Tuesday 11 February 2014

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்திற்கு வந்தால் யாருக்கு லாபம்?


ஒரு தீவிர ஹிந்து பக்தரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வீட்டில் இஸ்லாம் புகுந்துள்ளது.

அவருடைய இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுள்ளார். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. இதுதான் இஸ்லாத்தின் சக்தி என்பது. அது யாரை வேண்டுமானாலும் ஊடுருவும். நாளை இளயராஜாவே இஸ்லாத்தில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

“இது ஏதோ திடீரென்று எடுத்த முடிவல்ல. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக ஆய்ந்தறிந்து, ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு” என்று டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் யுவன் கூறியுள்ளார்.

சில கனவுகள் தனக்கு அவ்வப்பொழுது வர ஆரம்பித்ததாகவும், பின்னர் அவை அடிக்கடி வந்ததாகவும், இஸ்லாத்தை அறிந்த பிறகுதான் அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் தனக்குப் புரிந்ததாகவும், அதன்பிறகே இஸ்லாம் மார்க்கத்தைத் தான் தழுவியதாகவும் அவர் கூறுகிறார்.

முதல் மனைவி விவாகரத்து முடிந்து, இரண்டாவது மனைவியுடன் வாழ்க்கை. பின்னர் அதிலும் மனக்கசப்பு வரவே மனைவி பிரிந்து போனார். இந்த மனக்கஷடத்தில் இருந்தபொழுதுதான் இன்னொரு பேரிடி. அதுதான் அவருடைய அம்மாவின் மறைவு.

ஆறுதல் தந்த அம்மாவும் இறந்ததால் அமைதியற்று அலைந்த யுவனுக்கு ஆன்மீகத் தேட்டங்கள் அதிகமாகியிருக்கின்றது. மனஅமைதி தேடி மருகியவருக்கு மறையோனின் திருக்குர்ஆன் திசை காட்டியிருக்கிறது. உடனே எந்தத் தயக்கமும் இன்றி இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டார்.

ஊடகங்கள் வழக்கம் போல் சேற்றை வாரி வீசின. மலேசியா, சிங்கப்பூரில் யுவன் ஒரு முஸ்லிம் பெண்ணைப் பார்த்ததாகவும், அவரைப் பிடித்துப் போகவே, அவரை மூன்றாம் திருமணம் செய்துகொள்ளத்தான் யுவன் இஸ்லாத்தைத் தழுவினார் என்று அவர் இஸ்லாத்தை ஏற்றதைக் கொச்சைப்படுத்த முயற்சித்தன. இதனைத் தனது பேட்டியில் தெளிவாக மறுக்கிறார் யுவன்.

யுவன் இஸ்லாத்திற்கு வந்தது குறித்து முஸ்லிம்கள் தரப்பிலுள்ள மனோநிலையைப் பார்க்க வேண்டும். பலர் அவரை வரவேற்றாலும், எடுத்த எடுப்பிலேயே சிலர் இசை என்னும் ஹராமில் மூழ்கியிருக்கும் இவர் இஸ்லாத்திற்குள் வந்து என்ன பிரயோஜனம், இசையை இவர் விடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு மனிதர் இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவினார் என்றால் முதலில் அவரை ஆரத் தழுவி வரவேற்கவேண்டும். நரக நெருப்பிலிருந்து மீண்டு சுவர்க்கம் நோக்கி ஒரு ஜீவன் வந்துள்ளது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

இவர் வருகையால் இஸ்லாத்திற்குப் பெருமை ஒன்றும் இல்லை என்று வாதம் வேறு நடக்கிறது. யார் வருகையாலும் இஸ்லாத்திற்குப் பெருமை சேர்க்கவும் முடியாது. யார் சென்றாலும் இஸ்லாத்தை இழிவு படுத்தவும் முடியாது என்பதுதான் உண்மை.

இஸ்லாத்தை ஏற்று ஒரு சில நாட்களே ஆன ஒரு மனிதர் இஸ்லாத்தைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்திருப்பார்? இஸ்லாம் என்பது ஒரு கடல் போன்றது. ஆரம்பத்திலேயே யுவன் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

போகப் போக அவர் இஸ்லாத்தின் விவரங்களை அறிந்து கொள்வார். அது, இஸ்லாத்தின் மீதுள்ள அவரது பிடிப்பையும், ஆர்வத்தையும் பொறுத்தது.

இஸ்லாத்தின் உண்மையான விஷயங்களை இவர் அறிந்துகொண்டு, அதில் உண்மையாக நடந்துகொள்வாரானால் தானாக அவர் பாவங்களிலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புண்டு. இது அவருக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் இதே அளவுகோல்தான்.

எடுத்த எடுப்பிலேயே அதனை எதிர்பார்ப்பதைத்தான் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படி எதிர்மறையாக பிரதிபலிப்பதை விட்டு விட்டு நேர்மறையாக சிந்திக்கலாமே...

செய்தி மற்றும் மின்னணு ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வரும்பொழுது யுவனுக்கு ஆதரவாக கமெண்டுகள் இட வேண்டும். எதிரிகள் இதிலும் உஷாராக இருக்கிறார்கள். யுவன் குறித்து வரும் செய்திகள் அனைத்திலும் எதிர்மறை கமெண்டுகளை அள்ளித் தெளிக்கின்றனர்.

அந்த இடங்களிலெல்லாம் நாம் யுவனுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்லாத்திற்கு வரவேற்பளித்தும் கமெண்டுகள் இட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

இப்படி ஆக்கபூர்வமாக செயல்பட்டால் அது இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பலனுள்ளதாக அமையும்.

MSAH

2 comments: