Tuesday 28 January 2014

சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா?



முகநூலில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்திடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரளாவைச் சார்ந்த இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தன் 3 வயது குழந்தையையும், கணவரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தன் சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் அந்தச் சகோதரனின் நண்பன் அந்தப் பெண்ணைக் கண்ணியக் குறைவாக முகநூலில் விமர்சித்தும், தவறான படங்களை வெளியிட்டும் அவமானப்படுத்தியுள்ளான். போலீசில் இது குறித்து புகார் அளித்தும் பலன் எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து மாவட்ட கமிஷனருககு புகார் அளித்துள்ளார் அந்த அபலைப் பெண். ஆனால் மாவட்ட நிர்வாகமோ இந்த வழக்கை மீணடும் அதே காவல்நிலையத்திற்குத் திருப்பி விட்டது.

இரு தரப்பாரையும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அந்தக் காவல் நிலைய துணை ஆய்வாளர் (எஸ்ஐ) அழைத்துள்ளார். தனக்கு இப்பொழுதாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தன் கவணனுடன் காவல் நிலையம் வந்துள்ளார் அந்தப் பெண்.

ஆனால் காவல் நிலையத்தில் நடந்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. நடுவராக இருந்து மத்தியஸ்தம் பேசவேண்டிய எஸ்ஐ, இந்தப் பெண்ணைத் தவறாகப் பேசியுள்ளார். நெருப்பில்லாமல் புகையுமா, ஏதோ இருக்கப் போய்த்தான் இப்படிப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளன என்ற ரீதியில் அவர் அந்தப் பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து அவமானப்படுத்தியுள்ளார்.

இங்கும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, மீண்டும் தான் அவமானப்படுத்தப்பட்டதைத் தாங்க முடியாத அந்தப் பெண் வீட்டுக்கு வந்தவுடன் ஆடை மாற்றிக்கொள்ள அறைக்குள் சென்றபொழுது தூக்கில் தொங்கி தன்னை மாய்த்துக்கொண்டார். அந்தச் சமயம் கணவர் தன் மூன்று வயதுக் குழநதையுடன் வெளியே சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்த கணவர் பார்த்தது தன் மனைவியின் சடலத்தை. கையில் தன் கைக்குழந்தை. கீழே தன் மனைவியின் சடலம். என்ன பாடு பட்டிருப்பார் அந்தப் பரிதாபக் கணவர்?

இதில் பல கோணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. அதில் ஒரு தனி நபரின் தனித்துவம் சிதைக்கப்படும்பொழுது பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இன்று அதிக விலையிலும், மலிவான விலையிலும் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதால் அவை பரவலாகிவிட்ட சூழ்நிலையில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

பெரும்பாலான  தொலைத்தொடர்பு கம்பெனிகள் மக்கள் வாங்கும் சக்திக்குள் இணையதள இனைப்பையும் கொடுப்பதால் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல். இன்று முகநூலில் கணக்கு இல்லாதவர்களை வேற்றுக் கிரக ஜந்துகளைப் பார்ப்பது போன்று பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முகநூலும் மற்ற ஊடகங்கள் மாதிரி இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றதுதான். நல்லவைக்கும் பயன்படுத்தலாம். அல்லவைக்கும் பயன்படுத்தலாம். இந்த வகையில் முகநூலைப் பயன்படுத்துபவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன.

நல்ல விஷயங்கள் பலவும் முகநூல் மூலம் பரவுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதைவிட அதிகமாக தீய விஷயங்கள் அதிகமாகப் பரவுவதுதான் யதார்த்தம். இன்று ஃபாஸிஸ்டுகள், மோடியின் ஆதரவாளர்கள் முகநூலை அதிகம் பயன்படுத்தி இல்லாத பொல்லாத செய்திகளைப் பரப்பி வருவதைப் பார்க்கின்றோம். அதே சமயம் ஃபாசிச எதிர்ப்பாளர்களும் ஃபாசிசத்திற்கு எதிரான செய்திகளைக் கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஃபாசிசவாதிகளின் வீரியம் இதில் இல்லை என்பதே உண்மை.

இன்று சைபர் கிரைம் என்று சொல்லப்படும் வலைத்தள குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அதிக மக்களுக்கு இது தெரிவதில்லை. இன்று சைபர் கிரைம்களில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இன்னும் சிலர் எந்தவித ஆதாரங்களையும் விட்டு வைக்காமல் மிகத் துல்லியமாக அடுத்தவர்களைப் பற்றிய ஆபாசப் படங்களை வெளியிட்டுவிட்டு தப்பித்து விடுகின்றனர். இவர்களைப் பிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். இவர்களெல்லாம் பெரும்பாலும் இணையத்தைக் கரைத்துக் குடித்தவர்களாக இருப்பார்கள்.

இந்தப் பரிதாபப் பெண்ணின் விஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏன் மீண்டும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கை விசாரிக்குமாறு சொன்னது? அது சைபர் கிரைம் துறைக்கல்லவா கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்!

அங்கேயே அந்தப் பெண்ணின் இறுதி வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. எதிர்த்தரப்பாரின் செல்வாக்கினால்தான் போலீசார் அப்படி நடந்து கொண்டனர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. செல்வமும், செல்வாக்கும் இருந்தால் எந்தத் தவறையும் யாரும் செய்யலாம் என்ற் நிலை என்று மாறும் இந்த நாட்டில்?

MSAH

No comments:

Post a Comment