Sunday 29 September 2013

பதவிகள் பறிக்கப்படும்பொழுது…


“நீங்கள் எனக்கு அமைத்துத் தந்த அதிகாரம் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நீங்கள் என்னிடமிருந்து அந்த அதிகாரத்தைப் பறித்தெடுத்தது எனக்குத் துக்கத்தையும் தரவில்லை.”

காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்தது. படைத் தலைவர் பதவியிலிருந்து அவரை மாற்றியதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக வீட்டுக்கு வந்திருந்த கலீஃபாவிடம்தான் அவர் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக அங்கீகரிக்க ஆரம்ப கட்டத்தில் தயக்கம் காட்டினார் காலித் இப்னு ஸஈத். ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் காலிதுக்கு எந்தப் பகையும் இல்லை.

ஆனால் அதிகாரத்தில் அல்லாஹ்வின் தூதருக்கு அடுத்தபடியாக வருவதற்கு ஹாஷிம் குலத்தில் யாரேனும் ஒருவர் பொருத்தமாக இருப்பார் என்று அவர் எண்ணினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்தபொழுது காலித் மதீனாவில் இல்லை.

ஆதலால் அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாகப் பொறுப்பேற்ற சூழ்நிலைகளை, காரண காரியங்களை அவர் நேரில் கண்டறியவில்லை. யமனில் கவர்னராக இருந்த காலித் வேறொரு நபரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு மதீனா வர கொஞ்சம் காலதாமதம் ஆனது.

மதீனா வந்தடைந்ததும் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் உடனே உடன்படிக்கை செய்துகொள்ள அவர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. கலீஃபா அவரை அதற்காக நிர்ப்பந்திக்கவும் இல்லை. இந்த விடயம் விவாதத்திற்கு வந்தபொழுது காலித் இப்னு ஸஈத் இஸ்லாத்திற்காகச் செய்த சேவைகளையும், அவரது நல்ல பல குணங்களையும் எடுத்துரைத்தார் கலீஃபா அவர்கள்.

கலீஃபா அவரைக் குறித்து எந்தவொரு தவறான எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. நிறைய நாட்கள் கழித்து காலித் இப்னு ஸஈதின் நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆதரித்து அவர் கரம் பற்றி பைஅத் எனும் உடன்படிக்கையும் செய்து கொண்டார்.

பின்னர் ஷாம் நோக்கி படையெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அந்தப் படைக்குத் தலைமை தாங்குவதற்கு யாரை நியமிப்பது என்று கலீஃபா அவர்கள் அதிகம் யோசிக்கவில்லை. காலித் இப்னு ஸஈதுதான் அதற்குப் பொருத்தமான ஆள் என்று கலீஃபா அவர்கள் தீர்மானித்தார்.

படைக்கொடியை காலிதின் கைகளில் ஒப்படைத்தார் கலீஃபா. ஆனால் ஆட்சியில் இரண்டாவது நபராக இருந்த ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு காலிதை நியமித்ததில் கடுமையான கருத்துவேறுபாடு இருந்தது.

முதல் கலீஃபாவுக்கு பைஅத் எனும் உடன்படிக்கை செய்வதில் காலித் இப்னு ஸஈத் காலதாமதம் காண்பித்ததை கட்டுப்பாட்டை மீறிய செயலாக அந்தச் சமயத்திலும் உமர் (ரலி) கருத்தில் கொண்டார். காலிதை படைத்தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றவேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தினார்.

முதல் கலீஃபா வேறு வழியில்லாமல் அதனை ஏற்கவேண்டியதாயிற்று. அந்தப் பொறுப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டதற்கான காரணத்தை நேரில் விளக்குவதற்காக காலிதின் வீட்டிற்கு வந்த கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் காலித் சொன்ன வார்த்தைகளைத்தான் நாம் முதல் பத்தியில் பார்த்தோம்.

அதிகாரம் கையில் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கவில்லை. அதே காரணத்தால் அது கையை விட்டுப் போனபோது அவர் கவலைப்படவுமில்லை.இதுதான் முஸ்லிம் சமூகத்தின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

அப்துர் ரஹ்மான் இப்னு ஸமூரா (ரலி) என்ற நபித்தோழர் அண்ணலாரிடம் வந்து ஆட்சியதிகாரத்தில் ஏதேனும் பதவி இருந்தால் தனக்கு வழங்கிடுமாறு கோரினார்.

அதிகாரம் கேட்டு வருபவருக்கு நாம் அதனை வழங்குவதில்லை என்று கூறி அண்ணலார் அவரைத் திருப்பியனுப்பி விட்டார்கள். அந்தச் சமயத்தில் அண்ணலார் அவர்கள் இன்னொரு வார்த்தையையும் சொன்னார்கள்.

“ஆசைப்பட்டு அதிகாரம் கிடைத்தால் அதனை நிர்வகிக்கும் விடயத்தில் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது. விரும்பாமல் கிடைத்த பதவிக்குத்தான் இறையுதவி கிட்டும்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.

அதே நேரம் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் இந்தக் காலகட்டத்தில் நன்மையைக் கருத்திற்கொண்டு பதவியிலிருந்து விலகியிருப்பது நன்மையை விட தீமையையே அதிகமாக ஏற்படுத்தும். பதவிகள் பறித்துப் பிடுங்கப்படுவதற்கு ஏதுவாக எனக்கென்ன வந்தது என்று ஒதுங்கியிருப்பது நல்லதல்ல.

ஆனால் அதிகார மோகம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு சமூகத்தில் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அண்ணலாரின் அருமைத் தோழர்களின் வழக்கங்களிலிருந்து ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும் வேண்டும்.


இக்கட்டுரை விடியல் வெள்ளி மாத இதழில் கடைசிப் பக்கக் கட்டுரையாக இடம் பெற்றது.
அதன் மறுபதிப்பு thoothuonline.com இணையதளத்தில் வெளியானது.

No comments:

Post a Comment