Saturday 1 February 2014

அல்லாஹ்வின் பால் அற்புதப் பெண்மணி மரியம் ஜமீலா!


பிரபல இஸ்லாமிய அழைப்பாளரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான மரியம் ஜமீலா அவர்கள் கடந்த அக்டோபர் 31ம் தேதி லாகூரில் மரணம் அடைந்தார். சில காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு வயது 78.

அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கில் நியூ ரோசெல்லியில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் 1934ம் ஆண்டு மே 23ம் தேதி மார்கரட் மார்கஸ் பிறந்தார். யூதப் பெண்மணியாக வளர்ந்த மார்கரட் மார்கஸ், பள்ளிப் பருவத்தில் அரபுக் கலாச்சாரத்திலும், வரலாறிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கும்பொழுது அதனை எதிர்க்கும் குணமுடையவராக இருந்தார். பொதுவாக ஃபலஸ்தீனிகளும், அரபுகளும் படும் சொல்லொணா துயரங்களைக் கண்டு கழிவிரக்கம் கொண்டார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது தனது 19வது வயதில் மதங்கள் குறித்து அதிக ஆர்வம் கொண்டார். நவீன ஜுடாயிசம், பழங்கால ஜுடாயிசம், பஹாய் மதம் போன்றவற்றை அவர் ஆராய்ந்தார். எதுவுமே அவருக்குத் திருப்தி தரவில்லை. குறிப்பாக இவையனைத்தும் ஸியோனிசத்திற்கு ஆதரவாக நிற்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

அவரது ஆன்மீகத் தேடலுக்கு அவரைச் சுற்றியுள்ள சூழல் விடை தரவில்லை. எனினும் அவர் தனது ஆன்மீக ஆராய்ச்சியைக் கைவிடவில்லை. 1954 வருட அளவில் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது. திருக்குர்ஆனைப் படிக்கத் துவங்கினார். இறுதியில் 1961ம் ஆண்டு மே 24ம் தேதி தனது 27வது வயதில் மார்கரட் இஸ்லாமைத் தழுவினார். தன் பெயரை மரியம் ஜமீலாவாக மாற்றினார்.

குர்ஆனைக் கண்டுகொள்ளும் பாதையில் நான் பெரும் கஷ்டங்களைச் சந்தித்தேன். பல கரடுமுரடுகளுக்குப் பின் இறுதியில் பாதையின் முடிவுக்கு வந்தேன். அந்தப் பாதையின் முடிவு (இஸ்லாமைத் தழுவுதல்) மிக உன்னதமானது என்பதால் நான் ஒருபொழுதும் என் கஷ்ட அனுபவங்களுக்காக வருந்தியதில்லைஎன்றார் மரியம் ஜமீலா.

முஹம்மத் அஸதின் மக்காவுக்குச் செல்லும் பாதை” (The Road to Makkah), “குறுக்குச்சாலைகளில் இஸ்லாம்” (Islam at the Crossroads) ஆகிய இரு நூல்கள் தான் முஸ்லிமாவதற்குப் பெரிதும் தூண்டுதலாக அமைந்ததாக மரியம் கூறுகிறார். முஹம்மத் அஸதும் தன்னைப் போலவே ஒரு யூதராகப் பிறந்து, இஸ்லாமால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் தழுவியது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மரியம் ஜமீலா இஸ்லாம் தழுவியது முஸ்லிம்களுக்குப் பெரும் பலத்தையும், ஊக்கத்தையும் ஊட்டியது. இஸ்லாமை ஏற்றவுடன் மரியம் தென் ஆப்ரிக்காவின் டர்பனிலிருந்து வெளியாகும் முஸ்லிம் டைஜஸ்ட் என்ற பத்திரிகைக்கு எழுத ஆரம்பித்தார். அதில் இடம் பெற்ற மரியமின் கட்டுரைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்களுக்கு விடை சொல்வதாக அமைந்தது. அந்தப் பத்திரிகை மூலமே அவருக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் நிறுவனர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.

மௌலானா மௌதூதியின் வேண்டுகோளுக்கிணங்க 1962ம் ஆண்டு மரியம் லாகூர் வந்தார். மௌதூதி அவர்கள் மரியம் ஜமீலாவை தன் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்தார். அதன் பின் மரியம் ஜமீலா அமெரிக்காவுக்குத் திரும்பவே இல்லை. லாகூரிலேயே தங்கி விட்டார். சிறிது காலம் மௌலானாவின் வீட்டில் அவருடைய குடும்பத்தாருடன் தங்கியிருந்தார் மரியம்.

பின்னர் முஹம்மத் யூசுஃப் கான் என்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியருக்கு இரண்டாவது மனைவியானார். யூசுஃப் கானின் முதல் மனைவியும், இரண்டாவது மனைவியான மரியம் ஜமீலாவும் ஒரே வீட்டிலேயே குடியிருந்தனர்.

இரண்டு மனைவிகள் ஒரே வீட்டில் இருந்தால் சாதாரணமாக சக்களத்திச் சண்டைகள் நடப்பது இயல்பு. ஆனால் அந்த இயல்பு இங்கே மாற்றி எழுதப்பட்டது. இரண்டு மனைவிகளும் அன்பையும், பாசத்தையும் பொழிந்தனர். முதல் மனைவியின் மக்கள் மரியமை அக்கா என்று அன்போடு அழைத்தனர். இந்த உறவு எந்த அளவுக்கு உயர்ந்தது என்றால் முதல் மனைவியின் அடக்கத்தலத்திற்கு அருகில்தான் தன்னை அடக்க வேண்டும் என்று ஒரு முறை தன் கணவரிடம் மரியம் கூறினார். மரியம் ஜமீலாவுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன.

1960களிலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை மரியம் ஜமீலா நிறைய நூல்களை எழுதினார். அவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

தன் 12வது வயதிலேயே அஹமத் கலீல் : ஒரு ஃபலஸ்தீன அகதியின், அவனது குடும்பத்தின் கதைஎன்ற நாவலை எழுதினார் மரியம் ஜமீலா. சிறு வயதிலேயே அவருக்குள்ளிருந்த அந்த எழுத்தாற்றல் அவர் இஸ்லாமைத் தழுவிய பின் நூல்கள் எழுதுவதற்கு அவருக்கு எளிதாக அமைந்தது. அவர் எழுதிய நூல்கள் இஸ்லாமிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலை நாடுகளுக்கும், இஸ்லாமிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தோலுரித்துக் காட்டும் அவரது எழுத்துகள் பல மேலை நாட்டவரை இஸ்லாம் குறித்து புரிந்துகொள்ள உதவியது. இஸ்லாம் இயம்பும் பலதாரமணம், பர்தா முறை போன்வற்றை வலியுறுத்தி அவரது எழுத்துகள் அமைந்தன.

“இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West), “இஸ்லாமும், நவீனத்துவமும்” (Islam and Modernism), “கொள்கையிலும், நடைமுறையிலும் இஸ்லாம்” (Islam in Theory and Practice), “இஸ்லாமும், கிழக்கத்தியவாதமும்” (Islam and Orientalism), “யார் இந்த மௌதூதி?” (Who is Moududi?), “நான் ஏன் இஸ்லாம் தழுவினேன்?” (Why I embraced Islam?) உட்பட 30க்கும் மேற்பட்ட நூல்களையும், கட்டுரைகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார்.

இவை உர்து, பார்சி, துருக்கிஷ், பெங்காலி, பஹாசா (இந்தோனேசியா) உட்பட பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “இஸ்லாம் எதிர் மேற்குலகம்” (Islam Versus The West) என்ற நூல் 12க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவீன கால முஜாஹித்களின் வரலாறுகளையும் மரியம் ஜமீலா எழுதியுள்ளார். ரஷ்ய ஸார் மன்னனை எதிர்த்துப் போராடிய இமாம் ஷாமில், இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியை எதிர்த்துப் போராடி தூக்கு மரம் ஏறிய லிபியாவின் பாலைவனச் சிங்கம் உமர் முஃக்தார், வட இந்தியாவில் பிறந்து இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்திய செய்யத் அஹமத் ஷஹீத் ஆகியோரின் வரலாறுகள் அடங்கிய நூல் அதில் குறிப்பிடத்தக்கது. தமிழில் மெல்லினம் பதிப்பகத்தார் அதனை “சமீப கால வரலாற்றின் மூன்று முஜத்தித்கள்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

மௌலானா மௌதூதியை முதன் முதலில் தொடர்பு கொண்டபொழுது மரியம் ஜமீலா, ”உலகாதாய மதச்சார்பின்மை, தேசியவாதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட என் வாழ்க்கையைத் தரத் தயாராக இருக்கிறேன்என்று கடிதம் எழுதினார்.

ஐந்து தசாப்தங்கள் கழிந்துவிட்டன. அவர் அன்று அளித்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டார். ஆம்! தன் வாழ்நாள் முழுவதையும் இஸ்லாமை எடுத்தியம்பும் பணியிலேயே செலவழித்தார். அந்த நிலையிலேயே இன்று இறைவன் அவரை அழைத்துக்கொண்டான். அல்லாஹ் அவரது அமல்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவனத்தில் அவரை நுழையச் செய்வானாக.


இஸ்லாம் எவரையும் ஈர்க்கும் வல்லமை உடையது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் மரியம் ஜமீலா!

MSAH

விடியல் வெள்ளி 2012

No comments:

Post a Comment