Saturday, 15 March 2014

சிரித்து வாழ வேண்டும்!


நோய் குணமாவதற்கு மிக எளிதான, செலவற்ற வழி நன்றாகச் சிரிப்பது என்று இன்று மருத்துவத்துறையில் கூறுகிறார்கள். அதனைத்தான் நம் முன்னோர்கள் “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொன்னார்கள்.

நாம் சாதாரணமாக சிரித்துவிட்டுப் போகிறோம். ஆனால் ஒரு சிரிப்பினால் நம் உடலில் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றன தெரியுமா?

ஆம்! நிறைய மாற்றங்கள் நம் உடலில் நடைபெறுவதற்கு தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதிர்ஷடவசமாக அந்த மாற்றங்கள் அனைத்தும் நம் உடலுக்கு நன்மை பயக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்துவது முதல் நம் ஆற்றல் அளவை (Energy Level) அதிகப்படுத்துவது வரை பல நல்ல மாற்றங்களை சிரிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் நம் மனஅழுத்தத்தைக் குறைத்து மனதை இலேசாக்குகிறது. நம் உடலிலுள்ள வலியைக் கூட சிரிப்பு குறைக்கிறது.

நன்றாக வயிறு வலிக்கச் சிரித்தால், அல்லது விழுந்து விழுந்து சிரித்தால் அடுத்த 45 நிமிடங்களுக்கு நம் உடல் முழுவதும் ரிலாக்ஸ் ஆகிவிடுகிறது. மன அழுத்தம், பதட்டம், படபடப்பு போன்றவை ஓடிப் போய் விடுகின்றன. நம் தசை நார்களின் இறுக்கம் குறைந்து இலேசாகிப் போகின்றன.

இது எப்படி நம் உடலில் நிகழ்கிறது? நாம் வாய் விட்டுச் சிரிக்கும்பொழுது “மகிழ்ச்சி’‘க்கான ஒரு வேதியியல் பொருள் சுரக்கும். அதுதான் என்டார்ஃபின். இந்த என்டார்ஃபின் சுரந்தால் நம் உடல் நல்ல நிலைக்கு வந்துவிடும்.

அதே சமயம் வேறு ஒரு செயலும் சிரிக்கும்பொழுது நடக்கிறது. மன அழுத்தத்தைத் தரக்கூடிய ஹார்மோன்கள் சுரப்பது குறைக்கப்படுகிறது. ஒரு புறம் என்டார்ஃபின் என்ற மகிழ்ச்சிப் பொருள் சுரக்கிறது. மறுபுறம் மன அழுத்த ஹார்மோன்கள் சரப்பது மட்டுப்படுத்தப்படுகிறது.

அத்தோடு நாம் மேலே கூறியவாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது எப்படி?

சிரிக்கும்பொழுது நம் உடல் தூண்டப்பட்டு கிருமிகளை எதிர்க்கும் ஆண்டிபாடிகள் உஷார் ஆக்கப்படுகின்றன. இவை உடனே செயலில் குதிக்கின்றன. இவை களத்தில் இறங்கினால் உடலில் நோய்க் கிருமிகளை அண்ட விடுமா?

ஆக, என்டார்ஃபின் சுரப்பு, மன அழுத்த ஹார்மோன்கள் மட்டுப்படுத்தப்படுதல், ஆண்டிபாடிகள் களத்தில் குதித்தல் – இந்த மூன்று நிகழ்வுகளால் நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கப்படுகிறது.

அனைத்தையும் நேர்மறையாக (Positive) எடுப்பவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும் “சிரிப்பு யோகா” என்றொரு யோகா கற்றுத் தரப்படுகிறது.

அதாவது, சிரிப்புப் பயிற்சியும், சில யோகா முறை மூச்சுப் பயிற்சிகளும் இணைக்கப்படுவதுதான் இந்தச் சிரிப்பு யோகா என்பது. இதனுடைய முக்கிய நோக்கம் நம் உடலுக்குள் பிராண வாயுவின் (ஆக்ஸிஜன்) அளவை அதிகப்படுத்துவதுதான்.

குழந்தைகள் கள்ளங்கபடமில்லா உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் சிரிப்பும் அப்படித்தான். குழந்தைகளாக இருக்கும்பொழுது நாம் அதிகமதிகம் சிரிக்கிறோம். ஆனால் வயதாக, வயதாக நம் சிரிப்பு குறைந்துகொண்டே போகிறது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 முதல் 400 தடவை சிரிக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் இதுவோ வயது வந்தவர்களுக்கு ஒரு நாளைக்கு 15 தடவை என்று குறைந்துவிடுகிறது.

இதனை ஈடு கட்டுவதற்காக மனோதத்துவவியலாளர்கள் வலுக்கட்டாயச் சிரிப்பை ஊக்குவிக்கிறார்கள்.

“வலுக்கட்டாயச் சிரிப்பு சக்தி மிக்கது. எப்பொழுதும் கிடைக்கக் கூடியது. செலவே இல்லாதது. இதனை வயது வந்தவர்கள் செய்து வந்தால் அவர்களின் “மூடு” (மனப்போக்கு) நன்றாக மாறும். அதாவது அவர்கள் நல்ல மனநிலைக்கு வருவார்கள். மனோ ரீதியாக நல்ல விளைவு ஏற்படும்” என்று மனோதத்துவப் பேராசிரியர் சார்லஸ் ஷேஃபர் கூறுகிறார்.

இவர் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஃபேர்லெய் டிக்கின்சன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் சிரிப்பு சம்பந்தமாக இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

ஷேஃபர் சில மாணவர்களை வைத்து ஒரு சோதனை நடத்தினார். அவர்களிடம் அவர்களின் மனப்போக்கை (மூடு) அறிவதற்காக தொடராக சில கேள்விகளைக் கேட்டார். பிறகு அவர்களை ஒரு நிமிடம் நன்றாகச் சிரிக்கச் சொன்னார். பிறகு அவர்களின் மனப்போக்கைப் பரிசோதித்தார்.

ஷேஃபர் கேட்ட கேள்விகளுக்கு சிரிப்பதற்கு முன்பு மாணவர்கள் சொன்ன பதில்களை விட சிரிப்புக்குப் பின் அவர்கள் சொன்ன பதில்கள் மிகச் சிறப்பாக இருந்தன.

“மூளை சிரிக்க வேண்டும் என்று உடலுக்குக் கட்டளை பிறப்பித்தவுடன், நம் உடல் எதைப் பற்றியும் கவலைப்படாதாம். அது என்டார்ஃபின்களை உடனே சுரந்து தள்ளி விடும். மன அழுத்தம் குறைந்து விடும். சிரிப்பு என்ற உடல் சார்ந்த செயலுக்கு மனரீதியான செயல்தான் மனஅழுத்தக் குறைவு என்பது” என்கிறார் பேராசிரியர் ஷேஃபர்.

ஆக, சிரிப்பு என்பது ஆரோக்கியத்தின் முதலீடு.

சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.

சிரிப்பினால் ஏற்படும் இன்னொரு பலன், சிரிக்கும்பொழுது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்கக் காரணமாகிறது.

சிரிப்பதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். வயிறு குலுங்கச் சிரிப்பது வயிற்றுக்குப் பயிற்சியாக மாறுகிறது. நீண்ட சிரிப்பின் மூலம் உடலில் அதிக கலோரி எரிந்து விடும். அத்தோடு சிரிக்கும்பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது. இது உணவு எளிதாக ஜீரணிக்க உதவுகிறது.

சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசரமான நமது வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. டென்ஷன் நமது ஆயுளை வீழ்த்துகிறது. இங்கேதான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நிராசையிலிருந்து சிரிப்பு நம்மை விடுவிக்கிறது. கவலைகளைக் காற்றில் பறக்க விட சிரிப்பால் மட்டுமே முடியும். சிரிப்பு கோபத்தின் தீயை அணைக்கிறது. சோகத்தை அகற்றி உள்ளத்தை கிளர்ச்சியடையச் செய்கிறது. இதயத் துடிப்பை சாதாரணை நிலைக்கு கொண்டு வர சிரிப்பு உதவுகிறது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் உறுதியை சிரிப்பு தருகிறது.

மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள ஒரு பெரிய கொடைதான் “ஹியூமர் சென்ஸ்” என அழைக்கப்படும் நகைச்சுவை உணர்வு. நகைச்சுவையான ஒரு செயலைக் கண்டாலோ அல்லது வார்த்தைகளைக் கேட்டாலோ சிரிக்க முடிவதே ஒரு பாக்கியம்தான்.

யாரைக் கண்டாலும் சிரிக்கும் நபர்கள் எங்கும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விடுவார்கள். இரண்டு நபர்களுக்கு இடையேயான அகலத்தைக் குறைக்க சிரிப்பால் முடியும். சிரிக்காத நபர்களுடன் யாரும் எளிதில் நெருங்கமாட்டார்கள். அவர்களை சிடுமூஞ்சி என்றழைப்பார்கள்.

சிரிப்பவர்களால் எங்கும் நல்லுறவுகளை ஏற்படுத்த முடியும். அவர்கள் சமூகத்தில் விரைவில் பிரபலமாகி விடுவார்கள்.

சிறந்த ஆளுமையின் அடையாளமாக சிரிப்பு விளங்குகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நேர்முகத் தேர்விற்குச் செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். “ஃபஸ்ட் இம்ப்ரஷன் இஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்’‘ எனக் கூறுவார்கள். அதாவது, முதலில் ஒருவரிடத்தில் ஏற்படுத்தும் தாக்கமே சிறந்ததாகும்.

இங்கே உங்களது கல்வித் தகுதிகளை விட உங்களது மிடுக்குத்தனத்திற்கே அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். காரணம், ஒரே தகுதிகளைக் கொண்ட பலர் நேர்முகத் தேர்விற்கு வந்திருப்பார்கள். அவர்களில் சிறந்த நபரைத் தேர்வு செய்யும் அளவுகோலாக அவர்களின் ஆளுமைத்திறன் கவனத்தில் கொள்ளப்படும். ஆளுமைத்திறனுக்கு ஆக்கம் கூட்டும் சிரிப்பு உங்கள் முகத்தில் மலர்ந்தால் நீங்கள் மிடுக்கான நபர் என்பது நேர்முகத் தேர்வை நடத்துபவர்களுக்கு புரிந்து விடும். உங்களது ஒரு சிரிப்பில் அதிக மதிப்பெண்களை நீங்கள் தட்டிச் செல்லலாம்.

இஸ்லாம் சிரித்து மகிழ்ந்து இருப்பதற்குத் தடை ஏதும் விதிக்கவில்லை. இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நகைச்சுவை இழையோடியது. சிரிப்பு இடம் பெற்றிருந்தது.

“உள்ளங்கள் சோர்வடைந்திருக்கும்பொழுது உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சியாக (ராஹத்தாக) வைத்திருங்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

எப்பொழுதும் ‘உர்’ என்று இறுக்கமாக இருக்க இஸ்லாம் இயம்பவில்லை. மனித மனம் இப்படியிருந்தால் மரத்துப் போய் விடும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு எவ்வளவு அவசியமோ அதே போல் மகிழ்ச்சியும் அவசியம்.

அல்லாஹ் அனுமதித்த வழியில் சிறிது நேரம் சிரித்து மகிழ்ந்து இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் சிரிப்பே வாழ்க்கையாகி விடக் கூடாது. அது அடுத்தவர்களின் மனதை நோகடிப்பதாக ஆகி விடக்கூடாது.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அறிவிக்கின்றார்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அவர்களின் தோழர்கள் சில நேரம் கவிதை பாடுவார்கள். சில நேரம் ஜாஹிலிய்யாக் கால விஷயங்களைக் கூறிச் சிரிப்பார்கள். அதை அண்ணலார் ஒருபோதும் தடுத்ததில்லை.

கருணை நபி (ஸல்) அவர்கள் தங்கள் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்துள்ளார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) பின்வருமாறு அறிவிக்கின்றார்:
சங்கை நபி (ஸல்) அவர்களுக்கு சந்தோஷமேற்பட்டால் அவர்களது முகம் பிரகாசிக்கும். அது பௌர்ணமி நிலவின் துண்டு போல் ஜொலிக்கும். (புஹாரீ, முஸ்லிம்)

நானிலம் போற்றும் நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு இடையிலும் மிகப் பெரும் நகைச்சுவையாளராக விளங்கினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார்.

ஆயிஷா (ரலி) அறிவிப்பதைப் பாருங்கள்:
“ஒரு நாள் எனது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், ஸவ்தாவும் இருந்தனர். நான் ஹரீரா என்ற உணவைச் செய்தேன். அதைக் கொண்டு வந்து ஸவ்தாவிடம் உண்ணும்படி கூறினேன். அதற்கவர் எனக்கு விருப்பமில்லை என்று கூறினார். நீ சாப்பிடாவிட்டால் உனது முகத்தில் பூசுவேன் என்று கூறினேன். இது எனக்கு சாப்பிட்டுப் பழக்கமில்லை என்று கூறினார். நான் அந்த மாப்பண்டத்தை எடுத்து அவளின் முகத்தில் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் அவளுக்கும் இடையில் அமர்ந்திருந்தார்கள். என்னைப் பிடித்துக் கொள்வதற்காக அவர்களது முழங்கால்களைத் தாழ்த்தினார்கள். நான் அப்பண்டத்தை எடுத்து எனது முகத்திலும் பூசினேன். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.” (அபூயஃலா)

“நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகைப்பவரை நான் கண்டதில்லை” என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) கூறுகின்றார். (திர்மிதி, அஹ்மத்)

“உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான், திர்மிதி)

ஆக, சிரிப்பு நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. நோயைப் போக்குகிறது. மொத்த குணநலனையும் மாற்றிவிடுகிறது.

நல்ல ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் நன்றாகச் சிரியுங்கள். அதேவேளையில் தனியாக அமர்ந்தோ, அளவுக்கதிகமாகவோ சிரித்து விடாதீர்கள். நம்மை தவறாகக் கருதிவிடுவார்கள்!

MSAH

விடியல் வெள்ளி  பிப்ரவரி 2014

Tuesday, 11 March 2014

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2


ஏ.ஜி. நூரானி இதுவரை வெளிவராத உண்மைகளை விளக்குகிறார்!

மொரார்ஜியின் மௌனம், ஒரு நீதிபதியின் தடை

மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே. தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?”

“மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன். சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”
குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”

அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின் (அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.
காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.

“டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

“அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சில “விஷயங்களை” பரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார்.

ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை ஆனால் மறுமகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

“ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.

“அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால் 14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். “விஷயத்தை” வைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்” அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.

“அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.”

“அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர் “யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.

“சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

“வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி. சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே. கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.
“சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது, அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும் (சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

“ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பது “பாதுகாப்பற்றது” என்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது “பாதுகாப்பற்றது” என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:

“வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச் ‘சதி’யில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. ஆதலால் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.”

இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948 அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.

ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “1948 மார்ச் 4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார். 1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார். 1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர். அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30 மணியளவில் சாவர்க்கரைப் பேட்டி கண்டனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23 அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர்.காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”

இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதுது முழு முதல் உண்மை. வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா?

நன்றி : Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

விடியல் வெள்ளி  ஏப்ரல் 2013

Wednesday, 5 March 2014

திருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு?


திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.

நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்லவிருக்கிறோம் என்பததைத் திருக்குர்ஆன் நமக்குக் கூறுகிறது. மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்பதையும் அது நமக்குக் கூறுகிறது.

அது நேரான வழியைக் காட்டுகிறது. அந்த வழி நம்மை அழிவில்லாத சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறது. அதே போல் அது நரகத்தினுடைய பாதைகளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கின்றது.

அது தனி மனிதனுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. ஒரு அரசுக்கும் ஒழுக்க விதிகளைக் கற்றுத் தருகிறது. அது ஷரீஅத் சட்டங்களை நமக்கு வழங்குகிறது.

திருக்குர்ஆன் நமது இதயத்தோடும் மூளையோடும் பேசுகிறது. அது கல்வி புகட்டுகின்றது, வழிகாட்டுகின்றது, காயங்களைக் குணப்படுத்துகின்றது. அது நமக்கு வழியை மட்டும் காட்டவில்லை. அந்த வழியைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலையும், ஆற்றலையும் தருகின்றது.

அதனை வாழ்க்கை வழிகாட்டியாய் எடுத்துக் கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல முடியாது. அதனை அலட்சியப்படுத்திய யாரும் நிரந்தர வெற்றியை ஈட்ட முடியாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள்தான் திருக்குர்ஆனைப் பின்பற்றிய முதல் கூட்டம். மிகவும் கீழான நிலையிலிருந்து அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு மாறினார்கள்.

இறையச்சத்திற்கும், பக்திக்கும் உதாரணப் புருஷர்களாகத் திகழ்ந்த அவர்கள், எந்தச் சமூகத்தாலும் ஒப்பிட முடியா உயரத்தை எட்டினார்கள்.

அவர்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்கிக் காட்டினார்கள். அங்கே நீதி, நியாயம், நல்லவையே நிரம்பியிருந்தன.

“ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடைய வாரிசுகள் வந்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை விட்டும் வெகு தூரம் விலகிச் சென்று விட்டார்கள்.” - இப்படிக் கூறுகிறார் அஷ்செய்க் யூசுஃப் அல் கர்ளாவி தனது “திருக்குர்ஆனோடு நாம் எப்படி தொடர்பு வைத்திருக்க வேண்டும்?” என்ற நூலில். மேலும் அந்நூலில் அவர் குறிப்பிடுகிறார்:

“நபித்தோழர்களுக்குப் பின் வந்தவர்கள் திருக்குர்ஆனின் வார்த்தைகளைப் பாதுகாத்தார்கள். ஆனால் அதன் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள். அவர்கள் திருக்குர்ஆனை மோசமாக புரிந்து கொண்டார்கள். இறைவேதம் எதனை முதன்மைப்படுத்தச் சொன்னதோ அதனை அவர்கள் முதன்மைப்படுத்தவில்லை. எதனை அது இறுதியாக்கியதோ அதனை அவர்கள் இறுதியாக்கவில்லை. அது எதற்கு முக்கியத்துவம் கொடுத்ததோ அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது எதனை அலட்சியப்படுத்தியதோ அதனை அவர்கள் அலட்சியப்படுத்தவில்லை. இந்த உம்மத் அதன் பின்னடைவிலிருந்து, அழிவிலிருந்து, இழப்புகளிலிருந்து மீள வேண்டுமானால் திருக்குர்ஆனின் பக்கம் அது சாய்வதைத் தவிர வேறு வழியில்லை.

திருக்குர்ஆனின் பக்கம் திரும்புவது என்பதற்கு கீழ்வரும் படிநிலைகள் தேவைப்படுகின்றன. திருக்குர்ஆனை நாம் அரபியில் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் நமது குழந்தைகளுக்கும் திருக்குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நாம் அதனை மனனம் செய்ய வேண்டும். நாம் அதனைத் தொடர்ந்து ஓத வேண்டும். திருக்குர்ஆன் ஓதப்படாமல் ஒரு நாள் கூட கழியக்கூடாது. நாம் அது தரும் செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். அது இடும் கட்டளைக்கேற்ப நமது வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மனித குலத்தையும் இதன் பக்கம் அழைக்க வேண்டும்.

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதுதான். ஆனால் ஒருவர் அதனை நேர்மையாக உண்மையாக அணுக வேண்டும். முறையாக அணுக வேண்டும்.

திருக்குர்ஆனை விளக்குவதற்கும், அது பற்றி விரிவுரை ஆற்றுவதற்கும் சில திறமைகள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, அரபியில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். அதன் வார்த்தை அமைப்புகள், இலக்கணம் போன்றவற்றை நன்கு கற்றிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, திருக்குர்ஆனின் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக, ஹதீஸ்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனை விளக்குவதே இறைத்தூதரின் பணியாக இருந்தது. ஆதராப்பூர்வமான ஹதீஸ் ஒரு வசனத்திற்கு விளக்கமளித்தால், அதற்கு மாற்றமான விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நான்காவதாக, நபித்தோழர்களால் திருக்குர்ஆனுக்குக் கூறப்பட்ட கருத்துரைகளை அறிந்திருக்க வேண்டும்.

ஐந்தாவதாக, இந்த உம்மத்தின் அறிஞர் பெருமக்கள் எழுதிய தஃப்ஸீரை அறிந்தவராக இருக்க வேண்டும்.

ஆறாவதாக, ஷரீஅத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கக் வேண்டும்.

ஏழாவதாக, சிறந்த பயபக்தி உள்ளவராக, இறையச்சமுள்ளவராகத் திகழ வேண்டும். ”

திருக்குர்ஆன் அதனை உண்மையாகப் பின்பற்றாதவர்களுக்கு அதன் கதவை திறக்காது. திடீரென்று குர்ஆனைத் திறந்து அதற்கு பொருள் கூற முடியாது. இப்படிச் செய்பவர்கள் பின்வரும் எச்சரிக்கையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூரியுள்ளதாக செய்யிதினா அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: “திருக்குர்ஆனுக்குத் தன் மனம் போன போக்கில் விளக்கம் கூறுபவர் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.” (திர்மிதீ)

துரதிர்ஷ்டவசமாக, இன்று பெரும்பாலான மக்கள் இதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருக்குர்ஆன் ஆய்வுக்குழு என்று வைத்துக் கொண்டு திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூற ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அப்படி விளக்கம் கொடுப்பவர் நல்ல பேச்சாளராக இருந்தால், அவர் கேட்பவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறுவார். அதன் பின் அந்த விரிவுரையாளர்கள் எந்தவிதக் குறைந்தபட்சத் தகுதியும் இல்லாமல், திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஷரீஅத் பற்றி மணிக்கணக்கில் பேசுவர்.

இதைக் கேட்பவர்கள் பரவசப்பட்டுப் போவார்கள். அவர்களும் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு அவரவர் இஷ்டத்திற்கு கருத்துக் கூறுவார்.

நபித்தோழர்களுடைய நடைமுறைகளையும், இதனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய முரண்பாடுகள் நமக்குத் தெரிய வரும்.

நபித்தோழர்கள் திருக்குர்ஆனின் மொழியை மட்டும் அறிந்தவர்களல்ல. அதன் வசனங்கள் இறக்கப்பட்டபோது நேரடி சாட்சிகள் அவர்கள். அப்படியிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து திருக்குர்ஆனை ஒவ்வொரு வசனமாகக் கற்றுக் கொள்ளாமல் அவர்கள் அதனைப் பற்றி விளக்கம் கூறத் துணிந்ததில்லை.

அப்படிக் கூறிக் கொண்டாலும், திருக்குர்ஆனுக்கு எச்சரிக்கையோடு வார்த்தைகளைக் கையாளுவார்கள். செய்யிதினா அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “திருக்குர்ஆனைப் போதிய அறிவில்லாமல் நான் விளக்கம் கூறினால் எந்த மண் என்னைக்  காப்பாற்றும்? அந்த ஆகாயம் என்னைக் காப்பாற்றும்?”

அதேபோல் யஸீத் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்”: “நாங்கள் செய்யிதினா சயீத் பின் அல் முஸ்அப் (ரலி) அவர்களிடம் ஹலால், ஹராம் குறித்து வினவினோம். அவர்கள் அவற்றைப் பற்றி மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். ஆனால் ஏதாவது ஒரு திருக்குர்ஆன் வசனத்திற்கு தஃப்ஸீர் செய்யும்படி கூறினால், அது காதில் விழாத மாதிரி அமைதியாக இருந்து விடுவார்கள்.”

திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வது நம் மீது உள்ள கடமை. ஆனால் அதற்கு முறையான வலி, நம்பத் தகுந்த தஃப்ஸீர் வழி படிப்பது அல்லது தகுதி வாய்ந்த ஒரு ஆசிரியர் மூலம் பயில்வது. இதுவே நம்மை ஈடேற்றமடையச் செய்யும்.

ஃகாலித் பெய்க்

தமிழில் : MSAH

விடியல் வெள்ளி, நவம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)

Sunday, 2 March 2014

நபிகளாரின் நற்பண்புகள்!


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்.” (முஅத்தா)

இறைவன் தன் இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.

ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிரியாய் ஆக்கித் தந்தான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே இருக்கின்றது. (அல்குர்ஆன் 33:27)

ஓர் இறைநம்பிக்கையாளன் ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

ஒழுக்கமுள்ளவனைத்தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள். மனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.

“விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்” (அல்குர்ஆன் 9:119) என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம். ஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், “எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றவோ அவரே” என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)

இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார்.” (இப்னு அஹ்மத்)

இதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பணிவிடை செய்யும் தோழர்களிடம் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை.

நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களின் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்கள் கைகளை விலக்கிக் கொண்டதில்லை.

மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை.

சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை.

நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.

எப்பொழுதும் இன்முகத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.

கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.

மதீனாவில் அனைவரும் ஆழ்துயிலில் இருந்த இரவு நேரம். எங்கும் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்துவாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். “மக்களே கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை” என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.

இப்படி அனைவருக்கும் முன்பாகச் செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார்தான்.

கேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள். இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.

எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம்பெருமானார் சிரிப்பார்கள். தோழர்களோடு மிருதுவாகப் பேசுவார்கள். தாரளாமாக கலந்து பழகுவார்கள்.

குழந்தைகளோடு கனிவுடன் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால், அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள்.

யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத்தான் இருக்கும்.

அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள்.

தோழர்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைப்பார்கள். யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள்.

விருந்தினர்களுக்கு நபிகளாரே எழுந்து உணவு பரிமாறுவார்கள். அண்ணலார் அவர்கள் வரும்போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள்.

யாரிடமும் அவசியமின்றி பேசமாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு. நடக்கும்போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமா இருக்காது.

பேச்சுகள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுகள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.”

நறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.

கோழைத்தனமில்லாமல் வாழ்ந்து காட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்தித்தார்கள். அவ்வாறு பிரார்த்திக்கும்படி நமக்கும் கற்றுத் தந்தார்கள்.

இவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால்தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள்.

அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.

இந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதகங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.

MSAH

விடியல் வெள்ளி  செப்டம்பர் 2002 (இம்பாக்ட் பக்கம்)

Thursday, 27 February 2014

THE CHAMBER OF EMOTIONS!

10ம் வகுப்பு படிக்கும் என் மருமகள் நஜ்லா காதிரா
“இதயம்” பற்றி எழுதிய ஆங்கிலக்  கவிதை!



It's a chamber of  emotions
A juncture of thoughts
A piece of flesh
A lively soul
Which vibrates through & through
All the time
Along with each nerve
And with each pulse
Something called our HEART......!
Most of the time wandering about
Through a path of various emotions
Half of the time happy
Even though some resembles sorrows
Just like an egg
Half filled with yolk of excitement
And the other half with albumin of worries
Basically arrogant
And partly jelous too
Tough to control
When it fumes with anger
And difficult to handle
When it trembles with fear
Some times tensed
And some times cool
Some times jittery
And some times in tremor
Many of them spread out
With the fragrance of love
But some other's
Littered with a blood of hatred
Whatever the emotions are
It is the unit of human life
Until our last breath
It  goes on... on... & on...
Thumping...
Tic... tic... tic...!

N.A. Najla Qadira (10th Std.), My Neice

‘கோலா’க்களினால் ஏற்படும் கோளாறுகள்!


மனிதனைப் படைத்தான் இறைவன். அவன் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தான். பூமியிலிருந்து தானியங்களை விளையச் செய்தான். வானிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். சுவாசிக்க சுத்தமான காற்றை வீசச் செய்தான்.

மனிதன் துவக்கத்தில் இயற்கை உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தான். பழங்களும், காய்கறிகளும் மனிதனுக்கு உண்ண படைக்கப்பட்ட சில கால்நடைகளும் அவனுக்கு வேண்டிய சத்துகளை அளித்தன.

இளநீர், பால் போன்றவை அவனது நீர் ஆகாரத் தேவையை செவ்வனே பூர்த்தி செய்தன. சிறுகச் சிறுக மனிதனின் ருசியும், ரசனையும் மாறியது.

இயற்கை உணவுகளைப் புறந்தள்ளி விட்டு செயற்கை உணவுகளுக்குத் தாவினான் மனிதன். சத்தான, குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை நீர் ஆகாரங்களை அலட்சியப்படுத்திவிட்டு செயற்கை நீர் பானங்களில் இறங்கினான். இன்று அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றான்.

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீ) வினையின் காரணமாகக் கடலிலும் தரையிலும் தீமைகள் தோன்றிவிட்டன. (அவற்றிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களின் (தீ) வினைகளில் சிலவற்றை, அவர்கள் (இம்மையிலும்) சுகிக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)

பெப்சி, கோக் ஆகியவை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய குளிர்பானக் கம்பெனிகள். இவை தயாரிக்கும் குளிர்பானங்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன.

மேலை நாட்டுக் கம்பெனிகளின் பானங்கள் என்ற கவர்ச்சி ஒரு புறம்... இந்தக் கம்பெனிகள் செய்யும் பிரம்மாண்டமான விளம்பரங்கள் இன்னொரு புறம்.

ஆம்! கடந்த 2000மாவது ஆண்டில் மட்டும், கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் விளம்பரத்திற்காக ரூபாய் 2,30,000 கோடி செலவிட்டுள்ளன!

ஒரு சிறய நாட்டின் ஒரு வருட வரவு-செலவுக் கணக்கின் தொகை இது. இதனை ஓராண்டுக்கு வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இந்நிறுவனங்கள் செலவிடுகின்றன.

இந்த இரு கம்பெனிகளும் அவற்றுக்கு இடையில் உள்ள போட்டியில் மொத்த உலக மக்களையும் பலி கொடுக்கின்றன.

ஆம்! இந்தக் குளிர்பானங்களில் உள்ள ‘காஃபின்’ என்னும் ஊக்கமூட்டும் பொருள் அனைவரையும் அதற்கு அடிமையாக்குகிறது. அது மட்டுமா? இந்தக் குளிர்பானங்களின் உள்ளே கேஸ் ஏற்றப்பட்டுள்ளது (கார்பனேட்டட்). எனவே இதனைத் தொடர்ந்து குடிப்பதால் வயிறு தொந்தியாகிறது. பல் சொத்தையாகிறது. ஊட்டச் சத்து குறைகிறது. வாஷிங்டனில் உள்ள ‘உலகக் கண்காணிப்பு நிறுவனம்’ என்ற அமைப்பின் அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

இன்றைக்கு உலகில் தேநீர், பாலுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பருகப்படுவது இந்தக் குளிர்பானங்கள்தாம். அமெரிக்காவில் இது தயாரிக்கப்படுவதால் இதற்கு முதலில் பலியானவர்கள் அமெரிக்கர்கள்தான். உலக மக்கள்தொகையில் அமெரிக்க மக்கள் 5 சதவீதம்தான். ஆனால் இந்தக் கேஸ் ஏற்றப்பட்ட குளிர்பானங்களைக் குடிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள்.

உலகம் முழுவதும் குடிக்கப்பட்ட மொத்த குளிர்பானத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குடித்துத் தீர்த்தவர்கள் அமெரிக்கர்கள். 1999ம் ஆண்டுக் கணக்குப்படி சராசரியாக ஆண்டுக்கு 211 லிட்டர் குளிர்பானத்தை அமெரிக்கர்கள் குடித்துள்ளனர்.

இதில் வேடிக்கையும் வேதனையும் என்ன தெரியுமா? அவர்கள் குடித்த தண்ணீரின் அளவு சராசரியாக 109 லிட்டர்தான். ஆனால் இந்த்க் குளிர்பானங்கள் 211 லிட்டர் குடித்துள்ளனர்.

வாழ்வதாராமான தண்ணீரை விட இந்தச் செயற்கைக் குளிர்பானங்களை இரு மடங்கு குடிக்கின்ற கேடுகெட்ட நிலையைப் பாரீர்!

மேலை நாடுகளோடு, அமெரிக்காவோடு இந்தச் சனியன் இருந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் உலகம் முழுவதுமல்லவா இது தொடர்ந்து பரவுகிறது...!

குறிப்பாக, அரபு நாடுகளிலும், இந்தியாவிலும், வளர்ந்து வரும் ஏழை நாடுகளிலும் இந்தக் குளிர்பானங்களைக் குடிப்பது அதிகரித்து வருகிறது. மெல்ல மெல்ல உலக மக்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். உலகின் மக்கள்தொகையில் 20 சதவீதம் பேரைக் கொண்ட சீனா, குளிர்பானம் குடிப்பதில் 4வது இடத்தில் உள்ளது.

பழச்சாறுகள், பால் போன்றவற்றில் வைட்டமின்கள், கால்சியம் போன்ற தாது உப்புகள் அதிகம் உள்ளன. இது நமது உடலுக்கு ஊட்டச்சத்தையும், ஊக்கத்தையும் தருகின்றன. ஆனால் கேஸ் ஏற்றப்பட்ட இந்தக் குளிர்பானங்களிலோ தண்ணீர், இனிப்புச் சுவை, தனி மணம் மற்றும் காஃபின் ஆகியவைதான் உள்ளன.

உடலுக்கு ஊக்கமூட்டும் செயலைச் செய்யும் ‘காஃபினை’ ஒரு நாளைக்கு 100 மில்லி கிராம் வீதம் பயன்படுத்தினால், அதற்கு மனிதன் அடிமையாகிவிடுவான்.

கார்பனேட்டட் குளிர்பானத் துறையில் 10 பிராண்டுகள் உலகில் பிரபலமானவை. அவற்றில் 80 சதவீத பானங்களில் காஃபின் சேர்க்கப்பட்டுள்ளது. இது 1999ல் எடுத்த ஆய்வில் தெரிய வந்தது.

355 மில்லி லிட்டர் கோகோ கோலாவில் 35 மில்லி கிராம் காஃபின் உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுவதும் இந்தக் கம்பெனிகள் தங்களது கிளைகளைப் பரப்பி வருகின்றன. அந்தந்தப் பகுதிகளில் இந்தக் கிளைகளை நிறுவி, அங்கேயே குளிர்பானத் தயாரிப்புகளைத் தொடங்கி விடுகின்றன. இதனால் சுற்றுச் சூழலும் கெடுகிறது.

அண்மையில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் கிராம மக்கள் கோகோ கோலா கம்பெனிக்கெதிராக போராட்டங்களை நடத்தினர். பிளச்சிமாடா என்ற கிராமத்தில் கோகோ கோலா கம்பெனி குளிர்பான ஆலை ஒன்றை நிறுவியுள்ளது. தனக்குத் தேவையான தண்ணீரை ஏரளாமான ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டி எடுத்து வருகிறது இந்தக் கம்பெனி.

இதனால் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனம் பூமியிலிருந்து உறிஞ்சுகிறது என்று அந்தக் கிராமத்தினர் கூறுகின்றனர். (செய்தி ஆதாரம்: தினமணி 22.06.2002)

இப்படி, உலக மக்களில் பெரும்பாலானோர் அடிமையாக்குவது மட்டுமல்லாமல், பூமியிலிருந்து தேவைக்கதிகமாக நீரை உறிஞ்சி, சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன இந்தக் குளிர்பானக் கம்பெனிகள்.

அரபு நாடுகளில் இன்று இதன் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அராபியர்களின் ஒவ்வொரு வேளை உணவிலும் இந்தக் கோலாக்கள் இடம் பெறுகின்றன. இந்தக் குளிர்பானங்களை அருந்தாமல் ஒரு ரொட்டித் துண்டு கூட உள்ளே இறங்காது என்ற நிலைதான் அங்குள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தக் குளிர்பானங்களின்றி உணவே ஜீரணிக்காது என்ற நிலையே இன்று அங்குள்ளது.

ஏகாதிபத்தியவாதிகள் கத்தியின்றி, இரத்தமின்றி முஸ்லிம்களை இதன் மூலம் அடிமைப்படுத்தி வருகின்றனர். செல்வச் செழிப்பில் ஊறித் திளைக்கும் அரபு நாடுகளுக்கு இது புரியவா போகிறது?
தங்களது விலை மதிக்க முடியாத கறுப்புத் தங்கமான பெட்ரோலைத் தாரை வார்த்து, இந்தக் குளிர்பானங்களைத் தருவிக்கின்றன இந்த நாடுகள்.

இதில் இன்னொரு மிகப் பெரும் கொடுமையும் உண்டு. இந்தக் குளிர்பானக் கம்பெனிகளை நடத்துபவர்கள் யூத பணக்கார முதலைகள். இந்தக் குளிர்பானங்கள் மூலம் வரும் கொள்ளை லாபத்தில் ஒரு பெரும் பங்கை இவர்கள் அல்லும் பகலும் முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு அனுப்புகின்றனர்.

இன்று ஃபலஸ்தீனில் சொந்த மண்ணின் மைந்தர்கள் வீடின்றி, வாசலின்றி அகதிகளாக்கப்படுகின்றனர். உலகிலேயே அகதிகளாக அதிகமாக வாழ்பவர்கள் ஃபலஸ்தீன முஸ்லிம்கள்தான். யூத பயங்கரவாதிகள் தினமும் முஸ்லிம்களைத் தாக்கி வருகின்றனர். நவீன ஆயுதங்களைக் கொண்டு முஸ்லிம்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த ஆயுதங்களை வாங்குவதற்குத்தான் இந்தக் குளிர்பானக் கம்பெனிகள் பெருமளவில் இஸ்ரேலுக்கு பொருளுதவி செய்து வருகின்றன. ஆதலால்தான் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற பெரும் இஸ்லாமிய அறிஞர்கள் பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களை அருந்தக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

“நீ ஒரு லிட்டர் கோலா வாங்கினால் ஒரு முஸ்லிமைக் கொல்ல ஒரு குண்டை வாங்குகிறாய் என்று அர்த்தம்!” என்று அறிவுறுத்தினார் அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு பொருளையும் இஸ்லாம் தடை செய்கின்றது. இந்தக் குளிர்பானங்கள் உடலுக்கு மட்டுமா தீங்கு விளைவிக்கின்றன? சுற்றுச் சூழலைச் சீர்கெடுக்கின்றன. ஒரு பெருங் கூட்டம் மக்களை அடிமையாக்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூக மக்களைக் கொன்றொழிப்பதற்கு உதவுகின்றன.

ஆதலால் முஸ்லிம்கள் இவற்றை விட்டும் தூரமாகிவிட வேண்டும். இதனை ஒரு பிராச்சாரப் பணியாக மேற்கொண்டு அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். விழிப்புணர்வூட்ட வேண்டும்.

MSAH

விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 2002 (இம்பாக்ட் பக்கம்)

Saturday, 22 February 2014

மனிதகுலத்திற்கெதிரான மாபாதகத் தீர்ப்பு!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு தீர்ப்பு!

அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அந்தத் தீர்ப்பு இதுதான்: ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் ஒப்புதலுடன் உடலுறவு வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது!’’

இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பின்போது நீதிபதிகள், ‘‘ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் தம் முழு விருப்பத்தின்படி உடலுறவு கொள்வதைத் தண்டனையாகக் கருதுவது ஒருபக்கச் சார்புடையது மட்டுமின்றி மனித உரிமைக்கு எதிரானதும் ஆகும்’’ என்று குறிப்பிட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டப்படி ஒரே பாலினத்தைச் சார்ந்த இருவர் உடலுறவு கொள்வது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரவல்ல குற்றமாகக் கருதப்பட்டு வந்தது.

கடந்த 148 ஆண்டு காலமாக இருந்த நடப்பை மாற்றி வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
அதனால்தான் தினமும் மலத்தைக் கொட்டும் பத்திரிகைகள் இதனைப் ‘புரட்சிகரத் தீர்ப்பு’ எனப் போற்றிப் புகழ்கின்றன.

உண்மையில் இது புரட்சிகரத் தீர்ப்பா, இல்லை புரட்டுத் தீர்ப்பா என்பதைச் சிறிது அலசுவோம்.

அறிவியல் பூர்வமாக அலசினோம் என்றால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாற்றமானது. உடலுறவு என்பது மனித வளர்ச்சியின் மூலதனம். ஆனால் ஓரினச் சேர்க்கை மனித வளர்ச்சியை மங்கச் செய்து விடும். மனித வளம் மண்ணோடு மண்ணாகி விடும். மழலைகளின் ஒலிகளுக்குப் பதிலாக மரண ஓலங்களே வீடுகளில் கேட்கும்.

தீர்ப்பளித்த நீதிபதிகள் இதனை எண்ணிப் பார்த்தார்களா?

அடுத்து மனோதத்துவ ரீதியாக அலசுவோம். மனோதத்துவவியலாளர்கள் ஓரினச்சேர்க்கையை ஓர் அசாதாரணமான நடவடிக்கை (Abnormal Behaviour) என்கின்றனர்.

1970கள் வரை அமெரிக்க மனோதத்துவ நிபுணர்கள் ஓரினச் சேர்க்கையை ஒரு மனநோய் (Mental Illness) என்றே வகைப்படுத்தினர். ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களின் கடும் எதிர்ப்பினால் பின்னர் அந்தக் கருத்து மாற்றப்பட்டது. (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 6, 31)

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களின் மூளைகளில் ஒரு சில பகுதிகளில் அந்தப் பழக்கத்தின் காரணமாக சில மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். (ஆதாரம் : Encyclopedia Britannica, Volume 27, 248-249)

தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இவை தெரியுமா?

அடுத்து ஓரினச்சேர்க்கை சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்ப்போம்.

ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் சமூகத்தில் பரவுகின்றன. பிரபல சமூகவியல் நிபுணர் மேசியோனிஸ் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு சில குறிப்பிட்ட நடவடிக்கைகளால் வருகிறது. ஓரினச்சேர்க்கையால் மலக்குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸ் கிருமி பரவுகிறது. இந்தப் பழக்கம் மிகவும் ஆபத்தானது. அதிகமானவர்களுடன் உறவு கொள்ளும்பொழுது இந்நோய் பரவும் வாய்ப்பும் அதிகமாகிறது. எய்ட்ஸ் கிருமி தொற்றிக்கொண்டவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களே!’’ (ஆதாரம் : மேசியோனிஸ் 545)

எய்ட்ஸ் நோய் பரவுவதால் சமூகத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து மேசியோனிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘‘எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு ஆளுக்கு 1,50,000 அமெரிக்க டாலருக்கும் மேல் (சுமார் 60 கோடி ரூபாய்!) செலவாகிறது. புதிய சிகிச்சைமுறைகள் அமுல்படுத்தப்பட்டால் இந்தச் செலவு இன்னும் கூடும்.’’ (மேசியோனிஸ் 545)

இந்தச் சமூக விளைவுகளை தீர்ப்பளித்த நீதிபதிகள் ஒரு கணமாவது சிந்தித்துப் பார்த்தார்களா?

இறுதியாக மத ரீதியாகப் பார்ப்போம்.

யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று பெரிய மதங்களும் ஓரினச்சேர்க்கையைக் கடுமையாகக் கண்டிக்கின்றன.

பைபிளின் பழைய ஏற்பாடும், திருக்குர்ஆனும் நபி லூத் (அலை...) அவர்களின் சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

லூத் நபியின் சமுதாயத்தினர் தங்கள் ஓரினச்சேர்க்கை பழக்கத்தாலும், அதற்கு மன்னிப்பு கேட்காமல் இருந்ததனாலும் அழிக்கப்பட்டார்கள் என்று பைபிள் பழைய ஏற்பாடு கூறுகின்றது. (ஜெனிசிஸ் அத்தியாயம் 13,14,18,19)

பைபிள் புதிய ஏற்பாட்டில், ரோமன்ஸ் புத்தகத்தில் புனித பால் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

அவர்களில் பெண்கள் இயற்கைக்கு முரணானதை மாற்றிக்கொண்டார்கள். அதேபோல் ஆண்களும் பெண்களோடு உறவு கொள்வதை விட்டு விட்டனர். ஆண்கள் ஆண்களிடமே இச்சை கொண்டனர். அவர்களுடன் வெட்கங்கெட்ட உறவை வைத்துக்கொண்டனர். இந்தக் குற்றத்திற்காக அவர்கள் கடும் தண்டனை பெற்றனர்.’’ (ரோமன்ஸ் 1 : 22-27)

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்). அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்? மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக்கொள்ள விரும்புகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.
இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (அல் குர்ஆன் 7 : 80,81,84)

இந்த வசனங்களெல்லாம் தீர்ப்பளித்த நீதிபதிகளின் காதுகளில் விழுந்ததா?
இறையச்சமுள்ள நீதிபதிகளால் இவ்வாறு இயற்கைக்கெதிராக தீர்ப்பளிக்க முடியுமா? இயற்கை நெறிகளுக்கு மாற்றமாக எதனையும் ஊக்குவிக்காத இஸ்லாம் தழைத்தோங்கும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட தீர்ப்புகள் சாத்தியப்படுமா?

அஞ்ஞானம் வேரூன்றி இருள் மண்டிக் கிடந்த ஒரு சமுதாயத்தில் - அந்த இருளைக் கிழித்து ஒளியைப் பாய்ச்ச வந்தது இஸ்லாம். இந்த இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்போம். இப்படிப்பட்ட மடமைகளிலிருந்து சமூகத்தைக் காப்போம்.

MSAH

விடியல் வெள்ளி  ஆகஸ்ட் 2009 (தலையங்கம்)

Tuesday, 18 February 2014

சுகமும், துக்கமும்!


வாழ்க்கையை மிக மகிழ்ச்சியாகக் கழிக்கிறாள் 18 வயது நிரம்பிய அந்த இளம் பெண். நல்ல மார்க்க சூழ்நிலையில் அவளின் பெற்றோர்கள் அவளை வளர்த்தெடுத்தனர். அருமையான அண்டை அயலாருடன் அவளது வாழ்க்கை அமைதியாகக் கழிகிறது. கவலை என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு அவளை அவளின் பெற்றோர்கள் கண்ணே... பொன்னே... என்று கவனித்துக்கொண்டனர்.

அவளுக்கு 18 வயது நிரம்பிய பொழுது அவளின் பெற்றோர்கள் அவளுக்கு திருமணம் முடித்து வைக்கும் முயற்சியில் இறங்கினர். இத்தனை வருடம் தன் பெற்றோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த அந்த இளம் பெண்ணுக்கு திருமணத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

முதலில் அவள் திருமணப் பேச்சை எடுக்கும் பொழுதெல்லாம் தட்டிக் கழித்து வந்தாள். பெற்றோரும், உற்றாரும் தொடர்ந்து திருமணம் முடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி வலியுறுத்த, இறுதியில் வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

நல்ல மாப்பிள்ளை அமைந்தது. திருமணம் வெக சிறப்பாக நடந்தேறியது. சில நாட்களிலேயே அவளது வாழ்க்கையின் மகிழ்ச்சியின் அடையாளமாக அவள் கர்ப்பமானாள். இதற்கிடையில் அவளின் மாப்பிள்ளைக்கு கத்தரில் வேலை கிடைத்தது. விசா வந்ததும் மாப்பிள்ளை கத்தருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்ற ஒரு சில நாட்களிலேயே கத்தரிலிருந்து அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. மாப்பிள்ளை ஒரு வாகன விபத்தில் இறந்து விட்டார்! அதிர்ச்சியில் ஆடிப் போனாள் அந்த அபலைப் பெண்.

கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாலும் ஈமானிய அடிப்படையில் வளர்ந்ததனால் இது அல்லாஹ்வின் கட்டளை என்று அழகிய பொறுமையை மேற்கொண்டாள். அடுத்த ஒரு சில மாதங்களில் அவள் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள்.

இன்னும் சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் வலி வந்தது. மருத்துவரிடம் பரிசோதித்தபொழுது அடுத்த அதிர்ச்சி. அவளுக்குப் புற்று நோய் வந்து, முற்றிப் போயுள்ளது தெரிந்தது.
இதனால் ஏற்பட்ட இன்னல்கள் அனைத்தையும் இறைவனின் நாட்டமே என்று அவள் சகித்துக்கொண்டாள். அடுத்த ஒரு சில நாட்களில் அந்த அபலைப் பெண் மரணமடைந்தாள். தான் ஈன்றெடுத்த சிசுவை இருபது நாட்கள்தான் அவள் காண முடிந்தது. ஆம்! அவள் தன் குழந்தையை ஈன்றெடுத்த இருபதாவது தினத்தில் உயிரிழந்தாள்.

இதுதான் இந்த உலக வாழ்க்கை. கவலையே அறியாமல் வளர்ந்த அந்தப் பெண்ணின் வாழ்க்கை சிறு வயதிலேயே, அதுவும் குறுகிய காலத்திலேயே பல மேடு பள்ளங்களைக் கண்டு அடங்கிப் போய் விட்டது. இப்படித்தான் பலரது வாழ்க்கையும் ஆடி அடங்குகிறது.

இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (திருக்குர்ஆன் 3:140)

நிச்சயமாக கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. மெய்யாகவே கஷ்டத்துடன் சௌகரியம் இருக்கின்றது. (திருக்குர்ஆன் 94:5-6)

சுகமும், துக்கமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்துதான் வருகின்றன, அவை அவனது நாட்டப்படியே நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து இன்னல்களையும், நோய்களையும் சகித்துக்கொள்வார்கள். அந்தப் பக்குவம் அவர்களுக்கு வந்து விடும்.
ஆனால் நம்மில் பலரும் வாழ்க்கை என்றால் வாழ்வதற்கே, எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும், ஆதலால் அனுபவிக்க வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது இறைவன் மனிதனைப் படைத்த தத்துவத்திற்கே எதிரானது.

அதே சமயம் நம்மில் சிலருக்கு ஏதாவது துக்கம் ஏற்பட்டு விட்டாலோ அதிலேயே மூழ்கி தங்களை மாய்த்துக்கொள்ளும் அளவுக்குச் செல்கிறார்கள். இதுவும் கூடாது.

இரண்டையும் எதிர்பார்த்து இருக்க வேண்டும். கஷ்டத்திலும், கவலையிலும் இறைவனை நினைவு கூர வேண்டும். மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும் இறைவனை நினைவு கூர வேண்டும். அதே வேளையில் கவலையை விட்டும், துக்கத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு அடிக்கடி துஆ கேட்பார்கள்:
“இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.”( புகாரீ 2893)

MSAH

விடியல் வெள்ளி  ஜனவரி 2014 (மனதோடு மனதாய்...)

Monday, 17 February 2014

ஆம் ஆத்மியும், அரவிந்த் கெஜ்ரிவாலும்!


ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நோக்கமாகச் சொல்லப்பட்ட ஜன லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதால் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பதவியேற்று 49வது நாளில் ஆம் ஆத்மி அரசு பதவி இறங்கியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி பதவியேற்ற கெஜ்ரிவால், பிப்ரவரி 14ம் தேதி தனது இராஜினாமா கடிதத்தை டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிவிட்டார்.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி, ஓட்டெடுப்பு நடந்தபொழுது இரு துருவங்களான காங்கிரசும், பாஜகவும் ஒரே துருவத்தில் இணைந்த அதிசயம் நிகழ்ந்தது. இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை எதிர்த்தன. இந்தச் சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக 27 ஒட்டுகளே விழுந்தன. மாறாக எதிர்த்து 42 ஓட்டுகள் விழுந்தன. ஆதலால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அரசியல் நிர்ணயச் சட்டப்படி இந்த மசோதா நிற்காது என்று அதற்கு அந்த இரண்டு கட்சிகளும் காரணங்கள் கூறின. அத்தோடு ஊழலுக்கெதிரான மசோதாவும், ஆம் ஆத்மி அரசும் முளையிலேயே கரிந்து போயின. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தங்கள் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் எப்பேற்பட்ட எதிரியுடனும் இவர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்பதே!

அன்னா ஹசாரேயுடன் பணியாற்றும்பொழுதே அரவிந்த் கெஜ்ரிவால் ஜன லோக்பால் சட்டம்தான் தன்னுடைய இலட்சியம் என்று வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் அன்னா ஹசாரேயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்து ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த பொழுது ஜன லோக்பால் சட்ட இலக்கை இறுக்கிப் பிடித்தார் கெஜ்ரிவால்.

ஜனலோக்பால் சட்டம் இயற்ற இயலவில்லையெனில் தனது அரசு இராஜினாமா செய்யும் என்று கெஜ்ரிவால் பல முறை அறிவித்திருந்தார். அதன்படி இராஜினாமா செய்துவிட்டார்.

காங்கிரசை மண்ணைக் கவ்வ வைத்து, பாஜகவை பாடாய்ப் படுத்தி ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று 27 இடங்களில் வென்றது, அந்த இரு கட்சிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, டெல்லி வட்டாரத்தில் அவர்களின் இருப்பே கேள்விக்குறியானது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அவரை அச்சுறுத்துவதற்கும், அலைக்கழிப்பதற்கும் காங்கிரசும், பாஜகவும் கைகோர்த்துக்கொண்டன. இது ஏற்கனவே அவை வெளிப்படுத்தி வரும் சந்தர்ப்பவாதத்தின் இன்னொரு சான்று மாத்திரமே.

தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் உள்ள கட்டணங்கள் பாதி குறைக்கப்படும் என்று அறிவித்து, அதனை அமுலிலும் கொண்டு வந்த கெஜ்ரிவால், ஜனலோக்பால் சட்டமும் கொண்டு வந்து விட்டால் தாங்கள் டெல்லி வட்டாரத்தில் அரசியல் முகவரி இல்லாமல் அழிந்துவிடுவோம் என்று அஞ்சித்தான் காங்கிரசும், பாஜகவும்  இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தன.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் கெஜ்ரிவால் தூக்கிப் பிடித்தார். அது ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக இயற்கை எரிவாயுவின் விலையைக் கூட்டி, நாட்டிற்கு 54,000 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒப்பந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தார். மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் உதவியுடன் இந்தத் தேசத்துரோக ஒப்பந்தம் அரங்கேறியுள்ளது.

மத்திய பெட்ரோலியத்துறை இந்நாள் அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன் முன்னாள் இயக்குனர் வி.கே. சிபல் ஆகியோர் மீது ஊழல் எதிரப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தது மத்திய அரசையும், காங்கிரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடந்த ஏப்ரலில் இயற்கை எரிவாயுவின் விலையை யூனிட்டுக்கு 7 டாலர் என்று அதிகப்படுத்தியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்பதுதான் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு. இதற்குப் பிறகுதான் காங்கிரஸ் ஜனலோக்பால் மசோதாவைக் காரணம் காட்டி ஆம் ஆத்மி அரசுக்கு தன் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்தது என்று கருதப்படுகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக இயற்கை எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதல்லாமல் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு பதவியேற்றவுடனேயே இது அதிக நாட்கள் நீடித்து நிற்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பு கெஜ்ரிவால் தான் வாக்களித்த பல விஷயங்களை வாக்கு தவறாமல் நிறைவேற்றிக் காட்டினார் என்பதுதான் உண்மை.

அதிகாரத்தில் எப்படியாவது ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று மற்ற கட்சிகள் மாதிரி அவர் எண்ணியிருந்தால் சில ‘அட்ஜஸ்ட்மெண்டுகளை’ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. தன் வாக்குறுதிகளை நிறேவேற்றிவிட்டே படி இறங்கியிருக்கிறார். இது பிற கட்சிகளுக்கு சவால்தான் என்பதில் சந்தேகமில்லை.

காலாகாலமாக ஊறித் திளைத்திருக்கும் ஊழலை இவரால் ஒழித்திட முடியும் என்று நாம் கருதவில்லை. அதேபோல் இந்த ஜன லோக்பால் சட்டத்தை வைத்தும் ஊழலை ஒழித்திட முடியும் என்று நாம் நம்பவில்லை.

நாட்டிலுள்ள ஊழல் பெருச்சாளிகள் எந்தப் பெரிய சட்டத்தையும் தூக்கிப் போட்டு வெளியே வந்து விடுவார்கள். இன்று பணமும், அதிகாரமும்தான் அனைத்தும் என்றாகிவிட்டது.

தொண்டர் அடிப்படையில் ஒரு இலட்சியத்தோடு வார்க்கப்பட்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் அடித்தட்டு மக்களுடன் கட்டியெழுப்பப்படுகிற கட்சிதான் நிலைத்து நிற்கும். அதுதான் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி மக்களோடு மக்களாக மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றிட முடியும். ஆம் ஆத்மி கட்சி மாதிரி உடனே ஆரம்பித்து, உடனே பதவிக்கும் வர முடியும் என்றால் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும். ஏனெனில் நிலவிலுள்ள அமைப்பு அவ்வளவு உறுதியாக உள்ளது.

ஆனால் சிறு சலசலப்பை உண்டு பண்ண முடியும் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார். இதிலிருந்து அரசியலில் மாற்றம் கொண்டு வர விரும்புபவர்கள் பாடம் பயில வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளில் உள்ள குறைகளையும், ஆம் ஆத்மி கட்சி செய்த தவறுகளையும் இவர்கள் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

MSAH