Tuesday 15 November 2016

ஆக்கமும், தூக்கமும்!


அறிஞர் அண்ணாவின் வருகைக்காக இரவு நேரத்தில் ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்கள் காத்திருந்தனர். அண்ணாவின் வருகை காலதாமதம் ஆனதால் அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். அண்ணா வந்தார். சில வினாடிகளாவது பேசுங்கள் என்றனர்.

மக்கள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணா இவ்வாறு பேசினார்: “காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, உதயசூரியனுக்கு போடுங்கள் முத்திரை…”

அண்ணாவின் பேச்சுத் திறனை வெளிப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல இது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த மக்கள் பத்தரை மணியாகும்பொழுதே தூங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் அதற்கு முன்பே உறங்கும் வழக்கம் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் பத்தரை மணிக்கு இப்படி யாராவது உறங்குவார்களா? 11 மணிக்கு முன்பு உறங்குவது என்பதை யோசிக்கக்கூட முடியாத காலத்தில் இருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் 'பொழுதோடு தூங்கி காலை பொழுதோடு எழுந்திரு' என்ற பழக்கம் இன்று மாறி விட்டது.

இந்தக் கலாச்சார ஓட்டத்தில் முஸ்லிம்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டார்கள்.

ஆம்! இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் இரவு மிகவும் தாமதமாக உறங்குகிறார்கள். இரவு மிக நீண்ட நேரம் டிவி அல்லது இண்டர்நெட், மொபைல் போன் என்று நேரம் கழிகிறது. ஃபஜ்ரு தொழுதோ, தொழாமலோ அதிகாலையில் தூங்குகிறார்கள்.

களைப்பாறி அமைதி பெறுவதற்காகவே இரவை அமைத்துள்ளதாக அல்லாஹ் தன் திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இஸ்லாம் ஒன்றைக் கற்றுத் தந்தால் அதில் அனைத்து நன்மைகளும் அடங்கியிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் நாம். அந்தப் புனித இஸ்லாம் நம்மை முற்கூட்டியே உறங்கி முற்கூட்டியே விழிக்கச் சொல்கிறது. அன்றாடப் பணிகளை அதிகாலையிலேயே ஆரம்பிக்கச் சொல்கிறது.

இஷாத் தொழுகைக்குப் பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரீ)

நம்மில் எத்தனை பேர் நபிகளார் கற்றுத் தந்த உறங்கும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்கிறோம்?

உறங்கும் ஒழுங்குமுறைகள்

1. அலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் தூங்குவதற்கு சென்ற சமயம் நபியவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்களோ எழும்ப எத்தனித்தோம். “உங்கள் இடத்திலேயே இருங்கள்” எனக் கூறிவிட்டு வந்து எங்களுக்கிடையில் அமர்ந்தார்கள். அவர்களின் கால் பாதத்தின் குளிர் எனது நெஞ்சில் உணரும் அளவுக்கு (நெருக்கமாக) அமர்ந்தார்கள். பின்பு, “வேலையாளை விட மிகச் சிறந்ததொன்றை உங்கள் இருவருக்கும் சொல்லட்டுமா?’‘ எனக் கேட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் படுக்கை விரிப்புக்குச் சென்று தூங்கப் போனால், 33 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும், 33 தடவை 'அல்ஹம்துலில்லாஹ்' என்றும், 34 தடவை 'அல்லாஹு அக்பர்' என்றும் கூறுங்கள். இதுவே வேலையாளை விட உங்களுக்கு சிறந்ததாகும்” எனக் கூறினார்கள். (புகாரீ)

2. ''நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்'' என்று நபியவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி), புகாரீ 3275)

3. நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில், ''குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின் னாஸ்'' ஆகிய (112, 113, 114) மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (ஆயிஷா (ரலி), புகாரீ 5017)

4. தூங்கும் முன் “அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” (இறைவா! உன் பெயரால் மரணிக்கின்றேன். உன் பெயரால் உயிர் பெறுகின்றேன்) (புகாரீ 6325) என்ற துஆவை ஓத வேண்டும்.

5. “நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்கு உளூ செய்வது போல் உளூ செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக்க, வஃபவ்வள்து அம்ரீ இலைக்க, வஅல்ஜஃது ளஹ்ரீ இலைக்க, ரஃக்பத்தன் வரஹ்பத்தன் இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க, அல்லாஹும்ம ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த வபிநபிஇய்யிக் கல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகின்றாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (பராஃ இப்னு ஆஸிஃப் (ரலி), புகாரீ 247)

''இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாவார். ஃபஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போலாவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (உஸ்மான் (ரலி), முஸ்லிம்)

நாம் இரவு தூங்கினால் கூட அதனையும் அல்லாஹ் நமக்கு நன்மையாக மாற்றி விடுகின்றான். ஒன்று தூய்மையாக்குகின்றான். இன்னொன்று இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மையை வழங்குகின்றான். அப்பேற்பட்ட அருளாளனான அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நாம் மாறு செய்யலாமா?

விடியல் வெள்ளி  அக்டோபர் 2014 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment