Saturday 25 January 2014

கலை என்பது எதைக் குறிக்கிறது?


(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 10: 59,60)

ஹராமும், ஹலாலும் இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எது அனுமதிக்கப்பட்டுள்ளது, எது தடுக்கப்பட்டுள்ளது என்பதை ஷரீஅத் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டது அனைத்துமே நமது நன்மைக்காத்தான் என்பது ஒரு சில விஷயங்களில் நமக்குப் புரிகிறது. பல விஷயங்களில் நமக்கு இது புலப்படமால் நன்மைகள் உட்புதைந்திருக்கிறது.

எனினும், மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், மனிதனின் சிந்தனையிலும், நடத்தையிலும் குறுகிய பார்வை என்பது மலிந்து கிடக்கிறது. இந்தக் குறுகிய பார்வை சில நேரங்களில் இஸ்லாம் வரையறுக்கும் கட்டுப்பாடுகளை பெரிய சுமையாகக் கருத வைக்கிறது. அது அந்தத் தீமைகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கிறதே என்ற எண்ணத்தை வரவிடாமல் தடுக்கிறது.

இதைத்தான் திருக்குர்ஆன், “நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கிறான்” என்று கூறுகிறது.

அல்லாஹ் சொல்லும் ஹலால், ஹராம் என்பது நம் வாழ்வை நாம் பாதுகாத்துக் கொள்ளவும், நமது வாழ்வை நாம் வளப்படுத்திக் கொள்ளவும் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வரம்தான் என்றால் அது மிகையாகாது.

ஆனால், நன்றி கெட்ட, குறுமதியாலான மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளைப் பெரிய சுமையாகக் கருதி அவைகளை வெறுக்கிறான். அவை நமக்கு நலம் பயப்பவை என்பதை உணர மறுக்கிறான்.
தடுக்கப்பட்டவை (ஹராம்) குறித்த நமது அறிவு, நம்மைப் பாதுகாக்கிறது என்பது மட்டுமல்ல; நமது இலக்கை நாம் பாதுகாப்பாக அடைவதற்கு உதவியும் புரிகிறது. கலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கலை (Art) என்ற வார்த்தையே அழகுபடுத்துதல் என்பதைக் குறிக்கிறது. அழகுபடுத்தும் காரியங்கள் அனைத்தும் கலைகளில் அடங்கும். அழகுபடுத்துதல் என்பது வடிவமைப்பு, கட்டுப்பாடு, ஒரு நோக்கம் என்பதைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

அழகு என்பது புனிதமானது. நல்ல அழகிய கருத்து அதனுடையது. அழகை வெளிப்படுத்த வேண்டும். அது அசிங்கமாக இருந்தால், அது கலையாக இருக்க முடியாது.

சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள், சமூக மதிப்பீடுகள் இவைகளையொட்டி கலைகள் அமைந்திருக்க வேண்டும். இவைகளுக்கு முரண்பட்டு கலைகள் அமையக் கூடாது.

அப்படி அமைந்தால் மிக நுட்பமாக, துல்லியமாக சமூகத்தில் அரங்கேற்றப்படும் ஒரு குற்றம் கூட கலையின் ஒரு வடிவமாகி விடும்.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், கலையின் பெயரால் இன்று பிரகடனப்படுத்தப்படும் விஷயங்கள் அனைத்தும் அசிங்கமாக இருக்கின்றன. ஆபாசாகமாக இருக்கின்றன. எந்த அடிப்படையுமற்றதாக இருக்கின்றன.

இது ஏன் ஏற்படுகிறதெனில், துரதிர்ஷ்டவசமாக கலையை இன்று ஆக்கிரமித்திருப்பவர்கள் கட்டுப்பாடுகளை வெறுக்கின்றனர். ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைக்கின்றனர்.

வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய முறையில் வழிகாட்டும் இஸ்லாம், கலையின் அர்த்தத்தையும் அதன் அழகையும் வெளிச்சப்படுத்தத் தவறவில்லை. ஒழுக்க வழிகாட்டுதல்களையும் சமூகக் கட்டுப்பாடுகளையும் தந்து இஸ்லாம் கலைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. நாத்திகவாதம் கொடுத்துள்ள சுமைகளை அகற்றியுள்ளது.

முஸ்லிம்கள் நவீன கலை வடிவங்களை உருவாக்கியுள்ளனர். கலையம்சங்கள் ஒருங்கேயமைந்துள்ள அழகிய பள்ளிகள், கட்டடக் கலையை இன்று வரை பறையறிவுக்கும் தாஜ்மஹால், அல் ஹாம்ப்ரா அரண்மனை ஆகியவை அதற்கு ஓரிரு சான்றுகளாகும். அழகிய எழுத்துக் கலை (Calligraphy) என்பது கலையின் இன்னொரு அம்சம். இந்தக் கலைக்கு அர்த்தமும், நோக்கமும் தந்தது முஸ்லிம்கள்தான்.

“அழகிய எழுத்துக் கலை (Calligraphy) என்பது ஒரு கலை. அது முஸ்லிம்களின் சிறப்பம்சம்” என்று கூறுகிறார் பேராசிரியர் ஹமீதுல்லாஹ். இவர் சமகால அறிஞர்களில் முக்கியத்துவம் பெற்றவர்.

இந்த எழுத்துக் கலை, படம் வரையும் இடத்தில் கலையை எழுதுகிறது. இந்தக் கலையின் பொதுவான அம்சம் திருக்குர்ஆனின் எழுத்துகள்தாம். ஆம்! திருக்குர்ஆனின் அழகிய வசனங்களுக்கு இன்னும் மெருகூட்டி அழகிய கலை வடிவமைப்பில் கையெழுத்துகளாகவும், பெயிண்டிங்குகளாகவும், சுவரெழுத்துகளாகவும் பெரிய பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களில் வரையப்படுகிறது.

எழுத்துக் கலையாகட்டும், அல்லது அலங்காரம் செய்தல், ஒளிமயப்படுத்துதல், வாழ்வியல், உண்ணுதல், உடையணிதல், கட்டடங்களைக் கட்டுதல், சமூகத் திட்டங்கள் என்று என்ன விஷயமாகட்டும், இஸ்லாம் சொல்லும் விஷயங்கள் புதுமையாக இருக்கும். அதே சமயம், சமூகப் பிரக்ஞையோடும் இருக்கும். இந்தக் கலைகளினால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கும்.

இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் அந்நியர்களுடன் - மஹ்ரம் இல்லாதவர்களுடன் கலப்பதைத் தடுக்கிறது. மஹ்ரம் என்றால் மணமுடிக்க விலக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

இஸ்லாம் ஆண்களையும், பெண்களையும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளப் பணிக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் சமூகத் தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் - பலவீனப்படுத்தும் எதையும் சகித்துக் கொள்ளாது இஸ்லாம்.

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் தெளிவாக உள்ளன. நல்லவை, தீயவை என்பன தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதில் எந்தக் குழப்பமுமில்லை.

குடும்பம் என்பது விசுவாசத்தினதும், நம்பிக்கையினதும் அடிப்படையில் அமைந்தது ஆகும். இங்கு விசுவாசம் இல்லையெனில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லையெனில் குடும்பமே இல்லை. நம்பிக்கை இல்லையெனில் சமூகமே இல்லை. தேசமே இல்லை. உலக ஒழுங்கே இல்லை.

எந்த மனித சமூகமும் விதிமுறைகளும், தடைகளும் இல்லாமல் ஒழுங்காக வாழ முடியாது. உதாரணத்திற்கு, கார் ஓட்டுவதை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எத்துணை சட்டங்கள் இருக்கிறது தெரியுமா? அமெரிக்காவில் கார் ஓட்டும் விதிமுறைகளை விளக்கும் சட்டங்கள் மட்டும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட கனமான புத்தகமாகும்.

அதே போல் வாழ்க்கை என்னும் காரை ஓட்டுவதற்கு விதிமுறைகள் கண்டிப்பாகத் தேவை. இந்த உலகத்தில் கார் ஓட்டும் சட்டத்தைப் பின்பற்றி ஓட்டினால் எப்படி பாதுகாப்பாக செருமிடத்திற்கு போய்ச் சேருவோமோ, அதைப் போல் இஸ்லாம் வகுத்து வழங்கிய விதிமுறைகளை வலுவாகப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை என்னும் காரைப் பாதுகாப்பாக ஓட்டிச் சென்று மறுமையில் போய்ச் சேருமிடத்திற்கு வெற்றிகரமாகப் போய்ச் சேரலாம்.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி  மே 2002 (இம்பாக்ட் பக்கம் கட்டுரை)

No comments:

Post a Comment