Saturday 27 August 2016

அருட்கொடைகள் அருளப்பட்ட உம்மத்!


மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்திலிருந்து பல சான்றுகளை கண்கூடாக கண்டார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் பல அற்புதங்களை கண்டார்கள்.

மன்னு சல்வா என்ற விண்ணுலக உணவு இறைவன் புறத்திலிருந்து இலவசமாக இவர்களுக்கு வழங்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கடலில் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதை கண்கூடாக கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வழியில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடியபோது தனது கைத்தடியை பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுகளை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள்தான் இந்த இஸ்ரவேலர்கள்.

ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் நிறைய அற்புதங்களை வழங்கினான். அவர்களது பிறப்பே ஓர் அதிசயம்தான். குழந்தையாக இருந்தபொழுது அவர்கள் மக்களிடம் பேசினார்கள். களிமண் பறவையில் ஊதினால் அது உயிர் பெற்றெழும். பிறவிக் குருடர்களையும், குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்கள். இறந்தோரை உயிர்ப்பித்தார்கள்.

கொலை செய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதை தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் வீசிய பொழுது அது அவர்களுக்கு இதமான குளிரூட்டும் சோலையாக மாறிய அற்புதம் நடந்தது.

இந்த உம்மத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அருட்கொடைகள் ஆச்சரியமளிக்கின்றன. ஆனால் அற்புதங்களுக்குப் பதிலாக அனைத்தும் அன்பளிப்புகள். முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தை சுவர்க்கத்திற்கு அனுப்புவதில் அத்தனை முனைப்பையும் அல்லாஹ் காட்டுகிறான். உதாரணத்துக்கு ஜும்ஆவை எடுத்துக்கொள்வோம்.

இப்படி முந்தைய நபிமார்கள் நிகழ்த்திய அற்புதங்களைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் நிகழ்த்தியதாக காணக் கிடைக்கவில்லை. ஆனால் அத்தனை நபிமார்களுக்கும் தலைவரே அவர்கள்தான்.

“ஒருவர் ஜும்ஆ தினத்தன்று குளித்துவிட்டு, தம் சக்திக்குட்பட்ட உடைகளை அணிந்துகொண்டு, தன் இல்லத்திலிருக்கும் நறுமணத்தை பூசி, பள்ளிவாசலுக்கு சென்று, அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், தன் மீது விதியாக்கப்பட்டுள்ளதை தொழுது, இமாம் உபதேசம் செய்ய எழுந்ததும் அவரது உபதேசத்தை செவி சாய்த்து கேட்டால், அத்தினத்திற்கும் மறு ஜும்ஆவிற்குமிடையிலும் அவரால் நிகழ்த்தப்படும் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஸல்மான் (ரலி), புகாரீ)

அதேபோன்று குறைந்த காலத்தில் நிறைந்த நன்மைகளையும் அல்லாஹ் பலப்பல சந்தர்ப்பங்களில் இந்த உம்மத்துக்கு வழங்கியிருக்கிறான். திருக்குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்கு பத்து நன்மைகளை அல்லாஹ் வழங்குவதாக அண்ணலார் அருளினார்கள்.

இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும், ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் மீதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என்றும் அண்ணலார் கூறியுள்ளார்கள்.

இத்தகைய அன்பளிப்புகளின் உச்சகட்டம்தான் நம்மைக் கடந்து சென்ற ரமலான். அல்லாஹ் தன் அடியார்களை சுவர்க்கத்தில் நுழைவிக்க ஏற்பாடு செய்த அற்புத மாதம்.

ஒரு சுன்னத்துக்கு ஃபர்ளின் நன்மையையும், ஒரு ஃபர்ளுக்கு 27 ஃபர்ளுகளின் நன்மையையும், ஒரு ஜமாஅத் தொழுகைக்கு 70 மடங்கு நன்மையையும் அல்லாஹ் அள்ளி வழங்கினான். லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க இரவை ரமலானில் வழங்கினான்.

தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றார்கள். நம்மால் அப்படி செய்ய முடியுமா? ஆனால் ஷவ்வால் மாதம் 6 நோன்புகள் நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.

“யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)

புதிய விடியல் ஆகஸ்ட் 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment