Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 35

ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காண்போம்.

இந்தியாவில் நாளிதழ்களையும், பருவகால இதழ்களையும் அச்சடிப்பதும், வெளியிடுவதும் புத்தகங்களின் அச்சு மற்றும் பதிவுச் சட்டம், 1867” (Press and Registration of Books Act, 1867),நாளிதழ்களின் பதிவு (மத்திய) விதிகள், 1956” (Registration of Newspapers (Central) Rules, 1957) ஆகியவற்றின் கீழ் வருகின்றன.

இந்தச் சட்டத்தின்படி, ஒரு மொழியில் அல்லது ஒரு மாநிலத்தில் எந்தப் பத்திரிகையின் பெயரும் ஏற்கனவே வெளிவரும் பத்திரிகையின் பெயராக இருக்கக் கூடாது.

இப்படி ஒரே பெயர் திரும்ப வராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்திய அரசு நாளிதளின் பதிவாளரை (Registrar of Newspapers) நியமித்துள்ளது. இவரை அச்சுப் பதிவாளர் (Press Registrar) என்றும் அழைப்பார்கள். அந்தப் பதிவாளர் இந்தியாவில் வெளியிடப்படும் நாளிதழ்கள் மற்றும் பருவகால இதழ்களைப் பதிவு செய்து அந்தப் பதிவைப் பராமரித்து வருகிறார்.

இந்தப் பதிவாளரின் தலைமை அலுவலகம் புதுதில்லியில் அமைந்துள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதியிலுள்ளவர்களுக்கும் உதவும் வண்ணம் அதன் மூன்று பிராந்திய அலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

ஒரு துணை அச்சுப் பதிவாளரும், நான்கு உதவி அச்சுப் பதிவாளர்களும் அச்சுப் பதிவாளருக்கு உறுதுணை புரிகிறார்கள்.

பிரகடனம் (Declaration)

புத்தகங்களின் அச்சு மற்றும் பதிவுச் சட்டம், 1867” (Press and Registration of Books Act, 1867) சட்டத்தை PRB Act என்று சுருக்கமாக அழைப்பார்கள். இந்த PRB Actன் படி, அச்சடிப்பவரும், வெளியிடுபவரும் அவர்களின் பகுதியிலுள்ள மாவட்ட/துணைக் கோட்ட மாஜிஸ்திரேட்டு முன்பாக நாங்கள்தான் இந்தப் பத்திரிகையின் அச்சடிப்பவர்/வெளியிடுபவர் என்று பிரகடனம் செய்யவேண்டும்.

இந்தப் பிரகடனத்தில் பத்திரிகை வெளியிடப்படும் மொழி, வெளியிடப்படும் இடம் போன்ற முழு தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பிரகடனம் பத்திரிகையை வெளியிடுவதற்கு முன்பாக மாஜிஸ்திரேட்டால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு பிரகடனத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்வதற்கு முன்னால் மாஜிஸ்திரேட்டு நாளிதழ்களின் பதிவாளரிடமிருந்து ஒன்றை உறுதி செய்துகொள்வார். PRB Actல் பிரிவு 6ல் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதே அது. அதில் அவர் திருப்தியடைந்தால் அந்தப் பிரகடனத்தை அதிகாரப்பூர்வமான ஒப்புக்கொள்வதாக அறிவிப்பார்.

பத்திரிகையின் பெயர் சரிபார்த்தல் (Title Verification) எப்படி செய்ய வேண்டும் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் காண்போம்.

No comments:

Post a Comment