Monday 26 February 2018

குண்டு வெடிப்புகள் - பிரவீன் சுவாமி பார்த்த விதம்

ஒரு குண்டுவெடிப்பு நிகழ்கிறதென்றால் -
கொல்லப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
குற்றம் சாட்டப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!
கூண்டில் அடைக்கப்படுபவர்கள் - முஸ்லிம்கள்!

இப்படி ஒரு கொடூரத்தை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருப்பீர்களா? இந்தக் கொடுமையைக் கண்டு கொதித்தெழாமல் முஸ்லிம்களையே குற்றப்படுத்தி தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்ற மீடியாவை நாம் மனசாட்சியுள்ள துறை என்று கூற முடியுமா?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை இன்று ஊனமாகிப்போய்விட்டது. தூணில் ஓட்டை விழுந்து விட்டது.

இந்தியாவிலேயே மதச்சார்பற்ற, நடுநிலையான, தரமான பத்திரிகை என்று அறியப்படுவது தி ஹிந்து ஆங்கில நாளிதழும், அதன் சகோதரப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைன் மாதமிரு இதழும்.

“பிரவீன் சுவாமி போன்றவர்களைக் கொண்டிருக்கும் தி ஹிந்து பத்திரிகையை இன்னுமா நடுநிலையான, மதச்சார்பற்ற பத்திரிகை என்று கூறுகிறீர்கள்?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார் ஒரு புகழ்பெற்ற பெண் பத்திரிகையாளர். 

இவர் தி ஹிந்து மும்பை பதிப்பில் பணியாற்றியவர். அதிலிருந்து வெளியேறிய அவர் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற, நடுநிலையான இளைஞர்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கும்பொழுதுதான் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

யார் இந்தப் பிரவீன் சுவாமி?

தரமான செய்தியாளர் என்று நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

எங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் தவறாமல் இவரது கட்டுரைகள் மேற்படி பத்திரிகைகளில் இடம் பெற்று விடும். அத்துணையிலும் அழகாக, நயம்பட அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டு விடுவார்.

இத்தனைக்கும் குண்டுவெடிப்பின் இடத்தில் குண்டு வீச்சின் சூடு கூட தணிந்திருக்காது. அது பற்றிய விசாரணை தொடங்கியிருக்காது. ஆனாலும் தமிழகத்தில் வெளிவரும் நாலாந்தரப் பத்திரிகை மாதிரி அவரது ஆட்காட்டி விரல் முஸ்லிம்களையே சுட்டி நிற்கும்.

இவருக்கு எங்கிருந்து இந்த ‘ஞானோதயம்’ வருகிறது? இருக்கவே இருக்கிறார்கள் உளவுத்துறையினர். அவர்கள் இவரைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றனரா? அல்லது இவர் அவர்களைக் கைக்குள் போட்டு வைத்திருக்கின்றாரா? யாருக்கும் தெரியாத ரகசியம் இது.

உளவுத்துறையினர் சொல்வதை அப்படியே விழுங்கி, இவர் பங்குக்கு வயிற்றுக்குள் ரசாயனம், அமிலம், மசாலா எல்லாம் சேர்த்து செய்தியாக வாந்தியெடுத்து விடுவதில் வல்லவர் இவர்.

2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டுகள் வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தபொழுது இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு : “அமைதிக்கு எதிரான சதி”

“இந்தியா-பாக். நட்பை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர்” என்பது அவர் எழுதிய செய்திக் கட்டுரையின் சாராம்சம். இதற்கு என்னென்னவோ ஆதாரங்களை எடுத்துக் கையாண்டிருந்தார்.

இப்பொழுது என்ன ஆயிற்று? அந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. ஜும்ஆ தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்தச் சம்பவத்தை எதிர்த்து கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்களின் உயிர்கள் அங்கே பலியாகியிருக்க, நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்குப் பின்னால்” 

துணைத் தலைப்பு: “வகுப்புவாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத் ஆந்திரப் பிரதேச தலைநகரை உலுக்குகிறது”

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும், அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு எனவும், மும்பை தொடர் குண்டுவெடிப்பிற்குப் பிறகு வன்முறைகள் குறைந்திருப்பதைச் சகிக்க முடியாமல் லஷ்கர் போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் செய்த பயங்கரம்தான் இது என்றும் அதில் பிரகடனப்படுத்துகிறார் பிரவீன் சுவாமி.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதிலும் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதிமன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசிமானந்தா.

2007 அக்டோபர் 12ம் தேதி அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் மாதம் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம்போல் தி ஹிந்து பத்திரிகையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு: “பாப்புலர் இஸ்லாமிற்கு எதிரான போர்”

இவர் இங்கே ‘பாப்புலர் இஸ்லாம்’ என்று கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றும் நடைமுறைகள் என்பதாகும். அதாவது தர்காவைப் பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006ல் மாலேகானில் ஒரு தர்காவில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் அவர்கள்தான் காரணம் என்கிறார்.

இதனை நம்ப வைப்பதற்காக அஜ்மீரில் அடக்கப்பட்டிருக்கும் காஜா முயீனுத்தீன் சிஷ்டியின் வரலாறிலிருந்து தன் புரட்டைத் துவங்குகிறார். இந்தியா முழுவதும் வகுப்புவாதப் போரைத் துவங்கவே இவை நடத்தப்படுவதாக அதில் கூறுகிறார்.

இப்படிக் கூறி முஸ்லிம்களிடையே பிளவையும், பிரிவையும் உருவாக்க அவர் அந்தக் கட்டுரையில் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அஜ்மீர் தர்காவிலும், 2006ல் மாலேகான் தர்காவிலும், 2008ல் மாலேகானில் நடந்த இன்னொரு சம்பவத்திலும் குண்டுகளை வைத்தது நாங்கள்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அசிமானந்தா அம்பலப்படுத்துகிறார்.

“ரிப்போர்ட்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒருபொழுதும் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது கிடையாது” என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப் படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலை பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்கரவர்த்தி கூறுகிறார்.

“பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார்” என்கிறார் அவர்.

பிரவீன் சுவாமி அதிகமாகக் கூறும் ஆதாரமே “புலனாய்வுத்துறையினர் இப்படி நம்புகின்றனர்” என்பதுதான்.

உளவுத் துறையினர் பிரவீன் சுவாமி மாதிரி பத்திரிகையாளர்களைப் பயன்படுத்தி ஜிஹாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஊடகங்களில் ஊதிப் பெருக்குவதும், மிகைப்படுத்திக் கூறுவதும், எப்பொழுதும் நாட்டில் பரபரப்பை நிலைநிறுத்துவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் எந்த இஸ்லாமிய பயங்கரவாதமும் இதுவரை 100 சதவீதம் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் நிரூபிக்கப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதத்தைப் பற்றி இதே உளவுத்துறையினர் சாதாரணமாகக் கூட ஊடகத்தில் அலசுவது இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிகையாளர்கள் ஹிந்துத்துவ பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்வதற்கோ, எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

இதுதான் பிரவீன் சுவாமியின் நிலை. இதுதான் இந்தியா டுடே போன்ற இந்தியா முழுவதும் படிக்கப்படும் பத்திரிகைகளின் நிலை. இதுதான் மொத்த இந்திய ஊடகங்களின் நிலை.

பிரவீன் சுவாமி போன்ற நச்சுக்கிருமிகள் ஊடகத்துறையிலிருந்து அகற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஜனநயாகத்தின் நான்காவது தூண் தலை நிமிர்ந்து நிற்கும். ஊடகத்துறை செழித்தோங்கும். பத்திரிகை தர்மம் நிலைநிறுத்தப்படும்.

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2011

Saturday 24 February 2018

மறக்க முடியாத இந்திய முஸ்லிம் பெண் சுதந்திரப் போராளிகள்

வீரத்தாய் ந. பியாரி பீபீ

நம்மில் எத்தனை பேருக்கு நா. பியாரி பீபீயை தெரியும். கரூரைச் சேர்ந்த தமிழச்சிதான் இவர். இவரின் தியாகத்தை ஒப்பிட்டு பார்த்தால் மற்ற எவரின் தியாகத்திற்கும் குறைந்தது அல்ல.

இஸ்லாமியப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வீரத்தாயின் தியாகம் மறைக்கப்பட்டுள்ளது.

வீரத்தாய் பியாரி பீபீ ஒரு 100% இஸ்லாமியப் பெண் என்பதை முதலில் மனதில் பதிய வைத்துக் கொண்டு இவரின் வரலாற்றை படித்துப் பார்த்தால் இவரின் தியாகத்தை புரிந்து கொள்ள முடியும். 

இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.

கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லிம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லிம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாஅத்திலிருந்து இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர். மேலும், இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு சிறையிலேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது.

முஸ்லிம் பெண் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதை விரும்பாத சில முஸ்லிம்கள், பியாரி பீபீ போலீசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் போது, அவர் மீது கற்களை எறிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே வாழ்ந்தனர். கணவர் கரூர் நன்னா சாகிபு அவர்களை முழுமையாக சுதந்திரப் போரில் பங்கு பெற அனுமதித்தார் மனைவி.

ஸுரய்யா தியாப்ஜி

தேசிய கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்.

நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரய்யா தியாப்ஜி. ஆலோசனை தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி. 
(பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..!)

இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 - 1906)

சர். ஆலன் அக்டேவியன் ஹியூம்,  சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமூக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர் W.C. பானர்ஜி. 
1886ல், இ.தே.கா.-வின் இரண்டாம் தலைவர், பாரிஸ்டர். D. நவ்ரோஜி.

அடுத்த வருடம், 1887 இல் மூன்றாம் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி. 

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)

பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)

இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.

இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர். 

இவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

ஸுரய்யா தியாப்ஜி கொடி வரைந்த வரலாறு

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...!)

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின்  'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய  தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..!


மேலே  உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..! கவனியுங்கள்.

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.

அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..! 

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத் தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக  ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது...!

தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க  இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்:

Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html (official site for national flag)
http://www.proprofs.com/quiz-school/story.php?title=quiz-on-indian-flag
http://flagstamps.blogspot.com/2010/07/quest-for-national-flag-for-india-part_22.html
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)
<http://aicc.org.in/new/past-president-detail.php?id=3>

பேகம் ஹஜ்ரத் மஹல்

1857ல் மாமன்னர் பகதுர்ஷா ஜஅஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சி ராணி லக்குமி பாய், மற்றொருவர் உத்திரப் பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப் பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஹஜ்ரத் மஹல் ஒளத் மாநிலத்தின் ராணி, நவாப் வஜீத் அலீ ஷாவின் மனைவியுமாவார். ஒளத் என்பது இப்போது உள்ள உத்திரப் பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிட்டிஷ்காரர்களால் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமைத்தனத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.

பேகம் என்பது இவரது பெயர். “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நவாபாகிய அவரின் கணவரை பிரிட்டிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தைக் காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கி விட்டு, நாட்டைக் காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம், தேசாபிமானம், தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.

ஒளத் நவாபான வஜீத் அலீ ஷாவை ஆங்கிலேயர் சிறைப்படுத்தி வைத்திருந்தனர். அவரின் புதல்வாரன இளவரசர் பிரிஜிஸ் காதரைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிம்மாசனத்தில் ஏற்றினர். பிரிஜிஸ் காதர் சிறுவராக இருந்த காரணத்தினால் ஒளத் நிர்வாகம் அவரது பிரதிநிதி என்ற முறையில் அவரின் தாயாரான ராணி ஹஜ்ரத் மஹலிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழப்பமான நிலையிலும் உறுதியும் திறமையும் துணிச்சலும் வாய்ந்த பேகம் நிர்வாக்தை ஒழுங்காக நடத்தி வந்ததிலிருந்து அவரது இணையற்ற பெருமை வெளியாகிறது. அவருடைய நிர்வாக சாதுர்யத்தை ஆங்கில சரித்திர ஆசிரியர்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

1857ல் சிப்பாய் கலகம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பேகம் தனது படையுடன் சென்று லக்னோ பிரிட்டீஷ் தூதரகத்தை முற்றுகையிட்டார். அங்கிருந்த பிரிட்டீஷ் தூதுவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர். தூதரகத்தை இடித்து தரைமட்டமாக்கினார்.

பேகத்திற்கு மக்கள் மத்தியிலும் வீரர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் தலைமையின் கீழ் திரண்ட புரட்சியாளர்கள் இரண்டு லட்சம் பேர் என்றும், ஆங்கிலேயர்களை அவர் எதிர்த்த இறுதி யுத்தத்தில் பதினாயிரக்கணக்கில் வீரர்கள் வந்தனரென்றும் ஆங்கில சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிரிட்டீஷ் படைப் பிரிவுகளில் பணியாற்றிய சிப்பாய்கள் மத்தியில் பேகத்திற்கு மிகுந்த ஆதரவு இருந்தது. இதனால் பேரக்பூரில் இருந்த 34வது படைப் பிரிவை ஆங்கில அரசு கலைத்து விட்டது. ஏனென்றால் அப்படைப் பிரிவில் இருந்த பெரும்பான்மையான சிப்பாய்கள் ஒளத் பகுதியைச் சார்ந்தவர்கள். (R.C. Agawal, Constitution Development of India and National Movement, P. 43, 53)

1858 மார்ச் 6ம் தேதி 30.000 துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்து நாட்கள் தொடர் யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், பேகத்தின் வீரர்களால் கொல்லப்பட்டான். ஆங்கிலப் பெரும் படையின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தனது ஆதவாளர்களுடன் ஒளத்தை விட்டு வெளியேறினார். பிதாவ்லியில் முகாமிட்டிருந்த பேகத்தை ஆங்கிலப் படை தொடர்ந்து வந்து விரட்டியது. அவர் தன் ஆதரவாளர்களுடன் நேபாளத்திற்குள் தலைமறைவானார்.

இந்தியாவின் முதலாம் உலகப் போரின் போது முக்கிய தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரைச் சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்துப் பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஸை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.

பின்னர் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் ஆங்கிலேயர்கள் மீண்டும் அம்மாநிலத்தைக் கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னோவை மீண்டும் ஆங்கிலேயர்களே கைப்பற்றினர். இந்தச் சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் ஆங்கிலேயர்களால் பின்வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கிருந்து இடம் பெயர்வது மேல் என்று முடிவு எடுத்தார்.

பேகத்தின் ஆட்சியையும் அரசுடைமைகளையும் சொத்துகளையும் ஆங்கில அரசு பறிமுதல் செய்தது. மற்ற நவாபுகள், மன்னர்கள் போல் ஆங்கிலேயருக்கு மானியங்களை வழங்கி, அவர்களது நிர்ப்பந்தங்களுக்கு ஒத்துப் போயிருந்தால் நிம்மதியாக சகல சௌபாக்கியங்களுடன் அவர் ஆட்சி நடத்தியிருக்கலாம். ஆனால் மண்ணடிமை தீர ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் குரல் கொடுத்ததால் இந்நிலைக்கு ஆளானார். தேசத்தின் விடுதலைக்காக தன் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து நாட்டை விட்டே வெளியேறும் நிலைக்காளான பேகம் ஹஜ்ரத் மஹலின் தியாகங்கள் நெஞ்சைக் கனக்கச் செய்வனவாகும்.

அஜிஜன்

இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார் படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்டிஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புபவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.

பி அம்மா (அபாடி பேகம்)

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலீ 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலீ வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாமின் மகன். அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒருவேளை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர். இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

ஜுபைதா தாவூதி

இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரைச் சேர்ந்தவர். பிரிட்டிஷாருக்கு எதிராக “துணிச்சலை” தன் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ்காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும்  துணிச்சலை வளர்க்க தன்னை முன்மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.

சதாத் பனோ கிச்லேவ்

இவர் பஞ்சாபைச் சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.

1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர் கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டவுடன் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்துமீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவால் நிறுவப்பட்ட “ஸ்வராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்திச் சென்ற பெருமையைக் கொண்டவர்.

ஜுலைகா பேகம்

இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார். மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திரப் போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதர் அபுல் கலாம் ஆசாத் 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்திருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே. ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை. இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாஃபத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கிக் கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.

ரஜியா காத்தூன்

பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றவர். இதனால் அவர்களைக் கைது செய்து களப்பணி என்ற இடத்தில் அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.

மேலே குறிப்பட்டவர்களைத் தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, ஃபாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், ஃபாத்திமா இஸ்மாயீல், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் அடைக்கப்பட்டும், பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நாம் சுதந்திர இந்தியாவைக் காண முடிகிறது.

ஹஸன் மஹ்பர் பேகம்

பேகம் ஹஜ்ரத் மஹலின் சம காலத்தில் ஜான்ஸி ராணியுடன் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போர்க்களத்தில் வாளேந்தி நின்ற மற்றொரு வீரமங்கை ஹஸன் மஹ்பர் பேகம். ஜான்ஸியின் ஒரு படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய மஹ்பர், 1858 ஜூன் 18ல் நடைபெற்ற குவாலியர் யுத்தத்தில் ஜான்ஸியுடன் வீர மரணம் அடந்தார்.

அமாதுல் ஸலாம்

1938ல் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பம்பாயில் காந்திஜியும் முஹம்மது அலீ ஜின்னாவும் சந்தித்துப் பேச ஏற்பாடபயிற்று. ஜின்னாவைச் சந்திக்க ஒரு பெண்ணும் வந்திருந்தாள். ஜின்னாவின் இல்லத்தில் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் காந்திஜி பத்திரிகை நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியில் காந்திஜி, “என்னிடம் அத்தியந்த பிரேமை வாய்ந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக அவள் தன் உயிரையும் மகிழ்ச்சியாகக் கொடுப்பாள்” என்று கூறியவர், தன் அருகில் நின்ற அப்பெண்ணை நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்பெண்தான் குமாரி அமாதுல் ஸலாம்.

ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள்

“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது. சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

பேகம் சாஹிபா

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஹைதர் அலீ அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீரா ரசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவரின் மனைவியும் ஹைதர் அலீயின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபாவுக்கு கி.பி.1772ல் குழந்தையைப் பெற்றெடுத்து ஏழாம் நாள் காலமானார்.

போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீரா ரசாலிக்கான் சாயபு தன் மனைவியை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்ன பள்ளப்பட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

இந்திய நில அளவை உயர் அலுவல் மெக்கன்சியின் உதவியாளர்களில் ஒருவராகிய தரியாபத்து நிட்டல நாயன அய்யன் பள்ளிவாசல்களையும் அங்குள்ள புற கட்டிடங்களையும் சுற்றிலும் உள்ள நந்தவனத் தோட்டங்களையும் நேரில் பார்த்து அதனை அழகாக வர்ணித்துள்ளார். அதன் மூல ஆவணம் தமிழ்நாடு அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ளது. அதன் எண்கள் டி.3021,ஆர் 8275 ஆகும்.

இளையான்குடியின் பீபியம்மாள்

என் பிள்ளைகள் சிறையில் இருக்கும் போது ஒரு வேளை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுதலையானால் அவர்களின் குரல் வளையை நெறித்துக் கொல்வேன் என்று வீரசபதம் பூண்டவர் தாயார் பீபியம்மாள்.

1922ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், கதர் ஆடையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி திரட்டவும் இளையான்குடியில் உள்ள அலங்காரத்தோப்பிற்கு அருகே தென்புறம் பேரூராட்சியில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கே குடிநீர் தொட்டி ஒன்றும் இருந்தது. அந்தக் குடிநீர் தொட்டி அருகில் ஏ.எஸ்.டி. இப்ராகிம் ஷாவுடைய பங்களா இருந்தது. அந்த பங்களாவில் சுதந்திரப் போராட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பீபியம்மாள், மீன்பஜார் முதல் காதர் பிச்சை தெரு வரை மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

இதே போல தென்காசி சையது குருக்கள் பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உருது மொழியில் பேசி நிதி திரட்டினார். அவர் பேசியதை தமிழில் திருச்சியைச் சேர்ந்த முர்தஸா சாகிப் மொழி பெயர்த்தார். இவ்வாறு சுதந்திர வேட்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றப்பயணம் செய்த பீபியம்மாள் 1924ம் ஆண்டு 72வது வயதில் காலமானார். பீபியம்மாள் விருப்பப்படி அவரது உடல் கதர் துணியால் சுற்றப்பட்டே நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்ணனூர் ராணி பீபி

கேரளாவின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கண்ணனூரை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர் ராணி பீபி. மைசூர் திப்பு சுல்தானின் ஆதரவாளரான இவர், பிரிட்டீஷ் படைவீரர்கள் கண்ணனூர் வழியாகச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் இவர் மீது போர் தொடுத்தனர்.

1783ம் ஆண்டு திடீரென கண்ணனூரை ஆங்கிலேயர்கள் தாக்கினார்கள். அந்தத் திடீர் தாக்குதலில் ராணி பீபியின் படை தோல்வியடைந்தது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைத்தவுடன் ராணியின் எல்லைப் பகுதியை தாங்கள் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குவது போல போலி ஆவணம் தயாரித்து ராணியிடம் படித்துக் காண்பிக்காமல் ஒப்பந்தம் வாங்கி ஆங்கிலேயர்கள் தங்களுடைய ராணுவ முகாமிற்கு பயன்படுத்திக்கொண்டனர். அதன் பின்னர் ராணி விடுதலை செய்யப்பட்டார். 

1784ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கண்ணனூரில் ஆங்கிலேயரின் முகாம் செயல்படத் தொடங்கியது. மீண்டும் 1790ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுபடியும் ஓர் ஒப்பந்தத்தை தயார் செய்து கையெழுத்திடுமாறு ராணி பீபியை நிர்பந்தம் செய்தனர். ஆனால் ராணி பீபி மறுத்ததுடன் திப்பு சுல்தான் படைக்கு ஆதரவாக செயல்படப் போவதாக பகிரங்கமாக அறிவிப்பும் செய்தார். இதன் காரணமாகவே மீண்டும் ராணி கைது செய்யப்பட்டார்.

உமர் பீபி

1919ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.இ.ஹெச். டயர் என்பவன் தலைமையில் ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில் உமர் பீபியும் பலியானார். இவர் 1864ம் ஆண்டு அமிர்தசரசில் பிறந்தவர். இவரின் கணவர் பெயர் இமாமுதீன்.

மரியம் பீவி

திருச்சி பீமநகர் வயன்வித்தார் தெருவில் வசித்த மரியம் பீவி என்னும் விடுதலைப் போராட்ட வீராங்களை நாகபுரி கொடிப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவருடைய கணவர் பெயர் அப்துல் கரீம். பெண் என்றும் பாராமல் ஆங்கில ஆட்சி மரியம் பீவிக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை வழங்கி கடலூர் சிறையில் அடைத்தது.

பேகம் அயிஜாஸ் ரசூல்

உத்திரப் பிரதேசத்தில் சாண்டிலா என்ற ஊரில் 1909ம் ஆண்டு நவார் சர்ஜூல் பிகாரின் மகளாகப் பிறந்தவர். நவாப் அயிஜாஸ் ரசூல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் 1937ம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1969ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச அமைச்சராக பதவி வகித்தார்.

பியாரி பீவி

கரூர் நன்னா சாகிப் மற்றும் அவரின் மனைவி பியாரி பீவி ஆகிய இரண்டு பேரும் ஒத்துழையாமை இயக்கத்திலும், தனி நபர் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார்கள். 1920ம் ஆண்டிலிருந்து 1943ம் ஆண்டு வரை விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்ட நன்னா சாகிப் திருச்சி, அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்திருக்கிறார். அவரின் மனைவி பியாரி பீவி தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகச் சிறை சென்றார்.

ஆதார நூல்கள்:

1. மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும்… மறைக்கப்படும் உண்மைகளும், சென்னை.
2. விடுதலை போரில் முஸ்லிம்கள், வி.என். சாமி, மதுரை.
3. மறுக்கப்பட்ட உண்மைகளும்..மறைக்கப்பட்ட நியாயங்களும், அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், சென்னை.

ஹாசினியின் தந்தையின் கதறல்



ஹாசினி கொலைவழக்கின் தீர்ப்பைக் கேட்ட பின் அவளது புகைப்படத்தைப் பார்த்து அவளின் தந்தை கதறி அழுததைக் கண்ட பொழுது எனக்கு குஜராத் நினைவுக்கு வந்தது. ஹாசினியையாவது காமக் கொடூரன் தஷ்வந்த் கடத்திக்கொண்டு போய் சீரழித்து கொன்றான். தன் கண் முன்னே நடக்காவிட்டாலும் தன் மகள் எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்திருப்பாள் என்றெண்ணி ஹாசினியின் தந்தை கதறுகிறார் என்றால் குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது தாய், தந்தையர் கண் முன்னே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகள் பெண்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து எரித்துக் கொன்றதைப் பார்த்து எப்படி துடிதுடித்திருப்பார்கள் அந்தப் பெற்றோர்கள். இன்று நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நடுநடுங்குகிறதே... அந்த இனப்படுகொலையைச் செய்ய அனுமதித்து, காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டு, நடப்பவையை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர் இன்று அரியணையில்! இப்படிப்பட்ட இழி நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இப்படி நம்பிக்கையிழந்து நெஞ்சம் விம்மும் நேரத்தில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் பிப் 17, 2018 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் திரூரில் ஆற்றிய உரை செவிகளில் ரீங்காரமிடுகிறது:
“கேரளத்திற்கும் சங்பரிவார்கள் ரதயாத்திரையுடன் வருகிறார்கள். எனினும், இங்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் ஒரு சமூகத்தின் அமைதிக்கு மட்டும் பங்கம் விளைவிக்கும் சூழல் கேரளாவில் ஏற்படாது என்று நம்புகிறோம். ஏதேனும் ஒரு பிரிவினரின் ரத்தம் மட்டும் வீதிகளில் ஓடாது என்றும் நம்புகிறோம்” என்ற வார்த்தைகள் வாழும் முஸ்லிம்களுக்கு வலுவான நம்பிக்கையை ஊட்டுகின்றன.

சாஸ்திரி வாங்கிய ஃபியட் கார்



மிகவும் எளிமையாக வாழ்ந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 1964-65ல் தனது குடும்பத் தேவைக்காக ஒரு கார் வேண்டிய அவசியம் வந்தது. அன்று பெயரும், புகழும் பெற்று விளங்கிய ஃபியட் கார் வாங்குவது என்று முடிவெடுத்தார்.

அன்றைய ஃபியட் காரின் விலை ரூ. 12,000. இவருக்கு வங்கியில் ரூ. 7000 மட்டுமே இருந்தது. மீதிப் பணம் ரூ. 5000ஐ பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக சாஸ்திரி பெற்று ஃபியட் கார் வாங்கினார். கார் எண் DLE 6.

ஆனால் எதிர்பாராவிதமாக 1966ம் ஆண்டு தாஷ்கண்ட் சென்றிருந்தபொழுது சாஸ்திரி இறந்து விட்டார். காருக்கு வாங்கிய கடனை அடைக்காமல் சாஸ்திரி இறந்துவிட்டதால் கடனை அடைக்குமாறு சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

தனக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து லலிதா சாஸ்திரி அந்தக் கடனை அடைத்தார். இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் இன்று 11,300 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அந்தக் கார் இன்று சாஸ்திரியின் நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

என் பெயர் ஆஸாத்!

இந்திய விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922ல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்களிடம் பேசுகிறான். விடுதலை உணர்வைத் தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். தகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.
நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி விசாரணையைத் தொடங்குகிறார்.
நீதிபதி: உன் பெயர் என்ன?
கைர்: "ஆஸாத்" ('விடுதலை' என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி: சரி... உன் தந்தையின் பெயர் என்ன?
கைர்: "இஸ்லாம்!"
நீதிபதி: உன் ஜாதி எது?
கைர்: "ஒத்துழையாமை!" (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்...)
நீதிபதி: உனது தொழில் எது?
கைர்: "அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது" (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான். புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம், ராஜதுரோகம்.)
நீதிபதி: உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : "என் பிணையாள் அல்லாஹ் ஒருவன்தான்"
(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன்...)
நீதிபதி: உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர்: "ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?"
(என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க... மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப் பிடிப்பும் விடுதலை உணர்வும் நம்மை ஆச்சரியத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.
(டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை (அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சிந்தனைச்சரம், அக்டோபர் 1997)

கதர் ஆடை என்ற பெயர் எப்படி வந்தது?




“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர்.
தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது.
சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

Monday 19 February 2018

“இடப்பெயர்ச்சி என்பது வளர்ச்சியல்ல என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்!” - வஸதா சாய்பாபா புதிய விடியலுக்கு அளித்த பேட்டி

மஹாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒன்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களுக்கு கடந்த மார்ச் 7ம் தேதி ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் 90% மாற்றுத் திறனாளியான பேரா. சாய்பாபாவுக்கு மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் என்ற யுஏபிஏ கொடூரச் சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி பிரிவின் கீழும் அந்த அமர்வு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

நமது புதிய விடியல் சிறப்பு செய்தியாளர் தன்வீர் இக்பால் பேரா. சாய்பாபா அவர்களின் மனைவி திருமதி வஸதா சாய்பாபா அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:

பு.வி.: பேரா. சாய்பாபா அவர்களுக்கு கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

வஸதா: ஆயுள் தண்டனை என்பது அதிர்ச்சியை அளித்தது. முற்றிலும் எதிர்பாராதது. வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞரால் சாய்பாபாவுக்கெதிராக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை. மஹாராஷ்ட்ரா வரலாற்றிலேயே குற்றம் சுமத்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் தண்டனையின் அத்தனை பிரிவுகளின் கீழும் தண்டனை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.

நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 23 சாட்சிகளில் 22 பேர் போலீஸ்காரர்கள். மீதமுள்ள ஒரே ஒருவர் ஒரு நாவிதர். அந்த நாவிதரும் கூட போலீஸின் ஆளே. அதனை அவரே அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் தன்னை சாட்சி சொல்லும்படி போலீஸ்தான் வற்புறுத்தியது என்று கூறினார்.

2014ல் டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்திலுள்ள எங்கள் வீட்டில் காவல்துறையின் சோதனை நடந்தது. அப்பொழுது கணிணியின் நிலைவட்டு (ஹார்ட் டிஸ்க்) கைப்பற்றப்பட்டது. அது உட்பட சில மின்னணு ஆதாரங்களையே அதிகபட்ச ஆதாரங்களாகக் கொண்டு சாய்பாபாவுக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் முத்திரை வைக்கப்படாததால் மிக எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம். சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்தாராம். சாய்பாபா பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்ததற்கு ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டில் மேல் நீதிமன்றங்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பு.வி.: ஏன் இப்படிப்பட்ட வழக்கு சாய்பாபாவின் மேல் கட்சிரோலி நீதித்துறை எல்லைக்குள் தொடுக்கப்பட்டது?

வஸதா: முதலில் காவல்துறை 2013 செப்டம்பரில் எங்கள் வீட்டை சோதனையிட்டது. மஹாராஷ்ட்ராவில் அஹேரியில் திருடப்பட்ட பொருளைத் தேடியெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது. அது நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு சாய்பாபா கைது செய்யப்பட்டார். 2014ம் ஆண்டு மே 9ம் தேதி டெல்லி பல்கலைக்கழத்தில் ஒரு பரீட்சை மையத்திலிருந்து அவர் திரும்பிக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமான யுஏபிஏ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, பாம்பே உயர்நீதிமன்றம் நாக்பூர் சிறையில் மோசமாகிக்கொண்டு வரும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் மூன்று மாத பிணை வழங்கியது.

பு.வி.: 2014ல் சாய்பாபா கைது செய்யப்பட்டதை ‘அது ஒரு கடத்தல்’ என்று சாய்பாபா வர்ணித்திருந்தார். அதனை விவரிக்க முடியுமா?

வஸதா: மே 9ம் தேதி தவுலத் ராம் கல்லூரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மதிப்பீட்டு மையத்தின் தலைமைத் தேர்வு மேற்பார்வையாளராக சாய்பாபா நியமிக்கப்பட்டார். மதிய உணவு இடைவேளையில் தனது காரில் சாய்பாபா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழக விளையட்டரங்கத்தின் அருகிலுள்ள வளைவில் திரும்பும்பொழுது திடீரென்று 45 முதல் 50 பேர் காருக்கு முன்பாக வந்தனர். காரை நிறுத்தினர். சில நொடிகளில், கார் ஓட்டுனரை ஒருவன் இழுத்து வெளியே தள்ளி விட்டு, காரினுள் அமர்ந்தான். சாலை வழிப்பறியாக இருக்கலாம் என்றுதான் சாய்பாபா எண்ணினார். ஆனால் அவர்கள் காரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். சாய்பாபாவை காரிலேயே இருக்கும்படி உத்தரவிட்ட அவர்கள் அவரது கைபேசியைப் பிடுங்கினர். தேர்வு வினாத் தாள்களையும் பிடுங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் 50 பேரும் காவல்துறை அதிகாரிகள் என்று சாய்பாபாவுக்குத் தெரிய வந்தது. அவர்கள் சாதாரண உடைகளில் வந்த மஹாராஷ்ட்ரா காவல்துறை, ஆந்திரா காவல்துறை, மத்திய உளவுத்துறை, சிறப்புப் பிரிவு காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள்.

சாய்பாபாவை ஒரு மேஜிஸ்திரேட்டின் முன்பு ஆஜர் படுத்தாமல், விசாரணைக்காக விண்ணப்பிக்காமல் அவர் நாக்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சாய்பாபாவின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த பணியாளரின் அலைபேசி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை செல்லும்பொழுது சாய்பாபா எங்களைத் தொடர்பு கொண்டார்.

பு.வி.: சாய்பாபாவின் உடல்நிலை எப்படி உள்ளது? பிணையில் வெளிவரும் முன் சிறையில் எப்படி அவர் சமாளித்தார்?

வஸதா: 2014ல் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது இடது கையை அவரால் தூக்கவே முடியாத நிலையில் உள்ளார். நாக்பூருக்குச் செல்லும் வழியில் அவரது சக்கர நாற்காலி உடைந்து விட்டது. அப்பொழுது போலீஸ் கான்ஸ்டபிள்கள் மணல் மூட்டையை அள்ளுவது போல் அவரைத் தூக்கியிருக்கின்றனர். நாக்பூர் சிறையில் அவரது தசைகள் சிதிலமடைந்து வருவதைக் கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு தசைகளுக்கான நரம்பியல்-உடற்கூறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். சிறையில் சாய்பாபாவுக்கு மேலைநாட்டுப் பாணியிலான கழிவறை கொடுக்கப்படவில்லை. காவலர்கள் சாய்பாபாவின் தோள்களைப் பிடித்துக்கொள்ள, அவர் இந்திய கழிவறையை மிகவும் சிரமப்பட்டு பயன்படுத்தினார். இது அவரது எலும்புகளைப் பிணைக்கும் தசைநார்களைப் பாதித்தது. நரம்புகளும் பாதிப்படைந்தன. அவை சிதிலமடையத் தொடங்கின. சாய்பாபாவின் தண்டுவடமும் சேதமடைந்தது. அவரது விலா எலும்புகள் நுரையீரலை உந்தித் தள்ள ஆரம்பித்தன. சாய்பாபாவுக்கு உடனடியாக பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

பு.வி.: அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் அவரது வேலை என்னவாயிற்று? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

வஸதா: 2014ல் மஹாராஷ்ட்ரா கட்சிரோலி காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஆர்.எல்.ஏ. கல்லூரியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் மூன்று பேர் அவரைச் சார்ந்து வாழ்கிறோம். நான், சாய்பாபாவின் அம்மா, எங்கள் 19 வயதுடைய மகள் ஆகியோரே அந்த மூவர். சாய்பாபாவை பணியிடைநீக்கம் செய்த பின்னர், டெல்லி பல்கலைக்கழகம் எங்களை எங்கள் வடக்கு கட்டட வளாகத்திலிருந்த வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆதலால் வேறு வழியில்லாமல் நாங்கள் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். வழக்கு செலவுகளுக்காகவும், இன்னபிற அன்றாடச் செலவுகளுக்காகவும் சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நிறைய கடன்கள் உள்ளன. எங்களது முக்கிய வருமானம் என்பது சாய்பாபாவின் சம்பளமே. இப்பொழுது அவர் பணியிடைநீக்கத்தில் இருப்பதால் மூன்றில் ஒரு பகுதி சம்பளமே எங்களுக்குக் கிடைக்கிறது.

பு.வி.: எந்த நீதிமன்றத்திலாவது அவருக்கு குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா?

வஸதா: இந்த வழக்கு தவிர்த்து வேறு எந்த வழக்கும் அவர் மீது இல்லை. அவர் ஒரு பேராசிரியர். அவர் கல்லூரியில் வகுப்பு எடுப்பவர். அநீதிக்கெதிராக அவர் ஜனநாயக வழியில் குரல் கொடுப்பார். ஆனால் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீமானந்தா போன்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்எஸ்எஸ்ஸுடன் பின்னிப் பிணைந்தவர்கள். ஆர்எஸ்எஸ் பாஜக மூலமாக ஒரு பதிலி அரசை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த அரசோ பெருநிறுவனங்களுக்குச் சாதகமான அரசு. தேசத்தின் கனிம வளங்களை இந்தப் பெருநிறுவனங்கள் சுரண்டுகின்றன.

சாய்பாபாவின் வழக்கை ஏதோ தனிப்பட்ட வழக்காக காண முடியாது. இது ஒரு தொடரின் எச்சமே. இது பினாயக் சிங் முதல் கோபாட் கண்டி வரை தொடர்கிறது. இதற்கு முன் பினாயக் சிங்கைக் கைது செய்தார்கள். அவர் ஒரு மருத்துவர். ஆதிவாசிகளுக்கு நடக்கும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக அவர் குரல் கொடுத்தார். அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்தார். அவரை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தினார்கள். கோபாட் கண்டி சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவரை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்தார்கள்.

ஒரு புறம், தடை செய்யப்பட்ட அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட தனிப்பட்டவர்களை குற்றமயப்படுத்துவதற்காக காட்டுமிராண்டித்தனமான சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு புறம், அரசின் கொள்கைகளுக்கெதிராக கேள்வி கேட்போரின் குரலை ஒடுக்குகிறார்கள். ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட் போன்றவை மூலமாக பழங்குடியினரின் மேல் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுப்பவர்களை வேட்டையாடுகிறார்கள். ஆதிவாசிகளை இடம் பெயரச் செய்கிறார்கள். இந்த அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என்கிறார்கள்.

பு.வி.: சாய்பாபா வழக்கில் வந்துள்ள தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளீர்களா?

வஸதா: டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சத்திகரைச் சார்ந்த மருத்துவர் பினாயக் சென் ஆகியோரின் வழக்குகளில் நமக்கு முன்னோடி உள்ளது. சாய்பாபா மீது குற்றஞ்சாட்டியது போன்றே தேசத்துரோகம் உட்பட பல குற்றச்சாட்டுகள் இந்த இருவரின் மீது சுமத்தப்பட்டன. ஆனால் உயர்நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நாங்கள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். சாய்பாபா அனைத்து வழக்குகளிலிருந்தும் குற்றமற்றவராக விடுவிக்கப்படுவார் என்ற முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பு.வி.: தற்போதைய நீதித்துறை பற்றிய தங்கள் கருத்து என்ன?

வஸதா: தற்பொழுது மக்களின் மனங்கள், சிந்தனைகள், பேச்சுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. சாய்பாபாவின் வழக்கு மருத்துவர் பினாயக் சென்னின் வழக்கைப் போன்றதே. பினாயக் சென்னின் வழக்கிலும் காவல்துறை உறுதியான ஆதாரங்களைத் தர முடியாமல் தோற்றுப் போனது. மக்கள் விரோத கொள்கைகளை, அரசு இழைக்கும் அநீதிகளை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களை நீதித்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது. சாய்பாபா 90% இயலாமையில் உள்ளவர். இந்த நிலையில் உள்ளவரால் யாருக்கு என்ன கெடுதி செய்து விட முடியும்? மத்திய பாஜக அரசுக்கெதிராக தங்கள் குரல்களை உயர்த்துபவர்களைக் கண்டு அது அஞ்சுகிறது என்பது தெளிவு. ஆதலால் நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பேரா. சாய்பாபா போன்ற அப்பாவி மக்களை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி பொது மக்களின் அனுதாபத்தைப் பெற்று விடாதவாறு மீடியாவின் ஒரு பகுதியும் செயல்படுகிறது.

பு.வி.: சமூகத்திற்கும், தேசத்திற்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

வஸதா: பெருநிறுவனங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைப்படி மக்களுக்கெதிரான, ஜனநாயகத்திற்கு முரணான கொள்கைகளைத் திணிப்பதில் மத்திய மாநில அரசுகள் நீதித்துறைக்கு அதிகமான அழுத்தங்கள் கொடுக்கின்றன. இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு அரசுகள் முனைகின்றன. மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு நேரடியாகவே காய்களை நகர்த்துகின்றன.

நீதிமன்றத்தை கண்ணியப்படுத்தும் முகமாக, தனது மோசமாகி வரும் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா இத்தனை வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். ஒரு மனைவி என்ற அடிப்படையில் அவருக்காக நீதி வேண்டி உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று நான் போராடுவேன். நான் ஜனநாயகவாதிகள், மக்கள் அமைப்புகள், அறிவார்ந்தவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்து மக்களுக்கும் அரசின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களைக் கண்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழில்: MSAH

புதிய விடியல்

Wednesday 14 February 2018

“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” - நூலாய்வுரை




காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் அண்ணலாரை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.

அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருள்மறையைப் போதிக்க வந்த அண்ணலார் அவர்கள் ஆசிரியராக மிளிர்ந்தார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் அனைத்துத் திறமைகளையும் கொண்ட, கற்றுத் தருதலின் அனைத்து முறைமைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பேராசிரியராகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் நூல்தான் “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

“அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராய், சிறந்த ஆட்சித் தலைவராய், வீரமும், விவேகமும் நிறைந்த போர்த் தளபதியாய், உற்ற தோழராய், அன்புக் கணவராய், ஆருயிர்த் தந்தையாய், கண்ணியமிகு மனிதராய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திராத சிறந்த ஆசிரியராய் அவர்களை உங்களிடம் அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்” என்று நூலாசிரியர் எழுதிய முன்னுரையின் முதல் வாசகமே நூலின் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

“சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியையாக பணியாற்றிய வகையில், அண்ணலாரின் நடைமுறைகளை நபிமொழிகள் வடிவிலாக நெருங்கி நின்று பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றதினால் பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். நான் ஆச்சரியப்பட்ட, பிரமித்த, இரசித்த விஷயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்நூலை எழுத விழைந்தேன்” என்று நூலாசிரியர் குறிப்பிட்டதைப் படிக்கும்பொழுது நமக்கும் சுவாரசியம் ஒட்டிக் கொள்கிறது.

30 அத்தியாயங்களாக இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கற்றல் முறையை அழகுற விளக்குகிறது.

கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல், எளிமையான மொழி நயம், கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக் கொள்ளுதல், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல், கோடுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல், … என்று நீளும் பொருளடக்கப் பட்டியலைப் படிக்கும்போதே எழும் ஆர்வத்திற்கு அணை போட முடியவில்லை.

நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் திருப்தியுடன் பூர்த்தி செய்கிறார் நூலாசிரியர். தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் சரியாகப் பொருத்தியிருக்கிறார்.

“அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று தமது சுட்டுவிரலையும், நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள்” என்ற நபிமொழியை மையப் பொருளாக வைத்து “கையசைவுகள் மற்றும் சைகைகள் காட்டி விளக்குதல்” என்ற அத்தியாயத்தைத் தீட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டை விட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்ற அண்ணலாரின் அருள்மொழியை அடிப்படையாக வைத்து “கண் முன்னால் காணும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற அத்தியாத்தை வரைந்துள்ளார் நூலாசிரியர்.

இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் அழகிய உதாரணங்களாக அண்ணலாரின் அருள்மொழிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

நபிகளார் முக்கியமான சில வார்த்தைகளை ஏன் மூன்று முறை கூறினார்கள், கதைகளையும், முற்கால நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது ஏன் கூறினார்கள், சிலரிடம் மட்டும் ஏன் தனிக் கவனம் செலுத்தினார்கள் போன்ற கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தைத் தருகிறது இந்நூல்.

அவசியமான இடங்களில் அண்ணலார் கோபமும், கண்டிப்பும் காட்டியது, தோழர்களிடம் நிதானமாகவும், மென்மையாகவும் நடந்துகொண்டது, செய்திகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறியது, படிப்படியாகக் கற்றுக் கொடுத்தது, தோழர்களின் திறமைகளைப் பாராட்டியது, அவர்களை உற்சாகப்படுத்தியது, தோழர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காக வினா எழுப்பியது, வெட்கப்படக்கூடிய விஷயங்களை கற்பிக்கும்போது நாசூக்காக நளினமாகக் கூறியது, தோழர்களின் தேடுதல் திறனை அதிகரிப்பதற்காக சில விஷயங்களை மூடலாகக் கூறியது என்று பல நிகழ்வுகள் விளக்கங்களுடன் விரிகிறது இந்நூலில்.

“மதிப்பெண்கள் அதிகமாய் எடுப்பவர்களை நல்ல மனன சக்தி உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். நல்ல அறிவுடையவர் என்று நிச்சயமாய் கூறிவிட முடியாது” என்று ஓரிடத்தில் நூலாசிரியர் நச்சென்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் முகத்தில் அறைவது போல் உள்ளது.

“நானும் ஓர் ஆசிரியராகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என்று உரக்கச் சொன்ன உத்தம நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறை எவ்வாறெல்லாம் இருந்தது என்பதன் ஒரு வடிவம் மூளைக்குள் முளைத்து விடுகிறது நூலைப் படித்து முடிக்கும்பொழுது.

சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமதிகம் அவசியம் என்ற காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு நூலாசிரியர் இன்னும் பல நூல்களைப் படைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிட வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அச்சுப் பிழைகளின்றி, மிக நேர்த்தியாக அச்சுச்கோர்ப்பு செய்து, அழகிய வகையில் பக்கங்களையும் வடிவமைத்திருக்கிறார்கள் தாருஸ் ஸலாஹ் பதிப்பகத்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பாராட்டுகள்.

அனைத்து முஸ்லிம்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல். குறைந்தபட்சம் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் தகைமைகளை வளர்த்திட அவசியம் அள்ளிப் பருக வேண்டிய நூல்.

புதிய விடியல், டிசம்பர் 16-31, 2017