Saturday 18 January 2014

மரணத்தை நோக்கிய பயணம்!


சில மாதங்களுக்கு முன்பு, நான் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மஸ்ஜிதில் வைத்து நடைபெற்ற அந்தத் திருமண நிகழ்ச்சியில், மவ்லவி குத்பா உரை நிகழ்த்தினார். திருமணம் சம்பந்தமான குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், மணமகனுக்கும், மணமகளுக்கும் பயன்படக்கூடிய உபதேசங்கள், அறிவுரைகள் என்று சொல்லிக் கொண்டே வரும் போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கூறினார்:

இன்று நாம் திருமண வைபவத்திற்காக ஒன்று கூடியுள்ளோம். திருமண வீட்டார் நமக்கு “கல்யாண அழைப்பு” தந்ததால் வந்துள்ளோம். இதேபோல, வேறு எந்தவித நிகழ்ச்சிகள் யார் வீட்டில் நடந்தாலும், நம்மை அழைத்தால் நாம் செல்வதுண்டு. கல்யாண வீட்டில், மணமக்களின் உற்றார், உறவினர், அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என எல்லோரும் நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து, மணமக்களை வாழ்த்தி விருந்துண்டு செல்வர். இன்னும் சிலர், மணமக்களை அலங்கரிப்பர். இன்னும் சிலர் கல்யாண முன்னேற்பாடு வேலைகளில் உதவியாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பர். இது சந்தோஷமான ஒரு நாளாக இருக்கும்.

ஆனால் இன்னொரு நாளில், அழைப்பில்லாமலேயே அலை அலையாக மக்கள் வருவார்கள். மனிதனின் நடமாட்டம் நின்றுவிடும். அந்த நாள் கவலைக்குரிய நாளாக இருக்கும். அந்த மனிதனின் பெயர் எல்லாம் சொல்லப்படமாட்டாது. அந்த நாள்தான் மரண நாள். இனி அவனது பெயர் “மய்யித்”. மய்யித், மய்யித் என்றே அங்கு பேச்சுகள் அடி படும். இந்த நாளில் அந்த மரண நாளையும் மறந்துவிடக் கூடாது. அதனை எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.” இவ்வாறு மவ்லவி தனது உரையில் சொல்லிக் கொண்டே போனார்.

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது! எவ்வளவு ஆழமான கருத்துக்கள் அந்த மவ்லவியின் உரையில் பதிந்திருந்தது! எவ்வளவு பெரிய உண்மை அது! அதுவும் எத்தகைய சபையில் அவர் அந்த மரண நாளை நினைவூட்டுகிறார்!

மணமுடிக்கும் தம்பதியர் அவர்கள் தங்கள் வாழ்க்கையை துவங்குமுன் இந்த அடிப்படையை ஒரு கணம் நினைவில் வைத்துக் கொண்டு துவங்கினால் அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். ஏன், நம் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றுதான் மரணம்.

நம் எல்லோரையும் மரணம் வந்தடையவே செய்யும். அது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த நிலையிலும் வரலாம் என்பதை எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்: “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்.” (அல்குர்ஆன் 3 : 185)

அந்த மரணம் வரும்போது, மலக்குகள் நம் ரூஹை வாங்க வரும்போது நாம் வெறும் கையும், வீசின கையுமாக போனால் என்னவாகும் நம் கதி...? அல்லாஹ் இந்த நிலைமையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! அந்த மலக்குகளிடம் நான் இப்பொழுது வரமாட்டேன், கொஞ்ச நாட்கள், மாதங்கள் கழித்து வருகிறேன் என்றாவது சொல்ல முடியுமா?

அல்லாஹ் சொல்கிறான்: “எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனை) பிற்படுத்த மாட்டான்.” (அல்குர்ஆன் 63 : 11)இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம்தான். நம்மில் எல்லோருக்கும் மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. மறுமையில் நரகத்திலிருந்து தப்பிக்க, சுவனபதி கிடைக்க என்று ஆசைகள் மனதில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள்தான் இல்லை. அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நமக்கு நேரமில்லை. ஏதோ இருந்தோம்! தொலைவோம்! என்று இருக்கிறோம்.

ஆனால், நம் சத்திய சஹாபாக்கள் வாழ்க்கையைப் பாருங்கள். அவர்கள், தங்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்ற இலட்சியம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அதனால், அவர்கள் எத்தகைய தியாகங்களையும் செய்யத் தயங்கவில்லை.நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “சிரமங்களால் சொக்கம் சூழப் பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப் பெற்றுள்ளது.” (முஸ்லிம்)ஆனால் அந்த சொர்க்கம் சும்மா கிடைக்குமா? ஒரு போதும் கிடைக்காது. ஏனெனில் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:

அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன. “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்). (அல்குர்ஆன் 2 : 214)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால், பொறுமை உடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 155)

எனவே, நாம் துன்பங்கள், கஷ்டங்கள் என்று எந்த சோதனைக்குள்ளாக்கப்படும்போதும், சகித்துக் கொள்ள வேண்டும். ரசூல் (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அடைந்த சோதனைகள் ஒன்றும் நம்மை அடைந்துவிடவில்லையே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “இறைநம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறைநம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. (முஸ்லிம்)

ஆக, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு நல்லது ஏற்பட்டாலும், தீங்கு ஏற்பட்டாலும் அவன் பொறுமை காத்தான் என்றால் அவனுக்கு அது நன்மையாக முடிகிறது.

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “கியாமத் நாளில் 4 விஷயங்களைப் பற்றி கேட்கப்படாமல் மனிதனின் காலடிகள் அசையாது:

1. அவனுடைய ஆயுள் காலம். அதை அவன் எப்படி செலவழித்தான்?
2. அவனுடைய வாலிபம். அதை எதில் தொலைத்தான்?
3. அவனுடைய செல்வம். எங்கிருந்து சம்பாதித்தான்? எதற்காக செலவழித்தான்?
4. கல்வி: அவனுக்கு தெரிந்தவைகளில் எதைக் கடைப்பிடித்தான்?” (திர்மிதி)

ஆக, கியாமத் நாளில் இவ்வகையான கணக்குகளை ஒப்படைக்காமல் அசைய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஏழு விஷயங்களுக்கு முன்னால் நீங்கள் முண்டியடித்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்:

1. கடுமையான வறுமை
2. மித மிஞ்சிய பணம்
3. அழிவு தருகிற நோய்
4. மிகத் தள்ளாத வயது
5. (வாழ்க்கை முடிவுற்று) மரணத்தை நோக்கியுள்ள பயணம்
6. தஜ்ஜால் - அது எதிர்பார்க்கப்படுகின்ற மறைவானவற்றில் மோசமானது.
7. மறுமை நாள். (திர்மிதி)

அல்லாஹ் நமக்கு தந்திருக்கின்ற அருட்செல்வங்களைக் கொண்டு நாம் பயனடைய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “மனிதர்களில் அதிகமானோர் கீழ்க்கண்ட அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்: 1. ஆரோக்கியம் 2. ஓய்வு.” (புகாரி)

ஆரோக்கியமும், ஓய்வு நேரமும் கிடைக்கும்போது நன்மையான வழிகளில் செலவழிக்க வேண்டும். நம் நேரத்தைக் கூறு போட்டு நன்மை செய்வதற்கென்று ஒதுக்க திட்டமிட வேண்டும். அப்படி திட்டமிடாவிட்டால், நமக்குக் கிடைத்த இந்த இரண்டு அருட்செல்வங்களை தொலைத்த நஷ்டவாளிகளாகி விடுவோம். நம்மை விட்டு அவை பறி போன பின் அப்பாடா… எப்பாடா… என்று கூறி நிலைகுலைந்து பயனில்லை.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள்! உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்! அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.” (முஸ்லிம்)

அத்தகைய மறுமை நாளில் வேதனை மிகுந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வழி சொல்லும் ஒரு வியாபாரத்தை அல்லாஹ் அழகாக சொல்கிறான்:“நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய ரசூலையும் விசுவாசம் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உங்களுடைய செல்வங்களைக் கொண்டும், சரீரங்களைக் கொண்டும் போரிட வேண்டும். அது உங்களுக்கு நன்மை பயக்கும் - நீங்கள் அறிந்திருந்தால்.” (அல்குர்ஆன் 61 : 11)

நம்முடைய செல்வங்களைக் கொண்டு நாம் எவ்வாறு ஈடில்லா பலனை அடைவது என்பதை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இங்கே சொல்வதைப் பாருங்கள்:

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “ஒருவர் பரிசுத்தமான சம்பாத்தியத்திலிருந்து ஒரு ஈத்தம்பழம் அளவுக்கு தர்மம் செய்தால் (பரிசுத்தமானதில்லாததை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்) அதை அல்லாஹ் தனது வலது கை கொண்டு (சந்தோஷமாக) ஏற்றுக் கொள்வான். பின்னர், இந்த மனிதருக்காக, அல்லாஹ் உங்களில் ஒருவர் தன்னுடைய குதிரைக் குட்டியை வளர்ப்பது போல அதை வளர்த்துக் கொண்டிருப்பான். அப்படியாக அது மலை போல ஆகிவிடும்.”

மனிதனோடு ஓட்டிப் பிறந்த இரண்டு ஆசைகளை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள்:

“மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.” (முஸ்லிம்)

நாம் உலக ஆசைகளிலிருந்தும் விடுபட வேண்டும். அல்லாஹ் சொல்கிறான்:
“உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமே அன்றி வேறில்லை. பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும். நீங்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டாமா?” (அல்குர்ஆன் 6 : 32)

“செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும். என்றும் 
நிலைத்து நிற்கக்கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மை பலனுடையவையாகவும், (அவனிடத்திலும்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18 : 46)

எனவேதான் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் இப்படியாக:
“அல்லாஹ்வே! இவ்வுலகத்தை எங்களுடைய முக்கிய நினைப்பாக ஆக்கி விடாதே! எங்களுடைய மொத்த கல்வி ஞானமும் அனாதையாக்கி விடாதே”

இன்னும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

“அடியான் என் செல்வம், என் செல்வம் என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியதாகும். அவன் உண்டு கழித்ததும், உடுத்திக் கிழித்ததும் அல்லது கொடுத்துச் சேமித்துக் கொண்டதும்தான் அவனுக்குரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக் கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச் செல்லக் கூடியவையுமாகும்.”

சுவர்க்கத்தில் நுழைய வாய்ப்பை இழந்தவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:

“எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ, அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.” (முஸ்லிம்)
“தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்.”

அப்தில்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

பாழும் நரக நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றி, சுகந்தம் தரும் சுவர்க்கத்தை நம் எல்லோருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.

M.S. மரியம் (என் சகோதரி)

No comments:

Post a Comment