Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 34

வானொலி நிலையங்கள் (Radio Stations)

இன்று தனியார் நிறுவனங்கள் FM என்ற பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பொருளாதாரத்துடனும் நாமும் பண்பலை நிலையங்களை பாங்காக நடத்தலாம். இன்று பெரும்பாலான பண்பலை வானொலிகள் பெரும்பாலும் சினிமா பாடல்களையும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையுமே நடத்தி வருகின்றன.

இந்த நிலையை மாற்றி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை நாம் கொடுக்கலாம். அன்றாடச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அழகுற நடத்தலாம். சிறந்த மருத்துவர்களைக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வுகள் வழங்கலாம்.

மக்கள் அறிய வேண்டிய சட்டங்கள், மனித உரிமை குறித்த விவரங்கள் போன்றவற்றை சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்களைக் கொண்டு நேரடி நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வூட்டலாம்.

இப்படி பல பயனுள்ள நிகழ்ச்சிகளை அதிக பொருட்செலவில்லாமல் இந்தப் பண்பலை வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நடத்த முடியும்.

மனிதவளப் பயிற்சி (Manpower Training)

முஸ்லிம் சமுதாயத்திற்கு இப்போதைய தேவை ஊடக வல்லுனர்களும், ஊடகத்தை நடத்திச் செல்லும் தொழில்நுட்ப வல்லுனர்களும்தான். அவர்களை நாம் பலப்பல வழிகளில் உருவாக்கலாம்:

1.   நமது மாணவர்களை இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்பு (Journalism and Mass Communication) கல்விப் பாடத்திட்டத்தைப் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவர்களைத் தரமான பயிற்சிக் கூடங்களுக்கு அனுப்புவதில் நாம் கவனம் எடுக்கவேண்டும்.

2. நமக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் (Print and Visual Media) தரமான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். காட்சி ஊடகத்திற்குத் தேவையான படம் இயக்குதல் (Film Direction), நெறிப்படுத்துதல் (Editing), வீடியோகிராஃபி போன்ற பாடத்திட்டங்களில் சேர்வதற்கு நாம் நமது மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. இந்தப் பாடத்திட்டங்களில் சேர்வதற்கு ஆர்வமுள்ள ஏழையான, தகுதியுள்ள மாணவர்களுக்கு நாம் கல்வி உதவித்தொகை அளித்து உதவ வேண்டும்.

4. இளங்கலை மாணவர்களுக்கு இதழியல் பயிற்சி முகாம்களை (Journalism Orientation Camps) நடத்தி அவர்களுக்கு இந்தக் களத்தை அறிமுகப்படுத்துவதுடன், ஆர்வமும் படுத்தவேண்டும்.

5. முஸ்லிம் நாளிதழ்களிலும், பருவகால இதழ்களிலும் பணி புரியும் பத்திரிகையாளர்களுக்கு புத்துணர்ச்சி பயிற்சி முகாம்கள் (Refresher Courses) ஏற்பாடு செய்யவேண்டும். நல்ல தரமான இதழியல் வல்லுனர்களை அழைத்து அந்த முகாம்களில் பாடம் நடத்தவேண்டும். இதனால் நமது முஸ்லிம் பத்திரிகைத்துறையின் தரம் தானாக உயரும்.

6. அர்ப்பணிப்புடன் ஊடகத்துறையில் அயராது உழைக்கும் முஸ்லிம் பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கவேண்டும்.

7. வசதியும், வாய்ப்பும் உள்ள நமது பத்திரிகை உரிமையாளர்கள் அல்லது ஊடகக் குழுக்கள் ஊடகப் பள்ளிகளை (Media Schools) ஆரம்பித்து தரமான முஸ்லிம் இதழியலாளர்களை உருவாக்கலாம். அங்கே தரமான தொழில்நுட்பம், இஸ்லாமியப் பார்வை, சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்று சமுதாயத்திற்குத் தேவையானவற்றை பாடத்திட்டங்களில் சேர்க்கலாம். இதனால் ஏனோதானோவென்று இல்லாமல் சமுதாயக் கடமையையுணர்ந்த, அர்ப்பணிப்பு உணர்வுள்ள, அயராது உழைக்கும் மனப்பான்மையுள்ள ஊடகவியலாளர்கள் உருவாகுவார்கள்.

ஆம்! இந்த ஊடகக் கண்மணிகள்தான் இப்போதைய சமுதாயத்தின் தேவை.

இனி ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.

No comments:

Post a Comment