Saturday 4 February 2017

மரகத மணிகள்


முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (அல் அஹ்ஜாப் 33:23)

எல்லோருக்கும் அல்லாஹ் ஷஹாதத் என்ற பாக்கியத்தை வழங்கிடுவதில்லை. தான் நாடியவருக்கே அல்லாஹ் இந்த மாபெரும் பாக்கியத்தை வழங்குகிறான்.

யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தை சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்கு பதிலடி கொடுத்த காலித் (ரலி), தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா? அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்!”

சுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீத் ஆனார்கள்.

இந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி காலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ? உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.

அதற்கு காலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “காலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள். உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”

உடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்து கொள்ள முடியுமா? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா?” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் இஸ்லாம் தழுவினார். மறுநாள் நடந்த போரில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.

காலித் (ரலி) அவர்களின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாம் தழுவிய ஜர்ஜாஹுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த காலித் (ரலி) அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திடவில்லை.

காலித் (ரலி) மரணத் தறுவாயில் இருக்கும்பொழுது அழுது கொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன். எத்துணை வாள்களையும், அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும். அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும், அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே! என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள்! இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே! என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே!”

அந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணமும் நிகழ்ந்தது. வெற்றியாளர்களாக அல்லாஹ் குறிப்பிடுவதும் இந்த ஷஹீதுகளைத்தான். அதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அத் தவ்பா 9:20)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார் - உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். (அனஸ் இப்னு மாலிக் (ரலி), புகாரீ)

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment