Saturday 22 October 2016

சமூக மாற்றத்தில் பெண்கள்

அல்லாஹ் மனிதனுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் அருட்கொடைகளை அள்ளி வழங்கியிருக்கிறான். ஆனால் எல்லோருக்கும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அமையும் என்று சொல்ல முடியாது.

நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளை வளமாகப் பயன்படுத்தி தனக்கும், சமூகத்திற்கும் அதன் பலன்களை அடையச் செய்ய வேண்டும். அந்த வகையில் சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது.

திருக்குர்ஆன் நமது கூட்டுப் பொறுப்பை இவ்வாறு கூறுகிறது:

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆல இம்ரான் 3:104)

இந்த வசனத்தில் மூன்று விடயங்கள் கூறப்படுகின்றன:

1. நன்மையின் பக்கம் அழைப்பது, தீமையை விட்டும் தடுப்பது என்ற பணி.
2. கூட்டாக செய்ய வேண்டிய பொறுப்பு.
3. இதன் மூலம் வெற்றி பெறுதல்.

இந்த வசனம் ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

ஆண்-பெண் பாரபட்சமில்லாமல் அனைவரும் இந்தப் பொறுப்பு சுமத்தப்பட்டுத்தான் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். எல்லா தொழுகைகளிலும் நாம் கூறும் ஒரு வசனம்தான் இது:

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ

நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். (அன்ஃபால் 8:162)

இதனை நபிமார்களும், அவர்களின் மனைவிமார்களும், ஸஹாபிகளும், ஸஹாபி பெண்மணிகளும் நிறைவேற்றி முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள்.

அல்லாஹ்வோடுள்ள உறவு

தொழுகை, திக்ர், நோன்பு, ஸதக்கா போன்ற அமல்களின் மூலமாக அல்லாஹ்வோடுள்ள உறவைப் பலப்படுத்தலாம். இவற்றில் சுன்னத்தான அமல்கள் நிறைவேற்றுவதை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவற்றை பகிரங்கப்படுத்தும்பொழுது பெருமை வர வாய்ப்புண்டு.

நம்மிடம் தவறுகள் நிகழும்பொழுது அல்லாஹ்விடம் மன்னிப்பு கோர வேண்டும். அத்தோடு தான தர்மங்கள் செய்தால் மனம் தூய்மைப்படுத்தப்படும். தீய சிந்தனைகளிலிருந்து நம் மனம் விடுபடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர வேண்டும் என்று நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். இறைநினைவுக்குரிய உதாரணம் இதுதான்: ஒரு மனிதரை அவருடைய எதிரி துரத்துகிறான். அந்த மனிதர் ஓடிச் சென்று ஒரு பாதுகாப்பான கோட்டைக்குள் அபயம் தேடினார். இதேபோன்று அல்லாஹ்வின் நினைவில் அபயம் தேடாதவன் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேட முடியாது.”

அல்லாஹ்வின் நினைவை வளர்ப்பது எப்படி?

அல்லாஹ்வின் பண்புகள் குறித்த அறிவும், அவனது வல்லமைகள் குறித்த தெளிவான விளக்கமும் எந்த அளவு நம்மிடம் உள்ளதோ அந்த அளவு ஷைத்தானின் தீங்குகளிலிருந்தும், தீய சிந்தனைகளின் ஆதிக்கங்களிலிருந்தும் நாம் பாதுகாப்பு பெற முடியும்.

அல்லாஹ்வின் வல்லமைகள் குறித்து அறிவதற்கு அவனது  திருநாமங்கள் எனப்படும் அஸ்மாவுல் ஹுஸ்னா குறித்து அறிந்திருக்க வேண்டும்.

குணங்களும், இயல்புகளும்

நாம் மாற வேண்டியுள்ளது. நம்மை நாமே மாற்றிக் கொள்ளாமல் மற்றவை எல்லாம் தன்னால் மாறி விடும் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும்.

اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (13:11)

மாற்றம் நம்முடைய இயல்பில், ஆளுமையில், அறிவில் உருவாக வேண்டும். நம்மிடமுள்ள நன்மைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுத்து வாழ்க்கையில் மாற்றங்கள் கொண்டு வர முயற்சி செய்யும்பொழுது நாம் உன்னத ஆளுமையின் சொந்தக்காரர்களாக மாறுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் குணத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் என்னுடைய நேசத்துக்குரியவர்.”
அப்போது மட்டுமே மற்றவர்களில் இஸ்லாமிய ஆளுமையை உருவாக்கி எடுப்பதற்கு நமக்கு சாத்தியமாகும்.

வெட்கம்

வெட்கம் ஈமானின் ஒரு கிளை. வெட்கம் ஓர் உன்னத பண்பாகும். ஒரு பெண்ணிடம் இந்தப் பண்பு உருவாகும்பொழுது அவள் தவறிழைக்கும் வாய்ப்புகள் உண்டாகாது. தவறானவற்றைப் பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. அதன் காரணமாக அவளது ஆளுமையும், கற்பும் பாதுகாக்கப்படும்.

பெண்களைப் பொறுத்தவரையில் இந்தப் பண்பு அவர்களுக்கு அலங்காரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பண்பு அதிகமாக இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்தா அணிந்த கன்னிப் பெண்களை விட வெட்கம் உடையவர்களாக இருந்தார்கள். (புகாரீ)

குடும்ப ஒத்துழைப்பு

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். (அத் தஹ்ரீம் 66:6)

சமூக மாற்றத்தின் முன்மாதிரி குடும்பத்திலிருந்துதான் துவங்க வேண்டும். குடும்பங்களின் கூட்டணியே சமூகம். ஒவ்வொரு குடும்பமும் இஸ்லாமியமயமாகும்பொழுது அது சமுதாயத்தில் பிரதிபலிக்கும்.

கணவன்-மனைவி உறவு

குடும்ப வாழ்க்கையில் கணவன்-மனைவிக்கிடையிலான நம்பிக்கை மிக முக்கியமானது. ஒரு பெண் தன் கணவனின் ஒவ்வொரு விடயத்தையும் கவனிப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்குரிய மனைவி ஆக வேண்டும். இதில் நமக்கு அன்னை ஹாஜரா (அலை) அவர்களும், அன்னை கதீஜா (ரலி) அவர்களும் முன்மாதிரிகளாவர்.

هُنَّ لِبَاسٌ لَّـكُمْ وَاَنْـتُمْ لِبَاسٌ لَّهُنَّ

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் பகரா 2:187)

நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இருக்கும்பொழுதுதான் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக திகழும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உலகம் அனத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நற்குணமுடைய பெண். கணவன் அவளைப் பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். (இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்)”. (ஹாகிம்)

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

"இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக. அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள், முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்." (அந் நூர் 24:31)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌

"நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)." (அன்னிசா 4:34)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்: "பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், "கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறு செய்யமாட்டாள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைப் பார்த்து கூறினார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஸுனனுத் திர்மிதீ)
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் குளித்து சுத்தமாகி உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது ஸலாம் சொல்லி, நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துகளுடன் அவரை வரவேற்று உபசரியுங்கள்.

முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

உங்கள் கணவருக்குப் பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்.

மகிழ்ச்சிகரமான செய்தியை முதலில் தெரிவியுங்கள். கவலையான செய்தி ஏதேனும் இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள். (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை, சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள். கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாகப் பேசுங்கள். கணவரைத் தவிர வேறு எந்த ஆணிடமும், குறிப்பாக மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் குழைந்து பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் கணவரிடத்தில் "உம்!! இல்லை!!" என்று அரைகுறையாகப் பேசி, அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் கணவரோடு தனித்திருக்கும் வேளையில் மட்டும் மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள்.

தாம்பத்தியத்திற்காக கணவன் அழைக்கும்பொழுது மறுக்காமல் செல்லுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் காரணமின்றி மறுத்து, அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது." (புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், தாரமி)

இவ்வுலக வாழ்க்கையையும், அதன் கவர்ச்சியைப் பற்றியுமே பேசிக் கொண்டிருக்காமல் நல்லறங்களைப் பற்றி, நல்ல அமல்களைப் பற்றி பேசுங்கள். ஏனெனில்,

اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا‏ 

பொருட்செல்வமும் பிள்ளைச் செல்வமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)

கணவனின் உதவியை வரவேற்று நன்றி செலுத்துதல் வேண்டும். கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்."

"ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்‘ என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (தப்ரானீ, அஹ்மத்)

"ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, பைஹகீ)

"ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.

சமூக செயல்பாடுகளில் நம் குழந்தைகள்

நம்முடைய குழந்தைகள் நமக்கு அமானிதங்கள். அவர்களுக்கு மிகச் சிறந்த கல்வி அளித்து, நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை அல்லாஹ்வின் நீதிமான்களான அடியார்களாக மாற்றுவது நம்முடைய பொறுப்பாகும்.

اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏ 

இம்ரானின் மனைவி, “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறினார். (3:35)

நம் பிள்ளைகளின் செயல்பாடுகளும், கல்வியும் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும், அந்த அடிப்படையிலேயே அவர்களைப் பழக்கப்படுத்தி எடுக்க வேண்டும் என்பது ஒரு தாயின் மேற்பார்வையிலேயே நடக்க வேண்டும் என்பதை மேலே கூறப்பட்டுள்ள வசனத்தின் மூலமாக நாம் அறியலாம்.

நம்முடைய பிள்ளைகளிடம் சமூக செயல்பாடுகளில், சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஓர் உன்னத உதாரணம்தான் சமீபத்தில் மரணமடைந்த பாகிஸ்தானைச் சார்ந்த அப்துல் ஸத்தார் ஈதி.

வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்குச் செல்பராக இருந்த ஈதிக்கு மதிய உணவு கொடுத்து விடும்பொழுது அவருடைய தாய் இரண்டு பேருக்கான உணவைக் கொடுத்து விடுவார்களாம். தான் உண்ணும்பொழுது பசியில் வாடும் ஓர் ஏழைக்கும் அந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் தாயின் நோக்கம்.

தனது சிறு வயதில் அந்தத் தாய் அளித்த இந்தத் தூண்டுதல் அப்துல் ஸத்தாரை சமூக சேவையில் ஒரு பெரிய புரட்சியே செய்ய காரணமாக அமைந்தது.

அவர் தனது ஈதி ஃபவுண்டேஷன் மூலமாக 20,000 ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்தார். 50,000 அனாதைகளை அரவணைத்தார். 40,000 நர்சுகளை நாடு முழுவதும் நியமித்தார். 380 ஆரோக்கிய மையங்களை நிறுவினார். 1500 ஆம்புலன்ஸ் வண்டிகளை மக்களுக்கு சேவகம் புரிய அர்ப்பணித்தார்.

இந்த ஃபவுண்டேஷனின் சேவைகள் பாகிஸ்தானில் மட்டும் குறுகி நிற்கவில்லை. மாறாக, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா ஆகிய கண்டங்கள் வரை அது பரந்து விரிந்தது.

இது ஒரு தாயின் தூண்டுதலின் பலனாகும். இதுபோன்று எல்லா தாய்மார்களும் செய்தால்…?

நம்முடைய குழந்தைகளை இந்த முறையில் பயிற்றுவித்து எடுத்தால் உலகத்தை நாமும் புரட்டிப் போடலாம்.

No comments:

Post a Comment