Saturday 27 August 2016

கலாச்சார அனாச்சாரம்!!


உலக அளவில் எங்கு நோக்கினும் தீமையின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. நன்மையை அடக்கி, தீமை ஆட்டம் போடுகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும், அதன் கூட்டணி நாடுகளும் செய்யும் அராஜகம் ஒரு பக்கம், அவர்களின் இராணுவ மேலாதிக்கம் இன்னொரு பக்கம்.

முதலாளித்துவ கலாச்சாரம் பொருளாதாரத்திலும், வாழ்க்கைப் பாணியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. கல்வி, மருத்துவம் என்று முக்கியமான துறைகளில் பணம்தான் முக்கிய கருவியாக மாறியிருக்கிறது.

கலாச்சார அனாச்சாரம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகின்றது. வாழ்க்கை என்றால் அனுபவித்தல் என்ற கருத்துப் பரவல் அதிகமாகியிருக்கிறது. ஆண்-பெண் உறவுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தரங்கெட்ட மனிதன் தன் மகள்களிடம் அல்ல, பிறந்த குழந்தைகளிடம் கூட பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுகின்றான்.

கல்வி, கலாச்சார வளர்ச்சி, வாசிப்பு, ஆய்வு போன்றவற்றின் முக்கியத்துவங்கள் குறைந்து விட்டன. கொடூரங்கள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை “வாழ்க்கையை அனுபவிக்கிறோம்” என்ற பெயரில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்படுகின்றன. மனங்கள் மரத்து, மரித்துப் போய்விட்டதையே இவை காட்டுகின்றன.

சத்தியம், நீதி எல்லாம் அன்னியமாகி விட்டன. அப்பாவிகள் கிஞ்சிற்றும் தயக்கமில்லாமல் தூக்கிலேற்றப்படுகிறார்கள். நீதிமன்றங்களே அநீதிகளுக்கு சாட்சியாக நிற்கின்றன.

மது அருந்துவது என்பது சாதாரண நீர் அருந்துவது போன்று இப்பொழுது கருதப்படுகின்றது. இளைஞர்கள் இதன் அடிமைகளாக மாறிய காலம் போய், அரசின் கைங்கரியத்தால் இன்று இளம் பெண்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். வீடுகளில் இப்பொழுது இதனை எதிர்க்கவோ, கண்டிக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குடிக்கும் மகனிடம் “குடிக்காதே” என்று சொல்லும் தைரியம் பெற்றோருக்கு இல்லை.

வட்டிக்காரர்கள் மறுபிறவி எடுத்துள்ளார்கள். மொத்த சமுதாயத்திலுமே பொருளாதார ஒழுங்கு என்பது சீரழிந்து கிடக்கின்றது. ஜாதிய-வகுப்புவாத சக்திகள், ஃபாசிசம், ஹிந்துத்துவம் போன்றவை இன்று வளர்ச்சி, மறுமலர்ச்சி என்ற முகமூடிகளில் புதிய படையெடுப்பைத் தொடங்கியிருக்கின்றன. வளர்ச்சியின் நாயகர்களாக பல கொலைகளுக்குக் காரணமான கோர முகங்கள் காட்டப்படுகின்றன.

இவற்றிற்கு முன்னால் ஜனநாயகம் பலஹீனக் குரல் எழுப்புகின்றது. அது பெயரளவிலேயே உள்ளது என்றாகிவிட்டது. பலவீனமான மக்கள் எப்பொழுதும் போல் அதிகார மையங்களிலிருந்து இன்றும் அகன்றே நிற்கின்றனர். வகுப்பு பேதங்கள் குறைந்தபாடில்லை, மாறாக இன்னும் அதிகரிக்கவே செய்துள்ன. முந்தாநாள் வரை தீண்டாமைக் கொடுமைகள், நேற்று வரை ஜாதிக் கலவரங்கள், இன்று வரை வகுப்புக் கலவரங்கள் என்று நாடு வீரநடை போடுகின்றது அழிவின் பாதையில்!!

இதுதான் இன்றைய இந்தியாவின் சித்திரம். இந்தச் சூழலில்தான் நாம் நம்மைக் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முஸ்லிம்கள் ஓர் உறுதியான நிலைப்பாடு எடுப்பதற்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

எது நன்மை, எது தீமை, எது நன்மையின் கூட்டம், எது தீமையின் கூட்டம்... என்று எதுவுமே முஸ்லிம்களுக்குத் தெரிவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் ஒரு விசுவாசி சத்தியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். நீதியின் சாட்சி பகர்வதன் மூலம் ஒரு விசுவாசி அல்லாஹ்வுக்கு சாட்சி பகர்கிறார். இஸ்லாம் தீமைக்கெதிராகப் போராடுவதில் பன்முகத்தன்மை கொண்டது. இதனைத்தான் இறைத்தூதர்களின் உதாரணங்களும், இறைவேதங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல் மாயிதா 5:8)

புதிய விடியல் செப்டம்பர் 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment