Wednesday 25 September 2013

எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்? - பாகம் 1


ஒரு குடும்பத்தில் பரஸ்பரம் அன்பும், பண்பும், பந்தமும், பாசமும் நிலவினால் அந்தக் குடும்பம் குதூகலிக்கும். ஓர் ஊரிலுள்ள மக்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் அண்ணன், தம்பிகளாக அன்பைப் பொழிந்து, சகோதர பாசத்துடன் வாழ்ந்தால் அந்த ஊர் உருப்படும்.

ஒரு சமுதாயத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நீக்கமற நிறைந்திருந்தால் அந்தச் சமுதாயம் – அந்த உம்மத் உய்வடையும். வெற்றி பெறும். ஆம்! இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மையே சகோதரத்துவம்தான்.

நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இஸ்லாத்தின் பக்கம் ஏனையோர் ஈர்க்கப்படுவதற்கும் தடையாக இருப்பது நமக்கிடையேயுள்ள பிளவும், பிரிவுகளுமே!

இன்றைய நமது சமூகத்தின் நிலையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். சிறிய அளவிலேனும் ஆய்வு செய்து பாருங்கள். சமுதாயக் கண்மணிகள் பரஸ்பரம் தமக்குள் புழுதி வாரித் தூற்றுவதும், ஏசுவதும், பேசுவதும், ஏகடியம் பேசி எள்ளி நகையாடுவதும், விமர்சனங்கள் என்ற பெயரில் விளாசித் தள்ளுவதும், சவால்கள் விடுவதுமாக தங்களது நேரங்களை வீணடிக்கிறார்கள்.

இதுதான் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? இதைத்தான் இறைவேதம் இயம்புகின்றதா? இப்படித்தான் இறைத்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்களா?

சீமான் நபி (ஸல்) அவர்களின் செயல்பாட்டைப் பாருங்கள். மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா வந்தவுடன் அங்கே ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைத்தபோது இரண்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

ஒன்று - மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவம்.
இரண்டு - சமூகங்களுக்கிடையில் ஒற்றும.

பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலாகாலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள்.

ஆனால் நாமோ...? இன்றைய நமது செயல்பாடுகள் மீண்டும் ஜாஹிலிய்யா என்னும் அஞ்ஞான காலகட்டத்தை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கின்றோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

பெரிய, சிறிய பிரச்னைகளுக்காக பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்கின்றோம். வழியில் வந்த பிரச்னைகளுக்கெல்லாம் வசை மாறிப் பொழிகிறோம். தெருவில் தென்படும் பிரச்னைகளுக்கெல்லாம் திசை மாறிப் போகிறோம்.

ஒற்றுமை

திருக்குர்ஆனைப் புரட்டுங்கள். முஸ்லிம் உம்மத் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அது தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. நம்பிக்கையாளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் ஆழமான சகோரத்துவ உறவைப் பேண வேண்டும் என்று அது ஆணையிடுகின்றது. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே. ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)

எந்நிலையிலும் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று இன்னொரு வசனம் இப்படி இயம்புகின்றது:

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 103)

கருத்துவேறுபாடுகளினால் நீங்கள் பிளந்துபட்டு நின்றால் உங்களிடம் கோழைத்தனம் வந்து விடும், உங்கள் பலமும் குன்றி விடும் என்கிறது மற்றொரு மறைவசனம்:

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிலைகுலையா பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8 : 46)

முஃமின்கள் தங்களுக்கிடையே இரக்கம் மிக்கவர்களாகவும், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது இன்னொரு வசனம்: முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். (அல்குர்ஆன் 48 : 29)

அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 5 : 54)

ஆனால் இன்று இதற்கு நேர் மாறாக நடக்கிறது. காஃபிர்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறார்கள். இறைநம்பிக்கையாளர்களுடன் இறுக்கமாக இருக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்கள் மேலே கூறப்பட்ட அனைத்து இஸ்லாமிய விழுமியங்களையும் விழுங்கிவிட்டு - புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையின்மையில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் உம்மத்திற்கு இன்று உலகளவில் ஏற்பட்டிருக்கும் இன்னல்களை, ஆபத்துகளைக் கண்ட பிறகும் கூட, ஒற்றுமை ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டு விட்ட நிலையிலும் கூட - ஒற்றுமைக்கு எதிராகவே இன்றும் நம்மில் பலர் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரிவினைக்கான காரணம்

நம் சமூகத்திலுள்ள பிரிவினைக்கான காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது அமல்கள் செய்யும் விடயத்தில் உள்ள கருத்துவேறுபாடுகள். அமல்கள் விடயத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் இன்று தோன்றியவையா? நேற்று தோன்றியவையா? நிச்சயமாக இல்லை. பண்டு தொட்டு, பழைய காலம் முதலே இந்தக் கருத்துவேறுபாடுகள் நிலை நின்று வந்திருக்கின்றன.

நபித்தோழர்களிடத்திலும் இந்தக் கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன. அவர்களுக்குப் பின் வந்த தாபிஈன்களிடத்திலும், தபுஃ தாபிஈன்களிடத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்துள்ளன.

ஆனால் அவர்கள் அணி அணியாகப் பிரிந்திடவில்லை. சில்லறைக் காசாகச் சிதறிடவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தார்கள். கண்ணீயமாக நடந்து கொண்டார்கள். எதிரிகளை ஓரணியில் நின்று சந்தித்தார்கள்.

கருணை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ஒரு பயணத்தில் இரண்டு நபித்தோழர்களுக்கு தொழும் நேரம் வந்துவிட்டது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே தயம்மும் செய்து தொழுதார்கள்.

ஆனால் அவர்கள் சிறிது தூரம் சென்றவுடன் தண்ணீர் கிடைத்தது. உடனே ஒரு நபித்தோழர் தண்ணீரில் ஒளூ செய்து மீண்டும் தொழ வேண்டும் என்றார்.

இரண்டாமவரோ தொழத் தேவையில்லை என்று கூறினார். முன்னவர் மட்டும் மீண்டும் தொழுதார். இரண்டாமவர் மீட்டுத் தொழவில்லை. விவகாரம் அண்ணலாரிடம் சென்றது. இருவருமாக தங்களது கருத்துவேறுபாட்டை நபி (ஸல்) அவர்கள் முன் எடுத்து வைத்தனர். வாதங்களைக் கேட்டு முடித்ததும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாமவரிடம் கூறினார்கள்: “நீர் செய்தது எனது வழிமுறை.”

முன்னவரிடம் கூறினார்கள்: “உமக்கு இரட்டை கூலி கிடைக்கும்.”

இஸ்லாம் வெறுக்கும் பகைமை

சமூகத்தைப் பிரித்து பகைமை பாராட்டி பலப் பல குழுக்களாக மாறி செயல்படுவதும், அதற்காக மக்களிடம் கருத்துவேறுபாடுகளை மீண்டும் மீண்டும் சொல்லி பிரிவினைக்கு, பகைமைக்கு வித்திடுவதும் விண்மறையோ, நன்னபியோ, நனி சிறந்த முன்னோர்களோ காட்டித் தராத பாதை. அது அழியாத இஸ்லாத்தின் அனுமதியில்லாத செயல்!

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

அல்லாஹ் மனிதனுக்கு பகுத்தறிவு என்ற ஓர் அருட்கொடையை அருளியுள்ளான். இதன் மூலம் மனிதன் சிந்திக்கின்றான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை. பத்து பேர் இருந்தால் பத்து சிந்தனைகள் உதிக்கும். இதுதான் மனித இயல்பு.

எனவே ஒவ்வொருவரும் சிந்திப்பதைப் பொறுத்து கருத்துவேறூபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. இதனை நாம் உட்கொள்ள வேண்டும். பத்து பேர் இருந்தால் பத்து கருத்துகள் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அங்கே நமது கருத்தைக் கூறலாம். வலியுறுத்தலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அருமை நபித்தோழர்களின் அழகிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அங்கே ஒவ்வொரு தனி மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தைப் பிரித்து பிளவுபடுத்தி விடக் கூடாது.

நபித்தோழர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தன. உத்தம நபித்தோழர்கள் ஒரே கருத்தில் இருந்திடவில்லை. பல விடயங்களில் கருத்து மாறு பட்டார்கள். ஆனால் அணுகுமுறையில் மாற்றம் காணவில்லை. அதே அணுகுமுறை. அதே கண்ணியம். அதே கட்டுப்பாடு. பிரிந்து, பிளவு பட்டு நிற்கவில்லை. அதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

அகழ் யுத்தம் முடிந்த நிலையில் தங்கள் தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள் இவ்வாறு: “விரைவாகப் புறப்படுங்கள். அனைவரும் பனூ குரைளா கோத்திரத்தாரின் கோட்டையை முற்றுகையிடுங்கள். அங்கே சென்று அஸர் தொழுகையை நிறைவேற்றுங்கள்.”

அண்ணலாரின் ஆணையை ஆழமாகப் படித்துக் கொள்ளுங்கள். இனி நபித்தோழர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு வருவோம். நபித்தோழர்கள் செல்லும் வழியில் அஸருடைய வக்த் (நேரம்) வந்தது. தொழுகைக்கு வக்த் எனும் நேரத்தைக் கடைப்பிடிப்பது மிக அவசியம் என்பதால் அஸர் நேரம் கடந்து விடும் என்று சிலர் வழியிலேயே அஸரைத் தொழுதார்கள்.

இல்லை... அல்லாஹ்வின் தூதரின் ஆணைக்கு அப்படியே அட்டியின்றி அடி பணிய வேண்டும். எனவே பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழ வேண்டும் என்பது இன்னொரு தரப்பாரின் வாதம். அந்தக் கருத்தைச் சரி கண்டோர் பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

இந்த விவகாரமும் அண்ணலாரிடம் சென்றது. அவர்கள் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. எந்தத் தரப்பாரையும் குறை காணவில்லை. அதாவது இரண்டையும் சரி கண்டார்கள்.

அபூபக்கர் (ரலி) - உமர் (ரலி)

பத்ருப் போர் முடிந்து கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் கைதிகளை பிணைத்தொகை வாங்கி விடுதலை செய்யலாம் என்றார். உமர் (ரலி) அவர்களோ அனைவரையும் கொன்று விட வேண்டும் என்றார். இருவருடைய கருத்துகளையும் இரு நபிமார்களின் பெயரைக் கூறி அவர்களின் கருத்தைப் போன்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.

பல விடயங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முதல் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் பெயரை முன்மொழிந்தார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“அபூபக்கர் போன்ற மகான்கள் அடங்கிய சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதை விட எந்தக் காரணமும் இல்லாமல் உமருடைய தலை வெட்டப்படுவதே சிறந்தது!”

அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆன பிறகு மூன்று விடயங்களில் உமர் (ரலி) அவர்களுக்கு கருத்துவேறுபாடு உண்டானது. அவைகளாவன:

1. ஜகாத் தரமாட்டேன் என்று கூறியவர்களிடம் போர் தொடுப்பது.
2. காலித் பின் வலீதை படைத்தளபதியாக நியமித்தது.
3. போரில் கிடைத்த பொருட்களைப் பங்கு வைப்பது.

அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது உமரை அழைத்து இரண்டாவதும், மூன்றாவதுமான விடயங்களில் இப்பொழுது உங்களது கருத்து என்ன என்று கேட்டார். ஆனால் உமர் (ரலி) அவர்கள் தனது கருத்து என்னவோ அதில் உறுதியாக இருந்தார். இப்படிப்பட்ட உறுதி மிக்க தலைவர்தான் இப்போதைய தேவை என்பதை உணர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் உடனே இரண்டாவது கலீஃபாவாக உமரைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவித்தார்.

உமர் (ரலி) - காலித் பின் வலீத் (ரலி)

உமர் (ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் காலித் பின் வலீதை (ரலி) படைத் தளபதி பொறுப்பிலிருந்து நீக்கினார். “முஸ்லிம்களுக்கும், நாட்டிற்கும் அது நல்லது என்றால் நான் அதற்கு கட்டுப்படுகிறேன்” என்று கூறி காலித் பின் வலீத் (ரலி), அபூஉபைதாவின் (ரலி) கீழ் சாதாரண வீரராகப் பணியாற்றினார். இது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமைத்துவத்தின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டுகிறது.

காட்சி மாறுகிறது, உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது கூறினார்: “காலித் பின் வலீத் மரணித்திருக்காவிட்டால் அவரையே அடுத்த கலீஃபாவாக நியமிக்க நான் உத்தரவிட்டிருப்பேன். அல்லாஹ் என்னிடம் முஹம்மதுடைய உம்மத்திற்கு யாரைப் பொறுப்பு ஏற்படுத்தினாய் என்று கேட்டால் நான் அல்லாஹ்வின் வாளாகிய காலித் பின் வலீத் என்று கூறியிருப்பேன். ஏனெனில் காஃபிர்களுக்கு எதிராக அல்லாஹ் ஏற்படுத்திய வாள் காலித் பின் வலீத் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்.”

இது உமர் (ரலி) அவர்கள் தங்கள் சக தோழர்கள் மேல் வைத்திருந்த மதிப்பையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இமாம்கள்

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க எகிப்திலிருந்து ஒரு அறிஞர் வந்திருந்தார். அப்போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தங்களது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த அவ்வறிஞர், “ஏன் உங்களுக்கு இவ்வாறு வியர்த்து வழிகின்றது?” என்று கேட்டார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், “நான் இமாம் அபூஹனீஃபா அவர்களுடன் பல விடயங்கள் குறித்து விவாதம் செய்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, “அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மார்க்க அறிஞர்தான்!” என்று அவரைப் பாராட்டினார்.

இன்று நமது நாட்டில் விவாதம் செய்யும் இரு கருத்துடைய அறிஞர்கள் இவ்வாறு பாராட்டிக்கொள்வார்களா? இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றிக் கூறுகிறார்: “அறிஞர்களில் நட்சத்திரம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.”

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

“ஃபிக்ஹு சட்டங்களின் தெளிவு வேண்டும் என்றால் இமாம் அபூஹனீஃபாதான் மக்களுக்கு உதவ முடியும்.”

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கச் சென்ற இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத் ஓதவில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் அவருடைய மகன் அப்துல்லாஹ் வினவினார்: “தங்கள் பிரார்த்தனையில் எப்போதும் ஷாஃபிஈ அவர்களையும் சேர்த்துக்கொள்கிறீர்களே... யார் அந்த ஷாஃபிஈ?”

இமாம் அஹமது (ரஹ்) அவர்கள் கூறினார்: “மகனே ஷாஃபிஈ இமாம் அவர்கள் முஸ்லிம் உலகிற்கு சூரியனாகவும், மக்களுக்கு நன்மையின் பிதாவாகவும் வாழ்ந்தவர்கள்.”

இமாம்களுக்கிடையில் உள்ள கண்ணியமான உறவைப் பற்றி நாம் மேலே பார்த்தோம். நமது நாட்டில் உள்ள பல கருத்துகளையுடைய அறிஞர்களும் இமாம்கள் எவ்வாறு தங்களுக்குள் கண்ணியமாக நடந்து கொண்டார்களோ அதே போல் நடந்து கொண்டால் சமுதாயம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்?

ஒற்றுமைக்குண்டான வழிகள்

நம்பிக்கையாளர்களுக்கு ஒன்று படுவதற்கு ஏராளம் வழிகள் இருக்கின்றன.

ஒரே இறைவன் - அல்லாஹ்
ஒரே நம்பிக்கை - லாஇலாஹ இல்லல்லாஹ்
ஒரே வேதம் - அல்குர்ஆன்
ஒரே தலைவர் - நபி (ஸல்)
ஒரே கிப்லா - கஅபத்துல்லாஹ்

ஒற்றுமைக்கான முக்கியத்துவம்

நாம் பிரிந்து வாழ்வதால் நமது சக்தி பலவீனமடைந்துள்ளது.

எதிரியின் சக்தி பலப்பட்டு அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளார்கள். ஆகையால் நாம் பிரிவினைகளைக் களைந்து ஓன்றுபட வேண்டும்.

திருக்குர்ஆன் கூறுகின்றது:
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக்கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:105)


இக்கட்டுரை kayalpatnam.com இணையதளத்தில் வெளியானது.

1 comment:

  1. நல்ல அற்புதமான கட்டூரை, ஆசிரியரின் பணி பாராட்டத்தக்கது. தனது சமூக அக்கரையின் வெளிப்பாட்டால் இந்த கட்டூரையை செதுக்கி இருக்கிறார். சொல்லும் பாணியும், தொகுத்த விதமும், குர் ஆன், ஹதீஸ், மேன்மக்களின் வாழ்வியல் சம்பவங்கள் என அழகாக செல்கிறது கட்டூரை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete