Friday 14 February 2014

காதலர் தினம் கொண்டாட்டம் யாருக்கு?


இன்று காதலர் தினம். இளம் ஆண், பெண்கள் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவித்துக்கொள்ளவும், ஏற்கனவே அறிவித்த காதலர்கள் கடற்கரை, பூங்கா, சினிமா என்று சுதந்திரமாகச் சுற்றுவதற்கும் உருவாக்கப்பட்ட தினம்தான் இந்தக் காதலர் தினம்.

இந்தக் கலாச்சாரம் இன்று முஸ்லிம்களிடமும் பரவியிருப்பதுதான் ஆச்சரியம். இஸ்லாத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றில் இந்தக் காதலர் தினத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்பதுதான் இதன் மூலப் பெயர். அதனை அப்படியே மொழிபெயர்த்தால் ‘வேலன்டைன் தினம்’ என்றுதான் வரும். ஆனால் தங்கள் வசதிக்காக யாரோ காதலர் தினம் என்று வைத்துவிட்டார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தினம் எப்பொழுதோ செத்து மடிந்து விட்டது. அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், இப்பொழுது ஆசிய நாடுகளில், அதிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது.

யார் இந்த வேலன்டைன்?

வேலன்டைன் என்றால் யார்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது? அதனை ஆராயப் போனால் பல கதைகள் பவனி வருகின்றன. அந்தக் கதைகளெல்லாம் என்னவோ சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

நான்காவது நூற்றாண்டின் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த ‘வேலன்டைன்’ கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளைக் கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல. இளம் பெண்ணுக்கான குலுக்கல். ஆம்! இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல்தான் இது.

எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும். அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்றப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை இடுப்பில் அணியப்படும் தோலினால் ஆன வாரால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக அணிந்திருப்பார்கள். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் இரத்தங்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சாட்டையடியை ‘புனிதமானதாக’ அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் ‘புனிதப் புருஷர்களாக’ மதிக்கப்பட்டார்கள். இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல இல்லத்தரசிகளாக மாறுவார்களாம். அழகிய முறையில் குழந்தைகளை வளர்த்தெடுப்பார்களாம். இந்தக் கொடுமையான, மடத்தனமான கொண்டாட்டத்தை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ மதம் பல முயற்சிகளை எடுத்தது; வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தது.

குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனிதத் துறவிகளின் பெயர்களை வைத்தது. இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இதே தினம் வரைக்கும் அந்தத் துறவியை மாதிரி வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

‘லூப்பர்காலியா’ என்றழைக்கப்பட்ட இந்தக் கொண்டாட்டம் துறவி குலுக்கல் மாற்றத்திற்குப் பிறகு, சிறிது காலத்தில் ‘துறவி வேலன்டைன் தினம்’ என மாறியது.

கி.பி 496-ல் போப் கிலாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும், கிறிஸ்தவக் கதைகளில் 50 விதவிதமான வேலன்டைன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. ஒரு கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு ‘காதல் துறவி’யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக் காவலரின் மகளை இவர் காதலித்தார்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலை தூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி. 1776ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.

அதே 1776ம் ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது. இங்கிலாந்தில் ‘புரித்தான்கள்’ என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு ஏனைய உலகுக்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி. 1840ல் எஸ்தர் A. ஹவ்லண்ட் என்பவரின் வியாபார மூளையில் ஒன்று உதித்தது. ஏன் இதனைக் காசாக்கக் கூடாது? மண்டையைக் கசக்கினார். அதில் முகிழ்ந்ததுதான் வேலண்டைன் அட்டைகள். அவர்தான் முதல் அமெரிக்க காதலர் தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது. (அன்று 5000 டாலர் என்பது மிகப் பெரிய தொகை!) இதன் பிறகு இந்த ‘வேலன்டைன் தினம்’ எனும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சி பெற்றது. அதாவது வேலன்டைன் தினம் என்பது வேலன்டைன் தொழிற்சாலை என்றாகிப் போனது.

இன்று கோடிக்கணக்கான ரூபாய் புரளும் தினமாக காதலர் தினம் மாறியிருக்கிறது. இன்றைய ஒரு தினத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்புப் பொருட்களும் விற்றுத் தீர்ந்து விடும். நாட்டுச் சரக்கு முதல் சீமைச் சரக்கு வரை அமோகமாக கல்லா களை கட்டும். ஆக, காதலர் தினத்தால் காதலர்களுக்குக் கொண்டாட்டமோ இல்லையோ வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம். கொட்டோ கொட்டென்று பணம் கொட்டும் கொண்டாட்டம்.

இஸ்லாத்திற்கெதிரான இந்தக் கொண்டாட்டத்தை ஒரு முஸ்லிம் எப்படி சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

அறியாமைக்கால மடமைத்தனத்தை மண் தோண்டிப் புதைத்திடவே இஸ்லாம் இந்த அவனிக்கு வந்தது. அந்த மடமைத்தனம் எந்த உருவத்தில் வந்தாலும் இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்ளாது.

அறியாமைக்கால மடமைத்தனத்தின் சிறு அரிச்சுவடி முஸ்லிம்களிடம் இருந்தாலும் இஸ்லாம் அதனைக் கண்டு சகித்துக் கொள்ளாது. மேலும் இஸ்லாம் அதனைப் பின்பற்றும் விசுவாசிகளிடம் இஸ்லாம் என்ற தனித்த அடையாளத்தையும், தூய மார்க்கத்தைப் பின்பற்றும் தன்மையையும் மிகக் கவனமாக எதிர்பார்க்கிறது. இஸ்லாமியச் சட்டங்கள் இதனைத்தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

சூரியன் உதயமாகும்பொழுதும், நடு உச்சியில் இருக்கும்பொழுதும், மறையும் பொழுதும் தொழுகையை இஸ்லாம் தடை செய்துள்ளது ஏன்? சூரிய வழிபாடு என்பது பிற மதங்களில் உள்ளது. நாளடைவில் அந்த நேரங்களில் தொழும் தொழுகைகளும், இந்தச் சூரிய வழிபாடு என்னும் பிறமதச் சடங்கும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சமயங்களில் தொழுவதையே இஸ்லாம் முற்றிலும் தடை செய்கிறது.

முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்பது ஒரு நபிவழியாகும். யூதர்களும் இந்த முஹர்ரம் 10 அன்பு நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் முஹர்ரம் 9 அன்றோ அல்லது முஹர்ரம் 11 அன்றோ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்குமாறு அண்ணலார் பணித்தார்கள்.

அதேபோல் ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதாரின் தோற்றம் மாதிரி தோற்றமளிக்கக்கூட இஸ்லாம் தடை செய்துள்ளது. ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுவதும் அவன் முஸ்லிமாகவே வாழ வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும், கொண்டாட்டங்களிலும், திண்டாட்டங்களிலும் நாம் ஒரே நேரான பாதையைத்தான் பின்பற்ற வேண்டும். பல பாதைகளை அல்ல.

இன்று ஜாஹில்லியாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் சிக்கிக் கிடக்கிறது. இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களை வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர். ஸாந்தா கிளாஸ் என்ற கொண்டாட்டத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். அன்னிய, அறியாமைக்கால சிறு கறை கூட நமது வாழ்வில் படியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதுதான் இஸ்லாம் நம்மிடம் எதிர்பார்ப்பது.

MSAH

www.kayalpatnam.com

No comments:

Post a Comment