Thursday 28 November 2013

தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும்!

விடியல் வெள்ளி  மார்ச் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2 : 222)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “யா அல்லாஹ்! நல்ல காரியங்களைச் செய்யும்பொழுது நன்மையாக உணர்கிரார்களே, தீய காரியங்களைச் செய்யும் பொழுது, அதனைத் தவறாக உணர்ந்து, அதற்காக பாவமன்னிப்பு கோருகிறார்களே அந்தக் கூட்டத்தில் என்னைச் சேர்த்து விடுவாயாக!” (ஆதாரம்: இப்னு மாஜா)

‘தவ்பா’ என்னும் மனம் வருந்துதலும், இஸ்திஃக்ஃபாரும் (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருதல்) இறை நம்பிக்கையாளர்களிடமுள்ள சிறந்த பண்பாகும். ‘தவ்பா’ என்றால் நமது செயல்பாடுகள் குறித்து மனவருத்தம் கொள்ளுதல் ஆகும். ‘இஸ்திஃக்ஃபார்’ என்றால் அந்த மனவருத்தங்களை வார்த்தைகளில் வடித்தெடுத்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி, கெஞ்சுவதாகும்.

பாவம் செய்தாலோ, அல்லது இறைக் கட்டளையை மீறி நடந்தாலோ மட்டும்தான் தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் செய்ய வேண்டுமென்பதில்லை. நமது குறைகளுக்காகவும் செய்யலாம். அல்லாஹ் நமக்குச் செய்துள்ள அருட்கொடைகளைக் கணக்கிடும்பொழுது, நாம் அவனுக்குச் செய்யும் நன்றியும், வணக்கமும் போதாதவையே என்பது தெள்ளத் தெளிவு.

நமக்கு அல்லாஹ் செய்துள்ள சிறப்புகளையும், மகோன்னதங்களையும் உணர்ந்தால், நமது கீழ்ப்படிதல் கடுகளவுதான் என்பதை நாம் உணர முடியும். நம்மிடம் ‘தக்வா’ எனும் இறையச்சம், பயபக்தி, இறையுணர்வு  எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நம்மிடம் அல்லாஹ்வுக்கு நாம் கடுகளவுதான் நன்றி செலுத்துகிறோம் என்ற உணர்வும் அதிகமாக இருக்கும்.

இதனால்தான் அனைத்து இறைத்தூதர்களும் தவ்பாவையும், இஸ்திஃக்ஃபாரையும் தாங்களும் செய்தார்கள்; பிறருக்கும் செய்யும்படி ஏவினார்கள். இறைத்தூதர்கள் தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் செய்தார்கள் என்பதால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று பொருளில்லை. அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் தூய்மையானவர்கள்; பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை இந்த மனித குலத்திற்கு முன்மாதிரிகளாக அல்லாஹ் அனுப்பியுள்ளான். அல்லாஹ் குறையுள்ள, பாவம் செய்கிற முன்மாதிரிகளை இந்த உலகிற்கு அனுப்பவில்லை.

நபிமார்களின் நாயகராக, இறைத்தூதர்களின் தலைவராகத் திகழ்கிறார்கள் எங்கள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள். நபிகளார் மிஃராஜ் பயணத்திற்காகப் புறப்பட்டு முதலில் பைத்துல் முகத்தஸ் வந்தார்கள். அங்கு அனைத்து நபிமார்களும் ஆஜராகி இருந்தனர். அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இதுவே அவர்கள் அனைத்து நபிமார்களுக்கும் தலைவர் என்பதை உணர்த்துகிறது.

நபிமார்களுக்கெல்லாம் தலைவரான - இமாமான முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் என்ன செய்வார்கள் தெரியுமா? ‘அஸ்ஃதக்ஃபிருல்லாஹ் ‘ என்று 3 தடவை சொல்வார்கள். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன்.)

இந்த ‘இஸ்திஃக்ஃபார்’தான் இறையச்சத்தின் உயர்ந்த நிலையாகும். அவர்கள் செய்தது போல் நம்மையும் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இஸ்திஃக்ஃபார் கேட்கச் சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடைவகள் அல்லாஹ்விடம் பிழை பொறுக்க மன்றாடுவார்கள் என்று நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர்.

இஸ்திஃக்ஃபார் என்பது இன்னொரு விதமாகவும் பயன்படுகின்றது. அது அல்லாஹ்வின்பால் உள்ள அச்சத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. நாம் நமது மனவருந்துதலுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செல்லப் போவதில்லை.  நாம் நமது தவறுகளை, குற்றங் குறைகளை, தோல்விகளை, பாவங்களை அவனிடமே - அவனிடம் மட்டுமே வாக்குமூலமாக கொடுக்கிறோம். (இதற்கு மாறாக கிறிஸ்தவ மதம் ஒரு பெரிய தவறைச் செய்கின்றது. அது கிறிஸ்தவ பாதிரிமார்களிடம் வாக்குமூலம் கொடுக்கச் சொல்கிறது).

நாம் அல்லாஹ்விடமே நமது பாவமன்னிப்பைக் கோருகின்றோம். அவன் மட்டுமே நமது அனைத்து காரியங்களையும், எண்ணங்களையும் அறிந்தவன் என்பதை நாமறிவோம். அவன் மட்டுமே நமது பாவங்களை மன்னிக்க முடியும்; அவன் மட்டும் நமது செயல்பாடுகளின் பின்விளைவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்.

இஸ்திஃக்ஃபார் என்பது அல்லாஹ்வுடன் நாம் செய்யும் உரையாடல் என்பது இதன் மூலம் புலனாகிறது. மேலும் அந்த உரையாடலின் போது நாம் அடக்கத்தின் எல்லைக்கே செல்கின்றோம். தவ்பாவும், இஸ்திஃக்ஃபாரும் அல்லாஹ்விற்குத் தாழ்ந்து, பணிந்து வணகுவதற்கே நம்மை இட்டுச் செல்லும் என்பதை நாம் அப்பொழுது உணரலாம்.

நமது மனதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு இஸ்திஃக்ஃபார் தேவைப்படுகிறது. நாம் பாவத்தில் பிறந்தவர்கள் இல்லை; நாம் பலவீனத்தில் பிறந்தவர்கள். இந்த உளத்தில் நமக்கு பல விஷயங்கள் சோதனைகளாக ஆக்கப்பட்டுள்ளன. நாம் பலவீனத்தால் படைக்கப்பட்டுள்ளதால் இந்தச் சோதனைகளுக்கும் நாம் மிக எளிதாக இரையாகலாம்.

நாம் அதற்கு இரையாகி, ஒரு பாவத்தைச் செய்யும்பொழுது, நமது இதயத்தில் ஒரு கரும்புள்ளி பதிகிறது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஒரு பிரபலாமன நபிமொழி இதனை விளக்குகிறது. அந்தக் கரும்புள்ளி ஏற்பட்ட மனிதன் மனம் வருந்தி, மன்றாடும்பொழுது அந்தக் கரும்புள்ளி நீங்குகிறது.

இல்லாவிடில் அந்தக் கரும்புள்ளி அங்கேயே நிலைத்து நிற்கும்; ஒவ்வொரு பாவமும் அதிகரிக்கும்பொழுது இந்தக் கரும்புள்ளியும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒரே நேரத்தில் அவனது இதயம் முழுவதும் அந்தக் கரும்புள்ளி படர்ந்து விடும்.

இதனை நாம் மனிதர்களிடம் கண்கூடாகக் காணலாம். கொஞ்சம் கொஞ்சமாக கரும்புள்ளி அதிகமாகும் மனிதர்கள் பாவ காரியங்களில் முன்னேறிக் கொண்டிருப்பார்கள். துவக்கத்தில் அவர்களிடம் சில தடைகள் இருக்கும். தவறான காரியங்களை அவர்கள் தயக்கத்துடனேயே செய்வார்கள்; தவறு செய்கிறோம் என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.

அவர்கள் மனம் வருந்தி, திருந்தி நேரான பாதைக்கு வரவில்லையெனில், அந்தத் தவறுகள் அவர்களுக்குப் பழக்கமாகிப் போகும்; சாதாரணமாகிப் போகும். அடுத்து ஒரு நிலை வரும். நல்லொழுக்கங்கள் தீமையாகவும், தீய காரியங்கள் நல்லவையாகவும் மாறிவிடும். அவர்கள் தாங்கள் செய்யும் தீய காரியங்களை ஆதரித்துப் பேசுவார்கள். அதனைத்தான் செய்ய வேண்டும் என்பார்கள். நன்மையான காரியங்களை எதிர்த்துப் பேசுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில், துரதிர்ஷ்டவசமாக, நம்மைச் சுற்றி இது மாதிரி நிறைய மனிதர்களைக் காண்கிறோம். இந்தப் பின்-நவீனத்துவ உலகில், நல்லனவும், தீயனவும் குழம்பிப் போய்க் கிடைக்கின்றன.

ஆங்கில மொழியில் பாவம் (sin) என்ற வார்த்தை ஆடம்பரமான, கவர்ச்சிகரமான, வேடிக்கையான, அதிகம் விரும்பக் கூடிய பொருளாக மாறி வருவது ஒன்றும் வியப்பல்ல. இருப்பினும், நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு நல்ல முடிவு காத்திருக்கிறது.

நாம் எவ்வளவு கறை படிந்தவர்களாக இருந்தாலும் சரி, நமது பாதையை அப்படியே திருப்பிக் கொள்ளலாம். நம்மைப் படைத்த இறைவனிடம், கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளனிடம் மனம் வருந்தி, மன்னிப்புக் கேட்கலாம். உள்ளபடியே அவன்பால் முகம் திரும்பி, அபயம் தேடும் அடியானை மன்னித்து, அருள் பாலிபப்தற்கு அவன் தயாராக இருக்கின்றான்.

“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)

மேலும் நபிமொழி ஒன்று பறை சாற்றுகிறது: “ஒரு மனிதன் ஒரு பாவத்தை செய்து, அதற்காகத் திருந்தி விட்டான் என்றால், அவன் அந்தப் பாவாத்தை ஒரு போதும் செய்யாதவனைப் போல் ஆகிவிட்டான்.”

கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமக்கு இது குறித்து நிறைய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளனர். நாம் அவற்றைக் கற்று, புரிந்து, பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

அவைகளுள் மிக முக்கியாமனது “செய்யிதுல் இஸ்திஃக்ஃபார்”!

ஒரு நபிமொழி இதன் அதிமுக்கியத்துவத்தை இப்படிக் குறிப்பிடுகின்றது: “ஓர் இறைநம்பிக்கையாளர் முழு நம்பிக்கையுடனும், மன சுத்தியுடனும் காலையில் இந்த (செய்யிதுல் இஸ்திஃக்ஃபார் என்ற) பிரார்த்தனையைச் செய்து மாலைக்குள் இறந்து விட்டால், அவர் சுவனம் புகுவார்.”

இவ்வளவு சக்தி படைத்த இந்தப் பிரார்த்தனை நாம் அல்லாஹ்வுக்கு தினசரி கொடுக்கும் உறுதிமொழியாகும். நாம் இந்தப் பிரார்த்தனையை அரபியில் மனனம் செய்ய வேண்டும். இந்தத் துஆவைக் கூறாமல் ஒரு இரவாவது, ஒரு காலைப் பொழுதாவது நம்மை விட்டுச் செல்லாமல் நாம் பார்த்துக் கொள்வோம்.

இந்தத் துஆவின் பொருள் வருமாறு: “யா அல்லாஹ்! நீதான் எனது இரட்சகன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீதான் என்னைப் படைத்தாய். மேலும் நான் உனது அடியான். என்னால் முடிந்தவரை நான் உன்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் கடைப்பிடிப்பேன். என்னால் ஏற்படும் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உனது அருளை என் மீது சொரிவாயாக. நான் எனது பாவங்களை ஒப்புக்கொள்கிறேன். அதனால் என்னை தயைகூர்ந்து நீ மன்னித்து விடு. உன்னைத் தவிர எனது பாவங்களை வேறு யாராலும் மன்னிக்க முடியாது.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 22

நாம் எங்​கே தவறி​ழைக்கி​றோம்?

அரிதாகக் கடிதம் எழுதும் நம்மவர்களும் ஒன்​றை மறந்துவிடுகிறோம். நமக்​கெதிராகச் ​செய்திகள் வரும்பொழுது அவற்றைக் கண்டித்து கடிதம் எழுதும் நாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ​​செய்திகள் வரும்​பொழுது அவற்றை ஆதரித்து கடிதம் எழுத மறந்து விடுகி​றோம்.

இங்​கேதான் நாம் தவறி​ழைக்கி​றோம். ஒரு முஸ்லிமின் கருத்​தை ஒரு பத்திரி​கையாளர் ஆதரித்து எழுதுகிறார் என்றால் நாம் அந்த எழுத்தாளருக்கு நமது நன்றி​யையும், பாராட்​டையும், மகிழ்ச்சி​யையும்​தெரிவிக்க​வேண்டும்.

எந்தப் பக்கமும் சாராமல் நடுநி​லையான சிந்த​னை​ கொண்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்​​​கெதிராக அநியாயமாக தாக்குதல்கள்​ ந​டை​பெறும்பொழுது அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து ஒரு நன்றியோ, பாராட்​​டோ அவர்களுக்குக் கிடைப்பதில்​லை.

அவருக்கு ஆதரவாக கருத்துகள் வந்திருந்தால் ஆசிரியர் குழு விவாதங்களில் அ​​வை அவருக்கு உதவி புரியும்.

“யாரு​​மே உங்கள்கருத்​தை ஏற்கவில்​லை” என்று கூறி அவரது கருத்துகள் நிராகரிக்கப்படாது.

​தொ​லை​​பேசியில் அ​ழையுங்கள்

அ​மெரிக்க யூதர்கள் இதில் கில்லாடிகள். அவர்களுக்​கெதிராக​வோ, ஆதரவாக​வோ ஏதாவது ஒரு ​செய்தி வந்தால் அந்தப் பத்திரி​கை அலுவலகத்திற்கு ​தொ​லை​​​பேசி அ​ழைப்புக​ளை அள்ளிக் குவித்து திணறடித்து விடுவார்கள். என​வே நீங்களும் ​பேசுங்கள். உங்கள் நண்பர்க​ளையும் ​பேசச் ​சொல்லுங்கள்.

​நேரில் ​செல்லுங்கள்

முஸ்லிம்களுக்​​கெதிராக மிகக் கடு​மையாக எழுதும் பத்திரி​கையாளர்களை ​நேரில் சந்தித்து விளக்கங்க​ளை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் ​சொன்னால் கல் மனமும் க​ரைய வாய்ப்புள்ளது.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 21

சென்ற தொடரில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதற்கு நாம் க​டைப்பிடிக்க ​வேண்டிய 9 அம்சங்க​ளைப் பார்த்​தோம். இனி அதன் ​தொடர்ச்சியாக அடுத்த அம்சங்க​ளைப் பார்ப்​போம்.

10. எந்தச்​ செய்தி குறித்து மடல் ​வ​ரைகி​றோ​மோ அந்தச் ​செய்தி​யை முதலில் குறிப்பிட​வேண்டும். பாராட்டுதலுக்குரிய அம்சங்கள் ஏதேனும் அதில் இடம்​பெற்றிருந்தால் முதலில் அதற்காக நமது பாராட்டுக​​ளையும், மகிழ்ச்சி​யையும் ​தெரிவிக்க​வேண்டும். அது இல்​லை​யெனில் கடிதத்​தை உடன்பாடான விமர்சனங்க​ளைக் ​கொண்டு (Positive Remarks) ஆரம்பியுங்கள். ஆரம்பம் இந்தமாதிரி அ​மைந்தால் அது அவர்களின் உள்ளங்களில் உங்கள் கடிதத்​தைக் குறித்த நல்​லெண்ணத்​தை ஏற்படுத்தும். உங்கள் விமர்சனங்க​ளை ஏற்றுக்​கொள்ளக்கூடிய மனப்பக்குவத்​தை அவர்களுக்கு அளிக்கும்.

11. கடிதம்எழுதும் ​அ​மைப்பும் நல்ல வி​ளை​வை ஏற்படுத்தும். அஞ்சலில் அனுப்புவதாக இருந்தால் அந்தக்கடிதம் அழகான எழுத்துக​ளைக்​ கொண்டிருக்க​ வேண்டும். நமது ​கை​யெழுத்து ​மோசமாக இருக்குமானால்​டைப் ​செய்து அனுப்ப​வேண்டும். நல்ல தா​னளப் பயன்படுத்த​வேண்டும்.

12. கடிதம்ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க​வேண்டும். ​சொல்ல வரும் அ​னைத்து விஷயங்க​ளையும் அதி​லே​யே உள்ளடக்கி விட​வேண்டும்.

13. உங்கள் முழு முகவரி, ​ தொ​லை​பேசி எண்,…. இத்தியாதிக​ளைத் ​தெளிவாகக் குறிப்பிடவும்.

14. உங்கள்​ பெய​ரை ​வெளியிட விரும்பவில்​லை​யெனில், அத​னைக் குறப்பிட்டு விடவும்.

இந்துத்துவ  ஃபாசிஸ்டுகள் பத்திரி​கைகளுக்குக் கடிதம் எழுதுவதில் ​கை​தேர்ந்தவர்கள். அவர்களுக்​​​​​கெதிராக ஒரு​செய்தி ஒரு பத்திரிகையில் வந்துவிட்டால் ​போதும். அந்தப் பத்திரி​கை அலுவலகத்​தை கடித வெள்ளத்தால் மூழ்கடித்து விடுவார்கள். அந்தச் ​செய்தி​யை ​வெளியிட்டது தவறோ என்று அந்தப் பத்திரி​கை​யைச் சார்ந்தவர்கள் எண்ணுமளவுக்கு கண்டனக் கடிதங்க​ளைக் குவித்துவிடுவார்கள்.

ஆம்! ஃபாசிசப் பரிவாரக் கும்பல் இதில் தனிக் கவனம் ​செலுத்துகின்றது. பத்திரி​கைகள் ​வேறு வழி​யே இல்லாமல் அந்தச் ​செய்திக்கு மறுப்பு​​வெளியிடுமளவுக்கு நி​லை​மை​யை மாற்றி விடுவார்கள். அ​தே​போன்று கடிதம் எழுதுவதிலும் அவர்கள் கில்லாடிகள். கவனமாக​வே வார்த்தைக​ளைக் ​கையாள்வார்கள்.

அவர்களுக்​கெதிரான ​செய்திகளுக்கு மட்டும்தான் அவர்கள் கடிதங்கள் மூலம் கண்டனங்க​ளைத் ​தெரிவிப்பார்கள் என்றில்​லை. இஸ்லாத்திற்கு ஆதரவாக, முஸ்லிம்களின் முன்​னேற்றங்களுக்காகப் பாடுபடும் இயக்கங்களுக்கு ஆதரவாக ஏதாவது ​செய்திகள் பத்திரி​கைகளில் இடம்​பெற்றாலும் அவர்கள் விடமாட்டார்கள்.

கண்டனக் கடிதங்க​ளை அள்ளிக் குவித்து விடுவார்கள். இன்​னொரு மு​றை இந்த மாதிரி​ ​செய்திக​ளை ​வெளியிடக்கூடாது என்று அந்தப் பத்திரி​கை​யைச் சார்ந்தவர்கள் எண்ணுமளவுக்கு நி​லை​மை​யை மாற்றி விடுவார்கள்.

எதிரிகள் இந்த அளவுக்கு மீடியா குறித்து உஷாராக உள்ளார்கள். நம்மவர்க​ளோ அத​னைப் பற்றி எந்தக் கவ​லையும் படாமல் இருக்கிறார்கள்.

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 20

மீடியாவை எதிர்கொள்வது எப்படி?

மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று காண்போம்.

ஒரு நாட்டின் பணிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மீடியா. அதனை நாம் தவிர்த்துவிட்டு வாழவே முடியாது. ஆதலால் அதனை எப்படி எதிர்கொள்வது, எப்படி பயனுள்ள வகையில் நடத்துவது, எப்படி நமக்குச் சாதகமாக மாற்றுவது என்பதைப் பற்றித்தான் நாம் ஆலோசிக்க வேண்டும்.

முதலில் ஒன்றை நாம் மனிதல் இறுத்த வேண்டும். மொத்த மீடியாவும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிரானது அல்ல. அப்படி யாருக்கும் எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.

நேர்மையான, நாணயமான பத்திரிகையாளர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். கண்ணியமான ஊடகவியலாளர்கள் கணிசமாகவே உள்ளனர். அவர்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கின்றனர். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.

அச்சு ஊடகங்களிலும், மின்னணு ஊடகங்களிலும் உள்ள செய்தி ஆசிரியர்கள் உங்கள் கருத்துகளைக் கேட்க ஆர்வமாகவே உள்ளனர்.

நீங்கள் அவர்களுடன் பேசலாம், ஒரு செய்தியின் மறுபக்கத்தைச் சொல்லலாம், அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியிலுள்ள தவறுகளின் பக்கம் அவர்களது கவனத்தைத் திருப்பலாம்.

இதற்கு நல்ல பல வழிகள் உள்ளன. இந்த வழிகள் மூலம் நாம் மீடியாவை அழகிய முறையில்எதிர்கொள்ளலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அழிக்க முற்படலாம்.

ஆசிரியருக்குக்கடிதம் (Letters to the Editor)

அச்சு ஊடகத்தைப் பொறுத்தவரை அதனை எதிர்கொள்வதற்கு முதற்படி, ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதுதான்.

ஆனால் முஸ்லிம்களிடமிருந்து வரும் கடிதங்களை அச்சு ஊடகங்கள் பிரசுரிப்பதில்லை என்றொரு புகார் உண்டு. ஆனால் அது 100 சதவீத உண்மையல்ல.

பத்திரிகைகளில் வரும் செய்திகள் குறித்து ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பொழுது ஆசிரியர் குழு கண்டிப்பாக அதனைப் படிக்கவே செய்யும். ஏனெனில் அனைத்துப் பத்திரிகைகளும் வாசகர்களின் கருத்துகளை அறிவதற்கு மிகுந்த ஆவலாகவே உள்ளன. வாசகர்தான் அவற்றின் குரு. வாசகர்களின் கருத்துகளுக்கேற்பதான், வாசகர்களின் ருசிக்கேற்பதான் அவர்கள் பத்திரிகைகளை வடிவமைக்கிறார்கள்.

எனவே நாம் எழுதும் கடிதங்கள் பிரசுரிக்கப்படுகிறதோ இல்லையோ, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவுக்கு அது சென்று விழும். உங்கள் கருத்துகள் அவர்களைச் சென்றடைந்து விடும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களை மனதிற்கொள்வது நன்மைபயக்கும். அவையாவன:

1. ஒரு செய்தியால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர் அந்தச் செய்திக்கு மறுப்புக் கடிதம் எழுதினால்அது சாலப் பொருத்தமாக இருக்கும். அந்தக் கடிதத்தின் மதிப்பு தானாகக் கூடிவிடும்.

2. கடிதத்தில் விஷயத்தை நேரடியாகவும், தெளிவாகவும் எழுதிவிட வேண்டும். உங்கள் வாதங்களுக்கு உறுதுணையாக ஆதாரங்கள் இருந்தால் அதனைக் குறிப்பிட வேண்டும். ஆவணங்கள் இருந்தால் அதனை இணைத்து அனுப்பவேண்டும். அந்த ஆவணங்கள் அவர்கள் எங்கும் பரிசோதிக்க முடிகிறதாக இருக்கவேண்டும்.

நீங்கள் கடிதம்தான் எழுதுகிறீர்கள். கட்டுரை அல்ல. எனவே கடிதங்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கவேண்டும். அந்த மாதிரி கடிதங்களைப் படிப்பதையே அவர்கள் விரும்புவார்கள்.

3. ஒரு புதிய கருத்தைச் சொல்ல வருகிறேன் என்று சுற்றி வளைத்து இழு இழு என்று இழுக்கக் கூடாது. பத்திரிகையாசிரியர்கள் எப்பொழுதும் பணியின் அழுத்தத்தால் பரபரப்பாக இருப்பார்கள். எனவே அவர்கள் நீண்ட நெடிய கடிதத்தைவிட சுருக்கமான, தெளிவான கடிதங்களையே விரும்புவார்கள்.

4. கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஆசிரியர் குழுவுக்கு எண்ணம் வரவேண்டும். அந்த வகையில் நாம் கடிதத்தை வரைந்திருக்க வேண்டும். அந்த எண்ணம் வந்துவிட்டால் அந்தக் கடிதத்திற்கு மதிப்பளித்து, கருத்தூன்றிப் படிப்பார்கள்.

5. வெளியிடப்பட்ட செய்தி ஒரு தனி நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அங்கத்தவரையோ எப்படி பாதித்தது என்பதற்கு நியாயமான காரணங்களைக் குறிப்பிட வேண்டும்.

6. பத்திரிகைத்துறையில்பழமொழி மாதிரி ஒரு சொல் உண்டு. அதாவது “முழுமையான உண்மை என்பது முழுமையான பாதுகாப்பு”.

ஒரு ஆசிரியருக்குஅவர் வெளியிட்ட செய்தி முழுமையான உண்மை என்பதில் உறுதி இருந்தால் உங்கள் கடிதத்தைப் பிரசுரிப்பதற்கோ, மறுப்பதற்கோ அவருக்கு உரிமை உண்டு.

7. கடிதம் வரையும் பொழுது கோபப்படாதீர்கள். கொந்தளிக்காதீர்கள். கொப்பளிக்காதீர்கள் வாயில் வந்தவைகளை. அசிங்கமாகத் திட்டி எழுதாதீர்கள். பெயர்களைச் சொல்லி அழைக்காதீர்கள். நீங்கள் ஆசிரியருடன் சண்டை போட வரவில்லை என்பதை நினைவில் வையுங்கள். சாங்கியமான சொற்களைப் பயன்படுத்தி சாந்தமாக எழுதுங்கள்.

8. ஆசிரியருக்கும், பத்திரிகைக்கும் தேவையற்ற, எரிச்சலூட்டும் அடைமொழிகளைக் கொடுக்காதீர்கள். முஸ்லிம்களிடமிருந்து வரும் பல கடிதங்கள் பிரசுரிக்க மறுக்கப்படுவதற்கு இதுவே மிக முக்கிய காரணம். இம்மாதிரி கடிதங்கள் பகைமையை வளர்க்கவே உதவும்.

9. எந்தச் செய்திக்கு மறுப்பு எழுதுகிறீர்களோ அந்தச் செய்தி இடம் பெற்ற பத்திரிகையின் தேதி, பக்கம் ஆகியவற்றை முதலிலேயே குறிப்பிட்டு விட வேண்டும். (உதா: தாங்கள் …………………………… தேதியில்…………………….. பக்கத்தில் “…………………………………………….” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி குறித்துநான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.)

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 19

2002ல் நடந்த குஜராத் இனப் படுகொலையின் பொழுது அங்குள்ள சில நாளிதழ்கள் எவ்வாறெல்லாம் பொய்ச் செய்திகளை வெளியிட்டு கலவரத் தீயை மூட்டின என்று பார்த்து வருகின்றோம்.

மார்ச் 7 அன்று குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒருபெட்டிச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “ஐ.எஸ்.ஐ, குஜராத்தில் பிரச்னைகளை உருவாக்குகிறது. கலோட்டாவும், அவருடன் பணி புரிபவர்களும் இதில் முக்கிய தொடர்புள்ளவர்கள். கொல்கத்தாவில் கைதான HUJI என்ற அமைப்பின் துணைத் தளபதி இந்தச் சதித் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.”

இந்தச் செய்தியில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் பெரும் துயரத்தை உண்டுபண்ணிய அந்த நாளில் பயணித்தவர்களை “ராம பக்தர்கள்” என்று பல தடவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 6ம் தேதி இப்படி ஒரு செய்தி வெளிவந்தது: “கோத்ரா ரயில் பெட்டியை எரிப்பதற்கு முற்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டது. ரயில் பெட்டியின் வேக்யூம் குழாய்களை எப்படி துண்டிப்பது என்று ஒரு ரயில்வே அதிகாரி மூலம் கலோட்டா தெரிந்து கொண்டார்.”

ஆனால் இந்தச் செய்திக்கு எந்த ஆதாராத்தையும் அந்த நாளிதழ் குறிப்பிடவில்லை.

மார்ச் 16ம் தேதி நாளிதழில் பக்கம் 1ல் இவ்வாறு ஒரு செய்திக்கு தலைப்பிடப்பட்டிருந்தது: “ஃபதேஹ் கஞ்ச் மஸ்ஜிதிலிருந்து பயங்கர துப்பாக்கிச் சூடு!”

ஆனால் இது முற்றிலும் பொய்யாகப் புனையப்பட்ட செய்தி.

முஸ்லிம்கள் ஹிந்துக்களைத் தாக்குவதற்காக பெருமளவில் ஒன்று சேர்ந்து கொண்டிருந்ததாக பலப்பல கதைகள் செய்திகளாக வந்தன.

சமீப காலங்களாக நடந்து வரும் இனப் படுகொலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் நமக்கொரு உண்மை விளங்க வரும். அதாவது மீடியாவில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டவர்களைத் தாக்குதல் புரிபவர்களாகவும், அநியாயமாகத் தாக்கி அக்கிரமம் புரிபவர்களை பாதிப்படைந்தவர்களாகவும் சித்தரிக்கும் ஒரு தந்திரத்தைக் கையாண்டு வருவதை நாம் உணரலாம்.

மார்ச் 24ம் தேதி குஜராத் சமாச்சார் நாளிதழில், பக்கம் 1ல் வெளிவந்த ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிடப்பட்டிருந்தது: “சாட் கைவால் கோயிலுக்கு ஆபத்து. சர்சா கோவிலும், பாடசாலாவும் ஆபத்தில் இருக்கின்றன. அவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்படும் அபாயத்தில் உள்ளன.”

அதே நாளிதழில் பக்கம் 2ல் வெளிவந்த ஒரு செய்திக்குத் தலைப்பு இது: “பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குவதற்கு வாய்ப்பு. உளவுத் துறையினருக்குக் கிடைத்த செய்தி. மத, கல்வி நிறுவனங்களுக்குக் குறி. அனைத்து மாவட்ட துணை கண்காணிப்பாளருக்கும் எச்சரிக்கை.”

மார்ச் 26ம் தேதி, குஜராத் சமாச்சார் நாளிதழில் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு ஒரு செய்தி வந்திருந்தது: “சபர்மதி எக்ஸ்பிரஸ் சம்பவம் முற்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டது. நிறைய இளைஞர்கள் கொடும் குற்றங்களைப் புரிவதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பிலாலின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.”

இந்தச் செய்திகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. இப்படி பொய்ச் செய்திகளை அங்குள்ள நாளிதழ்கள் பரப்பிக் கொண்டே இருந்தன.
[Concerned Citizens Tribunal (அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்) வெளியிட்ட Crime Against Humanity என்ற நூலிலிருந்து. இந்தநூலின் முதல் பாகத்தை "மனித இனத்திற்கெதிரான குற்றம்" என்ற பெயரில் இலக்கியச் சோலை தமிழில் வெளியிட்டுள்ளது.]

இந்திய மீடியா உலகம் வேண்டுமென்றே சொல்லும் பொய்களையும், புரட்டுகளையும் நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆயுதங்களைக் கடத்துதல் என்ற பொய்ச் செய்தியாகட்டும், ஹவாலா பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற செய்திகளாகட்டும், அந்தச் செய்திகளின் பாணி ஒரே மாதிரியாக இருக்கும். காவல்துறை கூறும் கதைகள் அப்படியே வாந்தி எடுக்கப்பட்டு உண்மை போல் செய்திகளாக வெளிவரும். இதுதான் இந்திய மீடியாவின் இன்றைய நிலை.

ஆனால் இந்த மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 18

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் மீடியா எப்படி தவறாகப் பிரச்சாரம் செய்தது என்பதை நாம் பார்த்து வருகின்றோம்.

இந்த இனப்படுகொலை நடந்து முடியும் வரை சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவுமே சித்தரித்தது.

முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதிகளை “குட்டி பாகிஸ்தான்” என்று அது சித்தரித்தது. 2002 மார்ச் 7 அது ஒரு செய்தியை வெளியிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை கராச்சியோடு தொடர்பு படுத்தி அந்தச் செய்தி வெளிவந்தது. கராச்சியில் கோத்ரா என்ற பெயரில் ஒரு பகுதி இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மார்ச் 1ம் தேதி அந்த நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி இப்படிக் கூறியது: நவயார்ட் பகுதியில் ஒரு “குட்டி பாகிஸ்தான்” இருக்கிறது.

இது போன்ற பகுதிகள் நகருக்குள் உருவாக்கப்படுவதாகவும், உத்திரப் பிரதேசத்திலிருந்து இங்கே குடிபெயர்ந்து வந்த பணியாட்களிலுள்ள கிரிமினல்களைப் பற்றி காவல்துறை கவனிக்கவேண்டும் என்றும் அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குஜராத்தில் இன்னொரு முன்னணி நாளிதழாக விளங்குகிறது குஜராத் சமாச்சார். இதுவும் முஸ்லிம் இனப்படுகொலையில் பகைமைத் தீயை மூட்டுவதில் பெரும் பங்கு வகித்தது. ஆனால் சந்தேஷ் நாளிதழ் போல் தொடர்ந்து பகைமைச் செய்திகளை வெளியிடாவிட்டாலும், அவ்வப்பொழுது விஷமச் செய்திகளை வெளியிட்டது குஜராத் சமாச்சார். அத்தோடு வகுப்புவாத நல்லிணக்கம் வேண்டும் என்று வலியுறுத்தியும் அதில் கட்டுரைகள் வெளிவந்தன.

பிப்ரவரி 28 அன்று அந்த நாளிதழில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வந்தது: “3-4 இளம் பெண்கள் கடத்தல்!”
இந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் அந்த நாளிதழ் வெளியிடவில்லை. அதே தேதியிட்ட நாளிதழில் பக்கம் 10ல் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. 10 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கவ்ஷிக் படேல் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் பக்கத்தில் 4 பெண்கள் என்றும், பக்கம் 10ல் 10 பெண்கள் என்றும் செய்திகள் வந்திருந்தன. அந்தச் செய்தியை வெளியிட்ட நிருபர் இந்த முரண்பாடுகளைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி குறித்து அவர் காவல்துறை ஐ,ஜி.யிடமோ, ரயில்வே போலீசிடமோ உறுதி செய்யவுமில்லை.

கடத்தப்பட்ட பெண்களின் பெயர்களும் அந்தச் செய்தியில் வெளியிடப்படவில்லை. கடத்தல் குறித்து வேறு எந்தத் தகவலும் அந்தச் செய்தியில் இடம் பெறவில்லை.  பக்கம் 2ல் வந்த இன்னொரு செய்தியில் சுஷ்ரி ஹிடால்பென் என்ற நேரடி பெண் சாட்சி வதோதராவுக்கு ரயில் வண்டி வந்தடைந்தவுடன் கூறியதாக ஒரு தகவல் வந்தது. “அஷ்ரல்வாடி என்ற பகுதியைச் சார்ந்த இளம் பெண்கள் எங்களுடன் ரயிலில் பயணித்தனர். அவர்களைக் காணவில்லை” என்று அவர் அந்தச் செய்தியில் கூறியிருந்தார்.
மார்ச் 6ம் தேதி குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒரு தலைப்பு இப்படிக் கூறியது: “ஒரு பெட்டியை அல்ல, மொத்த ரயில் வண்டியையும் எரிப்பதற்குத்தான் திட்டம் தீட்டப்பட்டது.”

அதே பக்கத்தில் வந்த ஒரு பெட்டிச் செய்தி இவ்வாறு கூறியது: “இரண்டாவது தாக்குதலுக்கு ஒரு கும்பல் தயாராக இருக்கிறது.”

இங்கேயும் செய்தியின் ஆதாரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அந்தச் செய்களின் தொனி அனைத்துமே கவனமாக புலனாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுவதாக இருந்தது.

மீடியா உலகில் முஸ்லிம்கள்–17

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலை நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவிட அங்குள்ள மீடியா செய்த தவறான பிரச்சாரம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. மார்ச் 16ம் தேதி வதோதராவில் மச்சிப்பித் என்ற இடத்தில் 4 முஸ்லிம் இளைஞர்களைப் போலீஸ் பிடிக்கிறது.

அவர்கள் டாடா சுமோ வாகனத்தில் ஆயுதங்களை வைத்திருந்தார்களாம். ஆனால் இந்தச் செய்தியை சந்தேஷ் நாளிதழில் படிக்கும் ஒருவருக்கு அந்த வாகனம் முழுவதும் ஆயுதங்களை அந்த இளைஞர்கள் கடத்திக்கொண்டு வந்ததாகத் தோன்றும்.

உண்மை என்னவென்றால், அந்த இளைஞர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். அதற்கான லைசன்சும் வைத்திருந்தார்.

இதே மாதிரி வதோதராவில் உள்ள தண்டல்ஜா என்ற இடம் பற்றிய இன்னொரு செய்தியும் தவறாக வெளிவந்தது. அந்த இடத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அத்தோடு அந்த இடத்தில் மிகப் பெரிய நிவாரண முகாமும் உள்ளது. அங்கே நகரத்திலிருந்தும், இன்னபிற இடங்களிலிருந்தும் பயந்தோடி வந்த 5000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். அந்த இடத்தைப் பற்றி சந்தேஷ் நாளிதழ் வெளியிட்ட  தவறான செய்தி வதந்திகளைப் பரப்பவும், கலவரத்தைப் பரப்பவும் முக்கிய காரணமாக அமைந்தது.

மார்ச் 18 அன்று சாந்தி அப்ஜோவம் என்ற அரசு சாரா அமைப்பு சந்தேஷ் நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரைக்கு மறுப்பு வெளியிடுமாறு அந்த நாளிதழை வலியுறுத்தியது. தண்டல்ஜாவில் பரபரப்பு நிலவுவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்தேஷ் நாளிதழ் தொடர்ந்து வகுப்புவாத் தீயைக் கொளுந்து விட்டெரிவதற்கான அத்தனை தந்திரங்களையும் செய்து கொண்டிருந்தது. மக்கள் உயிருடன் கொளுத்தப்படுவது போன்ற கோரமான செய்திகளை கொட்டை எழுத்துகளில் வெளியிட்டது. எரிக்கப்பட்ட, சிதைந்துபோன உடல்களின் கொடூரமான படங்கள் தொடர்ந்து முதல் பக்கத்தில் வருகிற மாதிரி அது பார்த்துக்கொண்டது. அல்லது உள்ளூர் செய்திகளுக்கென்று ஒதுக்கப்பட்ட கடைசிப் பக்கத்தில் அவை வருகிற மாதிரி பார்த்துக்கொண்டது.

மாநிலத்தில் இனப்படுகொலை தொடங்கிய முதல் வாரத்தில், சந்தேஷ் நாளிதழ் எரிக்கப்பட்ட கோரக் காட்சிகளின் படங்களை பல வண்ணங்களில் வெளியிட்டது. திரிசூலத்தை ஏந்திக்கொண்டிருக்கும் ‘ராம சேவகர்களின்’ படங்களை முதல் வாரத்தில் முதல் பக்கங்களில் வெளியிட்டது.

இந்தப் படங்கள் முஸ்லிம்களைப் பீதிவயப்படுத்தியது. முஸ்லிம்கள் இந்தப் படங்களைப் பார்த்து கதிகலங்கிப் போனார்கள். அத்தோடு இந்தப் படங்கள் இரு வகுப்பாருக்கிடையில் பகையை வளர்க்க பெரிதும் உதவின.

வகுப்புவாதக் கலவரங்கள் நடக்கும்பொழுது அதில் பங்கெடுக்கும் சமூகத்தாரின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது பத்திரிகை தர்மம். ஆனால் இந்தத் தர்மத்தை சந்தேஷ் நாளிதழ் மீறியது.

உதாரணத்திற்கு அது வெளியிட்ட ஒரு செய்தி: “மத வெறியர்களின் ஒரு கும்பல் (முஸ்லிம்கள் என்று வாசிக்கவும்) பழங்குடியினப் பெண்களைக் கடத்திக் கொண்டு போனார்கள். இது மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.”

இன்னொரு செய்தியை அது இப்படி வெளியிட்டது: “மதவெறியர்கள் (முஸ்லிம்கள் என்று வாசிக்கவும்) ஒரு கோயிலைத் தாக்க முயற்சி செய்தார்கள். இது வதோதரா நகரத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இது பக்தர்களை (ஹிந்துக்கள் என்று வாசிக்கவும்) தங்கள் வழிபாடுத்தலத்தைப் பாதுகாக்கும் முகமாக வீதிக்கு வர வைத்தது.”

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 16

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் அங்குள்ள மீடியாக்களின் பாரபட்சமான பங்கு குறித்து நாம் பார்த்து வருகின்றோம். குஜராத் இனப்படுகொலை குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் என்ற மனித உரிமை அமைப்பு “மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குஜராத் இனப்படுகொலை குறித்து வெளிவந்த செய்தியைத்தான் நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம்.

அந்த அறிக்கையின் தொடர்ச்சி வருமாறு:

மீடியாவில் வந்த செய்திகளை வைத்தும், இந்தக் குழுமத்திற்குக் கிடைத்த ஆவணங்களை வைத்தும் பார்க்கும் பொழுது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குக் காரணம் என்று சொல்லப்பட்டவர்கள் “தேசவிரோத பாகிஸ்தானிகள்” என்று அழைக்கப்பட்டார்கள். இப்படி அழைக்கப்படுவதற்கு குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஸடாஃபியா தான் காரணம், இவர்தான் “தேசவிரோத பாகிஸ்தானிகள் தான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குக் காரணம்” என்று பொய்ச் செய்தியைப் பரப்பியவர். இவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரும் ஆவார்.

அவர் கூறுகிறார்: “கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கன் சென்டரின் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் போல கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் ஒரு பயங்கரவாத நடவடிக்கையே. இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகள் ஒரே ஆள் தான்.”

இப்படிச் சொல்லிவிட்டு அவர் இவ்வாறு தைரியமாக மிரட்டுகிறார்:
“இந்தச் செயலைச் செய்தவர்களுக்கு நாம் தக்க பாடம் புகட்டுவோம். யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் இந்தச் செயலைச் செய்த சக்திகள் இனி ஒரு பொழுதும் இதுமாதிரி திரும்பச் செய்ய தைரியம் வராத அளவுக்கு நாம் உறுதிப்படுத்துவோம்.”

மார்ச் 7 அன்று சந்தேஷ் நாளிதழ் மோசமான தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஹஜ் கிரியையை முடித்துவிட்டு திரும்ப வரும் இந்திய முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கெதிரான “பயங்கரவாதிகளாக” இருக்க வாய்ப்பு உள்ளது என்பதே அந்தச் செய்தியின் சாராம்சம். அந்தச் செய்தியின் தலைப்பு இதுதான்: “ஹிந்துக்களுக்கு ஆபத்து! அவர்கள் மேல் பயங்கரவாதிகளின் ஆதரவுடன் தாக்குதல் நடக்கலாம்! திரும்ப வரும் ஹாஜிகளிடம் நடுங்க வைக்கும் தாக்குதல் திட்டம்!”

அந்தச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் அந்நிய நாட்டுப் பொருளாதார உதவியுடன் வாங்கப்பட்ட ஆர்.டி.எக்ஸ். குண்டுகளைப் பயன்படுத்துவார்கள். அல்லது குண்டுகளை எறிவார்கள். அல்லது விமானங்களைக் கடத்துவார்கள்.
கோத்ராவில் கரசேவகர்களின் மேல் தாக்குதல் தொடுத்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.தான் என்று புலனாய்த்துறை நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்தத் தேசவிரோதிகள் தற்பொழுது தலைமறைவாகிவிட்டார்கள். ஆனால் தாக்குதலுக்காக தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஹஜ் முடித்துவிட்டு ஹாஜிகள் சவூதி அரேபியாவிலிருந்து திரும்ப வந்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடக்கலாம். ஹாஜிகள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்காகவே இந்தத் தாக்குதல்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. 1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகள் போல் மிகப் பிரம்மாண்டமாக இந்தத் தாக்குதல்கள் நடைபெறும் என்று உளவுத்துறையின் எஸ்.பி. சஞ்சீவ் பட் கூறுகிறார்.

கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து குறிப்பிடும் பெரும்பாலான அனைத்துச் செய்திகளும் இப்படியே துவங்கின: “காட்டுமிராண்டித்தனமான கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிர்வினையாக நடந்த வகுப்புக் கலவரத்தில்…”

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அவர்கள் கொடுக்கும் உணர்வைத் தூண்டும் அடைமொழிகள் அதன் பிறகு மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கொடுக்கப்படுவதில்லை.
குஜராத் முழுவதும் கொடூரமாக நடத்தப்பட்ட இனப்படுகொலையை குஜராத் அரசு கூறுவது போலவே சந்தேஷ் நாளிதழும் கோத்ரா சம்பவம் நடந்ததன் எதிர்வினை தான் என்று தெளிவாகக் கூறிவந்தது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 15

குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி தொடர்கிறது:
பிப்ரவரி 28 அன்று அதிகமாக விற்பனையாகும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத் செய்தித்தாள்கள் கோத்ரா ரயில் எரிப்பில் “அந்நியக் கைகள்” இருக்கின்றன என்ற அரசின் பொய்ச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

3-4 வாரங்கள் கழித்து இந்தச் செய்தி மகா பொய்யானது என்று மீடியாவில் கசிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அனைத்து அக்கிரமங்களும் அரங்கேறி அடங்கியிருந்தன.

1998ல் பா.ஜ.க. அரசு மீண்டும் குஜராத்தில் அரியணையில் அமர்ந்ததும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு செய்தித்தாள்களும் வகுப்புவாத வெறியைத் தூண்டி விட்டுக்கொண்டே இருந்தன. இந்த இனப்படுகொலையில் சந்தேஷ் நாளிதழின் பங்கு மிகக் கீழ்த்தரமாக இருந்தது. ஆனால் குஜராத் டுடே, ஸத்பார், குஜராத் மித்ரா ஆகிய நாளிதழ்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டன.

கோத்ரா ரயில் எரிப்பு நடந்த அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 28 அன்று சந்தேஷ் நாளிதழ் ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எரிந்த பெட்டியின் படத்தைப் போட்டு இவ்வாறு கொட்டை எழுத்தில் தலைப்பிட்டிருந்தது: “50 ஹிந்துக்கள் உயிருடன் எரிப்பு!”

அதற்குக் கீழே எரிந்த உடல்களின் கோரப் படங்களை பல வண்ணங்களில் வெளியிட்டிருந்தது. மீடியா தர்மத்தை மீறிய மிகப் பெரிய செயல் இது.
எரிந்த உடல்களின் கோரப் படங்களைத் தாங்கிய சந்தேஷ் நாளிதழை ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்க்தள் குண்டர்கள் பல பிரதிகளைப் போட்டு கிராமப்புற மக்களிடம் பரவலாக வினியோகித்தனர்.

சாதாரண மக்களைக் கோபமூட்டி, தொடர்ந்து நடந்த இனப் படுகொலையில் பங்கெடுக்க வைக்கவே இப்படி வினியோகிக்கப்பட்டது.
அதே நாளிதழில் இன்னொரு தலைப்புச் செய்தியும் இவ்வாறு இடம் பெற்றிருந்தது: “ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கடத்தப்பட்டவர்களில் இரண்டு இளம் ஹிந்துப் பெண்களின் உடல்கள் சிதிலமடைந்த நிலையில் கலோலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டன!”

இந்தத் தலைப்பின் கீழ் பின்வரும் செய்தி இடம் பெற்றிருந்தது:  “வதோதரா, வியாழன்: நேற்று ஸபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில், அதிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்கள் கலோலில் ஒரு குளத்துக்கருகில் சிதிலமடைந்த நிலையில், கோரமாக உருமாற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.” இந்தச் செய்தி ஏற்கனவே பதட்டமாக இருக்கும் பாஞ்ச்மஹால் மட்டுமல்லாமல் மொத்த மாநிலத்திலுமே எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது.
மனிதாபிமானமற்ற இந்தக் கோரச் செயலின் உச்சம் என்னவெனில் அந்த இரண்டு இளம் பெண்களின் மார்பகங்களும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சடலங்களின் நிலையைப் பார்க்கும்பொழுது அந்த இரு இளம் பெண்களும் திரும்பத் திரும்பக் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாலியல் வன்புணர்வினாலேயே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.”

இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று காவல்துறை விசாரணைகளுக்குப் பின் கண்டுபிடித்தது.
ஆனால் காவல்துறை எந்த அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்பட்ட, மிகப் பெரிய ஓர் இனப் படுகொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்ட சந்தேஷ் பத்திரிகை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மௌனமாக இருந்தது. அந்த வகையில் காவல்துறையும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

இதற்கிடையில் சந்தேஷ் நாளிதழ் தனது வெறுப்பூட்டும் பணியைத் தொடர்ந்தது. முஸ்லிம்களை ஈன இரக்கமற்ற கொலைகாரர்களாகவும், தேசத் துரோகிகளாகவும் சித்தரித்து செய்திகளை வெளியிட்டது.

மார்ச் 1ம் தேதி அது ஒரு செய்திக்கு இவ்வாறு தலைப்பிட்டிருந்தது: “பள்ளிவாசலிலிருந்து அழைப்பு : விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள் – இஸ்லாம் இப்பொழுது ஆபத்தில்!” இந்தத் தலைப்பின் கீழ் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது: “பிப்ரவரி 27ம் தேதி, காலை 11.30 மணியளவில், ரயில் தண்டவாளத்தின் அருகிலுள்ள ஒரு பள்ளிவாசலிலிருந்து மக்கள் கூவியழைக்கப்பட்டார்கள்.

“விசுவாசிகளல்லாதவர்களைக் கொல்லுங்கள். இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. இந்த அழைப்பைக் கேட்டவுடன், ஒரு கூட்டம் எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் உயிரோடிருந்த எஞ்சியுள்ள ராம சேவகர்களைத் தாக்க ஆரம்பித்தது. அவர்கள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்திருந்தனர்.”
இந்தச் செய்தியும் எந்த அடிப்படையும் அற்றது.

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் தொடரும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 14

சென்ற தொடரில் குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal) வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியைக் கண்டோம்.இனி அதன் தொடர்ச்சியைக் காண்போம்.

“இரவு 7.30 மணிக்கு ஆகாஷவாணி வானொலியில், “கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ.யோ அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியோ உள்ளது” என்று முதல் முறையாக மோடி அறிவித்தார்.

இது குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும்,பா.ஜ.க.வின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டது. அதேபோல் அவரது சங்கப் பரிவாரக் கூட்டாளிகளுக்கு ‘எதிர்வினை’க்கான நியாயப்படுத்துதலாகவும் இது அமைந்தது.

இதில் வேதனையான விஷயம் என்னவெனில்,அரசு இயந்திரம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித உறுதியான ஆதாரமும் இல்லாமல் ‘வெளிநாட்டு சக்தி’ என்று சொன்னது. அத்தோடு எந்த அடிப்படையில் மோடி அந்த முடிவுக்கு அவ்வளவு விரைவாக வர முடிந்தது என்று எந்தவிதக் கேள்வியும் எழுப்பாமல் அந்த அறிவிப்பை பெரும்பாலான மீடியாக்கள் பரபரப்பாக வெளியிட்டன.

ஏன்,குஜராத் இனப்படுகொலை விஷயத்தில் நடுநிலையாக செய்திகளை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகைகள் கூட கோத்ரா சம்பவத்திற்கும் ஐ.எஸ்.ஐ.க்கும் தொடர்புண்டு என்று மோடி புளுகியதை அப்படியே வெளியிட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். 2002 மார்ச் மாதக் கடைசி வாரம் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக விசாரணை செய்து வரும் அதிகாரிகளின் கூற்றின் அடிப்படையில் கோத்ரா சம்பவம் முன்பே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. ஆனால் அதே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை குஜராத் அமைச்சர்கள் சொல்லி வந்த புரட்டுகளின் அடிப்படையிலான அறிக்கைகளை அப்படியே வெளியிட்டது. கோத்ரா சம்பவம் தானாக நடந்ததல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவர்கள் புளுகி வந்ததை அப்படியே வெளியிட்டது.

பின்னர்,அஹமதாபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தடய அறிவியல் பரிசோதனைக் கூடம் (Forensic Science Laboratory) ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டு எஸ் 6 பெட்டியில் வெளியிலிருந்து பெட்ரோலை ஊற்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.

ஆஜ்தக் தொலைக்காட்சிச் சானல்தான் முதன் முதலில் கோத்ரா மரணங்கள் குறித்த செய்தியைப் பரபரப்பாக வெளியிட்டது. அதன்பின், ஸீ தொலைக்காட்சியின் கேமராமேன் கோத்ராவிலிருந்து தான் எடுத்த காட்சிகளை உடனே அஹமதாபாதிற்கு அனுப்பி வைத்தார். இது அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது.

அதன்பின் தூர்தர்ஷன் உட்பட இன்னபிற தொலைக்காட்சிகள், அஹமதாபாதிலும், வதோதராவிலும், டெல்லியிலும் தங்கள் கேமராமேன்களை அனுப்பி செய்திகளை வெளியிட்டன.

கொடுமை என்னவெனில் அன்று மாலை தொலைக்காட்சிச் சானல்கள் அனைத்தும் கோத்ராவில் எரிந்த ரயில் பெட்டியையும், அதில் எரிந்த பிணங்களின் கோரப் படங்களையும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டே இருந்ததன. காட்சி ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மீறி அன்று கோரப் படங்களை தொலைக்காட்சிகள் வெளியிட்டன.

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சியை அடுத்த தொடரில் காண்போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது?


இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.


2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன.

இந்தக் கொடுமைகளைக் கண்டு திடுக்குற்ற நடுநிலையான மனித உரிமை ஆர்வலர்கள் இந்த இனப்படுகொலையின் உண்மைகளை அறிந்து உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதற்காக ஓர் உண்மையறியும் குழுவை ஏற்படுத்தினார்கள். அந்தக் குழுவிற்குப் பெயர் “அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம்“ (Concerned Citizens Tribunal).
இனப் படுகொலைகளின் சூடு ஆறுவதற்கு முன்பே இந்தக் குழுமம் களத்தில் இறங்கியது. குஜராத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட அத்தனை பேரிடமும் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து, பதிவு செய்தது.  முஸ்லிம்கள், ஹிந்துக்கள், ஃபார்சிகள் என்று எல்லோரையும் இந்தக் குழுமம் பேட்டி கண்டது.

இறுதியில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் “மனித இனத்திற்கெதிரான குற்றம்” (Crime Against Humanity) என்ற பெயரில் அறிக்கையாக இரண்டு பகுதிளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. (“மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற பெயரில் ‘இலக்கியச்சோலை’ நூல் வெளியீட்டு நிறுவனம் இதன் முதல் பாகத்தைத் தமிழில் வெளியிட்டுள்ளது.)

இதனை வாசிக்கும்பொழுது இன்னொன்றையும் மனதிற்கொள்ள வேண்டும். இந்தக் குழுமத்தின் அறிக்கை வெளிவரும் சமயம் கோத்ராவில் நடந்தவை பற்றி பெரும்பாலான உண்மைகள் வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி விசாரணை அறிக்கைகள் வந்துவிட்ட.ன. (ஆனாலும் அரசு அமைத்த விசாரணைக் கமிஷனின் கூற்றையே முழுமையாக ஏற்று கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி, முஸ்லிம்களுக்குத் தண்டனை வழங்கியிருக்கின்றது என்பது வேறு விஷயம்.)

ஆனால் இந்த அறிக்கைகள் ஒன்றும் வெளிவராத அந்தக் காலகட்டத்தில் அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டது:

இந்த இனப்படுகொலையில் வானொலி, தொலைக்காட்சி, அச்சு என்று அனைத்து மீடியாக்களின் பங்கும் மிக முக்கியமானவை. எந்தப் பாரபட்சமும் இல்லாமல் செய்திகளை வெளியிடுதல், விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டு வரத் தூண்டுதல், உண்மைகளை உலகுக்கு அறிவித்தல், அநீதிகளை அம்பலப்படுத்துதல் போன்றவை மீடியாவின் உடன்பாடான அம்சங்கள் (Positive aspects of media coverage).

இதில் எதிர்மறையான அம்சங்கள் (Negative aspects) என்று பார்த்தோமானால் இனவெறியைத் தூண்டும் விதமாகத் கொட்டை எழுத்துகளில் தலைப்புகளைப் போடுதல், பொய்யான செய்திகளை அறிவித்தல் போன்றவையாகும். இந்த எதிர்மறையான அம்சங்கள் வதந்திகளுக்கு எண்ணை ஊற்றும், பகை எனும் புகையைக் காற்று வீசிப் பற்ற வைக்கும், குறி வைக்கப்பட்டு தாக்கப்படும் ஓர் இனத்திற்கெதிராக வன்முறையைத் தூண்டும், அந்த வன்முறையைச் சரி காணும்.

இந்த இரண்டாவது எதிர்மறையான அம்சங்கள் மூலம் மீடியா தனக்கென்று உள்ள சுதந்திரமான, நடுநிலையான நெறியைக் கை விட்டு விடுகிறது. அதாவது, நேர்மையான செய்தி, நடுநிலையான அலசல், நீதியை நிலைநாட்டும் விமர்சனம் போன்றவைகள் காற்றில் பறந்தோடி விடுகின்றன. அதற்குப் பதிலாக, அந்த அக்கிரமங்களின் ஒரு பகுதியாக இந்த மீடியா மாறிவிடுகிறது.

நரேந்திர மோடியின் கட்டளைக்கேற்ப, சபர்மதி எக்பிரஸ் ரயிலில் கொல்லப்பட்ட பயணிகளின் பிணங்கள் சாலையில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, அஹமதாபாதிலுள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வந்த “ராம பக்தர்கள்” முஸ்லிம்களுக்கெதிராக வெறியைத் தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பினர், தங்கள் வெறியை வெளிக்காட்டினர், பழி வாங்குவோம் என்று மிரட்டினர்.

அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அத்தனை மீடியாக்களும் இந்த ஊர்வலத்தை ஒளிபரப்ப பயன்படுத்தப்பட்டன. பிணங்கள் மருத்துவமனையை அடையும் சமயத்தில், அதற்கு முன்பே வெறி முறுக்கேறிய மக்கள் அங்கே ஒன்று கூடியிருந்தனர். “ரத்தத்திற்கு ரத்தத்தால் பழி வாங்குவோம்” என்று வெறியோடு அவர்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.”

அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்தின் அறிக்கை வெளியிட்ட உண்மைகளின் தொடரை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 12

சென்ற தொடர்களில் மொத்த மீடியாவிலும் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணியைப் பார்த்தோம். இந்தப் பின்னணியை நாம் எதற்காக விளக்கினோம் என்றால் இதனைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நமக்கு நன்றாகப் புரிய வரும்.

Call the dog mad and then shoot

ஆங்கிலத்தில் Call the dog mad and then shoot என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நாயை அது வெறி பிடித்த நாய், பைத்தியம் பிடித்த நாய் என்று சொல்லி, அதன் பின் அதனைச் சுட்டுத் தள்ளுவது. வெறி பிடித்த நாயைச் சுட்டுத் தள்ளினால் யாரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.அது செத்தால் நல்லதுதான் என்று எண்ணுவார்கள்.

இந்தக் கொள்கையைத்தான் மேற்குலகம் முஸ்லிம்கள் மேல் நடைமுறைப்படுத்துகின்றது.இந்தத் தந்திரத்தைத்தான் அமெரிக்கா தலைமையில் செயல்படும் “நவீன சிலுவைக்காரர்கள்” கையாளுகின்றார்கள்.
அதாவது முஸ்லிம்களைப் “பைத்தியம்” என்று அழைப்பது, அல்லது அவர்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து தவறாகவே கொடுத்து முஸ்லிம்கள் “பைத்தியங்கள்” என்று மற்றவர்களைச் சொல்ல வைப்பது.
அதன்பின் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்வது.

இந்தியாவில் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் குண்டுகளை வைத்து முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு,இங்குள்ள மீடியாக்களின் துணையோடு முஸ்லிம்கள்தான் அந்தக் குண்டுகளை வைத்தார்கள் என்று முஸ்லிம்கள் மீதே பழியைப் போடுவதைக் கண்டு வருகின்றோம்.

இதே பாணி சர்வதேச அளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதாவது, உளவுத்துறை ஏஜன்சிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவது உலக அளவிலும் நடக்கிறது.
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அல்ஜீரியாவைச் சார்ந்த ரகசிய போலீசார் குண்டுகளைப் போட்டனர். ஆனால் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.
60 சதவீதத்திற்கும் மேல் செய்திகள் மேலை நாட்டிலிருந்தே வருவதால், முஸ்லிம்கள் தங்கள் மேல் சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; தடுமாறுகிறார்கள்.
ஏனெனில் மொத்த உலகிலும் மீடியாவை வழிநடத்திச் செல்வது மேற்குலகம்தான்.

இனி நமது இந்தியாவின் பக்கம் வருவோம்.

நமது தேசிய நாளிதழ்களும், காட்சி ஊடகங்களும் மேற்குலகின் உண்மையான சீடர்கள்! நடுநிலையான, சுதந்திர சிந்தனை என்ற தங்கள் பாம்பரியத்தை நமது தேசிய அளவிலுள்ள ஊடகங்கள் என்றோ தொலைத்துவிட்டன.

மாநில அளவிலுள்ள பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலும் இதே கதிதான். முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் இந்தப் பத்திரிகைகள் வெற்றி பெற்றுள்ளன.

அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று சொல்லும் இந்தப் பத்திரிகைகள் அந்தக் கதைகளைப் பின்தொடர்ந்து (Followup) வெளியிடும்போது காரத்தைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளும். இன்னும் உணர்வைத் தூண்டும் விதமாகப் பல்வேறு குட்டிக் கதைகளைச் சேர்த்துக்கொள்ளும்.

காவல்துறை இந்தக் கதைகளை அப்படியே உண்மை என்று நம்புகின்றது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அனைத்தையும் கவனித்து, எந்தச் சமுதாயத்திற்கும் அநீதி இழைத்துவிடாமல் நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறை கழிசடைப் பத்திரிகையாளர்கள் எழுதும் கண்ட கண்ட புரட்டுக் கதைகளை நம்புகிறது.

இந்தக் கதைகளின் மறுபக்கத்தை யாருமே கேள்வி கேட்பதில்லை. யாருமே விசாரணை செய்வதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானது; பயங்கரமானது.

இதற்கு ஓர் உதாரணத்தைக் காணலாம். ஒருமுறை சென்னையில் தாடி வைத்த ஒரு முஸ்லிம் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரின் வீட்டுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினார்.

ஒரு சிறுவன் வீட்டினுள்ளிருந்து கதவுக்கருகில் வந்து, ஜன்னல் வழியாக வந்திருப்பது யார் என்று எட்டிப் பார்த்தான். அங்கே தாடி வைத்து ஒருவர் நிற்பதைக் கண்ட அந்தச் சிறுவன் நேரே தன் தந்தையிடம் ஓடி “ஒரு தீவிரவாதி நிற்கிறான்” என்று கூறினான்.

பதறியடித்து ஓடோடி வந்த தந்தை வந்தவரைப் பார்த்தார்.வந்தவர் அவருடைய நண்பர் என்பதை அறிந்த பின்தான் சமாதானமடைந்தார்.
மீடியா பிஞ்சு உள்ளங்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இனி எப்படி மீடியா முஸ்லிம்களைக் கொல்கிறது என்று இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11

கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம்.

ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன.

காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய பகைமையுணர்ச்சிகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தன. புதிய உறவுகள் பூத்தன. நட்பு என்னும் நறுமணப் பூ நாடுகளெங்கும் மணக்கத் தொடங்கியது.
ஆனால் சிலுவைப் போர்கள் ஆயுதங்களால் செய்வது மட்டும்தான் ஒழிந்தது. அறிவால் செய்யப்படும் போர் தொடர்கின்றது.

இஸ்லாமைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு இன்னும் தொடர்கின்றது. அந்த விஷம் கிறிஸ்தவ தலைமைப் பீடங்களால் இன்னும் ஐரோப்பிய மக்களுக்குப் புகட்டப்படுகிறது. அது ஐரோப்பியர்களின் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது.
ஆக, பகைமையின் விதை எப்பொழுதோ தூவப்பட்டு விட்டது. அதன் பலன்களைத்தான் முஸ்லிம் உலகம் அன்றிலிருந்து இன்று வரை அனுபவித்து வருகின்றது. அதனால்தான் கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். முஸ்லிம் ஸ்பெயின் என்பது அழிக்கப்பட்டது. அங்கே ஆட்சி புரிந்து வந்த கிரனடா பேரரசு 1492ம் ஆண்டு கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்டது.

மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் உள்ள உறவு அடுத்ததாகப் பாதிக்கப்பட்டது துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபோது நடந்தது.

இப்படி மேற்குலகுக்கும், முஸ்லிம் உலகுக்கும் நடந்த போர்கள் கலாச்சார ரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் நிரந்தரமான பகையை நிலைநிறுத்தியது. ஆனால் இந்தச் சண்டைகளில் லாபம் அடைந்தது ஐரோப்பாதான். அது எப்படி என்று பார்ப்போம்.

இஸ்லாமியக் கலாச்சாரத்திலிருந்து, குறிப்பாக அரேபியர்களிடமிருந்து ‘காப்பி’ அடித்துத்தான் ஐரோப்பாவின் கலைகளும், விஞ்ஞானமும் வளர்ந்தன. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி என்பது முஸ்லிம்களிடமிருந்து அவர்கள் பெற்றதுதான்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவர்களிடையே பல பிரிவுகள் தோன்றின. அவர்களுக்குள் அடித்துக்கொண்டனர். ஆனால் இஸ்லாம் மீது அவர்கள் கொண்ட பகை மட்டும் அப்படியே நிலைத்து நின்றது.

இப்பொழுது ஒரு சந்தேகம் ஏற்படலாம். எப்பொழுதோ மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விஷமப் பிரச்சாரம், எப்பொழுதோ நடந்த சிலுவைப் போர்கள், எப்பொழுதோ விதைக்கப்பட்ட பகையுணர்ச்சி இன்னுமா அங்கே நிலவுகிறது? இப்பொழுது அங்கே மத உணர்வு எல்லாம் மங்கிப் போய்க் கிடக்கின்றது. இந்தச் சூழ்நிலையிலும் அங்கே அதே பகைமையுணர்ச்சி இருக்கும் என்று எண்ணுவது எந்த வகையில் நியாயம்?
இப்படி சில கேள்விகள் நம் மனங்களில் எழலாம்.

இவை நியாயமான சந்தேகங்களே. ஆனால் நவீன மனோதத்துவவியலாளர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு மனிதனுக்கு அவனது குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் மத நம்பிக்கைகளை அவன் முழுவதுமாக இழந்து விடலாம். ஆனால் அந்த மதத்துடன் சம்பந்தப்பட்ட சில மூடநம்பிக்கைகள் அவனது உள்ளத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதன் ஆழ, அகலம் வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனால் ஒரு மேலைநாட்டவனை எடுத்துக்கொண்டால் அவனிடம் இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையே மேலோங்கி நிற்கும்.

மேற்குலகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள், இன்னபிற ஊடக வெளியீடுகளில் அவர்கள் இஸ்லாத்தை போர் வெறி பிடித்த மார்க்கமாகவும், முஸ்லிம்களை இரத்த வெறி பிடித்த காட்டேறிகளாகவுமே சித்தரிக்கின்றனர். இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் நிறைய எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.
இஸ்லாமை பல்வேறு வகைகளாக அவர்கள் கூறு போடுகின்றனர்.

‘வன்முறை இஸ்லாம்’, ‘அரசியல் இஸ்லாம்’, ‘தீவிரவாத இஸ்லாம்’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் மனம் போன போக்கில் இஸ்லாமை வகை பிரிக்கின்றனர்.

இன்று அதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஜிஹாதி இஸ்லாம்’ என்று ஒரு புதிய இஸ்லாமைச் சொல்கின்றனர்.

அவர்களிடமுள்ள சக்திவாய்ந்த மீடியாவைப் பயன்படுத்தி இஸ்லாம் என்றால் பயங்கரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் பயங்கரவாதி என்றும் பெரும்பாலான மக்களை நம்ப வைத்துள்ளனர்.

இதில் வேதனையும் வேடிக்கையும் என்னவென்றால் இவர்களது பொய்ப் பிரச்சாரத்தில் முஸ்லிம்களும் வீழ்ந்ததுதாம்.

ஆம்! இன்று முஸ்லிம்களும் இஸ்லாத்தில் வன்முறை உள்ளது என்று கருதுகிறார்கள். பேசுகிறார்கள். அதற்கேற்றாற்போல் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் மேற்குலகுக்குக் கிடைத்துள்ளனர். அவர்களை வைத்து இந்தப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் அவர்களின் எஜமானர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்கின்றனர்.

ஆக, மொத்த மீடியாவில் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணி இதுதான். இந்தப் பின்னணியைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நன்றாகப் புரியும்.
சிலுவைகள் பற்றியும், அவை ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் விரிவாக அறிய விரும்புவோர் முஹம்மத் அஸத் (Muhammad Asad) எழுதிய Islam at the Cross Roads என்ற நூலைப் படிக்கவும்.

வெளிச்சம் வந்த வழி!


அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரன்தான் ஹம்ஸா. அவர்களிருவருக்குமுள்ள பந்தம் அந்த உறவு மட்டுமல்ல. இருவரும் ஒரே வயதுக்காரர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். பால்குடி சகோதரர்கள். இளைஞர் பருவம் வரை இணைபிரியா நண்பர்கள்.

இப்படியெல்லாம் இருந்தாலும் அவர்கள் இருவரின் குணாதிசயங்களும் வித்தியாசமானவை. அண்ணலார் சாந்தமானவர்கள். எளிமையும், அடக்கமும் அவர்களின் அடையாளங்கள். ஆரவாரமின்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருப்பதில் அண்ணலாருக்கு அலாதி ஆர்வம். முதிர்ச்சியடைந்தபொழுது தனிமையிலும், தியானத்திலும் அவர்கள் நேரத்தை செலவழிக்கத் தொடங்கினார்கள்.

ஹம்ஸா அப்படியல்ல. ஊரில் தன் குடும்பத்தின் மீது நிலவி வந்த கண்ணியத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனைத் தக்க வைத்துக்கொள்ள ஊரில் நிலவிலிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஆடம்பரப் பிரியர். ஊரில் தலைவர்களுக்கிடையில் தனக்கொரு இடத்தைப் பிடிக்க அவர் தனிக் கவனம் செலுத்தினார். வேட்டையாடுதலும், உடற்பயிற்சியும் அவரது விருப்பமான பொழுதுபோக்குகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாணியையும், போக்கையும் ஹம்ஸா கவனிக்காமல் இருந்ததில்லை. அவர்கள் மேல் மிகுந்த கண்ணியமும், மரியாதையும் வைத்திருந்தார் ஹம்ஸா. இதற்கிடையில்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் தங்கள் தூதுத்துவச் செய்தியை எத்தி வைக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இதிலெல்லாம் சிறிதும் ஆர்வம் காட்டிடவில்லை ஹம்ஸா. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளுக்குமிடையில் வெறும் பார்வையாளராகத்தான் இருந்தார் அவர்.

இரு தரப்பாரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது இவருக்கு தமாஷாகப் பட்டது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட பேச்சு வரும்பொழுதெல்லாம் சிரித்து அலட்சியப்படுத்தி வந்தார்.

ஒரு நாள் ஊர்க்காரர்களில் சிலர் வழமை போல் கஅபாவின் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஹம்ஸாவும் அங்கே வந்தார். பேச்சு முஹம்மதைக் குறித்து நடக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. அண்ணலார் மேலிருந்த வெறுப்பின் வெப்பம் அங்கே அவர்களது பேச்சில் கொப்பளித்தது.

முஹம்மதுடைய பேச்சுகளை ஒரேயடியாக நிராகரித்துத் தள்ள வேண்டும் என்பது ஹம்ஸாவின் நிலைப்பாடாக இருந்தது. அதனைத்தான் அவர் அங்கே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

அவருடைய முகத்தில் பரிகாசச் சிரிப்பு வெளிப்பட்டது. அபூஜஹ்ல் அதனை வேறுவிதமாகக் கண்டான். ஆபத்தின் அறிகுறி அறிந்தும் ஹம்ஸா அதனை அலட்சியப்படுத்துகிறார் என்று அவன் குற்றம் சாட்டினான். முஹம்மத் வளர்வதற்கு ஹம்ஸா இடம் கொடுக்கிறார் என்றும், முஹம்மத் தன் நிலையை உறுதிப்படுத்திவிட்டால் நம்மால் அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது என்றும், இதனை முஹம்மதே முன்னறிவிப்பு போல் சொல்லியிருக்கிறார் என்றும் அவன் வாதிட்டான்.

இப்படிப் பேச்சு நீண்டு கொண்டே சென்றது. ஹம்ஸா அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எதனையும் பொருட்படுத்தவில்லை. நடக்கின்றவையெல்லாம் ஒரு தமாஷாகவே அவருக்குப் பட்டது.

ஒரு நாள் வேட்டையாடி விட்டு ஹம்ஸா மக்கா திரும்பினார். வெளியே சென்று விட்டு மக்கா திரும்பினால் புனித கஅபா ஆலயத்தைத் தரிசிக்காமல் அவர் வீடு செல்வதில்லை. இதற்கிடையில் வழியில் ஹம்ஸாவைப் பார்த்த அவருடைய நண்பரின் வேலைக்காரி இவ்வாறு கூறினார்: “அபூ உமாரா, உம் சகோதரரின் மகனான முஹம்மதை அபூஜஹ்ல் எப்படியெல்லாம் துன்புறுத்தினான் தெரியுமா? நீர் அதனைப் பார்த்திருந்தால்……”

ஹம்ஸாவின் நெஞ்சத்தில் அனல் பறந்தது. அல்லாஹ்வின் தூதரை குறைஷிகள் கேலி செய்து, துன்புறுத்திய ஒரு தினமாக இருந்தது அது. வீட்டிற்கு ஹம்ஸா வந்ததும் அவரின் மனைவியும் இதே விஷயத்தைச் சொன்னார். இனிதான் அந்த ஆச்சரியம் நடந்தது.

ஆவேசம் வந்தவராய் கையிலிருந்த வில்லைக் கீழே வைக்காமல் நேரே கஅபா நோக்கி நடந்தார் ஹம்ஸா. அபூஜஹ்ல் அங்கே வீற்றிருந்தான். அவனைச் சுற்றி குறைஷிகள் அமர்ந்திருந்தனர். வேகமாக வந்த ஹம்ஸா ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் வில்லைக் கொண்டு அபூஜஹ்லின் தலையில் ஓங்கி அடித்தார். தலையிலிருந்து மூக்கின் மேல் வழிந்த ரத்தத்தை அபூஜஹ்ல் துடைக்கும்பொழுது ஹம்ஸா சொன்னார்: “முஹம்மதை நீ துன்புறுத்துவாய் இல்லையா… அப்படியானால் கேட்டுக்கொள். நானும் மதம் மாறியிருக்கிறேன். முஹம்மதின் மார்க்கம்தான் எனது மார்க்கம். முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். நீ என்னை அடி பார்க்கலாம்.”

அபூஜஹ்லுக்கு முதலில் கிடைத்த அடியை விட அதிக வலியைத் தந்தது ஹம்ஸாவின் பேச்சு. ஒன்றும் பேசாமலிருந்தான். தான் பேசியது ஹம்ஸாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சகோதரனின் மகன் மேல் சிறு வயதிலிருந்தே தான் வைத்திருந்த நேசத்தின், பாசத்தின் வெளிப்பாடு தன்னை ஆவேசத்தில் ஏதேதோ பேசுபவனாக மாற்றி விட்டதே என்று ஹம்ஸா திகைத்தார். கோபத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டோம் என்று எண்ணி அதிசயித்தார்.

ஏனெனில் இஸ்லாத்தைத் தழுவுவதற்கான மனநிலையிலோ, மனப்பக்குவத்திலோ அவர் அப்பொழுது இல்லை. அவர் ஆவேசத்தில் சொன்னது போல் அப்படியொரு சம்பவமும் நடக்கவில்லை.

அடுத்தடுத்த தினங்களில் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார் ஹம்ஸா. கஅபாவிலுள்ள சிலைகளின் பிம்பங்களை தன் மனதிலிருந்து அவரால் அவ்வளவு எளிதாக அகற்றிட முடியவில்லை. நாட்கணக்கில் ஆழ்ந்த சிந்தனையும், பிரார்த்தனையுமாக அவரது கணங்கள் கழிந்தன. இறுதியில் இறைவன் அவரது இதயத்தைத் திறந்தான். நேர்வழி என்னும் வெளிச்சத்தைக் காட்டினான்.

அல்லாஹ்வின் தூதரிடம் வந்து ஹம்ஸா தன் முடிவைத் தீர்க்கமாகச் சொன்னார்.

நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்

தமிழில் : MSAH

இக்கட்டுரை விடியல் வெள்ளி  நவம்பர் 2013 இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

சமுதாயத்தில் வறுமை ஒரு பலவீனமா?

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ‘ஹதீஸ்கள்’ என்கின்றோம். அவை இந்த உலக வாழ்க்கையைப் பற்றிய உள்ளார்ந்த பார்வையை நமக்குத் தருகின்றது. உலக வாழ்வைக் குறித்து எச்சரிக்கின்றது. அவர்களது எச்சரிக்கைகள் காலத்தாலும் கட்டுண்டவை அல்ல. ஏதோ அந்தச் சமயத்திற்கு மட்டும் பொருந்துவன அல்ல. அது காலத்தைக் கடந்தது. அனைத்து காலத்திற்கும் பொருந்தக் கூடியது.

முஹம்மது (ஸல்) அவர்களோடு முஸ்லிம்கள் மதீனாவில் வாழ்ந்த காலம் மிகக் கடினமான காலம். மதீனத்து அன்ஸாரிகளே மிகவும் சொற்ப வளத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இருந்தும் வெறுங்கையுடன் வந்த முஹாஜிர்களை அரவணைத்துக் கொண்டார்கள்; ஆதரித்தார்கள்; தங்கள் சொத்தில், தங்கள் வீட்டில், தங்கள் பொருளாதாரத்தில் பாதியை அவர்களுக்குத் தந்தார்கள்.

அசத்தியத்தை அழிப்பதற்காக, சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக இளைஞர்களை அவர்கள் போர்க்களத்தில் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவை அவர்களின் ஈமானை அசைத்திட இயலவில்லை; அவர்களின் உறுதியைக் குலைத்திட முடியவில்லை.

அல்லாஹ் அவர்களைக் கண்ணியப்படுத்தினான். சாதராண நகரமாகிய மதீனாவை ‘மதீனத்துர் ரசூலுல்லாஹ்’ - இறைத்தூதரின் நகரமாக அவர்கள் உருவாக்கிக் காட்டினார்கள். ஆதலால் ‘இறைத்தூதரின் தோழர்கள்’ (ஸஹாபாக்கள்) என்ற நற்பெயரையும் அவர்கள் பெற்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழர்களிடம் கொடுத்தவற்றை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். என்னென்ன தியாகங்களெல்லாம் அவர்களிடம் கேட்கப்பட்டதோ அவற்றை அவர்கள் ஆர்வத்துடன் நிறைவேற்றினார்கள்.

பிற்காலத்தில் நபிகளாரின் இந்தக் கடின வாழ்க்கை கொஞ்சம் இலேசானது. சக சமுதாயத்தவருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தன. முஸ்லிம்கள் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய முடிந்தது. அவர்களின் ஒட்டகப் பயணங்களுக்கு எந்தத் தடையும் இப்போது இல்லை.

அந்த அரேபிய தீபகற்பத்தில் சக கோத்திரத்தவருடன் அவர்கள் சகஜமாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். நபிகளாருக்கு செல்வத்தை வழங்கியதில் முதலாவதாக பஹ்ரைன் விளங்கியது. பஹ்ரைனிலிருந்து அந்த ஒட்டகக் கூட்டம் இரவின் பிற்பகுதியில் வந்தாலும் செய்தி அனைவரையும் எட்டி விட்டது.

மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அன்சாரிகளும், முஹாஜிர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு வந்து அமர்ந்தனர். அண்ணலாரை அனைவரும் சூழ்ந்து கொண்டனர். அண்ணலார் நபித்தோழர்களின் மன ஓட்டங்களை உடனடியாகப் புரிந்துக் கொண்டார்கள். வழக்கம் போல் புன்னகைத்தார்கள். பின்னர் சொன்னார்கள்: “அபூ உபைதா பஹ்ரைனிலிருந்து பொருட்களோடு வந்துள்ளதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.” ‘ஆமாம்’ என்பது போல் நபித்தோழர்கள் தலையாட்டினர்.

நபிகளார் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வீர்கள் என்று நான் அஞ்சவில்லை. உங்களுக்கு முந்தைய சமுதாயங்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் உங்களுக்கு உலக வளம் பெருமளவில் வழங்கப்படுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன். இந்தப் பொருளுக்காக உங்களுக்கு முந்தைய சமுதாயங்களில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொள்வர். அதேபோல் நீங்களும் போட்டி போடுவீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். இந்தப் பொருள் வளம் உங்களை அழித்து விடும். இப்படித்தான் அது முந்தைய சமுதாயங்களையும் அழித்தது.”

இந்தச் சம்பவம் நபிமொழிப் பேழைகளில் பதிவாகியுள்ளது. திருக்குர்ஆனிலும் இது குறிப்பிடப்படுகிறது. சமுதாயங்களைப் பலவீனப்படுத்துவது வறுமையல்ல. வரலாறுகளைப் புரட்டுவோம். இஸ்லாத்தை நிலைநாட்ட உழைத்த எத்தனையோ மறுமலர்ச்சி இயக்கங்கள் தங்களை முழுவதும் அர்ப்பணித்து வேலை செய்த மக்களாலும், கண்ணியமான, நேர்மையான தலைமையினாலும் நடை போட்டன.

மாறாக, பணத்தால் அல்ல. அந்தத் தலைவர்கள் அவர்களது சமுதாயங்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். வளமோ வறுமையோ, ஈமானின் ஜோதி இதயத்தில் ஏற்றப்பட்டால், இலக்கு தெளிவாகி விடும்; அயராது பாடுபட்டு தொடர வேண்டிய இலட்சியமும் தெளிவாகி விடும்.
சாதாரண இலட்சியங்களுக்கும், இந்த இலட்சியத்திற்குமுள்ள வித்தியாசம் என்னவெனில் அழியக்கூடிய பொருளுக்கும், அழிவில்லாத பொருளுக்குமுள்ள வித்தியாசம் ஆகும். ஆனால் உணர்வும், உத்வேகமும் இரண்டுக்கும் ஒன்றுதான்.

மேற்க்கூறப்பட்ட ஹதீஸ் ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயம் மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு மிகப் பெரிய சாதனைகளைச் சாதித்ததை விளக்குகிறது. பொருள் வளத்தை அடைய வேண்டும் என்ற மனத் தூண்டுதலைக் குறித்தே நபிகளார் அவ்வாறு எச்சரித்தார்கள். ஏனெனில், அதனை அடைந்தவர்கள கறை படிந்தவர்கள் ஆனார்கள்.

முஆவியா (ரலி) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் தலைமையை அடைய விரும்பினார்கள். ஆனால் அந்தச் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்புக்குரிய முழு தகுதியும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்குத்தான் இருந்தது. அவர்களைச் சரிக்கட்ட எண்ணினார் முஆவியா. எனவே அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி) அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தூதராக அனுப்பினார்.

அம்ர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இவ்வாறு வினவினார்: “நீங்கள் ஏன் தலைமைப் பதவிக்குப் போட்டியிடக் கூடாது?” அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வார்களா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அம்ர் (ரலி) அவர்கள் சொன்னாகள்: “ஆம். கொஞ்சம் பேரைத் தவிர.” அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: “மூன்று பேர் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் அந்தப் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன்.”
அம்ர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு கேட்டார்கள்: “பின்னர் ஏன் உங்கள் பதவி ஆசையின்மையை அறிவித்து, முஆவியாவைத் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது? முஆவியா உங்களுக்கு நிறைய பொருட்களைத் தருவதாக சொல்கிறார். அதனை வைத்து உங்கள் குழந்தைகளும், உங்கள் பேரக் குழந்தைகளும் கூட நிம்மதியாகச் சாப்பிடலாம்.”

இதனைக் கேட்டதும் கோபம் கொப்பளிக்க அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களை நோக்கினார்கள். பின்னர் கூறினார்கள்: “இங்கிருந்து போய் விடுங்கள். என்னிடம் இனி வராதீர்கள். எனது விசுவாசம் விற்பனைக்கல்ல. நான் இந்த உலகை விட்டுப் பிரியும்பொழுது சுத்தமான, கறைபடியாக் கரங்களுடனும், சுத்தமான மனதுடனும் செல்ல விரும்புகிறேன். அதற்காகவே பிரார்த்தித்து வருகிறேன்.”

ஆனால் எல்லோரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைப் போல் இல்லை. கடந்த காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் நிறைய இயக்கங்கள் தோன்றியுள்ளன. அவற்றின் தலைவர்கள் அவர்களது ராஜ்யங்களை நிறுவிக் காட்டியுள்ளார்கள்.

வட ஆப்ரிக்கா, ஸஹாராவின் தென் பகுதியிலுள்ள ஆப்ரிக்கப் பகுதி, ஆசியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் இதனை நாம் காணலாம். ராஜ்யத்தை நிலைநாட்டி, வெற்றிக் கனிகளைப் பறிக்கும் சமயம், அழுகிப் போகுதல் ஆரம்பித்து விடுகின்றது. இலட்சியத்தைக் காக்க வேண்டிய உணர்வு பதவியைக் காப்பதற்குப் பயன்பட ஆரம்பிக்கிறது. ராஜ்யங்களைக் காப்பாற்றப் பயன்படுகிறது.

இதனைக் கொண்டுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த கவலையுற்றார்கள். இன்று முஸ்லிம் நாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் உலகிலேயே தனி மனித வருமானம் அதிகம் உள்ள நாடுகளும் உள்ளன. உலகில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 100 கோடியைத் தாண்டுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் கணிசமான பகுதியை முஸ்லிம் நாடுகள் தங்கள் கைகளில் வைத்துள்ளன. நிறைய திறமையான மனிதர்கள் இந்த முஸ்லிம் நாடுகளில் உருவாகியிருக்கின்றனர். இருந்தும் என்ன பயன்? இலட்சியமில்லாமலும் உரிய வாய்ப்புகள் இல்லாமலும் அவர்கள் வாய்ப்புகள் அதிகமுள்ள மேலைநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு பெரிய சமுதாயத்திற்கு வேண்டிய அனைத்து வளங்களும் முஸ்லிம்களிடம் உள்ளன. இருந்தும் என்ன பயன்? அவர்கள் ஒரு பெரிய சமுதாயமாக இல்லை. அறிவியல், பொருளாதாரம், நிதி, இலக்கியம் ஆகிய முக்கியத் துறைகளில் முஸ்லிம்கள் தங்கள் இருப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அதனால் மிகக் குறைந்த வளமுள்ள ஒரு சிறிய நாடு தாது வளங்களும், எண்ணெய் வளங்களும் அதிகமதிகம் உள்ள முஸ்லிம் நாடுகளைத் தன் கைக்குள் வைத்துள்ளது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, இந்தத் தடைகள், பின்னடைவுகள் அனைத்தையும் மீறி ஒரு நாள் அது எழுந்து நிற்கும். இது அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்டது.

இது வெற்றுத் தலைவர்களால் கொடுக்கப்படும் வெற்று வாக்குறுதியல்ல. இந்த வெற்றுத் தலைவர்களால் தான் மீண்டும் மீண்டும் இந்த முஸ்லிம் சமுதாயம் பள்ளத்தில் வீழ்ந்து கிடைக்கிறது. ‘அத்தவ்பா’ அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்: “அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)” (அல்குர்ஆன் 9.33)

செய்யது M. தர்ஷ்

தமிழில் : MSAH

Wednesday 27 November 2013

கிரிமினல்களின் கூடாரம் பா.ஜ.க.!


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களில்
46% கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்களில் 21%மும்,
பி.எஸ்.பி. வேட்பாளர்களில் 21%மும்,
ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 7%மும்
கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

‘வேர்கள்’ பற்றிய ஒரு நுனிப்புல்லின் பார்வை

“வேர்கள்” நூல் பற்றி
நெல்லை ஏர்வாடி அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி
அவர்கள் எழுதிய வாசகர் உரை


சமீபத்தில் நடைபெற்ற ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தாங்கள் மொழிபெயர்த்து எழுதியுள்ள “ வேர்கள்” புத்தகம் வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்.

சுப்ஹானல்லாஹ். நூலின் மையக் கருத்தும், மொழிபெயர்ப்பின் மொழிநடையும், சம்பவங்களின் சுவாரஸ்யமும், நூல் முழுதும் இழையோடும் வரலாற்றுக் கொடுமையின் சோகமும் வாசிப்பவர்களை ரொம்பவே பாதிக்கும் என்பதை உணர முடிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என வழக்கம் போல சோம்பேறிப்படும் நான், கதையின் சுவாரஸ்யத்தால் உந்தப்பட்டு, நேரம் கிடைக்கும்போதும், குறிப்பாக மெட்ரோவில் அலுவலகத்திற்கு போகும்போதும் வரும்போதும் என்று முழு மூச்சில் படித்து 4 அல்லது 5 நாட்களில் முடித்து விட்டேன். மாஷா அல்லாஹ்.

புத்தகத்தைப் படித்ததிலிருந்து மனம் மிக பாரமாக இருப்பதை உணர்ந்தேன். தனது பரம்பரையின் வேர்களைத் தேடும் ஒரு பத்திரிகையாளரின் பரம்பரைத் தொடர் வரலாற்று நாவலாக வடிக்கப்பட்டுள்ளது. இன்றைய அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்களின் பூர்வீக மதம் இஸ்லாம்தான் என்பது நெஞ்சைச் சுடும் நிஜமாக புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சக மனிதர்களை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல், விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி , ஒரு இனத்தின் அடையாளத்தையே அழித்து நாடோடிகளாக்கிய குரூர புத்திக்கு சொந்தக்காரர்கள் (மேலை நாட்டவர்கள்), இன்று மனித உரிமைகள் பற்றி பேசுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

இதை எண்ணும்போது, சில வருடங்களுக்கு முன்பு மேலை நாட்டவர்கள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில், முன்னாள் மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது அவர்கள் சொல்லியதுதான் நினைவுக்கு வருகிறது. “ சரித்திரம் முழுக்க இரத்தம் தோய்ந்த கைகளுக்குச் சொந்தக்காரர்களுக்கு மனித உரிமைகள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?” என்றார்.

இந்நூலைப் படிக்கும் போது அது நிதர்சனமாகத் தெரிகிறது. மேலும் நூலின் காட்சி அமைப்புகள், நம்மை அந்த இடத்துக்கே கொண்டு செல்கின்றன என்றால் அது மிகையல்ல.

ஆப்பிரிக்க காம்பியாவின் ஜூஃபூர் கிராமமும், மாண்டிங்கா மக்களின் கலாச்சாரமும், அடிமைகளை ஏற்றிச் செல்லும் கப்பலும், புதிய அமெரிக்க பூமியின் பண்ணைகளும், அடிமைச் சேரிகளும், ஆப்பிரிக்காவின் மனித ஆவணக் காப்பகங்களான கிரியட்டுகளும் இன்றும் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

கதையின் பாத்திரங்களும் தலைமுறை வாரியாக மனதில் பதிந்து விட்டன. [உமரோ – குண்டா கிண்டே – கிஸ்ஸி – கோழி ஜார்ஜ் – டாம் லீ – சியாமா - பெர்த்தா – அலெக்ஸ் ஹேலி ( மூல நூல் ஆசிரியர்) ].

இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் தனது வேர்களைத் தேடும் ஆர்வம் வருவதைத் தவிர்க்க இயலாது.  என் தகப்பனார் அவர்கள் எங்களது குடும்பத் தலைமுறைகளை சார்ட் வடிவில் பட்டியலிட்டு என்னிடம் இனி வரும் தலைமுறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறது.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஸஜரா அல்லது ஸில்ஸிலா என்ற பெயரில் தங்களது குடும்ப தலைமுறை ஆவணத்தைப் பாதுகாக்கும் பழக்கம் அரபுகளிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நம்மிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கீழை நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றித் தெரிந்த தகவல்களை விட ஆப்பிரிக்காவைப் பற்றி அறிந்தது மிக மிகக் குறைவு என்றே நினைக்கிறேன்.

உலக முஸ்லிம் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட ஆப்பிரிக்க முஸ்லிம்களைப் பற்றி அறியும் ஆவலை ‘வேர்கள்’ நிச்சயமாகத் தூண்டும் என நம்புகிறேன்.

இப்போதெல்லாம் துபாய் வீதிகளில் எந்த ஒரு ஆப்பிரிக்கரைப் பார்த்தாலும் இவர் ஒரு காம்பியனாக, மாண்டிங்காவாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

சமீபத்தில் என் நண்பரோடு பணி புரியும் ஒரு செனகல் நாட்டுக் காரரிடம் ‘வேர்கள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிக ஆர்வத்தோடு ‘ரூட்ஸ்’ நூலில் இடம் பெற்றுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும், அடிமைகளை ஏற்றும் துறைமுகங்கள் செனகலில் தான் இருப்பதாகவும் கூறினார்.

நீங்கள் மாண்டிங்காவா? எனக் கேட்டதற்கு, இல்லை. நான் உலோஃப் இனத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறியதும் எனக்கு கப்பலில் குண்டாவுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தவர் ஒரு உலோஃப் தான் என்பது நினைவுக்கு வந்து போனது.

மேலும் அவர் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் குறித்த பல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அடுத்த மாதம் துபாயில் நடக்கவிருக்கும் அவர்களின் ஜமாஅத் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

‘வேர்கள்’ மூலமாக என் சிற்றறிவுக்கு எட்டும் சில படிப்பினைகளாக நான் கருதுவது : ஒன்று – ஒரு சமூகத்தை அழிக்க முதலில் எதிரிகள் செய்வது அவர்களின் கலாச்சார அடையாளங்களை ( Identity) அழிப்பது. அது தான் குண்டாவின் விஷயத்தில் நடந்தது. அடுத்த தலைமுறைகளுக்குத் தாங்கள் முஸ்லிம்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.

இன்றும் கூட நாமும் நம்மை அறியாமலேயே நமது தனித்துவ அடையாளங்களை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறோம். உடையில் தொடங்கி மொழி வரை… (இதில் தொப்பியும் லுங்கியும் தாடியும் அரபியும் தமிழும் அடங்கும்...)

கமால் அத்தா துர்க்கின் காலம் தொடங்கி இன்று வரை இந்த சதி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் உங்கள் ஊர் (காயல் பட்டணம்) மற்றும் கீழக்கரை சகோதரர்கள் எங்கு சென்றாலும் தமிழ் முஸ்லிம்களுக்குரிய அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது வரவேற்கத் தக்கது.

அடுத்ததாக, மேலை நாடுகளின் அடிமை முறை உடல் ரீதியாக களையப்பட்டு விட்டதாக பிரகடனப் படுத்தப்பட்டாலும், உள ரீதீயான சிந்தனை அடிமைத்தனத்தை (Ideological Slavery) அவர்கள் இன்றும் திணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் (குறிப்பாக முஸ்லிம் உம்மாவின் மீது) என்பதற்கு முஸ்லிம் நாடுகளில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கலாச்சாரத் தாக்கங்களும், போர்களும், ஹாலிவுட் கற்பனைகளும், குழந்தைகளை அடிமைப்படுத்தும் கேம்ஸ், கார்ட்டூன்களும், மீடியாக்களும், KFC களும், போதைப் பொருட்களும், முதலாளித்துவ சந்தை முறைகளும், நவீன வங்கி முறைகளும், நவீன தொழில்நுட்ப போதைகளும் ( Facebook addiction…etc.) இன்னும் நமக்கே அறியாமல் நம்மை ஆட்கொண்டுள்ள எத்தனையோ ஆதிக்கங்களும் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

இவற்றை உணர்ந்து எச்சரிக்கையாக, எந்த தஜ்ஜாலிய சக்திகளின் மாய வலையிலும் விழுந்துவிடாமல், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், அவர்கள் தந்த வாழ்க்கை நெறிக்கும் மாத்திரம் கட்டுப்பட்டவர்களாக, என்றும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமைகளாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. இதற்கு இந்த வேர்களைத் தூண்டுகோலாக இறைவன் ஆக்கித் தருவானாக.

‘வேர்கள்’ மூலம் சமூகத்தின்  சிந்தனையைத்  தூண்டி வேர்களைத் தேட வைத்த உங்களின் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

உங்களின் இஸ்லாமிய இலக்கியப் பணி மூலம் இன்னும் பல வேர் விட்டு வளரும் விருட்சங்கள் வெளிவர பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,

உங்கள் வாசகன்,

அப்துல்லாஹ் இப்னு ஷாஃபி

எங்கும் திருக்குர்ஆன்! எதிலும் திருக்குர்ஆன்!


அல்குர்ஆன்! அல்லாஹ்வின் திருவேதம் ஓர் அற்புதம்! அற்புதங்களிளெல்லாம் அற்புதம்!

இந்தக் குர்ஆனை நாம் முறையாக, முழுமையாகக் கற்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

திருக்குர்ஆனைத் தாங்கும் அரபி மொழி தனித்துவமானது;
ஈடியிணையில்லாதது. சாதாரணமாக ஒரு நூலுக்கு முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்றிருக்கும். இதே முறையை எதிர்பார்த்து திருக்குர்ஆனை அணுகுபவர்களுக்கு குழப்பமே மிஞ்சும்.

திருக்குர்ஆனின் பாணியே அறியாதவர்களும், அதன் மொழியில் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாதவர்களும் கூட அதனை அணுகலாம். நாளடைவில் அவர்கள் அதனோடு ஒன்றி விடுவார்கள். பல தலைமுறைகளாக முஸ்லிம் உலகின் முக்கிய சிந்தனையாளர்கள், அறிஞர்கள் அனைவரும் திருக்குர்ஆனின் ஆழிய ஞானத்தை வெளிக் கொண்டு வரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அறிஞர் யூசுஃப் அலீயும் இதையே தான் செய்தார். ‘தஃப்ஸீர்’ என்பது திருக்குர்ஆனின் மொழியாக்கமும், விளக்குவரையும் ஆகும். முஸ்லிம் உலகில் இதன் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது.

திருக்குர்ஆன் கூறும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு அறிவுக் கருவூலம். ஆனால் இந்தக் கருவூலத்தை நாம் முறையாக, முழுமையாகப் பயன்படுத்துகிறோமா? இல்லை. நமது கருவூலத்தை நாம் பயன்படுத்தாமல் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

திருக்குர்ஆனை யாருடைய துணையுமில்லாமல், தனிமையாக விளங்குவது என்பது சற்று சிரமத்தைத் தரும். குர்ஆனைக் கற்றுக் கொள்ள நல்ல ஒரு ஆசான் வேண்டும். அத்தோடு கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், விவாதிக்கவுமான ஒரு மாணவர் கூட்டம் வேண்டும். இத்தகையோர் ஆரோக்கியமான சூழ்நிலையில் குர்ஆனைக் கூர்மையாக கற்றுக் கொள்ள உதவும்.

கருத்துகள் பரிமாறப்படும்போது, புதையலை எடுப்பது போல் புதுப் புது கருத்துகள், கண்டுபிடிப்புகள் குர்ஆனிலிருந்து வெளிப்படும்.
அத்தோடு ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வணக்கங்களில் திருக்குர்ஆனை ஓத வேண்டும். அதற்கும் அதிகப்படியான நன்மைகள் உள்ளன.

ஆனால் ‘தர்ஸ்’ என்று சொல்லப்படும் கற்றுக் கொள்ளுதல், திரும்பத் திரும்பப் படித்தல் என்பது தொடர்ந்து நடக்க வேண்டும். இது முறையாக தொடர்ந்து நடப்பதில்தான் சிறப்பு இருக்கிறது.

முஸ்லிம் உலகில் ஆண், பெண் இரு பாலருக்கும் திருக்குர்ஆனை அறிவுப்பூர்வமாக அணுகுவதில் இரு நன்மைகள் உள்ளன. ஒன்று – ஒன்றுபடுதல் (ஜமாஅத்). மற்றொன்று – அறிவைத் தேடுதல்.
இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களின் மூல ஆதாரமான திருக்குர்ஆனை நேரடியாக அணுகுவதற்கு முழு உரிமை அளித்திருக்கிறது.

இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் ஏற்று நடக்க விரும்புபவர்களுக்கு, அதற்காக கடுமையான முயற்சிகளை எடுப்பவர்களுக்கு திருக்குர்ஆனுடனுள்ள தொடர்பு என்பது அத்தியாவசியமானது.

திருக்குர்ஆனை அதன் நோய் தீர்க்கும் பண்பிற்காகவும் ஓத வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் அல் முல்க் என்ற சூராவை ஓதுவது சிறப்பு. அதேபோல் அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு யாஸீன் சூராவை ஓதுவது சிறப்பு.

இப்படி எண்ணற்ற சிறப்புகள் திருக்குர்ஆனை ஓதுவதில் இருக்கிறது. என்றாலும் இதற்காக மட்டும் குர்ஆனை அணுகாமல், அதனை முழுமையாக விளங்க முயற்சி செய்ய வேண்டும். நமது சிந்தனை ரீதியான தொடர்புகளைக் குர்ஆனோடு ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனும் இதனைத்தான் விரும்புகிறது. அது தன்னைக் கற்க வருபவர்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது.

‘லஅல்லகும் தஃகிலூன்’ என்று குர்ஆன் நெடுகிலும் கூறப்படுவதை நாம் காணலாம். ‘நீங்கள் அறிந்து கொள்வதற்காக,’ ‘நீங்கள் அறிவுடையோர் ஆவதற்காக’ என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.

‘அஃபலா தஃகிலூன்’ (நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?) என்று திருக்குர்ஆன் நம்மைப் பார்த்துக் கேட்கின்றது. ‘லஅல்லகும் ததஃபக்கரூன்’ (நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக) என்று பல இடங்களில் திருக்குர்ஆன் கூறுகிறது.

இப்படி திருக்குர்ஆன் பல இடங்களில் ஏன் கேட்கிறது? அதற்கு ஒரே பதில்தான். அதன் செய்திகள் யாவும் சிந்தித்துணரும் மக்களுக்குத்தான் போய்ச் சேரும் (லிகவ்மின் யத ஃபக்கரூன்).

திருக்குர்ஆன் என்பது நேரடியாக அணுகும் வகையில் இலகுவானது. தங்கள் வாழ்வை வளமாக, வாய்மையாக வடிவமைக்க விரும்புபவர்களும், இந்தச் சமுதாயத்தை உயிரோட்டமுள்ள சமுதாயமாக மாற்ற விரும்புபவர்களும் திருக்குர்ஆனைத் தவிர வேறொன்றுக்குச் செல்லத் தேவையேயில்லை.

பேராசிரியர் அய்யூப் அவர்கள் தனது ‘தபரீ’ என்ற நூலில் இவ்வாறு கூறுகின்றார்: “துவக்கத்திலிருந்தே ‘தஃப்ஸீர்’ என்பது தத்துவ விளக்குமும், அதன்படி செயல்படுவது என்பதுமே ஆகும். ஏனெனில் நபித்தோழர்கள் (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!) ஒரு நேரத்தில் 10 வசனங்களை மட்டும் ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அந்த 10 வசனங்களின் ஆழிய கருத்துகளைக் கற்பார்கள். அதன்படி செயல்படுவார்கள்.

நபித்தோழர்களிடமிருந்து குர்ஆனைக் கற்ற ஒருவர் கூறும்பொழுது, “அண்ணல நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் இறங்கும்பொழுது அதன் வசனத்தை ஓதிக் காட்டுவார்கள். நபித்தோழர்கள் அதனை தங்கள் உள்ளங்களில் ஏந்துவார்கள். ஆனால் 10 வசனங்களைத் தாண்டமாட்டார்கள். அந்த 10 வசனங்களை தங்கள் வாழ்வில் கொண்டு வரும்வரை அவைகளைத் தாண்டமாட்டார்கள். அதனால் நாங்கள் குர்ஆனுடைய வசனங்களையும் அதன் பயன்பாட்டையும் ஒருசேர, ஒரே நேரத்தில் கற்றோம்’ என்று கூறுகிறார்.” (தபரீ, பாகம் 1, தாருல் மஆரிஃப் 1954 பதிப்பு, பக்கம் 80)

யூதராக இருந்து, திருக்குர்ஆனை ஆய்ந்தறிந்து, இஸ்லாத்தைத் தழுவியவர் முஹம்மது அஸத். அவர் கூறுகிறார்: “இஸ்லாம் ஒரு மார்க்கமாக வாழ வேண்டும். அது ஒரு கலாச்சாரத்தை உருவாக்கும் காரணியாக இருக்க வேண்டும். நாம் திருக்குர்ஆனையும், நபிவழியையும் புத்துணர்ச்சியோடு, நடுநிலையோடு அணுக வேண்டும். குர்ஆன் வசனங்கள் இப்பொழுது இறங்குவது போலவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களது அருமையான அருள்மொழிகள் நமது காதுகளில் நேரடியாக ஒலித்துக் கொண்டிருப்பது போல, நபிகளார் என்னைப் பார்த்து, உங்களைப் பார்த்து, ஒவ்வொருவரையும் பார்த்துப் பேசுவது போல நாம் இந்தக் குர்ஆனை அணுக வேண்டும்.

ஏனெனில் 13, 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபித்தோழர்களுக்கு அருளப்பட்ட அதே நபிதான் இன்று எனக்கும், உங்களுக்கும் நபி. ஆதலால் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபித்தோழர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை அணுகினார்களோ அவ்வாறே நாமும் அணுக வேண்டும்.

“இஸ்லாத்தை இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வைக்க வேண்டுமென்று, இஸ்லாத்தை இப்பூவுலகில் நிலைநாட்டிக் காட்ட வேண்டுமென்று இஸ்லாமிய இயக்கங்களை நிறுவி, தங்கள் வாழ்நாள் முழுவதையும் அதற்காகச் செலவிட்ட தியாகிகள், முஸ்லிம் உலகம் போற்றும் நமது முன்னோர்கள், அறிஞர் பெருமக்கள் அனைவரும் திருக்குர்ஆனின் விரிவுரையாளர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சமுதாயத்தை மாற்றிக் காட்டியவர்கள், சரித்திரத்தில்  முத்தாய் பதிந்தவர்கள் எல்லோரும் திருக்குர்ஆனை விளங்கியவர்களாகவும், அதனைச் சிறந்த முறையில் பிறருக்கு எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகவுமே திகழ்ந்தார்கள்.
‘இஃக்வானுல் முஸ்லிமூன்’ என்பது எகிப்தில் தோன்றிய ஒரு பேரியக்கம். அதன் தலைவர்களில் ஒருவர்தான் ஷஹீத் செய்யித் குதுப். இவர்கள் ‘ஃபீழிலாலில் குர்ஆன்’ (திருக்குர்ஆனின் நிழலில்) என்று தனது திருக்குர்ஆன் விரிவுரைக்குத் தலைப்பிட்டார்கள்.

20ம்  நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் ‘ஜமாஅத்தே இஸ்லாமி’ என்ற பேரியக்கத்தை இந்தத் துணைக் கண்டத்தில் நிறுவினார்கள். அவர்கள் தாம் எழுதிய திருக்குர்ஆன் விரிவுரைக்கு ‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ (திருக்குர்ஆனைப் புரிந்துக் கொள்ளுதல்) என்று பெயரிட்டார்கள். இது 6 பாகங்களைக் கொண்டது.

அல்லாஹ் அவர்களுக்கு அளப்பரிய அறிவை அள்ளிக் கொடுத்திருந்தான். அவர்கள் நினைத்திருந்தால் இஸ்லாமியச் சட்டவியலில், அரசியலில், இலக்கியத்தில், தத்துவக் கலையில் தங்கள் அறிவைச் செலுத்தியிருக்கலாம்; பல நூல்களை எழுதியிருக்கலாம். ஆனால் அவர்கள் இவைகளையெல்லாம் விட அதிக முக்கியத்துவும் கொடுத்தது திருக்குர்ஆனுக்குத்தான். அதில்தான் தங்கள் ஞானத்தை அதிகமதிகம் செலவழித்தார்கள். ஏனெனில் அனைத்துத் துறைகளுக்கும் மூல ஊற்று திருக்குர்ஆன்தான்!

இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி; அது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வைச் சொல்கின்றது. ஆனால் திருக்குர்ஆனில் ஆழிய ஞானம் இருந்தாலொழிய இதனை நாம் நிரூபிக்க முடியாது.
திருக்குர்ஆனை அணுகும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். அவரவர் கோணத்தில் அவரவர் சிந்திக்கலாம். இதற்கு திருக்குர்ஆன் உரிமை அளிக்கிறது.

ஆனால் இந்த உரிமையை நேர்மையாக, ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும்.

ஷேக் ஸாபுனி என்ற அறிஞரது கூற்றுப்படி ‘ஃபஜ்ர்’ என்ற சூராவில் வரும் ‘ஃபஜ்ர்’ என்ற வார்த்தைக்கு 36 அர்த்தங்கள் தஃப்ஸீர்களில் காணக் கிடைக்கின்றன.

திருக்குர்ஆன் ‘தர்ஸ்’ என்பது தொடுவான எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே போகக் கூடிய ஒரு வாகனம். மனிதன் இதனைக் கொண்டு சிந்திக்க வேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும்.

முஸ்லிம்கள் பட்டுத் துணிகளால் மூடிய தங்கள் குர்ஆனைத் திறக்க வேண்டும். அல்லாஹ்வின் கிதாபோடு தங்கள் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கில உலகில் திருக்குர்ஆனை அறிய உதவுவதற்கு நிறைய நூல்கள் காத்துக் கிடைக்கின்றன. ஓதும் உச்சரிப்புகளைச் சரிப்படுத்த ஒலி, ஒளிப்பேழைகளும் உள்ளன.

திருக்குர்ஆனின் அரபியில் முஸ்லிம்கள் பாண்டித்தியம் பெற வேண்டும். திருக்குர்ஆனைப் பிறருக்குச் சொல்லித் தரும் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் திருக்குர்ஆனை ‘அமல்’ படுத்த வேண்டும்.

ஆம்! எங்கும் குர்ஆன், எதிலும் குர்ஆன் என்றொரு நிலை உருவாக வேண்டும்.

M.A. ஷெரீஃப்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி,  ஜனவரி 2001

Saturday 23 November 2013

துபையில் காயலர்கள் ஒன்று கூடல் (2013) !


அழகான பூங்கா
அன்பான காயலர்கள்
அருமையான வானிலை
அறுசுவை உணவு (களறி)
அப்பப்பா...
அனைவருக்கும் ஆனந்தம்
அகவை மறந்த குதூகலம்
அன்றைய மகிழ்ச்சி
அன்றாடம் நிலைத்திட
அல்லாஹ்வை பிரார்த்திப்போம்!

ஸஃபா பூங்காவில் சங்கமம்!


நாள் : 22/11/2013 வெள்ளிக்கிழமை


முந்தின நாள் வியாழக்கிழமை அன்று பகலிலும் இரவிலும் அமீரகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. ஆதலால் ஒன்றுகூடல் பூங்காவில் நடக்குமா, இல்லை சென்ற வருடம் மாதிரி அஸ்கான் டி பிளாக்கில்தானா என்ற சந்தேகம் வலுக்க, ஈசா காக்காவிடம் தொலைபேசியில் கேட்டேன்.


“ஸஃபா பூங்காவில்தான்” என்று உறுதியாகச் சொன்னார். அன்றிரவு பல மஷூராக்களுக்குப் பிறகு, வானிலை அறிக்கைகளை அலசி ஆராய்ந்து ஸஃபா பூங்காவிலேயே நிகழ்ச்சியை நடத்தலாம் என்று தைரியமாக முடிவெடுத்துள்ளார்கள் காயல் நலச் சங்க நிர்வாகிகள். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு ஒரு சபாஷ்!


அன்று நான் ஸஃபா பூங்காவை காலை 10.30 மணியளவில் சென்றடையும் பொழுது  நல்ல வெயில் அடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் நிம்மதி. ஆனால் 11 மணிக்குப் பிறகு மேகங்கள் திரண்டு வந்து மிரட்டின. நிகழ்ச்சிக்கு முற்கூட்டியே வந்திருந்தவர்கள் அனைவரும் அதனைக் கண்டு மிரண்டனர். என்ன செய்வது? அல்லாஹ்வின் அருட்கொடையாயிற்றே... அதனை வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?


11.40 மணியளவில் பூங்காவுக்கருகில் உள்ள ஜும்ஆ மஸ்ஜிதுக்கு ராவன்னா அபுல் ஹசன் காக்கா அவர்களுடன் சென்றேன். அவர்கள் பஹ்ரைனில் உள்ள காயல் நலச் சங்கத்திற்கு பல காலம் தலைவராக இருந்து ஊருக்கு நல்ல பல சேவைகள் செய்தவர்கள். இப்பொழுது துபையில் இருக்கிறார்கள். பஹ்ரைனில் இருக்கும்பொழுது ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார்கள். பேசிக்கொண்டே மஸ்ஜிதுக்குள் நுழைந்தோம்.



ஜும்ஆ முடித்துவிட்டு வெளியே வருகிறேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்ததை அப்பொழுதுதான் அறிந்தேன். மஸ்ஜிதுக்குள் இருக்கும்பொழுது ஒன்றுமே தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் என்ன செய்திருப்பர்கள் என்று மனம் அங்கலாய்த்தது.


வழமை  போன்று ஜும்ஆவுக்குப் பிறகு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. ஹாஃபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ராவன்னா அபுல் ஹசன் காக்கா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். காயல் நலச் சங்கத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் தலைமையுரையாற்றினார்.


அதன் பின்னர் புதுமுகங்கள் அறிமுகம் நடந்தது. நிகழ்ச்சிகளை சாளை சலீம் காக்கா அவர்களும், காயல் யஹ்யா அவர்களும் நெறிப்படுத்தினார்கள்.


அறிமுக நிகழ்ச்சி முடிந்ததும் அறுசுவை விருந்து ஆரம்பமானது. காயல் கல்யாணக் களறிச் சாப்பாட்டை அப்படியே பிரதி எடுத்தது போல் அதே சுவை. அதே யதார்த்தம் வரவேண்டும் என்பதற்காக இந்த முறை வெறுஞ்சோறும், புளியாணமும் வைத்திருந்தார்கள். கறியும், கத்தரிக்காய் மாங்காயும் இல்லாமல் களறிச் சாப்பாடா? அவையும் பறக்கத்தாக இருந்தன.


அனைவரும் உண்டு முடித்தவுடன் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமானது. துபை பிரைம் மெடிக்கல் சென்டரில் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் செய்யது அஹமது அவர்கள் காது, மூக்கு, தொண்டை பற்றிய மருத்துவ விளக்கங்களை உரிய படங்களுடன் அழகுற விளக்கினார்.


பின்னர் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மதி மயக்கும் மாலை வேளை வந்தவுடன் சூடான கறி சம்சாவும், தேநீரும் பரிமாறப்பட்டன. பின்னர் ‘தமிழிலேயே பேச வேண்டும்’ என்ற போட்டி நடைபெற்றது.


அபுதாபியிலிருந்து வந்த ஒரு சகோதரர் மைக்கைப் பிடித்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு “கணிணி”. என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்க, “நீராறும் கடலுடுத்த...” என்று பாட்டு பாட ஆரம்பித்தார். அனைவரும் தங்களை மறந்து சிரித்தனர்.


பின்னர் வினாடி வினா போட்டி நடைபெற்றது. விடை சரியாகச் சொன்னவர்களுக்கெல்லாம் அப்பொழுதே பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் பகல் 12 மணிக்குள் வந்தவர்களின் டோக்கன்கள் குலுக்கப்பட்டு இருவருக்கு தலா ஒரு கிராம் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.


எனது வீட்டுக்கு அருகிலுள்ள செய்து ஹசன் காக்காவும், என் நண்பன் முத்து ஃபரீதும் அந்த அதிர்ஷ்டசாலிகள்.


புதுமுகங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர். வந்திருந்தவர்கள் பரஸ்பரம் பழகி அளவளாவினர். ஜும்ஆவுக்குப் பிறகு மழையில்லாமல் மப்பும் மந்தாரமுமாக வானிலை இருந்தது அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.



நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!