Monday 28 September 2015

எது சிறந்த கல்வி?


அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது அறிவு. அறிவைத் தேடுவது, அறிவு ஞானத்தை வளர்ப்பது, அதனை அடுத்தவருக்கு எத்தி வைப்பது, அடுத்த தலைமுறைக்கு அதனைக் கொண்டு சேர்ப்பது போன்றவை மனிதனுக்கு மட்டுமே அல்லாஹ் வழங்கியுள்ள சிறப்பு,

அறிவைத் தேடுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு கிரந்தம்தான் திருக்குர்ஆன். சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் அது தூண்டுகோலாக அமைகிறது.

"அவன் தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகின்றான். எவர் ஞானம் கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனையுடேயோர்தான் படிப்பினை பெறுவார்கள்."(அல்குர்ஆன் 2:269)

அத்தோடு அறிவைத் தேடுவது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை கடமை என்று வலியுறுத்தினார்கள் எம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள். அதனை அடிப்படையாக வைத்துதான் முன்வாழ்ந்த முஸ்லிம்கள் அறிவியலில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். பல விஞ்ஞான உண்மைகளைக் கண்டுபிடித்து உலகத்துக்கு தந்தார்கள். அறிவியலில் அவர்கள் செய்த பங்களிப்பு அளப்பரியது.

நம்முடைய முன்னோர்களில் அறிவியல் ஆராய்ச்சிக்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் பலர் இருந்தார்கள். அடுத்த தலைமுறைக்கு தாங்கள் தேடிப் பெற்ற அறிவியல் உண்மைகளைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் வரலாறுகளைப் படிக்கும்பொழுது நாம் இதனை நிதர்சனமாகக் காணலாம். அவிசென்னா என்றழைக்கப்படும் அலீ இப்னு சீனா மருத்துவ உலகில் ஒரு மாமேதையாக திகழ்ந்தார். “மருத்துவ உலகின் தந்தை” என்றறியப்பட்டார். இன்றைய தலைமுறையின் அநேக மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு இப்னு சீனாவின் மருத்துவ கண்டுபிடிப்புகளே அடிப்படை அம்சமாக அமைந்துள்ளது.

இப்னு சீனா போன்று இஸ்லாம் அனைத்துவித அறிவுகளையும், பல்வேறு துறைகளின் கல்வி ஞானத்தையும் பெறுவதற்கு மனிதனைத் தூண்டுகிறது. மனிதகுலத்தை நேர்வழிப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மாமறையின் முதல் வாசகமே “வாசிப்பீராக!” என்பதுதான். அதன் தொடர்ச்சியாக வரும் ஒரு சில வசனங்களும் கற்றல், கற்றுக் கொடுத்தல், எழுதுகோல் என்று அறிவு தேடுவது சம்பந்தமாகவே அமைந்துள்ளன.

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கல்வி ஞானத்துக்கும், சுவனத்துக்கும் முடிச்சு போடுகிறார்கள். அவர்கள் அருளினார்கள்: “ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.” (முஸ்லிம்)

இப்படி அறிவைத் தேடுவதை ஒரு புனிதப் பணியாக இஸ்லாம் காண்கிறது. எல்லா துறைகளிலுமுள்ள அறிவையும் இஸ்லாம் தேடச் சொல்கிறது. அந்த அறிவுகளிலெல்லாம் தலைசிறந்தது எது என்றும் அது பறை சாற்றுகிறது. அதுதான் ‘‘லாஇலாஹ இல்லல்லாஹ்” என்பதைக் குறித்து உள்ள அறிவு.

இந்த அடிப்படை அம்சத்திலிருந்துதான் அனைத்து அறிவு ஞானங்களும் ஊற்றெடுக்கின்றன. ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவன் எவ்வளவு பெரிய கல்வியைப் பெற்றாலும் அந்தக் கல்வியின் பின்னணியில் அவன் அடைவது தன்னைப் படைத்த இறைவனாக இருக்க வேண்டும். அதாவது, அவனது அடிப்படைக் கல்வியான “லாஇலாஹ இல்லல்லாஹ்” அவனிடமிருந்து மாறிப் போனால் அவன் நஷ்டவாளிகளில் ஒருவனாவான்.

அவன் பெறும் கல்வி அல்லாஹ்வின் ஆற்றலையும், மகத்துவத்தையும் அவனுக்கு உணர்த்துவதாக இருக்க வேண்டும். அவனது ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக அமைய வேண்டும். அந்தக் கல்வியினூடாக அல்லாஹ்வின் மகா வல்லமையைக் கண்டு அவனுக்கு தன்னடக்கம் வரவேண்டும். அல்லாஹ்தான் அதிசக்தி படைத்தவன் என்றுணர்ந்து அவன் முன் சாஷ்டாங்கம் செய்பவனாக அவன் மாற வேண்டும். இப்படிப்பட்ட கல்வியைத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.

வானங்கள், பூமி, நட்சத்திரம், சந்திரன், மிருகங்கள், பறவைகள் என்று தொடங்கி ஈ வரை பரிசுத்த குர்ஆன் கலந்துரையாடுகின்றது. ஓர் ஈயை உதாரணமாகக் கூறுவதைக் கொண்டு தான் வெட்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான்.

வானியல் ஆராய்ச்சி செய்தாலும், புவியியல் பற்றிப் படித்தாலும், நட்சத்திரங்களைக் குறித்து அறிந்தாலும், உயிரினங்களைப் பற்றிப் பாடம் நடத்தினாலும் அவற்றைப் படைத்தது யார் என்பதை நாம் உணர வேண்டும்.

பின்தங்கிப் போயிருந்த நம் சமுதாயத்தினர் இன்று கல்வி கற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள். ஆனால் நம் இளவல்கள் கற்கும் கல்வி ஈமானுக்கு வலு சேர்க்கிறதா? இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிறதா என்பதை பெற்றோர்தான் உறுதி செய்ய வேண்டும்.

புதிய விடியல்  ஜூன் 2015 (மனதோடு மனதாய்...)

No comments:

Post a Comment