Wednesday 5 March 2014

திருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு?


திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.

நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்லவிருக்கிறோம் என்பததைத் திருக்குர்ஆன் நமக்குக் கூறுகிறது. மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதையும் அது நமக்குக் கூறுகிறது.

அது நேரான வழியைக் காட்டுகிறது. அந்த வழி நம்மை அழிவில்லாத சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறது. அதே போல் அது நரகத்தினுடைய பாதைகளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றது.

அது தனி மனிதனுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. ஒரு அரசுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. அது ஷரீஅத் சட்டங்களை நமக்கு வழங்குகிறது.

திருக்குர்ஆன் நமது இதயத்தோடும் மூளையோடும் பேசுகிறது. அது கல்வி புகட்டுகின்றது, வழிகாட்டுகின்றது, காயங்களைக் குணப்படுத்துகின்றது. அது நமக்கு வழியை மட்டும் காட்டவில்லை. அந்த வழியைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலையும், ஆற்றலையும் தருகின்றது.

அதனை வாழ்க்கை வழிகாட்டியாய் எடுத்துக் கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல முடியாது. அதனை அலட்சியப்படுத்திய யாரும் நிரந்தர வெற்றியை ஈட்ட முடியாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள்தான் திருக்குர்ஆனைப் பின்பற்றிய முதல் கூட்டம். மிகவும் கீழான நிலையிலிருந்து அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு மாறினார்கள்.

இறையச்சத்திற்கும், பக்திக்கும் உதாரணப் புருஷர்களாகத் திகழ்ந்த அவர்கள், எந்தச் சமூகத்தாலும் ஒப்பிட முடியா உயரத்தை எட்டினார்கள்.

அவர்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அங்கே நீதி, நியாயம், நல்லவையே நிரம்பியிருந்தன.

“ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடைய வாரிசுகள் வந்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை விட்டும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள்.” - இப்படிக் கூறுகிறார் அஷ்செய்க் யூசுஃப் அல் கர்ளாவி தனது “திருக்குர்ஆனோடு நாம் எப்படி தொடர்பு வைத்திருக்க வேண்டும்?” என்ற நூலில். மேலும் அந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்:

“நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்கள் திருக்குர்ஆனின் வார்த்தைகளைப் பாதுகாத்தார்கள். ஆனால் அதன் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை மோசமாக புரிந்து கொண்டார்கள். இறைவேதம் எதனை முதன்மைப்படுத்தச் சொன்னதோ அதனை அவர்கள் முதன்மைப்படுத்தவில்லை. எதனை அது இறுதியாக்கியதோ அதனை அவர்கள் இறுதியாக்கவில்லை. அது எதற்கு முக்கியத்துவம் கொடுத்ததோ அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது எதனை அலட்சியப்படுத்தியதோ அதனை அவர்கள் அலட்சியப்படுத்தவில்லை. இந்த உம்மத் அதன் பின்னடைவிலிருந்து, அழிவிலிருந்து, இழப்புகளிலிருந்து மீள வேண்டுமானால் திருக்குர்ஆனின் பக்கம் அது சாய்வதைத் தவிர வேறு வழியில்லை.

திருக்குர்ஆனின் பக்கம் திரும்புவது என்பதற்கு கீழ்வரும் படிநிலைகள் தேவைப்படுகின்றன. திருக்குர்ஆனை நாம் அரபியில் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் நமது குழந்தைகளுக்கும் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நாம் அதனை மனனம் செய்ய வேண்டும். நாம் அதனைத் தொடர்ந்து ஓத வேண்டும். திருக்குர்ஆன் ஓதப்படாமல் ஒரு நாள் கூட கழியக்கூடாது. நாம் அது தரும் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். அது இடும் கட்டளைக்கேற்ப நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மனித குலத்தையும் இதன் பக்கம் அழைக்க வேண்டும்.

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதுதான். ஆனால் ஒருவர் அதனை நேர்மையாக உண்மையாக அணுக வேண்டும். முறையாக அணுக வேண்டும்.

திருக்குர்ஆனை விளக்குவதற்கும், அது பற்றி விரிவுரை ஆற்றுவதற்கும் சில திறமைகள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, அரபியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் வார்த்தை அமைப்புகள், இலக்கணம் போன்றவற்றை நன்கு கற்றிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, திருக்குர்ஆனின் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஹதீஸ்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனை விளக்குவதே இறைத்தூதரின் பணியாக இருந்தது. ஆதராப்பூர்வமான ஹதீஸ் ஒரு வசனத்திற்கு விளக்கமளித்தால், அதற்கு மாற்றமான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நான்காவதாக, நபித்தோழர்களால் திருக்குர்ஆனுக்குக் கூறப்பட்ட கருத்துரைகளை அறிந்திருக்க வேண்டும்.

ஐந்தாவதாக, இந்த உம்மத்தின் அறிஞர் பெருமக்கள் எழுதிய தஃப்ஸீரை அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஆறாவதாக, ஷரீஅத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கக் வேண்டும்.

ஏழாவதாக, சிறந்த பயபக்தி உள்ளவராக, இறையச்சமுள்ளவராகத் திகழ வேண்டும். ”

திருக்குர்ஆன் அதனை உண்மையாகப் பின்பற்றாதவர்களுக்கு அதன் கதவை திறக்காது. திடீரென்று குர்ஆனைத் திறந்து அதற்கு பொருள் கூற முடியாது. இப்படிச் செய்பவர்கள் பின்வரும் எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூரியுள்ளதாக செய்யிதினா அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “திருக்குர்ஆனுக்குத் தன் மனம் போன போக்கில் விளக்கம் கூறுபவர் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.” (திர்மிதீ)

துரதிர்ஷ்டவசமாக, இன்று பெரும்பாலான மக்கள் இதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஆய்வுக்குழு என்று வைத்துக் கொண்டு திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூற ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அப்படி விளக்கம் கொடுப்பவர் நல்ல பேச்சாளராக இருந்தால், அவர் கேட்பவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறுவார். அதன் பின் அந்த விரிவுரையாளர்கள் எந்தவிதக் குறைந்தபட்சத் தகுதியும் இல்லாமல், திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஷரீஅத் பற்றி மணிக்கணக்கில் பேசுவர்.

இதைக் கேட்பவர்கள் பரவசப்பட்டுப் போவார்கள். அவர்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு கருத்துக் கூறுவார்.

நபித்தோழர்களுடைய நடைமுறைகளையும், இதனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய முரண்பாடுகள் நமக்குத் தெரிய வரும்.

நபித்தோழர்கள் திருக்குர்ஆனின் மொழியை மட்டும் அறிந்தவர்களல்ல. அதன் வசனங்கள் இறக்கப்பட்டபோது நேரடி சாட்சிகள் அவர்கள். அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து திருக்குர்ஆனை ஒவ்வொரு வசனமாகக் கற்றுக் கொள்ளாமல் அவர்கள் அதனைப் பற்றி விளக்கம் கூறத் துணிந்ததில்லை.

அப்படிக் கூறிக் கொண்டாலும், திருக்குர்ஆனுக்கு எச்சரிக்கையோடு வார்த்தைகளைக் கையாளுவார்கள். செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “திருக்குர்ஆனைப் போதிய அறிவில்லாமல் நான் விளக்கம் கூறினால் எந்த மண் என்னைக்  காப்பாற்றும்? அந்த ஆகாயம் என்னைக் காப்பாற்றும்?”

அதேபோல் யஸீத் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்”: “நாங்கள் செய்யிதினா சயீத் பின் அல் முஸ்அப் (ரலி) அவர்களிடம் ஹலால், ஹராம் குறித்து வினவினோம். அவர்கள் அவற்றைப் பற்றி மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். ஆனால் ஏதாவது ஒரு திருக்குர்ஆன் வசனத்திற்கு தஃப்ஸீர் செய்யும்படி கூறினால், அது காதில் விழாத மாதிரி அமைதியாக இருந்து விடுவார்கள்.”

திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வது நம் மீது உள்ள கடமை. ஆனால் அதற்கு முறையான வலி, நம்பத் தகுந்த தஃப்ஸீர் வழி படிப்பது அல்லது தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியர் மூலம் பயில்வது. இதுவே நம்மை ஈடேற்றமடையச் செய்யும்.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி, நவம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)

No comments:

Post a Comment