Wednesday 5 October 2016

முன் எழுந்து முன் மறையும் அதிசயம்!


நமது உடல் ஓர் அற்புதப் படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System). இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி. கடலை உருண்டை வடிவில் இருக்கும் அது பார்வை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பினியல் சுரப்பி ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது. அதுதான் மெலடோனின். இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது. புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது என்று இன்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்.

ஆம்! இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்.

ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப் பிறகு இருளில் சுரக்கும் மெலடோனின் நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. பினியல் சுரப்பி மெலடோனினை இஷாவுக்குப் பிறகு சுரக்க ஆரம்பித்து ஃபஜ்ருக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் நிறுத்தி விடும்.

ஆகவே இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக ஆவோம். எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது.

அதே போன்று அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும். ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால் இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான். இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆக, இரவு முற்கூட்டியே உறங்குவதால் மெலடோனின் கிடைக்கிறது. அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால் ஓஸோன் கிடைக்கிறது. நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

இதனைத்தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அழகுற எடுத்துக் கூறினார்கள். அற்புதமாக வாழ்ந்தும் காட்டினார்கள். அவர்களது வாழ்க்கை முறை இஷாவுக்குப் பின் உடனே உறங்கி முன்அதிகாலையில் தஹஜ்ஜுதுக்கு எழும் வழக்கம் உடையதாக இருந்தது.

ஸிக்ர் அல் கமிதி என்பவர் அறிவிக்கிறார்: “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள், “அல்லாஹ்வே, என் சமுதாயம் அதிகாலை எழுவதில் அருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை புரிவார்கள். அவர்கள் ஒரு படையையோ, ஒரு குழுவையோ எங்கும் அனுப்பினால் அதனை அதிகாலையிலேயே புறப்படச் செய்வார்கள்.” (அபூதாவூத்)

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன. அதிகாலையில் எழும்பொழுது நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும். அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்.

ஒரு முஸ்லிமின் வாழ்வு அதிகாலையில் துவங்குகிறது. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாதவர்கள் எழுந்து இவ்வுலகை மாசு படுத்தும் முன் முஸ்லிம் எழுகிறான். அண்ணலார் பிரார்த்தித்தபடி அவன் அதிகாலையில் எழுவதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சி செய்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அருளியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:

“ஷைத்தான் நீங்கள் உறங்கும்பொழுது மூன்று முடிச்சுகளை உங்கள் தலையின் பின்புறம் கட்டுகிறான். ‘உனக்கு மிகப் பெரிய இரவு இருக்கிறது. அதனால் உறங்கு’ என்று சொல்லியே அவன் ஒவ்வொரு முடிச்சுக்கும் முத்திரை இடுகின்றான். அதிகாலையில் நீங்கள் எழுந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகைக்காக உளூ செய்தால் அடுத்த முடிச்சு அவிழும். நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் மூன்றாவது முடிச்சும் அவிழும். அந்தக் காலைப்பொழுதில் நீங்கள் உயிரோட்டத்தோடும், உள்ளச் சுத்தியோடும் உலா வருவீர்கள். அப்படியில்லையெனில், அந்தக் காலைப் பொழுது உங்களுக்குத் தீமையாகவும், சோம்பேறித்தனமாகவும் மாறிவிடும்.” (புகாரீ)

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெறவும், அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் அருளைப் பெறவும் ஒரு முஸ்லிம் முன் தூங்கி முன் எழ வேண்டும்.

No comments:

Post a Comment