Tuesday 3 December 2013

காதலர் தினம் எப்படி வந்தது?


இஸ்லாம் மார்க்கத்திற்கு ஒவ்வாத, அன்னியக் கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் பலவற்றை முஸ்லிம்கள் தற்காலத்தில் அதிகமாகச் செய்கிறார்கள். அந்தச் செயல்களில் ஈடுபடுகின்ற பலருக்கு தாங்கள் செய்வது சரியா, தவறா என்பது தெரியாது.

அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தங்கள் குருட்டுத் தலைவர்களைப் பின்பற்றுகின்றனர்.

அவர்களில் ஒரு சிலர், தாம் செய்யும் செயல்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு ஒவ்வாதவை; அவை அஞ்ஞான காலத்து வழிபாட்டிலிருந்து வந்தவை என்பதை அறிகின்றனர்.

ஆம்! அவர்கள் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்ளும் அடையாளங்கள் அவிசுவாசத்தின் அடையாளங்கள். அவர்கள் கடன் வாங்கும் கருத்துகள், சிந்தனைகள் யாவும் மூடநம்பிக்கையிலிருந்து பிரவாகமெடுத்தது. இவை அனைத்தும் இஸ்லாம் மார்க்கத்திற்கு நேரெதிரானவை.

‘வேலன்டைன்ஸ் டே’ (Valentines Day) என்ற காதலர் தினத்தை (பிப்ரவரி 14) எடுத்துக் கொள்ளுங்கள். ஐரோப்பிய நாடுகளில் செத்து விட்ட இந்தத் தினம், அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் மட்டுமே தற்பொழுது உயிரோடிருக்கும் இந்தத் தினம், திடீரென்று இப்பொழுது முஸ்லிம் நாடுகளில் முளைத்திருக்கிறது.

யார் இந்த வேலைன்டைன்? ஏன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது?

காதலர் தினத்திற்கென்று கதைகள் ஏராளம் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவு. காதலர் தினம் உருவானது அஞ்ஞான – மடமைக் கால கலாச்சாரத்திலிருந்துதான்.

நான்காவது நூற்றாண்டின் ரோமர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மதச் சடங்குதான் இந்த ‘வேலன்டைன்’ கொண்டாட்டம். ஆட்டு மந்தைகள் மற்றும் பொருள் வளத்திற்கான கடவுளான லூப்பர்கஸ் என்ற கடவுளைக் கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான்  இது.

இந்தத் தினக் கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. இந்தத் தினத்தில் ஒரு குலுக்கல் நடைபெறும். பரிசுச் சீட்டுக் குலுக்கல் அல்ல இது. இளம் பெண்ணை ஆண்களுக்கு இன்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் தாரை வார்த்துத் தர நடக்கும் குலுக்கல் இது. எந்த இளம் பெண் எந்த ஆணுக்கு என்பதைக் குலுக்கலில் எடுக்கப்படும் துண்டுச் சீட்டு தீர்மானிக்கும்.

அடுத்த வருடம் இதே தினத்தில் புதிய குலுக்கல் நடைபெறும் வரை இந்த இளம் பெண்கள் அவரவருக்குரிய ஆண்களுடனேயே காலம் தள்ள வேண்டும். அந்த ஆண்களுக்கு இவர்கள் இன்பம் தந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தத் தினத்தில் இன்னொரு இழிவான காரியமும் அரங்கேற்கப்படும். இரண்டு இளம் ஆண்கள் ஓர் இளம் பெண்ணை இடுப்பில் அணியப்படும் தோலினால் ஆன வாரால் அடிப்பார்கள். இந்த ஈன இரக்கமற்ற செயலைச் செய்யும் அந்த இரண்டு ஆண்களும் ஒரு சிறிய ஆட்டுத் தோலைத்தான் ஆடையாக அணிந்திருப்பர். அந்தச் சிறிய ஆடையும் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் மற்றும் நாய்களின் இரத்தங்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சாட்டையடியை ‘புனிதமானதாக’ அவர்கள் கருதினார்கள். அந்த இளம் ஆண்கள் ‘புனிதப் புருஷர்களாக’ மதிக்கப்பட்டார்கள்.

இப்படி சாட்டையடித்தால் அந்தப் பெண்கள் நல்ல முறையில் குழந்தைகளை வளர்ப்பார்களாம்.

இந்த மடத்தனமான கொண்டாட்டத்தை, ‘லூப்பர்காலியா’ என்றழைக்கப்படும் இந்தக் கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக கிறிஸ்தவ மதம் முயற்சி செய்தது; வழக்கம் போல் தோல்வி கண்டது. ஆதலால் குறைந்தபட்ச நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தது.

குலுக்கல் சீட்டுகளில் பெண்களின் பெயர்களுக்குப் பதிலாக புனித துறவிகளின் பெயர்களை வைத்தது.

இப்பொழுது குலுக்கலில் எந்த ஆண் எந்தத் துறவியின் சீட்டை எடுக்கிறானோ அவன் அடுத்த ஆண்டு இந்தத் தினம் வரைக்கும் அந்தத் துறவியை மாதிரி வாழ வேண்டும். இந்தச் சிறு மாற்றத்தைக் கிறிஸ்தவ மதம் கொண்டு வந்தது.

‘லூப்பர்காலியா’ என்றழைக்கப்பட்ட இந்தக் கொண்டாட்டம் துறவி குலுக்கல் மாற்றத்திற்குப் பிறகு, சிறிது காலத்தில் ‘துறவி வேலன்டைன் தினம்’ என மாறியது.

கி.பி 496-ல் போப் கிலாசியஸ் என்பவரால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. துறவி வேலன்டைன் என்பவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக இந்த மாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.

இருப்பினும், கிறிஸ்தவக் கதைகளில் 50 விதவிதமான வேலன்டைன்கள் இருக்கின்றனர். அவர்களில் இரண்டு வேலன்டைன்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை, பண்புகள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன.

ஒரு கதைப்படி, துறவி வேலன்டைன் என்பவர் ஒரு ‘காதல் துறவி’யாக இருந்துள்ளார். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் சிறைக்காவலரது மகளை இவர் காதலித்தார்.

இந்தக் காதலர் தினத்தில் நடைபெறும் குலுக்கல்களால் குழப்பங்களும், தகராறுகளும் தலை தூக்க ஆரம்பித்தன. இந்தக் குழப்பங்களையும் தகராறுகளையும் சமாளிக்க முடியாத பிரெஞ்சு அரசு, கி.பி 1776ல் இந்தச் சடங்கைத் தடை செய்தது.

அந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது ஒழிந்தது.

இங்கிலாந்தில் ‘புரித்தான்கள்’ என்ற இனத்தார் பலமாக இருந்தபொழுது இது தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 1660ல் மன்னர் இரண்டாம் சார்லஸ் இதனைக் கொண்டாட ஆரம்பித்தார்.

இங்கிலாந்திலிருந்து இந்தச் சடங்கு புதிய உலகத்திற்கு அறிமுகமாகியது. வியாபார சிந்தனையுடையவர்கள் இதனை வைத்து பணம் பண்ண திட்டம் போட்டனர்.

கி.பி. 1840ல் எஸ்தர் A. ஹவ்லண்ட் என்பவர் முதல் அமெரிக்க காதலர் தின அட்டையை அச்சடித்தார். இது அந்த முதல் வருடத்திலேயே 5000 அமெரிக்க டாலருக்கு விற்றுத் தீர்ந்தது. (அன்று 5000 டாலர் என்பது மிகப் பெரிய தொகை!)

இதன் பிறகு ‘வேலன்டைன் தொழிற்சாலை’ எனும் பணம் பண்ணும் தொழிற்சாலை அமோக வளர்ச்சி பெற்றது.

வேலன்டைன் தினம் மாதிரி இன்னொரு கொண்டாட்டமும் உலகில் நிலவி வந்தது. ‘ஹால்லோவீன்கள்’ என்று சொல்லப்படும் ஓர் இனத்தாரால் உருவாக்கபப்ட்டது இந்தச் சடங்கு. இதன் பெயர் ‘ஸம்ஹைன்’.

இந்த ஹால்லோவீன்கள் இந்தக் கொண்டாட்டத்தின் போது ஆவிகள் போலவும், துஷ்ட தேவதைகள் போலவும், பேய், பிசாசு போலவும் ஆடைகள் அணிந்து, அஞ்ஞான கால வழக்கப்படி சடங்குகள் செய்வர்.

வேலன்டைன் தினக் கதையைப் போலவே கிறிஸ்தவ மதம் இதனையும் நிறுத்த முடியாமல் இதன் பெயரை மட்டும் மாற்றியது. ஆனால் அந்த மடத்தனமான சடங்குகள் அப்படியே இதிலும் உண்டு.

முஸ்லிம் நாடுகளிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் இந்த ஹால்லோவீன் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகின்றன. அறியாமைக்கால இந்த மடமையை பணக்காரர்கள் செய்கின்றனர். இதில் வெட்ககரமான ஒரு செய்தி என்னவெனில், முஸ்லிம்கள் கொண்டாடும் இந்தச் சடங்கில், ஒரு காலத்தில் நரபலி கொடுப்பதும் நடந்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் என்பது அடுத்த கதை. இன்று இஸ்லாமாபாத்தில், துபையில், கெய்ரோவில் முஸ்லிம் வியாபாரிகள் கிறிஸ்துமஸ் அடையாளங்களை விற்கிறார்கள். இதனை முஸ்லிம்கள் வாங்கிச் செல்கின்றனர்.

வெளியே எந்தத் தீங்குமே தெரியாத சில கொண்டாட்டங்கள் கூட அறியாமைக்கால நடவடிக்கைகளிலிருந்து வந்திருக்கலாம். ஒரு கருத்துப்படி மடமைக் கால கலாச்சாரத்தில் மக்கள் தங்கள் பிறந்த நாட்களில் ‘தீய ஆவிகளைப்’ பற்றி அஞ்சினார்கள். பிறந்த நாள் என்பது ஒருவனது புதிய வாழ்வின் அடுத்த வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாள் ஆகும்.

இந்நாளில் தீய ஆவிகள் தம்மைப் பீடித்துக் கொண்டால் அந்த வருடம் முழுவதும் தமக்கு பீடையாகிவிடும் என்றொரு நம்பிக்கை பொதுவாக இருந்து வருகிறது.

ஆதலால் பிறந்த நாள் காணும் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டு குடும்பத்தினரும், நண்பர்களும் சிரிப்பும், கும்மாளமும் அடித்து மகிழ்ச்சியோடு இருப்பர். இப்படிச் செய்தால் தீய ஆவிகள் அவரைத் தாக்கதாம்.

இஸ்லாம் மார்க்கத்திற்கெதிரான இந்தக் கருத்துகளையும், நம்பிக்கைகளையும் ஒரு முஸ்லிம் எப்படி சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

அறியாமைக்கால மடமைத்தனத்தை மண் தோண்டிப் புதைக்கவே இஸ்லாம் இந்த அவனிக்கு வந்தது. அந்த மடமைத்தனம் எந்த உருவத்தில் வந்தாலும் இஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்ளாது.

அறியாமைக்கால மடமைத்தனத்தின் சிறு அரிச்சுவடி முஸ்லிம்களிடம் இருந்தாலும் இஸ்லாம் அதனைக் கண்டு சகித்துக் கொள்ளாது. மேலும் இஸ்லாம் அதனைப் பின்பற்றும் விசுவாசிகளிடம் இஸ்லாம் என்ற தனித்த அடையாளத்தையும், தூய மார்க்கத்தைப் பின்பற்றும் தன்மையையும் மிகக் கவனமாக எதிர்பார்க்கிறது.

இஸ்லாமியச் சட்டங்கள் இதனைத்தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன.

உதாரணத்திற்கு  ஒன்றிரண்டைப் பார்ப்போம். சூரியன் உதயமாகும்பொழுதும், நடு உச்சியில் இருக்கும்பொழுதும், மறையும் பொழுதும் தொழுகையை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஏன்? சூரிய வழிபாடு என்பது பிற மதங்களில் உள்ளது.

நாளடைவில் அந்த நேரங்களில் தொழும் தொழுகைகளும், இந்தச் சூரிய வழிபாடு என்னும் பிறமதச் சடங்கும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சமயங்களில் தொழுவதையே இஸ்லாம் முற்றிலும் தடை செய்கிறது.

முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்பது ஒரு நபிவழியாகும். யூதர்களும் இந்த முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆதலால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் முஹர்ரம் 9 அன்றோ அல்லது முஹர்ரம் 11 அன்றோ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்குமாறு அண்ணலார் பணித்தார்கள்.

அதேபோல் முஸ்லிமல்லாதவர்களின் தோற்றம் மாதிரி தோற்றமளிக்க இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுவதும் அவன் முஸ்லிமாகவே வாழ வேண்டும். மகிழ்ச்சியிலும், துக்கத்திலும், கொண்டாட்டங்களிலும், துன்பங்களிலும் நாம் ஒரே நேரான பாதையைத்தான் பின்பற்ற வேண்டும். பல பாதைகளை அல்ல.

இன்று ஜாஹிலிய்யாவின் பலம் எங்கும் வியாபித்திருக்கிறது. கலாச்சாரத்தில், அன்றாட மனித வாழ்வில் அது தனது பிடியை இறுக்கியுள்ளது. மீடியாவும் அதன் பிடிக்குள்ளேதான் இருக்கிறது.

இதனால்தான் முஸ்லிம்கள் வேலன்டைன்களையும், ஹால்லோவீன் ஆவிகளையும் வரவேற்று, அரவணைத்துக் கொள்கின்றனர். ஸாந்தா கிளாஸ் என்ற கொண்டாட்டத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களாகிய நாம் இவற்றின் பிடியிலிருந்து வெளியில் வர வேண்டும். நமது வாழ்வில் அன்னிய, அறியாமைக்கால சிறு கறை கூடப் படியாமல் பாதுகாத்திட வேண்டும்.

ஃகாலித் பெய்க்

தமிழில்: MSAH


விடியல் வெள்ளி  எப்ரல் 2001 (இம்பாக்ட் பக்கம்)

No comments:

Post a Comment