Wednesday 24 August 2016

இறுதிநாள் எனும் எதார்த்தம்!


ஒட்டகங்களை மேய்க்கிற சாதாரண இடையராக இருந்து, 22½ லட்சம் சதுர மைல்களை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை மறுமை நாள் என்னும் மையப்புள்ளியைச் சுற்றியே அமைந்திருந்தது.

இறுதி நாளைப் பற்றி நினைவு வந்து விட்டாலோ அல்லது யாராவது நினைவு படுத்தி விட்டாலோ உடனே மாலை மாலையாக கண்ணீர் விட்டு அழுது விடுவார்கள். அந்த அளவு இறுதி நாளின் மீதும், அன்று நடக்கும் கேள்வி கணக்கு விசாரணையின் மீதும் அச்சத்தைக் கொண்டிருந்தார்கள். அந்த அச்சம் அவர்களுக்கு எச்சரிக்கையை கொடுத்தது.

அதன் விளைவுதான் பல லட்சம் சதுர மைல்களுக்கு அதிபராக இருந்தும் எளிமை ஜனாதிபதியாக திகழ்ந்தார்கள். அரசாங்க கஜானாவிலிருந்து சொற்ப தொகையையே ஊதியமாக பெற்ற உமர் (ரலி) அவர்களுக்கு மாற்று ஆடை கூட இருந்ததில்லை. இருந்த ஓர் ஆடையை துவைத்துப் போட்டு காய்வதற்கு தாமதமானதால் ஒரு ஜும்ஆவுக்கு சிறிது தாமதமாக வந்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட நிகழ்வும் அவர்களது வாழ்வில் அரங்கேறியது.

ஒரு முறை ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆவுக்காக மஸ்ஜிதுக்கு வரும்பொழுது, அவரை ஸல்மானுல் ஃபார்ஸி (ரலி) தடுத்து நிறுத்தி, “உமரே! நீங்கள் இப்போது அணிந்திருக்கிற ஆடை ஒரு தடவை அன்பளிப்பாக உங்களுக்கு கிடைத்தது. இதே போன்று எனக்கும் ஒன்று கிடைத்தது. இப்போது நீங்கள் கீழாடை, மேலாடையாக இரண்டு ஆடைகளை அணிந்திருக்கிறீர்களே... அது எப்படி?” என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் தன் மகன் அப்துல்லாஹ்வை நோக்கினார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “சகோதரரே! என் தந்தையுடையது ஓர் ஆடைதான். உங்களுக்கு அன்பளிப்பாக ஆடை கிடைத்த அதே சமயத்தில் எனக்கும் ஓர் ஆடை கிடைத்தது. அதை நான் என் தந்தைக்கு கொடுத்தேன்” என்றார்.

கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு ஒற்றை ஆடை கூட கேள்விக்குரியதாக இருந்தது. அவர்களது ஆடைகளில் ஒட்டுக்களும் அதிகம். “உமரின் ஆடையில் தோள் புஜங்களுக்கு இடையே நான்கு ஒட்டுக்களை நான் பார்த்தேன்” என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

ஒரு தடவை உமர் (ரலி) அவர்களிடம் முதியவர் ஒருவர் வந்து, ‘‘நான் ஏழை. எனக்கு பெண் குழந்தைகள் இருக்கின்றன. எனக்கும், என் குழந்தைகளுக்கும் அணிவதற்கு சரியான ஆடைகள் இல்லை. ஆடை ஏதாவது இருந்தால் கொடுங்கள்” என்று கேட்டார்.

உமர் (ரலி) அவர்களுக்கு இருப்பது ஓர் ஆடைதான் என்பது அந்த முதியவருக்கு தெரியாது. உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ‘‘என்னிடம் ஆடைகள் ஏதும் இல்லையே…” என்றார்கள்.

அதற்கு அவர் ஏமாற்றத்துடன், ‘‘இங்கிருந்து நான் சென்று விடுவேன்” என்று கூறினார். ‘‘நீர் சென்று விட்டால் என்ன நடக்கும்?” என்று உமர் (ரலி) அவர்கள் வினவ, அந்த முதியவர் கூறினார்: ‘‘உமரே! அவ்வாறு நான் சென்று விட்டால், மறுமை நாளில் அந்தப் பெண் குழந்தைகளைக் குறித்து இறைவன் உம்மிடம் விசாரிப்பான். பின்னர் நீர் நரகம் செல்வதா அல்லது சுவனம் செல்வதா என்று அப்போது தீர்மானிக்கப்படும்.”

அவ்வளவுதான்! “மறுமை நாள்” என்ற வார்த்தையைக் கேட்டதும் திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள் தங்கள் தாடி நனையும் அளவுக்கு அழ ஆரம்பித்தார்கள். உடனே அங்கிருந்த பணியாளரிடம் கூறினார்கள்: ‘‘எனது ஆடையை இவருக்குக் கொடுங்கள்.”

பின்னர் அந்த முதியவரிடம் கூறினார்கள்: ‘‘இறைவன் மீது ஆணையாக! இப்போது என்னிடம் இதைத் தவிர வேறு ஆடை எதுவும் இல்லை. மறுமையில் நான் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதற்காக இதோ இப்போது இதனை வைத்துக் கொள்ளுங்கள்.”

இறுதி நாளின் எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் இப்படித்தான் தங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

விடியல் வெள்ளி  ஜூலை 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment