்டில் பரபரப்பை நிலைநிறுத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் எந்த இஸ்லாமிய பயங்கரவாதமும் இதுவரை 100 சதவீதம் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதத்தைப் பற்றி இதே உளவுத்துறையினர் சாதாரணமாகக் கூட ஊடகத்தில் அலசுவது இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிகையாளர்கள் ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்வதற்கோ, எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இதுதான் பிரவீன் சுவாமியின் நிலை. இதுதான் இந்தியா டுடே போன்ற இந்தியா முழுவதும் படிக்கப்படும் பத்திரிகைகளின் நிலை. இதுதான் மொத்த இந்திய ஊடகங்களின் நிலை.

பிரவீன் சுவாமி போன்ற நச்சுக்கிருமிகள் ஊடகத்துறையிலிருந்து அகற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஜனநயாகத்தின் நான்காவது தூண் தலை நிமிர்ந்து நிற்கும். ஊடகத்துறை செழித்தோங்கும். பத்திரிகை தர்மம் நிலைநிறுத்தப்படும்.

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2011

Saturday 24 February 2018

மறக்க முடியாத இந்திய முஸ்லிம் பெண் சுதந்திரப் போராளிகள்

வீரத்தாய் ந. பியாரி பீபீ

நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். கரூரைச் சேர்ந்த தமிழச்சிதான் இவர். இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும் குறைந்தது அல்ல.

இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.

வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால் இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும். 

இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாஅத்திலிருந்து இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர். மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம் பெண் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாத சில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலீசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது, அவர் மீது கற்களை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர். கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில் பங்கு பெற அனுமதித்தார் மனைவி.

ஸுரய்யா தியாப்ஜி

தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்.

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி. ஆலோசனை தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 
(பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..!)

இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 - 1906)

சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமூக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர் W.C. பானர்ஜி. 
1886ல், இ.தே.கா.-வின் இரண்டாம் தலைவர், பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)

பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)

இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.

இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 

இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

ஸுரய்யா தியாப்ஜி கொடி வரைந்த வரலாறு

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...!)

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..!


மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..! கவனியுங்கள்.

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.

அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத் தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக  ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது...!

தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்:

Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html (official site for national flag)
http://www.proprofs.com/quiz-school/story.php?title=quiz-on-indian-flag
http://flagstamps.blogspot.com/2010/07/quest-for-national-flag-for-india-part_22.html
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)
<http://aicc.org.in/new/past-president-detail.php?id=3>

பேகம் ஹஜ்ரத் மஹல்

1857ல் மாமன்னர் பகதுர்ஷா ஜஅஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சி ராணி லக்குமி பாய், மற்றொருவர் உத்திரப் பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஹஜ்ரத் மஹல் ஒளத் மாநிலத்தின் ராணி, நவாப் வஜீத் அலீ ஷாவின் மனைவியுமாவார். ஒளத் என்பது இப்போது உள்ள உத்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிட்டிஷ்காரர்களால் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமைத்தனத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.

பேகம் என்பது இவரது பெயர். “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நவாபாகிய அவரின் கணவரை பிரிட்டிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தைக் காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கி விட்டு, நாட்டைக் காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம், தேசாபிமானம், தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.

ஒளத் நவாபான வஜீத் அலீ ஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரின் புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரின் தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாதுர்யத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

1857ல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகையிட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும், ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப் பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள். (R.C. Agawal, Constitution Development of India and National Movement, P. 43, 53)

1858 மார்ச் 6ம் தேதி 30.000 துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்து நாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டு வெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

இந்தியாவின் முதலாம் உலகப் போரின் போது முக்கிய தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரைச் சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்துப் பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஸை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.

பின்னர் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் ஆங்கிலேயர்கள் மீண்டும் அம்மாநிலத்தைக் கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னோவை மீண்டும் ஆங்கிலேயர்களே கைப்பற்றினர். இந்தச் சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆங்கிலேயர்களால் பின்வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கிருந்து இடம் பெயர்வது மேல் என்று முடிவு எடுத்தார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துகளையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

அஜிஜன்

இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார் படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்டிஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புபவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.

பி அம்மா (அபாடி பேகம்)

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலீ 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலீ வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாமின் மகன். அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒருவேளை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர். இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

ஜுபைதா தாவூதி

இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷாருக்கு எதிராக “துணிச்சலை” தன் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும்  துணிச்சலை வளர்க்க தன்னை முன்மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.

சதாத் பனோ கிச்லேவ்

இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.

1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர் கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டவுடன் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவால் நிறுவப்பட்ட “ஸ்வராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்திச் சென்ற பெருமையைக் கொண்டவர்.

ஜுலைகா பேகம்

இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார். மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதர் அபுல் கலாம் ஆசாத் 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்திருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே. ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாஃபத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கிக் கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.

ரஜியா காத்தூன்

பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர். இதனால் அவர்களைக் கைது செய்து களப்பணி என்ற இடத்தில் அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.

மேலே குறிப்பட்டவர்களைத் தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, ஃபாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், ஃபாத்திமா இஸ்மாயீல், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் அடைக்கப்பட்டும், பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நாம் சுதந்திர இந்தியாவைக் காண முடிகிறது.

ஹஸன் மஹ்பர் பேகம்

பேகம் ஹஜ்ரத் மஹலின் சம காலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜூன் 18ல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜான்ஸியுடன் வீர மரணம் அடந்தார்.

அமாதுல் ஸலாம்

1938ல் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முஹம்மது அலீ ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் காந்திஜி, “என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் மகிழ்ச்சியாகக் கொடுப்பாள்” என்று கூறியவர், தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.

ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள்

“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

பேகம் சாஹிபா

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஹைதர் அலீ அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீரா ரசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவரின் மனைவியும் ஹைதர் அலீயின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபாவுக்கு கி.பி.1772ல் குழந்தையைப் பெற்றெடுத்து ஏழாம் நாள் காலமானார்.

போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீரா ரசாலிக்கான் சாயபு தன் மனைவியை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்ன பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.

இளையான்குடியின் பீபியம்மாள்

என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.

1922ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்தக் குடிநீர் தொட்டி அருகில் ஏ.எஸ்.டி. இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திரப் போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெரு வரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருது மொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924ம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பப்படி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்ணனூர் ராணி பீபி

கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளரான இவர், பிரிட்டீஷ் படைவீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர்.

1783ம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்தத் திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப் பகுதியை தாங்கள் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர்கள் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 

1784ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கிலேயரின் முகாம் செயல்படத் தொடங்கியது. மீண்டும் 1790ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதரவாக செயல்படப் போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.

உமர் பீபி

1919ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.இ.ஹெச். டயர் என்பவன் தலைமையில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர் பீபியும் பலியானார். இவர் 1864ம் ஆண்டு அமிர்தசரசில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன்.

மரியம் பீவி

திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

பேகம் அயிஜாஸ் ரசூல்

உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909ம் ஆண்டு நவார் சர்ஜூல் பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1937ம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.

பியாரி பீவி

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரின் மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேரும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920ம் ஆண்டிலிருந்து 1943ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரின் மனைவி பியாரி பீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.

ஆதார நூல்கள்:

1. மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்… மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை.
2. விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என். சாமி, மதுரை.
3. மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், சென்னை.