Wednesday 1 January 2014

இஸ்லாம் சொல்லும் நீதி!

விடியல் வெள்ளி   டிசம்பர் 2001 இதழில்
‘இம்பாக்ட் பக்கம்’ பகுதியில் இடம் பெற்ற கட்டுரை


இஸ்லாமியச் சட்டங்கள் அனைத்திலும், இஸ்லாமியப் போதனைகள் அனைத்திலும் நாம் ஒரு வார்த்தையைக் காணலாம். அந்தப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் இஸ்லாமிய விழுமியங்களை அந்த வார்த்தைதான் விவரிக்கும். அதுதான் “நீதி” என்ற வார்த்தை!

அல்லாஹ்வின் அருள்மறையாம் அல்குர்ஆன் கூறுகிறது:

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். (அல்குர்ஆன் 57:25)

இறைத்தூதர்கள் இந்த உலகுக்கு அனுப்பப்பட்டதே நீதியை நிலைநாட்டவும் அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும்தான். பரந்த பொருளில் கூற வேண்டுமானால், நீதியைச் செய்வது என்பது அவரவருக்கு அவரவரின் உரிமைகளைக் கொடுப்பது என்பதாகும்.

ஆனால் இந்த எளிதான வார்த்தை மாறிக் கொண்டிருக்கும் சொந்த பந்தங்களில், உணர்ச்சிக் கொந்தளிப்புகளில், அச்சங்களில், முரண்பாடுகளில், இரண்டுங்கெட்டான் நிலைகளில் ஏற்படும் பெரும் பெரும் சிக்கல்களை மறைத்து விடுகின்றது.

மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் இறைத்தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடனும், வேதத்துடனும், தராசுடனும் அனுப்பி வைத்தான். வேதத்தில் எது நீதி, எது அநீதி, எது சரி, எது தவறு என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கூறப்பட்டுள்ளன.

நல்லது எது, தீயது எது என்பதை அளந்திடவும், கணக்கிடவும் உள்ள நமது திறமையைத் தராசு குறிக்கிறது. அதனால் நாம் வேதம் சொல்கின்ற பாதையில், இறைத்தூதர்கள் விளக்கிக் காட்டிய வழியில் நமது பயணத்தைத் தொடரலாம்.

மேலும் அல்லாஹ்வின் உரிமைகளையும், பிற மக்களின் உரிமைகளையும், நம் மீதான நமது மக்களின் உரிமைகளையும் இந்த வேதமும், தராசு என்ற நல்லது தீயதுகளை அளக்கும் கருவியும் நமக்குக் கற்று தருகின்றன.

மேலும் அவை இவர்களுக்கிடையே எப்படிச் சமமாக நடக்க வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுத் தருகின்றன. இறைத்தூதர்களும் அதைத்தான் நமக்குக் கற்றுத் தருகின்றனர்.

அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு வாழ்க்கை என்பது தனிப்பட்ட முறையிலும், ஒன்றுபட்ட நிலையிலும் நடுநிலையான செயலாகும்.

அறநெறி மிக்க ஒரு சூழலில் பெரும்பாலோர் நீதமாக நடக்க முடியும். ஆனால் இஸ்லாம் அதனைப் பின்பற்றுபவர்களை நீதமாக நடக்கும்படி கட்டளையிடுகிறது. கடுமையான, முரண்பாடான நிலையிலும் இஸ்லாம் நீதத்தோடு நடக்க கட்டளையிடுகிறது.

பிற மனிதர்களோடு உறவாடுகின்றபோது இரண்டு பெரும் தடைகள் நீதமாக நடப்பதற்கெதிராக வந்து நிற்கும். அவை அன்பும், வெறுப்பும்.

அன்பு

நமது நெருங்கிய சொந்தங்களோடு உறவாடுகின்றபோது, முதல் பெரும் தடையான அன்பை எப்படி முறியடிப்பது என்பதைத் திருக்குர்ஆன் அழகாக நமக்குக் கற்றுத் தருகின்றது.

விசுவாசிகளே! நிங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தையருக்கோ, அல்லது உங்கள் உறவினர்களுக்கோ விரோதமாக இருந்த போதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர்கள் பணக்காரராயிருந்தாலும் சரி, ஏழையாயிருந்தாலும் சரி (உண்மையையே) கூறுங்கள். ஏனென்றால் அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன்.

ஆகவே நிங்கள் (உங்கள்) சரீர இச்சைகளைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள். (தாட்சண்யத்தையோ அல்லது குரோதத்தையோ முன்னிட்டு) நிங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும், நிச்சயமாக அல்லாஹ், உங்களுடைய (இத்தவறான) செயலை நன்கறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 57:25)

இதுதான் திருக்குர்ஆன் வழங்கும் நீதிக்கும் சுய இலாபத்திற்கும் இடையில் உள்ள என்றென்றும் நிலைத்திருக்கிற முரண்பாடுகளைக் குறித்த தீர்மானமாகும். நீதமாக இருங்கள், அது உங்கள் நெருங்கிய சொந்தங்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே.

அறியாமையில் இருக்கும் மக்கள் பிறருக்கு அநீதம் செய்வதன் மூலம் அவர்களது சுய இலாபத்தைப் பாதுகாப்பதாக நினைக்கின்றனர். அந்த அறியாமை இருளில் இருக்கும் மக்கள் தங்கள் சுய இலாபத்தையே எப்பொழுதும் கணக்கு போடுகின்றனர்.

ஆனால் அல்லாஹ்வின் மேல் உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இந்த மனப்பான்மையை விட்டு விலகி விடுகின்றனர். மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மக்களின் நாட்டங்களுக்கெல்லாம், பாதுகாவலன் அல்லாஹ்தான் என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

மேலும் நீதமாக இருக்கும்படி நாம் அவனது கட்டளைகளை நிறைவேற்றினால் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான். இஸ்லாம் சொல்லும் நீதியானது யாருக்கும் சாந்திருக்கும் தன்மையை அகற்றிவிடும்.

வெறுப்பு

நீதியைச் செலுத்துவதில் இன்னொரு பெரிய தடை - வெறுப்பு.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

விசுவாசிகளே! அல்லாஹ்வுக்காக, நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம், அவர்களுக்கு அக்கிரமம் செய்யும்படி, உங்களைத் தூண்டாதிருக்கவும். (எவ்வளவு குரோதமிருந்தபோதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வையே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

இதை இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உங்கள் எதிரியோடு உறவாட வேண்டியிருந்தாலும் நீங்கள் அநீதியைச் செய்ய முடியாது.

எதிரியை மனிதாபிமானமற்று நடத்துவதையே இயல்பான, படிப்பறிவில்லாத, பண்படாத ஒருவன் விரும்புவான். இப்படித்தான் “ஜாஹிலிய்யா” என்னும் அறியாமைக் காலத்தில் இருந்த சமூகத்தின் மனோநிலை இருந்தது. அதுதான் இன்றைய நவீன ”வெளிச்சமடைந்த” நாகரிகமடைந்த காலத்திலும் நடைமுறை.

இஸ்லாம் எப்படி இவற்றை அடியோடு கருவறுக்கிறது என்பதை மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் தெளிவாக உனர்த்துகிறது. இதனை விசுவாசிகளுக்குக் கட்டளையாக இஸ்லாம் பிறப்பிக்கிறது.

நீதி, நியாயமான தண்டனையை வேண்டுகிறது. அதனால்தான் இஸ்லாம் “கண்ணுக்குக் கண்” என்று சொல்கிறது. இதற்கு “அப்பாவிகளின் கண்ணுக்கு அப்பாவிகளின் கண்” என்று பொருள் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

கண்ணுக்குக் கண் என்பதற்கு “குற்றத்திற்குப் பலியானவரின் கண்ணுக்குக் குற்றம் செய்தவரின் கண்” என்றுதான் அர்த்தம் கொள்ள முடியும். ஆனால் பாதிக்கப்பட்டவனைக் கொடுமையானவன் என்று அழைப்பது வினோதமாக உள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்ட மேற்கண்ட கட்டளைகள் ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிற்று. அங்கே பணக்காரன், ஏழை, நண்பன், பகைவன், முஸ்லிம், முஸ்லிமல்லாதவன், ஆள்பவன், ஆளப்படுபவன் - இப்படி அனைவரும் சமமாக, நீதமாக நடத்தப்பட்டார்கள்.

அங்கே கலீஃபாவுக்கும், ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் இடையில் ஒரு பிரச்னை உண்டாகிவிட்டால், இருவரும் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்கு நிற்க வேண்டும். இஸ்லாமிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதற்கு நிறைய உதாரணங்களைக் காணலாம்.

முஸ்லிம்கள் ஆண்ட அந்தப் பொன்னான காலகட்டத்தில் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற இந்த கோட்பாடுதான் நிலவியது. முஸ்லிம்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் கூட, இந்த நீதி பரிபாலனம் நிலைத்து நின்றிருந்தது.

சமீப கால வரலாற்றில் நடந்த ஒரு சம்பவம் இதற்குப் போதுமான சான்றாகும். இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்ட காலம். ஒரு துண்டு நிலத்திற்குச் சொந்தம் கொண்டாடும் பிரச்னை ஒன்று ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் எழுந்தது. ஹிந்துக்கள் அது ஒரு கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றனர். முஸ்லிம்கள் அது ஒரு மஸ்ஜிதுக்குச் சொந்தமான இடம் என்றனர். இரு பக்கமும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள். கலவரம் வெடித்து விடும் சூழ்நிலை.

அந்த ஆங்கிலேய நீதிபதிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் முடிவெடுப்பதற்குரிய சரியான தகவல்கள் அவரிடம் இல்லை. உண்மை எது என்று அவருக்குப் பிடிபடவில்லை.

அதனால் அவர் இரு தரப்பாரையும் அழைத்து, யாரவது ஓர் உண்மை பேசும் நல்ல மனிதர் இதற்குச் சாட்சி சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அவர்கள் “சரி” என்றனர். ஒரு முஸ்லிமை அனைவரும் நாடினர். அவர் ஒர் இமாம். இறையச்சம் அதிகம் உடையவர். அவருக்கு இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.

அந்த இமாம் வழக்கில் சாட்சி சொல்லும்படி அழைக்கப்பட்டார். ஊரே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மொத்த முஸ்லிம் சமுதாயமும் அந்த இமாமிடம் சமுதாயத்திற்காக இந்த வழக்கில் வெற்றி பெற உதவ வெண்டும் என்று கேட்டுக் கொண்டது. அவரது சாட்சியை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.

அவர் நீதிமன்றத்தில் இவ்வாறு சான்று பகர்ந்தார்: “இந்த வழக்கில் ஹிந்துக்கள் பக்கமே நியாயம் உள்ளது. முஸ்லிம்களின் வழக்கு அடிப்படையற்றது.”

அந்த இமாமின் சாட்சி முஸ்லிமல்லாதவர்களுக்குச் சாதகமாக இருந்தாலும் அவர் அவரது சமுதாயத்துக்குத் துரோகம் இழைக்கவில்லை.

எந்த வித அச்சமும், ஒருதலைப்பட்சமும் இல்லாமல் அவர் சொன்னது முஸ்லிம்களின் நீதி செலுத்தும் குணத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இந்த வகையான நீதியே இன்றைய உலகின் தேவை!

(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அதன் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே திர்ப்பளிக்குமாறும், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது? நிச்சயமாக அல்லாஹ் செவியுறுவோனாகவும், உற்று நோக்குகிறவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

No comments:

Post a Comment