Sunday 29 September 2013

நயவஞ்சகர்களுக்கு நபிகளார் தந்த பாடம்!


அது ஒரு கடுமையான வெப்பக்காலம், உணவுப் பற்றாக்குறையும் நிலவியது.  மக்கள் அறுவடைக்காக காத்திருந்தனர். இந்த சமயத்தில் மிக நீண்டதூர பயணத்தை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அருமை நபிகள் (ஸல்) அவர்களிடமிருந்து இதோ கட்டளை வருகிறது : “எல்லோரும் தபூக் புறப்படத் தயாருங்கள்!”

மதீனாவை தாக்குவதற்காக தபூக்கில் எதிரிகள் படை திரண்டு கொண்டிருப்பதாக நபிகளாருக்குத் தகவல் கிட்டியதாலேயே இந்த உத்தரவு.
அன்றைய வல்லரசான, அதிக சக்தி படைத்த ரோமர்கள்தான் அங்கே எதிரிகள்.

கரடுமுரடான, கடினமான பாலைவனப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்தே தபூக்கை அடையவேண்டும். முஸ்லிம்கள் படை திரண்டு செல்வதற்கு சற்றும் சாதகமில்லாத சூழ்நிலையே இருந்தது. அப்பொழுது சூழ்நிலை சாதகமாகும் வரை காத்திருப்பது ஆபத்தில் முடியும் என்று கருணை நபியவர்கள் கருதியதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சாதாரணமாக செய்வது போலல்லாமல் இந்த யுத்தம் நடக்கப் போவதைப் பிரகடனப்படுத்தினார்கள் அண்ணலார்.

முடிந்தவரை அதிகம் பேரை படையில் சேர்ப்பதுதான் இதன் நோக்கம். அத்தோடு இந்த யுத்தச் செலவிற்காக தங்களால் முடிந்த அளவு நன்கொடைகளைத் தருமாறு அண்ணலார் அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

நபித்தோழர்களும் தங்களால் இயன்ற பொருட்களைக் கொண்டு வந்து தந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அண்ணலார் (ஸல்) அவர்கள் குடும்பத்திற்காக என்ன விட்டு வந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்கள்.
அல்லாஹ்வும் அவனின் தூதரும் வாக்களித்த நன்மையையும் பிரதிபலனையும் அவர்களுக்காக விட்டு வைத்து வந்துள்ளேன் என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் பதில் பகர்ந்தார்கள்.

மண்டையைப் பிளக்கும் வெயிலின் உக்கிரத்தில் வறண்ட பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை நபித்தோழர்கள் செய்தார்கள். இந்த தடவை அவர்கள் சந்திக்கப் போகும் எதிரிப் படை மிகப் பலமுள்ளது.

பெர்சியர்களை வென்ற  தைரியத்திலும் தன்னம்பிககையிலும் திளைத்திருந்தது ரோமப்படை. அதனை எதிர்கொள்வது அத்தனை எளிதல்ல.
ஆனால் அண்ணலாரின் உத்தரவுக்கு அட்டியின்றி அடிபணியும் தோழர்கள் நாலாப் புறங்களிலிருந்ததும் யுத்தத்தில் கலந்து கொள்வதற்காக மதீனா நோக்கி வரத்தொடங்கினார்கள்.

வழக்கம் போல் நயவஞ்சகர்கள் இந்த தடவையும் தங்கள் வேலையை காட்டினர். சூழ்நிலைகள் கொஞ்சம் கூட சாதகமில்லாத காலக்கட்டத்தில் அண்ணலார் அவர்களின் இந்த கட்டளையை அவர்கள் விமர்சித்தார்கள்.

வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் மிக நீண்ட தூரம் பாலைவனத்தில் பயணம் செய்து போருக்குப் போவது முட்டாள்தனம் என்று மக்களிடம் அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.  அத்தோடு அங்கே நிலவி வந்த உணவு பற்றாக் குறையையும் ரோமர் படையின் மிருக பலத்தையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் பீதியைப் பரப்பினார்கள். இதற்கு அவர்கள் யூதர்களின் உதவியை நாடவும் தயங்கவில்லை. ஹீவைலிம் என்ற யூதனின் வீட்டில் சில நயவஞ்சகர்கள் ஒன்று கூடி சதியாலோசனை செய்வதாக நபிகளாருக்கு தகவல் கிடைத்தது.

மக்களை யுத்தத்திற்குச் செல்லவிடாமல் தடுப்பதற்கு என்னென்ன யுக்திகளைக் கையாளலாம் என்று அவர்கள் அங்கே ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

நபிகளார் இதனை இலேசாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, ஆழமாகக் கருத்தில் கொண்டார்கள். தல்ஹத்திப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அந்த வீட்டை நோக்கி அனுப்பி வைத்தார்கள்.

அந்த வீட்டையடைந்த அக்குழு,  அதற்கு தீ வைத்தது. அந்த வீட்டிலுள்ளவர்கள் தலைகால் புரியாமல் ஓடினார்கள்.  ஒரு ஆள் மட்டும் காலில் காயத்துடன் அந்த வீட்டின் பின்புறம் வழியாக தப்பித்தார். மீதி இருந்த அத்தனை பேரும் தீயில் கருகி இறந்தனர். யுத்தத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முஸ்லிம்களிடம் பிரச்சாரம் செய்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த இன்னபிற நயவஞ்சகர்களுக்கு இது ஒரு பயங்கர எச்சரிக்கை மணியாய் ஒலித்தது.  நயவஞ்சகர்களுக்கெதிரே கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அல்லாஹ்வின் அனுமதி கிடைத்திருந்தும் நபிகளார் அதனை நீட்டிப் போட்டே வந்தார்கள்.

முஹம்மத் (ஸல்) தனது சொந்த மக்களுக்கெதிராகவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார் என்று எதிரிகள் பிரச்சாரம் செய்வார்கள் என்ற ஒரே காரணம்தான் அதற்கு இருந்தது.

ஆனால் எதிரிகளின் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வீட்டில் யூதர்களுடன் சதியாலோசனை செய்யும் அளவுக்கு வந்து விட்டவுடன் அண்ணலார் அவர்கள் ஒன்றும் செய்யாமலிருக்கவில்லை. கடுமையான நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த சம்பவத்திற்குப் பின் நயவஞ்சவகர்களுக்குத் தலையைத் தூக்குவதற்கு மட்டுமல்ல வெளியே தலைகாட்டுவதற்கே தைரியம் வரவில்லை.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment