Thursday 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 12

சென்ற தொடர்களில் மொத்த மீடியாவிலும் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணியைப் பார்த்தோம். இந்தப் பின்னணியை நாம் எதற்காக விளக்கினோம் என்றால் இதனைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நமக்கு நன்றாகப் புரிய வரும்.

Call the dog mad and then shoot

ஆங்கிலத்தில் Call the dog mad and then shoot என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நாயை அது வெறி பிடித்த நாய், பைத்தியம் பிடித்த நாய் என்று சொல்லி, அதன் பின் அதனைச் சுட்டுத் தள்ளுவது. வெறி பிடித்த நாயைச் சுட்டுத் தள்ளினால் யாரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.அது செத்தால் நல்லதுதான் என்று எண்ணுவார்கள்.

இந்தக் கொள்கையைத்தான் மேற்குலகம் முஸ்லிம்கள் மேல் நடைமுறைப்படுத்துகின்றது.இந்தத் தந்திரத்தைத்தான் அமெரிக்கா தலைமையில் செயல்படும் “நவீன சிலுவைக்காரர்கள்” கையாளுகின்றார்கள்.
அதாவது முஸ்லிம்களைப் “பைத்தியம்” என்று அழைப்பது, அல்லது அவர்களைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து தவறாகவே கொடுத்து முஸ்லிம்கள் “பைத்தியங்கள்” என்று மற்றவர்களைச் சொல்ல வைப்பது.
அதன்பின் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்வது.

இந்தியாவில் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் குண்டுகளை வைத்து முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு,இங்குள்ள மீடியாக்களின் துணையோடு முஸ்லிம்கள்தான் அந்தக் குண்டுகளை வைத்தார்கள் என்று முஸ்லிம்கள் மீதே பழியைப் போடுவதைக் கண்டு வருகின்றோம்.

இதே பாணி சர்வதேச அளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதாவது, உளவுத்துறை ஏஜன்சிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு விட்டு, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவது உலக அளவிலும் நடக்கிறது.
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அல்ஜீரியாவைச் சார்ந்த ரகசிய போலீசார் குண்டுகளைப் போட்டனர். ஆனால் பழி முஸ்லிம்கள் மீது போடப்பட்டது.
60 சதவீதத்திற்கும் மேல் செய்திகள் மேலை நாட்டிலிருந்தே வருவதால், முஸ்லிம்கள் தங்கள் மேல் சுமத்தப்படும் தவறான குற்றச்சாட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; தடுமாறுகிறார்கள்.
ஏனெனில் மொத்த உலகிலும் மீடியாவை வழிநடத்திச் செல்வது மேற்குலகம்தான்.

இனி நமது இந்தியாவின் பக்கம் வருவோம்.

நமது தேசிய நாளிதழ்களும், காட்சி ஊடகங்களும் மேற்குலகின் உண்மையான சீடர்கள்! நடுநிலையான, சுதந்திர சிந்தனை என்ற தங்கள் பாம்பரியத்தை நமது தேசிய அளவிலுள்ள ஊடகங்கள் என்றோ தொலைத்துவிட்டன.

மாநில அளவிலுள்ள பத்திரிகைகளை எடுத்துக் கொண்டாலும் இதே கதிதான். முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிப்பதில் இந்தப் பத்திரிகைகள் வெற்றி பெற்றுள்ளன.

அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று சொல்லும் இந்தப் பத்திரிகைகள் அந்தக் கதைகளைப் பின்தொடர்ந்து (Followup) வெளியிடும்போது காரத்தைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளும். இன்னும் உணர்வைத் தூண்டும் விதமாகப் பல்வேறு குட்டிக் கதைகளைச் சேர்த்துக்கொள்ளும்.

காவல்துறை இந்தக் கதைகளை அப்படியே உண்மை என்று நம்புகின்றது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அனைத்தையும் கவனித்து, எந்தச் சமுதாயத்திற்கும் அநீதி இழைத்துவிடாமல் நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறை கழிசடைப் பத்திரிகையாளர்கள் எழுதும் கண்ட கண்ட புரட்டுக் கதைகளை நம்புகிறது.

இந்தக் கதைகளின் மறுபக்கத்தை யாருமே கேள்வி கேட்பதில்லை. யாருமே விசாரணை செய்வதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமானது; பயங்கரமானது.

இதற்கு ஓர் உதாரணத்தைக் காணலாம். ஒருமுறை சென்னையில் தாடி வைத்த ஒரு முஸ்லிம் அவருடைய முஸ்லிமல்லாத நண்பரின் வீட்டுக்கு வந்து, அழைப்பு மணியை அழுத்தினார்.

ஒரு சிறுவன் வீட்டினுள்ளிருந்து கதவுக்கருகில் வந்து, ஜன்னல் வழியாக வந்திருப்பது யார் என்று எட்டிப் பார்த்தான். அங்கே தாடி வைத்து ஒருவர் நிற்பதைக் கண்ட அந்தச் சிறுவன் நேரே தன் தந்தையிடம் ஓடி “ஒரு தீவிரவாதி நிற்கிறான்” என்று கூறினான்.

பதறியடித்து ஓடோடி வந்த தந்தை வந்தவரைப் பார்த்தார்.வந்தவர் அவருடைய நண்பர் என்பதை அறிந்த பின்தான் சமாதானமடைந்தார்.
மீடியா பிஞ்சு உள்ளங்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இனி எப்படி மீடியா முஸ்லிம்களைக் கொல்கிறது என்று இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

No comments:

Post a Comment