Sunday 6 November 2016

அதிகாலையில் எழுதலும், தொழுதலும்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் புதல்வி அன்னை ஃபாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்: “அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் ரிஸ்க் என்னும் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் ரிஸ்க் எனும் வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.” (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள். அண்ணலார் இஷாவுக்குப் பிறகு உலக காரியங்கள் ஒன்றிலும் ஈடுபடாமல் உடனே உறங்கிவிடுவார்கள். தஹஜ்ஜுதுக்கு எழுந்து விடுவார்கள். ஸுபுஹு தொழுகைக்குப் பிறகு அவர்கள் தூங்கியதே இல்லை. தங்கள் குடும்பத்தாரையும் அவ்வாறு தூங்காமல் தடுத்துள்ளார்கள். அதற்கோர் உதாரணத்தைத்தான் மேற்கண்ட நபிமொழியில் கண்டோம்.

இரவு தாமதமாக உறங்குவதால் என்னென்ன தீய விளைவுகள் உடலுக்குள் ஏற்படுகின்றன என்று இன்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேபோன்று அதிகாலையிலேயே தங்கள் பணிகளைத் துவங்குபவர்களுக்கு என்னென்ன நன்மைகள் விளையும் என்பதையும் அண்ணலார் சொல்லியிருக்கிறார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான். வானவர்களிடம் கேட்கின்றான்: “வானவர்களே! என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள் மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா?” பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் அளிப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்பு கொடுப்பேன்.” (அஹ்மத்)

ஃபஜ்ரு தொழுகை பற்றி அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கண்ட உண்மைகள்: 1. அதிகாலையில் எழும் மனிதனை எந்த அலைவரிசையும் குறுக்கீடு செய்வதில்லை. அந்தச் சமயத்தில் உலா வரும் தூய்மையான காற்றுக்கு “பிரபஞ்சக் காற்று” என்று பெயர். அதற்கு ஆற்றல்கள் பல இருக்கின்றன. ஆயுளைக் கூட்டும் வல்லமை அந்தக் காற்றுக்கு உண்டு. 2. தன் மீது தனக்கே நம்பிக்கை ஏற்படும். இந்த பாக்கியம் வேறு யாருக்கும் கிடைக்காது. அவர்களின் அன்றைய பணிகள் வெற்றி பெறும்.

“நீங்கள் அதிகாலையில் எழுந்தால் உங்களுக்கு அன்று கிடைப்பது இரண்டு நாள்” என்று சொல்வார்கள். இதைத்தான் “இரட்டை நாள் தியரி” என்பார்கள். பறவைகள் அதிகாலையிலேயே எழும்பி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பலவிதமான ஒலிகளையும் எழுப்பும். அதேபோன்று அதிகாலையிலேயே எழும் மனிதன் சுறுசுறுப்பாக தன் பணிகளைத் துவக்குவான். அவனது முழு ஆற்றலும் அப்பொழுது வெளிப்படும்.

நேரம் செல்லச் செல்ல அவனுக்கு சோர்வு ஏற்படும். நண்பகல் வேளையில் அவன் முழுவதுமாக சோர்ந்திருப்பான். அந்த நேரத்தில் அவன் ஒரு சிறு தூக்கம் போட்டு எழுந்தால் அவன் மீண்டும் உற்சாகம் பெறுகிறான். பிற்பகலிலிருந்து அவன் புதிய ஒரு நாளைத் துவக்குகிறான். ஆக, ஒரு நாள் என்பது இரண்டு நாட்கள் போன்று செயல்படுகிறது. இதனை அன்றே அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் செய்து காட்டினார்கள். நண்பகல் வேளையில் அவர்கள் சிறிது நேரம் உறங்குவார்கள். இந்தத் தூக்கத்திற்கு “கைலூக்கா” என்று பெயர். இந்த நேரத்தில் உறங்குவது ஸுன்னத் ஆகும்.

அண்ணலார் எங்கு செல்வதாக இருந்தாலும் அதிகாலையில்தான் புறப்படுவார்கள். அனைத்துப் போர்களுக்கும் அதிகாலையிலேயே புறப்பட்டார்கள். அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தையும் அறிவையும் அள்ளித் தரும். அதிகாலையில் காற்று மண்டலத்தில் ஓஸோன் கலந்திருக்கும். அந்த நேரத்தில் மலர்களின் சுகந்தமும், பனிக்காற்றில் உள்ள இரும்புச் சத்தும் மூச்சுக் காற்றில் கலந்து சுவாசிக்கப்படும்போது மூளைக்கு நிறைய ஆக்சிஜன் செல்லும். இரத்த ஓட்டம் சுத்தம் அடையும். நினைவாற்றல் பெருகும். உள்ளம் உற்சகாம் அடையும்.

விடியல் வெள்ளி  நவம்பர் 2014 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment