Wednesday, 22 February 2017

வெற்றியின் இரகசியம்!


முஸ்லிம்கள் ஷாம் தேசத்தில் வெற்றி மேல் வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருந்தபோது ரோமப் பேரரசர் ஹிராக்ளியஸ் தன் தளபதிகளை அழைத்து கேட்டார்:

“கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்களே, புனித நீரின் புதல்வர்களே, நான் உங்களிடம் இந்த அரபுகள் குறித்து எச்சரித்திருந்தேன். நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவின் மீதாணையாக, சத்திய பைபிளின் மீதாணையாக, எனது அரியணையின் கீழுள்ள அனைத்து நிலங்களையும் இந்த அரபுகள் ஆள்வார்கள். அழுவது பெண்களுக்குரியது. இந்தப் பூமிப் பந்தின் எந்தவொரு அரசனும் எதிர்கொள்ள முடியாத ஒரு படை வந்துள்ளது. நான் என் செல்வ வளத்தையும், மனித வளத்தையும் உங்களை, உங்கள் மதத்தை, உங்கள் பெண்களைக் காப்பதற்காக செலவிட்டுள்ளேன். உங்கள் பாவங்களை எண்ணி வருந்தி கிறிஸ்துவிடம் பாவமன்னிப்பு கோருங்கள். உங்கள் ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு நல்லது செய்யுங்கள். அவர்களை அடக்கி ஒடுக்காதீர்கள். யுத்தங்களில் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். கர்வத்தைக் கைவிடுங்கள். பொறாமையைப் பொசுக்கி விடுங்கள். இந்த இரண்டும் ஒரு தேசத்தை எதிரிகளின் முன்பு தலைகுனிய வைத்து விடும். நான் இப்பொழுது ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.”

“என்ன வேண்டுமோ கேளுங்கள், சீசரே” என்று எல்லோரும் ஏகோபித்துக் கூறினார்கள்.

ஹிராக்ளியஸ் கேட்ட கேள்வி இதுதான்:

“உங்களுக்கு அரபுகளை விட படைபலமும், பணபலமும் அதிகம். பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்கள் படைபலத்தையும், போர் வீரியத்தையும் கண்டு அஞ்சுகின்ற வேளையில், ஏன் அரபுகளிடம் மட்டும் நீங்கள் தோற்றுப் போகிறீர்கள்? அந்தப் பாரசீகர்களும், துருக்கியரும், ஜராமிகாவினரும் உங்களிடம் ஒவ்வொரு தடவையும் தோற்றுப்போய் திரும்புகிற வேளையில், அனைத்து பலவீனங்களையும் தங்களகத்தே கொண்ட இந்த அரபுகள் உங்களை எப்படி ஒவ்வொரு முறையும் வெற்றி கொள்கிறார்கள்? அவர்களைப் பாருங்கள். அணிய ஆடையில்லாமல் அரை நிர்வாணமாகக் காட்சியளிக்கிறார்கள். பசியால் ஒட்டிய வயிறுடன் உலா வருகிறார்கள். அவர்களிடம் போதுமான ஆயுதங்கள் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் உங்களை புஸ்ரா, ஹவ்ரான், அஜ்னாதைன், டமஸ்கஸ், பஅலபாக், ஹிம்ஸ் ஆகிய நகரங்களில் படுதோல்வியடையச் செய்தார்கள். அது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது?”

ரோமர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். யாரும் வாய் திறக்கவில்லை. கிறிஸ்தவத்தை ஆழமாக ஆய்ந்தறிந்த ஒரு வயதான கிறிஸ்தவப் பாதிரி எழுந்தார். “நான் அதற்கான பதிலைச் சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்:

“சீசரே, நம் மக்கள் மதத்தை மாற்றிவிட்டனர். நிறைய புதுமைகளை உட்புகுத்தி விட்டனர். இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையில் மூழ்கி விட்டனர். ஒருவருக்கொருவர் அடக்கியாள்கின்றனர். நல்லதை யாருமே ஏவுவதில்லை. தீயதை யாருமே விலக்குவதில்லை. நீதியோ, நியாயமோ, நன்மையோ அதன் ஒரு சுவடு கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் வழிபாட்டு நேரங்களை மாற்றி விட்டனர். வட்டியை விழுங்குகின்றனர். விபச்சாரத்தில் வித்தகம் புரிகின்றனர். கள்ள உறவுகள், கூடா ஒழுக்கங்களில் மூழ்கி விட்டனர். ஒவ்வொரு பாவமான காரியமும், வெட்ககரமான செயலும் அவர்களிடம் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதற்கு மாறாக, இந்த அரபுகள் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகின்றனர். மார்க்கத்தை மாசுமருவின்றி மார்போடு அணைக்கின்றனர். இரவு நேரங்களில் இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். பகற்பொழுதுகளில் படைத்தவனுக்காக பசித்திருக்கின்றனர். தங்கள் இறைவனை நினைவு கூராமல் ஒரு கணம் கூட அவர்களை விட்டுக் கடந்ததில்லை. தங்கள் தலைவர் முஹம்மதுக்கு வாழ்த்துகளை வழங்காமல் வார்த்தைகளைத் தொடர்ந்ததில்லை. அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், வரம்பு மீறல்கள் முதலியன முஸ்லிம்களிடம் முகவரி தேடுகின்றன. அவர்கள் அகங்காரிகள் அல்லர். நம்மை அவர்கள் தாக்கினால் நம்மை தப்பிக்க விடமாட்டார்கள். நாம் அவர்களைத் தாக்கினால் நம்மை விட்டு தப்பித்து ஓட மாட்டார்கள். இந்த வையகம் தற்காலிகமானதுதான்; வரும் மறுவுலக வாழ்வே முடிவில்லாதது என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது. சென்ற இடமெல்லாம் செழிக்கிறது. வெற்றி கிடைக்கிறது.”

(இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் “இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்” என்ற நூலிலிருந்து...)

Wednesday, 15 February 2017

உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்பு!

விஞ்ஞானி அப்துல் கலாம் நாஸா மையத்தில் கண்ட ராக்கெட் விடும் திப்பு படையின் ஓவியம்

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்!

இந்தத் தருணத்தில் உலகிலேயே முதன்முதலில் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய திப்புவையும், அவர் தந்தை ஹைதர் அலீயையும் நினைவு கூர்வோம்.



சொந்த மண்ணில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதி நினைவுகூர்வதை விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் தனது ‘அக்னிச் சிறகுகள்’ நூலில் ஆச்சரியத்துடன் விவரித்திருப்பது வருமாறு:

''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி மையத்திற்குச் சென்றேன். இந்த மையம வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப்ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக்கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந்தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஓர் ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படைவீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படைவீரர்கள் அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டு விட்ட ஓர் உண்மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப்படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஓர் இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சிகொண்டேன்.'' (அக்னிச் சிறகுகள்)

சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர். நவீனகால இராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்பு சுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



6000 படைவீரர்களைக் கொண்ட, 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரணமாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. ஸ்ரீரங்கப்பட்டினம் “நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தின் தொட்டில்” எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய V2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதையும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

துரோகத்தால் மாவீரன் திப்பு வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

Thursday, 9 February 2017

சிறைக் கைதி Vs சிறைக் காவலர்: ஒப்புதல் வாக்குமூலங்கள் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் குதுப்தீன் (முகநூல் பதிவு)



எதிர்ப்பாலினத்தை அளவு கடந்து நேசிக்கும்போது, உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை விட அதிக தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமை வாசிப்புக்கு உண்டு.

காதலிப்பதை விட வாசிக்கும்போது கிடைக்கும் சுகம் அலாதியானது.
ஒரே சமயத்தில் இருமை ஆன்மாக்களை நேசிக்கும் வாய்ப்பு அரிய ஆச்சரியம்தான்! (ஆண்: மனைவி / தாய் # பெண்: கணவன் / மாமியார்)
அதே போன்றதுதான் இருமை ஆளுமைகளைப் பற்றிய வாசிப்பும்...
ஒரே நேரத்தில் மால்கம்-மையும், மார்ட்டின் லூதர் கிங்-கையும் கற்பது...
காந்தியை அறியும்போது, ஜின்னாவை படிப்பது...
கருணாநிதியை தெரிந்து கொள்ளும்போது, எம்.ஜி.ஆர்.ரை வாசிப்பது...
இப்படியான சுகானுபவங்களைப் போல, கடந்த ஒரு மாதமாக சிறைக் கைதி, சிறைக் காவலருடன் வாழ்ந்தேன்.
செக்கோஸ்லோவாக்கியாவின் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஜூலியஸ் ஃபூசிக், ஒரு கைதியாக "தூக்கிலிடுபவரின் குறிப்புகள்" நூல் வழியாக சிறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ், கியூபா தீவான குவாண்டானமோ அதி பயங்கரச் சிறைக்கு நம்மை அதிகாரியாக்கி கழிவிரக்கம் கொள்ளும் 'துரோகி'யாக்குகிறார்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கை 1942-ம் ஆண்டில் நிகழ்கிறது. ஹிட்லரின் சர்வாதிகாரத்துக்கு பலியான கம்யூனிஸ ஆன்மாக்களில் ஃபூசிக்கும் ஒருவர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடைக்கப்பட்டுள்ள குவாண்டானமோ கொடுஞ்சிறையில், 2003-ம் ஆண்டு ஹோல்ட்புரூக்ஸ் சிறை அதிகாரியாக பணியாற்றுகிறார்.
ஃபூசிக்-கும் ஹோல்ட்புரூக்சும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு சிறை வாழ்க்கையை தவமாய் வாழ்கின்றனர்.
ஃபூசிக்கின் சிறை வாழ்க்கையில் இருந்து 8 தசாப்தங்களை இந்த பூமி கடந்திருந்தாலும் சர்வாதிகாரம் - ஹிட்லரிசம் வெவ்வேறு வடிவங்களில் நிலை கொண்டுள்ளதை குவாண்டானமோ-வில் காட்சிப்படுத்துகிறார் ஹோல்ட்புரூக்ஸ்.
இரண்டு நூல்களிலும் பல்வேறு காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது கொடுங்கோலர்களின் காலம் மாறவில்லை என்பதற்கு சாட்சி. அதே போல கருணையாளர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியும் கூட...
# சிறையில் இருப்பதற்கான சட்ட ரீதியான காரணம் கைதிக்கு தெரியாது.
# சிறையில் அடைக்கப்பட்ட கணவன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா - மனைவிக்கு தெரியாது.
# சுய நினைவில்லாதவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முட்டாள்தனம்.
# கடும் சிறைக் கண்காணிப்புக்கிடையில் கண்களால் தகவல்களைப் பறிமாறிக் கொள்வது.
# விசாரணை என்ற பெயரில் விவரிக்க முடியாத சித்ரவதை
ஹோல்ட்புரூக்ஸ் ஓர் இலக்கியவாதி இல்லை என்பதால் ‘துரோகி’ விக்ரமன் படம் போல...
ஃபூசிக் - ஒரு பாலா, ஒரு மிஷ்கின், ஒரு வெற்றிமாறனின் சரியான கலவை....
தன்னை விசாரணை செய்வதைக் குறிக்க அதனை கவித்துவமாக 'சினிமா' என்றே அழைக்கிறார் ஃபூசிக்.
இலட்சியவாத சமூகம் அமைய விரும்பும் போராளிகள் பாடம் பெற வேண்டிய அம்சங்கள் ஃபூசிக்கின் எழுத்துகளில் உள்ளது.
அவரது மனைவி குஸ்தினா பற்றிய பார்வையும் நேசமும் 'காதல் இலக்கணம்' எழுதுகிறது. போராட்ட வாழ்வை தழுவும் தம்பதிகளுக்கு ஆறுதலும் உத்வேகமும் தருகிறது ஃபூசிக்-குஸ்தினா நேசம்.
சிறைக்குள்ளேயே - எதிரிகளின் பதுங்கு குழிக்குள்ளேயே இயக்கத்தை கட்டியமைக்கும் வல்லமையை படித்த போது, "முன்னேறிச் செல்ல விரும்புபவனுக்கு வாளின் கூர்முனைதான் உள்ளதென்றால், அதிலாவது ஏறி முன்னேறுவான்" என்ற வாசகம் நினைவுக்கு வந்தது.
அந்தக் கொடுஞ்சிறையிலும், ஃபூசிக் மற்றும் கம்யூனிஸ தோழர்களுக்கு சிறை அதிகாரிகள் உதவும் நெகிழ்ச்சியை, ஹோல்ட்புரூக்ஸ் பார்வையிலிருந்து குவாண்டானமோ-வில் புரிந்து கொள்ளலாம்.
அறச்சீற்றம் கொண்டு போராடத் துணியும் புரட்சியாளர்களுக்கு ஃபூசிக்-கின் தியாகமும் ஹோல்ட்புரூக்ஸின் நேர்மையும் ஆதர்சம்!
#தோழமைக்கு_கிட்டாத_வாய்ப்பு

காஜா குதுப்தீன்

Saturday, 4 February 2017

மரகத மணிகள்


முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (அல் அஹ்ஜாப் 33:23)

எல்லோருக்கும் அல்லாஹ் ஷஹாதத் என்ற பாக்கியத்தை வழங்கிடுவதில்லை. தான் நாடியவருக்கே அல்லாஹ் இந்த மாபெரும் பாக்கியத்தை வழங்குகிறான்.

யர்முக் போரின்போது ரோமப் படைத் தளபதி மஹன் என்பவன், காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பார்த்து ஏளனமாகப் பேசினான். “பஞ்சைப் பராரிகளே… தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடி விடுங்கள்’‘ என்றான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய். உங்கள் இரத்தத்தை சுவைக்கவே நாங்கள் இங்கே வந்துள்ளோம்’‘ என்று அவனுக்கு பதிலடி கொடுத்த காலித் (ரலி), தன் தோழர்களைப் பார்த்து இவ்வாறு முழங்கினார்: “என் அருமைத் தோழர்களே, சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா? அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்க காத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? வெற்றியின் நற்பேறும் காத்திருக்கிறது. முன்னேறுங்கள்!”

சுவனத் தென்றலின் சுவையை உணரத் துடித்த முஸ்லிம்கள் அன்று தீரமாகப் போராடி ஒரே நாளில் 1,20,000 ரோமர்களைக் கொன்றொழித்தார்கள். முஸ்லிம்களிலும் நிறைய பேர் ஷஹீத் ஆனார்கள்.

இந்தப் போரில் கலந்துகொண்ட ஜர்ஜாஹ் என்ற ரோமப் படைத்தளபதி காலிதிடம் வந்து, “உங்கள் நபி வானத்திலிருந்து வாள் ஒன்றைப் பெற்றுத் தந்தார்களோ? உங்களைச் சந்திக்கும் எதிரிகள் அனைவரும் தோற்று ஓடுகிறார்களே…” என்று கேட்டான்.

அதற்கு காலித் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தேன். பிறகு நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “காலிதே, நீங்கள் அல்லாஹ்வின் வாள். உங்கள் வாள் வலிமையானது. எதிரிகளின் வலிமையை அது அழித்தொழிக்கும்” என்றார்கள். அதிலிருந்து “ஸைஃபுல்லாஹ்” என்று எனக்கு பெயர் வந்தது.”

உடனே, “இந்தக் கொள்கையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் அடைந்த இந்த நற்பேறுகளை நான் அடைந்து கொள்ள முடியுமா? அதிலும் குறிப்பாக உங்களைப் போன்றே ஆக முடியுமா?” என்று ஜர்ஜாஹ் கேட்டார். “ஆம்” என்று கூறிய காலித் அவருக்கு அழகிய முறையில் இஸ்லாமை எடுத்து வைத்தார். ஜர்ஜாஹ் இஸ்லாம் தழுவினார். மறுநாள் நடந்த போரில் பங்கெடுத்து அவர் ஷஹீதானார்.

காலித் (ரலி) அவர்களின் உந்துதல் பேச்சால் நூற்றுக்கணக்கான தோழர்கள் ஷஹாதத் பதவியை அன்று அடைந்தார்கள். அதேபோன்று முந்தைய நாள் இஸ்லாம் தழுவிய ஜர்ஜாஹுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அவர்களின் ஷஹாதத்துக்கெல்லாம் காரணமாக இருந்த காலித் (ரலி) அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்திடவில்லை.

காலித் (ரலி) மரணத் தறுவாயில் இருக்கும்பொழுது அழுது கொண்டே இவ்வாறு கூறினார்: “நான் எத்தனை போர்களில் கலந்துகொண்டிருப்பேன். எத்துணை வாள்களையும், அம்புகளையும் என் உடல் சந்தித்திருக்கும். அப்போதெல்லாம் உயிர்த் தியாகியாக மாறி, சுவனத் தோட்டங்களிலும், அல்லாஹ்வின் அர்ஷிலும் பச்சைப் பறவையாக பறக்கத் துடித்தேனே! என் உடம்பில்தான் எத்துணை எத்துணை தழும்புகள்! இதில் ஒன்றாவது என்னை உயிர்த் தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே! என் ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே!”

அந்த நிலையிலேயே ஹிஜ்ரி 21ல் அவருக்கு மரணமும் நிகழ்ந்தது. வெற்றியாளர்களாக அல்லாஹ் குறிப்பிடுவதும் இந்த ஷஹீதுகளைத்தான். அதனைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அத் தவ்பா 9:20)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார் - உயிர்த் தியாகியைத் தவிர. அவர் தனக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்திற்குத் திரும்பி வந்து (இறைவழியில்) பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார். (அனஸ் இப்னு மாலிக் (ரலி), புகாரீ)

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2015 (மனதோடு மனதாய்...)

Thursday, 12 January 2017

பர்வின் பானு அனஸ் அவர்களின் “துரோகி” அனுபவம்! (முகநூல் பதிவு)



நீண்ட காலங்களுக்கு பிறகு வழமையான புதியதொரு அனுபவம்.

காலையில் எடுத்த புத்தகம் கையை விட்டு இறங்க மறுத்தது. முடித்துவிட்ட பின் இனந்தெரியாத சோகமும் கையறுநிலையும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான மனநிலை ஒட்டிக்கொண்டது.

பொதுவாக மொழிபெயர்க்கப்படும் புத்தகங்ஙகளின் உயிர்ப்பு தன்மை நீர்த்துப் போகாமல் இருப்பது ஆசிரியரின் திறனில் உள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவ வீரர் டெர்ரி ஹோல்ட்ப்ருக்ஸுடன் நாமும் பயணம் செய்து குவாண்டனாமோ நிகழ்வுகளுக்கு சாட்சியாகியது போன்ற உணர்வு எழுவது தவிர்க்க முடியாதது.

இறுதியில் சிலருக்கு கிடைத்த விடியல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பிய "முஸ்தஃபா" போன்றே நம் மனமும் ஏங்குகின்றது.

நன்றி : பர்வின் பானு அனஸ்

அநியாயமாக குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு அப்பாவி என்று விடுவிக்கப்பட்ட ‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி “துரோகி” நூலுக்கு எழுதிய முன்னுரை!

‘ஜெனரல்’ அஹமத் அர்ராஷிதி



அழகிய மணம் கொண்ட, வண்ணமயமான மரத்தை இஸ்லாம் மார்க்கத்திற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஏனெனில், ஒரு மரம் வளர்ந்தால் அது மக்களுக்குப் பயன் தரக்கூடிய நிழல், பழம், மனம் கவரும் மணங்கள், கண் கவரும் வண்ணங்கள் போன்ற பல பலன்களைத் தருகிறது.

இப்பொழுது கற்பனை செய்து பாருங்கள். இந்த மரம் ஒவ்வொரு முறை வளரும்பொழுதும் நசுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கப்பட்டால், அத்தோடு மக்களிடம் இந்த மரம் பெரும் தீங்கிழைக்கும் என்றும், கொடிய விஷமுள்ளது என்றும், இது வளர்ந்தால் அதன் விஷத்தன்மையால் பிறரை அழித்து விடும் என்றும், ஆதலால் இம்மரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சொல்லப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.

என்ன நடக்கும்? கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அந்த மரத்தை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். அதனை வெறுக்கத் தொடங்குவார்கள். அதன் அழகையும், அது தரும் பலனையும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒரு முறை அம்மரத்தை விட்டு விலகி விட்டார்களானால் இனி அந்த மரத்தின் பக்கமோ, அதன் அழகின் பக்கமோ அவர்கள் திரும்பவே மாட்டார்கள். ஆனால் ஹோல்ட்புரூக்ஸ் போன்ற ஒரு படைவீரர் இந்த மரத்தைப் பற்றி கேள்விப்படுகிறார். மரங்களோ, தாவரங்களோ ஒருபொழுதும் வளராத ஒரு இடத்தில் வைத்து, இடங்களிலெல்லாம் மிக மோசமான ஒரு இடத்தில் வைத்து அம்மரத்தின் பலன்களை அவர் கேள்விப்படுகிறார்.

ஆம்! அதுதான் குவாண்டனாமோ!

குவாண்டனாமோ என்ற அந்த இடத்தில் மக்களிடையே பகைமையும், வெறுப்புமே குடிகொண்டிருந்தன.

குவாண்டனாமோவில் சிறைவாசிகளுக்கு அணிவிக்கப்படும் ஆரஞ்சு ஆடைகளும், அந்தச் சிறைவாசிகளை சித்திரவதைப்படுத்துவதற்காக வளர்க்கப்படும் கொடிய விலங்குகளும் ஹோல்ட்புரூக்ஸுக்கு சிறைவாசிகளை அணுகுவதற்கு தடையாக இருந்திடவில்லை. அவர் அவர்களைத் தயங்காமல் அணுகி இஸ்லாம் பற்றிப் பேசினார். அவரது அணுகுமுறைகளிலும், கேள்விகளிலும் அவர் மிகுந்த தைரியசாலியாகத் திகழ்ந்தார்.

அவரது சுதந்திரமான, வெளிப்படையான சிந்தனை கண்டு நான் வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாம் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளாலும், பாரபட்சங்களாலும் அவரது சிந்தனையில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

சிறைவாசிகளிடம் காட்டப்படும் அதிகாரத்தின் மேலுள்ள மோகமும், திமிரும் அவரை என்றுமே மிகைத்ததில்லை. மற்ற படைவீரர்கள் அந்த அதிகார மோகத்தில் வீழ்ந்து கிடந்தனர். ஆனால் அவரோ சிறைவாசிகள் மேல் அவதூறாக வீசப்படும் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்தார். ஏனெனில் அவர் மற்ற படைவீரர்கள் காணாததைக் கண்டார். மற்ற படைவீரர்கள் கண்டுபிடிக்காததை கண்டுபிடித்தார்.

அத்தோடு அவர் தனது ஆய்வை, தனது தேடலை பிடிவாதமாக தொடர்ந்தார். அந்த மரத்தை அவர் நேசித்ததே அதற்குக் காரணம். அந்த மரம் ஏற்படுத்திய நல்ல பல விளைவுகளை அவர் அந்தச் சிறைவாசிகளிடம் கண்டார். அவர் அந்த மரத்தைத் தனதாக்க விரும்பினார். அதேபோன்று அந்த மரம் தன்னை உள்வாங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

பாவம் செய்த ஒரு பணியாள் மன்னிப்பதற்குத் தயாராகக் காத்திருக்கும் அன்பு நிறைந்த எஜமானனைக் கண்டால் எவ்வளவு மகிழ்ச்சி கொள்வானோ அதே மகிழ்ச்சியை அவர் அடைந்தார்.

அஹமத் அர்ராஷிதி (முன்னாள் சிறைவாசி 590)

எல்லையில் ராணுவ வீரன் - நியூஸ் 7 டிவி செய்தியாளர் ஹாஜா குதுப்தீன் (முகநூல் பதிவு)



"படை வீரர்களை மூளைச் சலவை செய்து கேள்வி கேட்காத ஒரு நிலைக்கு கொண்டு வரும் தந்திரம்தான் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை பயிற்சிகளாகும்.

இராணுவத்தில் எதைப் பற்றியும் யோசிக்காத, கேள்வி கேட்காத படை வீரர்கள்தான் ஒரு பணியை முடிக்க பெரிதும் உதவியாக இருப்பார்கள்.

படைவீரர்கள் என்பவர்கள் மேலதிகாரிகளுக்கு கருவிகள் போன்றவர்கள். அவர்களின் இலட்சியத்தை அடைவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்."

- டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்,

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்க ராணுவ வீரன், 'துரோகி' நூலில்...

நன்றி : ஹாஜா குதுப்தீன் (நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்)

செய்யத் காலிதின் பார்வையில் “துரோகி”! (முகநூல் பதிவு)




குவாண்டனாமோ - மனித உயிர்கள் உடலாலும், மனதாலும் சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க தயார்படுத்தப்பட்ட கொடுஞ்சிறை.

மனிதன் மனிதனாக வாழ முடியாத, சித்ரவதைகளை மட்டுமே அனுபவிக்க பணிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், இவர்கள் யாரும் மனிதர்களே அல்ல என்று தன் உயர் அதிகாரிகளால் போதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்னும் அமெரிக்க கிருத்தவ இராணுவ வீரனின் தேடல் இறைவனின் அருட்கொடையாம் இஸ்லாத்தை பரிசாக பெறச் செய்கிறது.

விறுவிறுப்பாக பயணிக்கிறது துரோகி. வாசிக்க துவங்கிய எவரும் 204 பக்கங்களை முடிக்காமல் செல்ல முடியாத ஈர்ப்பு புத்தகத்தின் பக்கங்களில் உண்மை புதைந்து கிடப்பதை காணலாம்.

'தேடுங்கள் கிடைக்கப்படும்' என்ற பைபிளின் வசனம் பொய்யாகுமா???.

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் தன் தேடலின் வெகுமதியை பெற்றுக்கொண்டார்.

நன்றி ; செய்யத் காலித்

Saturday, 7 January 2017

துரோகி



“தேசியவாதமும் இஸ்லாமும்”, “இம்பாக்ட் பக்கம்”, “மனதோடு மனதாய்...”, “வேர்கள்”, “சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும்” ஆகிய நூல்களுக்குப் பிறகு எனது அடுத்த  மொழிபெயர்ப்பு நூல் - “துரோகி”!

டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் என்ற அமெரிக்க இராணுவ வீரர் எழுதிய Traitor என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.

ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.

எங்கே? குவாண்டனாமோ சிறையில்!

யார் மூலமாக? கைதிகள் மூலமாக!

விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!

ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை அந்த இராணுவ வீரனே வெகு தத்ரூபமாக விளக்குவதுதான் இந்த நூல்.



நூலாசிரியர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் நம்மை வேறோர் உலகுக்கு கொண்டு செல்கிறார். அங்கே புற்பூண்டுகள் இல்லை. மரம் செடி கொடிகள் இல்லை. அவற்றுக்குப் பதிலாக மனிதர்கள். தாடி வைத்த மனிதர்கள். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து தலை முதல் தோள் வரை சாக்குத் தொப்பி அணிவிக்கப்பட்டு சரக்குகள் ஏற்றும் விமானத்தில் விலங்கிட்டு தூக்கி வரப்பட்ட மனிதர்கள்.

இராட்சத சிலந்திகளும், பெருச்சாளிகளும் உலா வரும் அந்த இடத்தில், மனித சஞ்சாரமே கூடாத அந்த இடத்தில் மனிதத்தை மிதித்து உருவாக்கப்பட்ட இருண்ட கண்டம்.

அங்கே அன்பு இல்லை. அரவணைப்பு இல்லை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டு வரப்பட்ட சித்திரவதைக் கருவிகளும், சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிடுசிடு மூஞ்சிகளும் உள்ள கொடூரமான இடம்.



அங்கே கடுமைக்குப் பதில் கருணை பிறக்கிறது இந்நூலாசிரியருக்கு. இஸ்லாத்தின் மேல் வெறுப்புக்குப் பதில் விருப்பம் பிறக்கிறது. அதுவும் அந்த அப்பாவி கைதிகளின் அன்றாட நடவடிக்கை மூலமாக!

கல் நெஞ்சும் கரையும் சோகங்கள் ஒவ்வொரு கைதியிடமும். கைதிகளின் கதறல் கதைகளைச் சொல்கிறார். அவரும் கண்ணீர் வடிக்கிறார். நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார் இந்நூலில்.

கூடவே அமெரிக்கப் பட்டாளத்தின் சீழ் பிடித்த மனநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் படம் போட்டுக் காட்டுகிறார்.

இறுதியில் அவரது கண்ணீர் கண்ணியமிகு இஸ்லாத்தில் கொண்டு போய் அவரைச் சேர்க்கிறது.





Tuesday, 15 November 2016

கரை சேர்க்கும் கப்பலோட்டிகள்!


1857ம் ஆண்டு செப்டம்பர் 12ம் நாள் “சென்ட்ரல் அமெரிக்கா” என்ற அமெரிக்க கப்பல் வட கரோலினா கடலில் மூன்று நாள் சூறாவளியில் சிக்கி அலைக்கழிந்தது. அது தறி கெட்டு மூழ்கத் தொடங்கிய போது அதிலிருந்த 152 பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக உயிர் காக்கும் படகுகளில் ஏற்றி அனுப்பினார் அந்தக் கப்பலின் மாலுமி.

கப்பலில் எஞ்சியுள்ள 400 பயணிகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் அந்த மாலுமியும், இதர ஊழியர்களும் தவித்தனர். அந்தக் கப்பலோட்டிகளுக்கு தங்களது உயிரும் உடலும் பெரிதாகத் தெரியவில்லை. வீட்டில் தங்களின் வருகைக்காக காத்திருக்கும் வயதான பெற்றோரின், இளம் மனைவியரின், பால் வடியும் குழந்தைகளின் முகங்களும் நினைவிற்கு வரவில்லை. கப்பலிலுள்ள 400 பயணிகள்தான் நினைவில் நின்றார்கள். ஆனால் ஹடீராஸ் முனையில் அந்த கப்பல் ஒட்டுமொத்தமாக கடலுக்குள் மூழ்கி விட்டது.

முடிந்த வரை காப்பாற்றி விட்டோம், இனி நாம் தப்புவதில் தவறில்லை என மாலுமியும், சக கப்பலோட்டிகளும் முடிவு செய்து நீந்தி வெளியேறி இருந்தாலும் உலகம் அவர்களை பழித்திருக்காது. 44 வயதே நிரம்பிய அந்தத் தலைமை மாலுமியின் பெயர் கமாண்டர் வில்லியம் லூவிஸ் ஹெண்டன் (William Lewis Herndorn).

ஒரு கப்பல் பயணம் தொடங்கிவிட்டால் அதன் முழு பொறுப்பும் அந்த மாலுமிக்கும், அதில் பணி புரியும் சக ஊழியர்களுக்குமே சாரும். அதே போன்றுதான் சமூக சேவகர்களும்.

சமூகம் என்ற கப்பலை சுமூகமாக ஓட்டிச் சென்று, காப்பாற்றி கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூக சேவகர்களுக்கு இருக்கிறது.

சமூக சேவகர்கள் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள். இப்படி பல திறமை உடையவர்களை, பல கலைஞர்களை, பலதரப்பட்ட மக்களை ஒரே குழுவாக ஆக்கி, ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இந்தச் சமூகத்தின் இடர்பாடுகளை நீக்கி இதன் முன்னேற்றத்திற்காக பாடுபடவேண்டும்.

அந்தக் குழு கட்டுக்கோப்பாக செயல்படுவதற்கு, அனைத்து சமூக ஊழியர்களும் ஓர் ஒழுங்குடன் பணியாற்றுவதற்கு, அவர்களை சமுதாய முன்னேற்றத்தின்பால் அழைத்துச் செல்வதற்கு ஓர் உறுதியான தலைமை தேவை. அந்தத் தலைமையும், ஊழியர்களும் சேர்ந்து ஒரு குழுவாக மாறி செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழு அதன் இலட்சியத்தை அடையும். இதனைத்தான் இஸ்லாமும் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (சூரா அன்னிசா 4:59)

ஒரு கப்பலை மாலுமி எப்படி செலுத்துவாரோ அதே போன்று அந்தக் குழுவை தலைமை வழிநடத்திச் செல்லும். அந்தத் தலைமைக்குக் கீழ் கப்பலின் ஊழியர்களாக சமூக ஊழியர்கள் செயல்பட வேண்டும். கப்பல் கடலில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று தன் இலக்கை அடைவதற்கு அந்த மாலுமியும், அதன் ஊழியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாகப் பணியாற்றுவது போன்று இவர்களும் பணியாற்ற வேண்டும்.

கடல் சீற்றம், புயல், கொட்டும் மழை என்பன போன்ற அமைதியற்ற சூழல் இந்தக் குழுவுக்கும் நேரிடலாம். இத்தகைய காலகட்டங்களில் இறையச்சமும், கூர்மதியும், துணிவும், தன் இழப்பை துச்சமென கருதும் தீரமும் கொண்ட மாலுமிகளாலும், கப்பலின் ஊழியர்களாலும்தான் சமூகம் என்ற கப்பலைக் காப்பாற்ற முடியும்.

கப்பல் ஊழியர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். அவர்களின் குணம், திறமை, மனோநிலை, ஆர்வம் எல்லாம் மாறுபடும். அவர்களெல்லோரையும் அரவணைத்துச் சென்று, கப்பலைக் கரை சேர்ப்பதுதான் மாலுமிகளின் பணி.

நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த தோழர்களும் ஒரே மாதிரியாக இருந்திடவில்லை. பலவிதத்தில் மாறுபட்டு நின்றார்கள். வட துருவங்களும், தென் துருவங்களும் அங்கே இருந்தன. நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினாலும் அதனை அவ்வாறே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அபூபக்கர் (ரலி) போன்றோரும், சில வேளைகளில் மனக் கஷ்டமும், நிராசையும் அடைந்த உமர் (ரலி) போன்றோரும் அங்கே இருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்கள் பேரப் பிள்ளைகளை முத்தமிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, ‘‘எனக்கு 10 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் இன்று வரை நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” எனக் கூறிய நாட்டுப்புறத்து அரபியைப் போன்றோரும் அங்கே இருந்தனர். முதலிரவில் தன் மனைவியிடமிருந்து பிரிந்து சென்று போர்க்களத்தில் ஷஹீதான நபித்தோழர் ஹன்ழலா (ரலி) போன்ற வீரத் தியாகிகளும் அங்கே இருந்தனர். இஸ்லாத்திற்காக கொடூரமான சித்திரவதைகளைத் தாங்கிய பிலால் (ரலி) போன்ற பொறுமையின் சிகரங்களும் அங்கே இருந்தனர்.

இப்படி அத்தனை வித்தியாசமான குணங்களையும் உட்கொண்டு, அவர்களுடன் தோளோடு தோள் நின்று, பொறுமையுடன் அவர்களை வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள் நபி (ஸல்) அவர்கள். அதாவது, அவர்களைத் தூய்மைப்படுத்தி பண்படுத்தினார்கள். வெவ்வேறு நோக்கத்தில் இருந்தவர்களை ஒரே இலட்சியத்தின்பால் இட்டுச் சென்றார்கள்.

இப்படிப்பட்ட தலைமையும், சமூக ஊழியர்களும் கப்பலோட்டிகளாக மாறி சமூகம் என்ற கப்பலை முன்னேற்றம் என்ற கரையில் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும்.

விடியல் வெள்ளி  ஜனவரி 2015 (மனதோடு மனதாய்...)