Sunday 29 September 2013

பால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு!


மதீனாவில் ஒரு காட்சி. கடைத் தெருவில் மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்து சில காலம்தான் ஆகியிருந்தது. ஆதலால் மக்களின் பேச்சு முழுவதும் அவர்களின் வருகையைச் சுற்றியே அமைந்திருந்தது.

கைஸ் இப்னு மதாதியா என்பவர் அந்த மக்களிடம் இவ்வாறு உரக்கக் கூறினார்: “அவ்ஸ் கோத்திரமும், கஸ்ரஜ் கோத்திரமும் இந்த மனிதருக்கு உதவி செய்வதற்குத் தீர்மானித்திருப்பது சரிதான். நாம் அதனைப் பின்பற்றவும் செய்வோம். மக்காவிலிருந்து அவர் கூட வந்தவர்களையும் நாம் ஆதரிப்போம்.

ஆனால் பாரசீகத்திலிருந்து வந்துள்ள ஸல்மானுக்கும், ரோமிலிருந்து வந்துள்ள ஸுஹைபுக்கும், அபிசீனியாவிலிருந்து வந்துள்ள பிலாலுக்கும் இங்கே என்ன வேலை?”

மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுக்கும், மதீனாவிலுள்ள அன்சாரிகளுக்கும் சகோதரத்துவம் வேர் பிடித்து வளர்ந்து வந்த காலகட்டம் அது. இரத்த பந்தத்தை வெல்லும் விதமாக இந்த இலட்சிய பந்தம் இறுகிப் படர்ந்து விரிந்து கொண்டிருந்தது.

மக்காவிலிருந்து வந்தவர்களை மதீனாவாசிகள் ஆரத் தழுவி வரவேற்றார்கள். தங்கள் குடும்பங்களில் ஓரங்கமாக ஆக்கினார்கள். வீடுகளையும், விவசாய நிலங்களையம், வியாபாரங்களையும் விருந்தினர்களுக்குப் பங்கு வைத்தார்கள்.தங்கள் சொத்துகளை வாகாய்ப் பிரித்துக் கொடுத்து வரலாற்றில் இடம் பெற்றார்கள்.

இதனால் அந்தப் பிரதேசத்தின் முகச் சாயலே மாறி பிரகாசித்தது. யத்ரிப் நகரம் மறைத்தூதரின் மதீனாவானது.இதற்கிடையில்தான் இந்தப் பிரதேச வெறியின் விஷ வித்து தூவப்பட்டது. மக்காக்காரர்கள், மதீனாக்காரர்கள் என்ற வேறுபாடு மறைந்து விசுவாசிகளுக்கிடையில் உருவான புதிய பந்தத்தை தன்னுடைய குறுகிய கண் கொண்டு கைஸ் பார்த்தார்.

அரபுகளுக்கிடையில் உண்டான ஐக்கியமாக கைஸ் இதனைக் கண்டார். ஆனால் அரபியரல்லாத ஸல்மான் ஃபார்சியும்,ஸுஹைப் ரூமியும், பிலாலும் அவருடைய பார்வையில் இந்த ஐக்கிய வட்டத்திற்கு வெளியே நிற்க வேண்டியவர்கள்.அதாவது பால் சுரக்கும் பசுவின் மடியிலும் கொசுவிற்கு விருப்பம் இரத்தம்தான் என்ற உதாரணத்திற்கு அவர் இலக்கானார்.

கோத்திர வெறியும், பிரதேசப் பித்தும் பொடிப் பொடியாய் நொறுங்கி விசாலமான சகோதரத்துவம் விந்தையாக வளர்ந்து வந்த பொழுது, அங்கே புதியதொரு பிரிவினைவாதத்தைக் கண்டுபிடித்து உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினார் கைஸ்.

மதீனாவாசியான முஆத் இப்னு ஜபலுக்கு (ரலி) இதனைக் கண்டு பொறுக்கவில்லை. கைஸைப் பிடித்திழுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார். கைஸின் கூற்றைக் கேட்டறிந்த அண்ணலாருக்கு விடயத்தின் விபரீதம் புரிந்தது. தொழுகைக்கு அழைப்பது போல் மக்களை மஸ்ஜிதுக்கு அழைக்குமாறு அண்ணலார் ஆணையிட்டார்கள். மக்கள் கூட்டம் மஸ்ஜிதை நோக்கி அலை மோதியது.

அல்லாஹ்வின் அறுதித் தூதர் அஹமத் (ஸல்) அவர்கள் மக்களிடம் இவ்வாறு உரையாற்றினார்கள்:
“மக்களே, உங்களின் இறைவன் ஏகன். உங்களின் தந்தை ஒருவர். உங்களின் மார்க்கம் ஒன்று. நீங்கள் ஒன்றை நினைவு கூர வேண்டும். இந்த அரபி மொழி உங்களின் தந்தையோ, தாயோ அல்ல. அது ஒரு மொழி மட்டுமே. அரபி மொழி பேசுபவர்களை அரபிகள் என்றழைக்கின்றனர். அவ்வளவுதான்.”

“இறைவனின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஒரே இறைவனின் அடிமைகள். பிள்ளைகளின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் ஆதமின் பிள்ளைகள். மதத்தின் பெயரால் பிளவு படுவது என்றால் நீங்களெல்லாம் அல்லாஹ்வின் ஒரே மார்க்கத்தின் அணியினர்.”
முஆத் இப்னு ஜபல் (ரலி) கேட்டார்: “இறைத்தூதரே, இந்த நயவஞ்சகனுடைய விடயத்தில் தாங்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?”

அண்ணலார் கூறினார்கள்:
“நரகத்தின் பக்கம் செல்வதற்கு நீ அவரை விட்டு விடு.”
ஒரு பக்கம் இனிப்பு. மறு பக்கம் காரம். பிளவுபடுதலின் சுவையில் வித்தியாசம் உண்டு. குலம், தேசம், மொழி, குடும்பம்,கலாச்சாரம், நிறம் போன்று வேறுபாடுகளின் ஆயுதங்களை உயர்த்துபவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் பற்றையும்,மற்றவற்றில் வெறுப்பையும் காட்டுவார்கள். சகோதரத்துவத்தின் விசாலத்தை உட்கொள்ள அவர்களால் முடியாது.ஒற்றுமையின் மேடையில் சந்தேகங்களை அரங்கேற்ற இவர்கள் என்றும் தயாராக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் கபடத்தன்மை வெளியில் வரும்.

வேறுபாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்கள் எக்காலமும் சமுதாயத்தைச் சக்திப்படுத்துவதற்கு எதிராகவே இருப்பார்கள்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment