Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 32

பருவகால இதழ்கள் (Periodicals)

பருவகால இதழ்கள் என்பவை வார இதழ் (Weekly), மாதமிரு இதழ் (Fortnightly), மாத இதழ் (Monthly), மூன்று மாதத்திற்கொரு இதழ் (Quarterly) என்று பல வகைப்படும்.

பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்த இதழ்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் பெரும்பாலானவை தரம் குன்றியதாகவே இருக்கின்றன. எனவே ஒரு பருவகால இதழைப் புதிதாக ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிப்பது நலம். அதனால் குறிப்பிட்ட ஏதேனும் நல்ல பலன் இருந்தால் தவிர அவைகளைத் தொடங்காமல் இருப்பது நல்லது.

செய்தி மடல்கள் (News Letters), உள் பத்திரிகைகள் (Inland Magazines) போன்ற சிற்றிதழ்கள் தனிப்பட்ட சுற்றுக்கு மட்டும் விடப்படும் பத்திரிகைகள். இவை சிறிய வாசகர் வட்டத்தைச் சென்றடையும். பெரிய பத்திரிகைகளை விட இந்தச் சிற்றிதழ்கள் நிறைய சாதிக்க முடியும். புரட்சிகர சிந்தனைகளும், நல்லபல செயல்பாடுகளும் இந்தச் சிற்றிதழ்கள் மூலமே பல சமயங்களில் துவங்கியிருக்கிறது.

செய்திச் சேவை நிறுவனங்கள் (News Services)

MUSLIMEDIA (முஸ்லிம் மீடியா) என்றொரு செய்திச் சேவை நிறுவனம் முஸ்லிம்களால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் முஸ்லிம் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளும், கட்டுரைகளும் கோர்க்கப்படுகின்றன; முஸ்லிம் உலகில் சுற்றுக்கு விடப்படுகின்றன.

இந்தியாவில் தொடங்கப்பட்ட செய்திச் சேவை நிறுவனங்களான FANA (Feature and News Alliance), UMMA (United Mass Media Association) ஆகிய இரண்டும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஊடகவியலாளர்கள் ஒரு சிறு குழுவாகச் சேர்ந்து இம்மாதிரி செய்திச் சேவை நிறுவனங்களைத் துவங்கலாம். அவர்களால் தயாரிக்கப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முஸ்லிம் பத்திரிகை உலகுக்கு வினியோகிக்கப்படலாம். முஸ்லிம் இதழ்கள் இதில் சந்தாதாரராகி செய்திகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும் அனைத்து முஸ்லிம் பத்திரிகைகளும் இணைந்து ஒரு கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கலாம். இதன் மூலம் நல்ல பல கருத்துகளும், அனுபவங்களும் பகர்ந்து கொள்ளப்படலாம்.

தொலைக்காட்சி சானல்கள் (TV Channels)

இது தொலைக்காட்சி யுகம். ஒரு தொலைக்காட்சி சானலை ஆரம்பிக்க வேண்டுமென்றால் மிகப் பெரிய பொருளாதாரம் முதலீடு செய்யவேண்டி வரும்.

சரிஅப்படியே பணத்தை முதலீடு செய்து தொலைக்காட்சி சானலை ஆரம்பித்தாலும் மனிதவளத்திற்கு எங்கே போவது? நாம் முதலீடு செய்த பின் வேறு யாரிடமாவது அதனை நடத்துவதற்கு ஒப்படைத்தால் நாம் ஆரம்பித்த நோக்கமே நிறைவேறாமல் போகும். இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அது அமையலாம்.

பெரும்பாலான தொலைக்காட்சி சானல்கள் அனுசரணை நிகழ்ச்சிகளுக்காக (Sponsored Programmes) அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று நேரங்களை விற்கின்றன. இப்பொழுது முஸ்லிம் அமைப்புகள் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றன. இதனை இன்னும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்றாடச் செய்திகள் சம்பந்தமான விவாதங்கள், ஆவணப்படங்கள் என்று இன்னும் நல்ல முறையில் நாம் அதனைப் பயன்படுத்தவேண்டும்.


விளம்பரதாரர்கள் மூலமும், அனுசரணையாளர்கள் மூலமும் நாம் நிகழ்ச்சி தயாரிப்பு, நிகழ்ச்சிக்கான வாடகை போன்ற செலவுகளை ஈடு கட்டவேண்டும்.

No comments:

Post a Comment