Wednesday 19 October 2016

மனிதனின் பரிதாப நிலை!


புஸ்ர் பின் ஜஹ்ஹாஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தமது உள்ளங்கையில் உமிழ்நீரை உமிழ்ந்தார்கள். பிறகு அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

“ஆதமின் மகனே! (மனிதனே!) என்னை உன்னால் எப்படி தோற்கடிக்க முடியும்? இதை (உமிழ்நீரை)ப் போன்ற ஒன்றிலிருந்தே உன்னைப் படைத்துள்ளேன். இறுதியாக உன்னைச் சீராக்கிச் செம்மைப்படுத்தினேன். ஆனால் நீயோ இரண்டு மேலாடைகளை அணிந்துகொண்டு, சப்தம் வரும் அளவுக்கு பூமியை மிதித்து (மிடுக்கோடு) நடந்தாய். செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் நீ தானதர்மம் செய்வேன் என்கிறாய். அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?”

இவ்வாறு மனிதனின் நிலையை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஓர் உதாரணத்தைக் காட்டி அற்புதமாக விளக்கினார்கள்.

மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்பதை தங்கள் உமிழ்நீரை உமிழ்ந்து உதாரணம் காட்டினார்கள். மனிதன் பலஹீனமான இந்திரியத் துளியிலிருந்து படைக்கப்பட்டு, பின்னர் பிறர் உதவியுடன் தத்தித் தத்தி வளர்கிறான். சொந்தக் காலில் நின்று, சுயபுத்தி வந்தவுடன் செருக்காகி விடுகிறான். தன்னை விட்டால் ஆளில்லை என்ற இறுமாப்பு அவனிடம் வந்து விடுகிறது. தனது வருமானமெல்லாம் தன் திறமையால் தனக்குக் கிடைத்தது என்று பெருமை கொள்கிறான்.

செருக்குடனும், செல்வச் செழிப்புடனும் பூமியில் மிடுக்காக நடக்கிறான். இதனைத்தான் “சப்தம் வரும் அளவுக்கு மனிதன் பூமியை மிதித்து மிடுக்கோடு நடந்தான்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூளினார்கள்.

பணம் பணம் என்று மனிதன் அலைகிறான். செல்வத்தை சேர்த்து சேர்த்து பூட்டி வைக்கிறான். ஆடம்பரமாக செலவழிக்கிறான். ஆனால் தானதர்மங்களில் ஈடுபடுவதில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

இதனைத்தான் “செல்வங்களைச் சேமித்து அதை இறுக்கி வைத்துக் கொண்டான் மனிதன்” என்று அல்லாஹ் கூறுவதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவழியை விட்டும் தவறிய வழியில் அவனது நேரங்கள் தொலைவதைப் பற்றி அவனுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை. பொழுதுபோக்கு என்ற பெயரில் நேரத்தைக் கொல்வதற்குரிய நவீன மின்னணு சாதனங்களை வாங்குகிறான்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அருட்கொடையான காலத்தை வீணாக்குகிறான். காலம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிற மனிதன் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறான். நிறைய கால அவகாசம் உள்ளவன் நேரம்தான் இருக்கிறதே... பிறகு பார்ப்போம் என்று நேரங்களை வீணாக்கி விடுகிறான்.

“பிறகு”, “பிறகு” என்று தள்ளிப்போடும் மனப்பான்மை (Procrastination) உள்ளவன் நிகழ்காலத்தை நிராகரிக்கிறான். எதிர்காலத்தைப் பாழாக்குகிறான்.

“காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடியுங்கள்” என்று ஓர் அறிஞன் கூறினான்.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலத்தை வீணான விஷயங்களில் வீணாக்கி விட்டு மரண வேளையில் எனக்கு காலம் கிடைக்காதா என்று மனிதன் தவிக்கிறான். இதனைத்தான் “உயிர் தொண்டைக் குழியை அடைந்ததும் தானதர்மம் செய்வேன் என்கிறான் மனிதன், அப்போது தானதர்மம் செய்வதற்குரிய கால அவகாசம் எங்கே இருக்கிறது?” என்று அல்லாஹ் கேட்பதாக அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உத்தம நபியவர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உள்ளங்கையில் உமிழ்ந்து காட்டி விளக்கிய மனிதனின் பரிதாப எதார்த்தத்தை அவன் புரிந்துகொள்வானா?

புதிய விடியல்  நவம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

1 comment:

  1. அருமையான மிக அருமையான கட்டுரை
    முதல் ஹதீஸுக்கு ஆதாரம் இருந்தால் இண்ணும் அருமையாக இருக்கும்

    ReplyDelete