Friday 27 September 2013

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்? - பாகம் 2


மனிதர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை

வலுவான தனி மனித உறவுகளும், சகோதரத்துவமும் பலப்பட்ட சமூக வாழ்க்கையைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. சத்திய விசுவாசிகள் பரஸ்பரம் சகோதரத்துவம் பேண வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவரை நேசிக்காதவரை நீங்கள் நம்பிக்கையாளராக முடியாது. நம்பிக்கையாளராகாதவரை சுவனத்தில் நுழைய முடியாது.” அல்லாஹ்விற்காக நேசிப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்.

1. அல்லாஹ்வின் அன்பு

ஹதீஸுல் குத்ஸீ ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான்: “என்னை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்துபவர்களூக்கும், சந்திப்பவர்களுக்கும், செலவு செய்பவர்களுக்கும் என்னுடைய அன்பு கிடைக்கும்.”

2. அல்லாஹ்வின் நிழல்

கியாமத் நாளில் அல்லாஹ் கூறுவான்: “என்னுடைய மகத்துவங்களை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்தியவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு நிழல் தருவேன் - என்னுடைய நிழல் இல்லாமல் வேறு நிழல் இல்லாத இந்நாளில்!”

பந்தமும் பாசமும் நிலைநிறுத்துவது

பரஸ்பரம் அன்பு செலுத்துவது எவ்வளவு முக்கியமானது என்றும், சுவனத்தில் பிரவேசிக்க நாம் சக மனிதர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் புரிந்து கொண்டோம். இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய - நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்தது போன்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் நம்மிடம் சில மாற்றங்களை, சில பண்புகளை உருவாக்க வேண்டும்.

1. அழகிய குணம்

தீன் என்றால் அழகிய குணத்தை உள்வாங்கியது என்று பொருள். அந்த தீனை உட்கொண்டுள்ள நாம் அழகிய குணங்களை வெளிப்படுத்த வேண்டும் - முஸ்லிம் தலைவர்களிடமும், முஸ்லிம் உம்மத்திடமும்.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நாம் நமது உரிமைகள் பாதூகாக்கப்பட வேண்டும் என்றும், நமது முன்னேற்றத்திற்கான பாதை ஏற்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றோம். இந்நிலை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்பட்டால்தான் நாம் உண்மையான முஃமின்களாக ஆக முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை மேலே பார்த்தோம்.

“உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

2. அடுத்தவருக்கு முன்னுரிமை

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கடும் பசியோடு ஒரு மனிதர் வந்தார். அவரை அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் விருந்தாளியாக செல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

அபூதல்ஹாவுடைய வீட்டில் ஒருவருக்கு மட்டுமே உண்ணும் அளவு உணவு இருந்தது. உடனே அபூதல்ஹா (ரலி) தன் குழந்தைகளைத் தூங்கச் செய்தார். விருந்தாளியுடன் சாப்பிட அமரும்போது விளக்கை அணைத்து விட்டார். அனைவரும் சாப்பிடுவது போல் விருந்தாளி நினைத்து வயிறாற சாப்பிட்டார். விருந்தாளியின் பசி அடங்கியது. இந்த நபித்தோழரைப் பாராட்டி அல்லாஹ் குர்ஆனில் வசனத்தை இறக்கினான்.

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 9)

ஏனையோருடன் அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. அவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் நட்பும் உறவும் சகோதரத்துவமும் மேலோங்கும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபியுடையவும், நபித்தோழர்களுடையவும் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் படிப்பினை இதுதான்.

யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல் தண்ணீர் தண்ணீர் என்று. முதலாமவர் தனது தண்ணீரை இரண்டாமவருக்குக் கொடுக்கச் சொல்கிறார். இரண்டாவது தோழரிடம் செல்லும்போது மூன்றாவதாக தண்ணீர் குரல். இரண்டாமவரும் அவ்வாறே கூறுகின்றார்.

இவ்வாறு ஆறு நபித்தோழர்கள் மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த சம்பவத்தைப் பார்க்க முடிகிறது.

உறவுகளை முறிக்கும் செயல்பாடுகள்

1. கெட்ட பேச்சுகள்

பேசும்போது தரக் குறைவான வார்த்தைகளைப் பேசுவது, பிறரை ஆட்சேபணை செய்வது, கெட்ட பெயர்களைக் கூறி அழைப்பது, இழிவு படுத்துவது போன்ற செயல்பாடுகள் உறவுகளை முறிக்கவும், பரஸ்பரம் சண்டையினை உருவாக்கவும் வழி வகுக்கும்.

2. கோபம்

கோபம் உறவுகளை முறிக்கும் செயல். கோபம் ஒருவருக்கு ஒவ்வொரு விதமாக உருவாகும். நாம் நமது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள ஏனையோருக்கும் முடியாமல் போய் விடும். இறையச்சமுடையவர்களின் பண்பு இவ்வாறு இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது:

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 134)

3. பிணக்கம் (சண்டை)

உண்மையான நம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் சண்டையிடக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருக்கக் கூடாது.”

எண்ணிப் பாருங்கள். நம்மிடையே ஆண்டாண்டு காலம் பேசாமல் எத்தனையோ சகோதரர்கள் இருக்கிறார்கள்.

4. ஏனையோரை அலட்சியப்படுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தன் சகோதரனை ஒரு முஸ்லிம் நிந்தனை செய்யக் கூடாது. நிந்திப்பது முஸ்லிமுக்கு இழிவை ஏற்படுத்தும். பிறரை நிந்தித்து விட்டால் அவருடன் உறவை மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படாமல் போய் விடும்.”

கொடுக்கல் வாங்கல்

ஒரு முஸ்லிமுடைய கொடுக்கல் வாங்கல் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதில் ஏற்படும் மனச் சிதைவுகள் பரஸ்பரம் உறவுகளை முறித்து விடும்.

இஸ்லாம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் எவ்வாறு கட்டளை இடுகின்றதோ அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். காரணம், அது ஈமானின் ஓர் அம்சமாகவும் இருக்கின்றது.

உறவுகளை சக்திப்படுத்தும் வாய்ப்புகள்

பரஸ்பரம் ஸலாம் கூறுதல், புன்னகைத்தல், முஸாபா செய்தல், பரஸ்பரம் சந்தித்தல், பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்தல், ஆலோசனை கூறுதல், பிரார்த்தனை செய்தல்.... போன்ற செயல்பாடுகளால் உறவுகளை சக்திப்படுத்தலாம்.

இப்படியாக பிற சகோதரர்களின் நலனில் அக்கறை கொண்டு, கருத்துவேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல், பெருந்தன்மையுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொண்டால் நல்லுறவுகள் மலரும். சமுதாயத்தில் சகோதரத்துவம் பிறக்கும். நானிலம் சிறக்கும்.


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment