Saturday, 17 November 2018

தீரன் திப்புவே... - கவிதை

தீரன் திப்புவே...
நீ இன்றிருந்தால்
எங்களுக்கு எவ்வளவு
உதவியாக இருந்திருக்கும்!
நீ இன்றிருந்தால்
குஜராத்தில்
கர்ப்பிணிளைக்கூட
கருவைக் கிழித்து
நெருப்பில் எறிந்து
கரியாக்கினார்களே..
அது நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
நெல்லிப் படுகொலைகளும்
பகல்பூர் படுகொலைகளும்
ஹாஷிம்புராவும்
நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
ஃபாசிசத்தை வேரோடும்
வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிந்திருப்பாயே...
நீ இன்றிருந்தால்
இந்த மனித குல எதிரிகளை
மண்ணில் போட்டு
மாய்த்திருப்பாயே...
அப்பேற்பட்ட ஆங்கிலேயர்களே
உன்னைக் கண்டு
குலை நடுங்கினார்களே...
இந்தப் படுபாவி ஃபாஸிஸ்டுகள்
எம்மாத்திரம் உனக்கு?
எங்களின் ஆதர்ஷ புருஷன் நீ...
எங்களின் எடுத்துக்காட்டு நீ.,..
எங்களின் முன்மாதிரி நீ...
நீ காட்டிய வழியிலேயே...
நீ அடைந்த வழியிலேயே...
நாங்களும் செல்ல
நாடுகிறோம்...
ஆம்...
உன் தீரத்தில் சிறிதளவேணும்
எங்களுக்குக் கிடைக்காதா
என்று ஏங்குகிறேம்...
அதற்காகவே
அல்லும் பகலும்
அயராதுழைக்கிறோம்...
உன்னைப் போன்று தீரர்களாக
உருவாவதற்கு உழைக்கிறோம்
ஒற்றுமையை விழைகிறோம்...
நீ விதைத்த வீரம்
எங்கள் நரம்புகளிலும்
மங்காது ஓடுகிறதென்று
இன்ஷா அல்லாஹ்
ஒரு நாள் நிரூபிப்போம்...
MSAH

மாவீரன் திப்பு சுல்தான்


மாவீரன் திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை இருந்தன. போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகளையும், ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளையும் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட்-ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்பு பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்களும், பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் அமைய வேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

தலைமைத்துவத்தின் இலக்கணம்!

"குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு, உயர்வான குறிக்கோளை அடைந்து சாதனை படைப்பதுவே மேதைத் தன்மையின் இலக்கணம் என்று உலக வரலாற்றில் எடுத்துக்காட்டு வைக்க வேண்டுமாயின், முஹம்மது நபியின் வாழ்வைத் தவிர வேறு எவருடைய வாழ்வைக் காட்ட முடியும்?" - பிரெஞ்சுப் பேரறிஞர் லாமார்ட்டின்

தலைவரின் தகுதிகள்!

"முஹம்மது என்ற ஒருவரிடத்தில், 
இறைத்தூதர்,
தத்துவ வித்தகர், 
சட்டம் இவற்றுபவர்,
போர் வீரர்,
கருத்தை ஆள்பவர்,
அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர்,
பிம்பங்களற்ற
மத நம்பிக்கையின் செயலாக்கம் தருபவர்,
உலக ஆட்சியையையும் உள்ளங்களின் ஆட்சியையும் நிறுவியவர் எனும் பன்முகத் திறமைகள் இருந்தன. இதனால்தான், முழுமையான மனிதத்துவம் என்பதன் அளவீடு எனும்போது, முஹம்மதை விட உயர்வானவர் வேறு எவர் இருப்பார் என்று நாம் பெருமயாகக் கேட்க முடிகின்றது!"
(Source: Historie de le Turquie, Paris 1854, Vol. 11, Pages:276&277)

நபிமார்களின் தேவை

ஒரு வாழ்க்கையைத்தான் இன்னொரு வாழ்க்கை பின்பற்றுகிறது. நம்மை ஈர்ப்பதற்கு நமக்கு உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
போராட்டங்கள் நிறைந்த அன்றாட வாழ்க்கையில் சரி எது, தவறு எது என்று சுட்டிக்காட்ட, நம்மிடம் முரண்பட, நம்மிடம் கேள்விகள் கேட்க, நமது கேள்விகளுக்கு பதிலளிக்க, தவறான புரிதல்களைத் திருத்த, நம் கரம் பற்றி அழைத்துச் செல்ல, நமக்கு முன்மாதிரியாக இருக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
அதனால்தான் வேதங்களின் எண்ணிக்கையை விட இறைத்தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதாவது, பல நபிமார்கள் புதிய இறைவேதம் வழங்கப்படாமல் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

நம்பிக்கை...

ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைந்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துபட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கி வர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான்.

"ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கி வரப் போகின்றாயா?" என்று அதட்டிக் கேட்டார் அவர். ஆனால் அந்தப் போராளியோ, விட்டபாடில்லை. அடம் பிடித்தான். வேறு வழியின்றி, அந்த அதிகாரி, தன் படைகளிடம் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்தக் கட்டளையிட்டு, அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

துப்பாக்கித் தோட்டாவைப் போன்று விரைந்து சென்ற அவ்வீரன், சில நிமிடங்களிலேயே தன் தோழனின் உடலைத் தோளில் சுமந்தவனாக எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் வநது சேர்ந்தான்.

"ஆகா, இந்தப் பிரேதத்தை எடுத்து வரவா உன் உயிரைப் பணயம் வைத்தாய்?" என்று கேட்டார் அதிகாரி.

"எஸ், ஸார். எனக்குத்தான் தெரியும் இதன் மதிப்பு. நான் அவனிடம் சென்று பார்த்தபோது, அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அப்போது அவன் சொன்னான்: "நண்பா... எனக்கு நன்றாகத் தெரியும், நான் சாகுமுன் நீ வருவாய் என்று." உடனே நான் குனிந்து அவனைத் தூக்கித் தோளில் வைத்தேன். அந்தோ... அப்போதுதான் அவனுடைய உயிர்
பிரிந்தது. இப்போது சொல்லுங்கள், நான் உயிரைப் பணயம் வைத்துச் சென்றதில் அர்த்தம் இருக்கின்றதா இல்லையா?"
என்றான் அந்தப் போர்வீரன்.

நம்பிக்கை என்பது கண்மூடித்தனம் என்று யார் சொன்னது?

நம்பிக்கை என்பது, பிறர் கண்ணால் பார்க்க முடியாதவற்றை இதயத்தின் உணர்வால் பார்ப்பதாகும். மக்கள் தாம் நுகரும் நன்மைகளுக்காக, அன்பினாலும் பக்தியினாலும் நன்றிப் பெருக்காலும் பார்ப்பதுதான் நம்பிக்கையாகும்.

(“அண்ணலார் கற்றுத்தந்த தலைமைத்துவம்” நூலிலிருந்து...)

இஹ்ஸான் ஜாஃப்ரியை படுகொலை செய்த அன்று நடந்தது என்ன?


குஜராத் இனப்படுகொலை 2002
பிப்ரவரி 28 2002 அஹமதாபாத்
குல்பர்க் சொஸைட்டி

காலை 10.30 மணியளவில் வார்டு எண் 19ன் காங்கிரஸ் உறுப்பினர் அம்பலால் நாடியா, வார்டு எண் 20ன் உறுப்பினர் கன்னுலால் சோலங்கி ஆகியோருடன் இஹ்ஸான் ஜாஃப்ரியைக் காண வந்தார் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே. போலீஸ் படையை உடனே அனுப்பி வைப்பதாகவும், அவர் முழுவதுமாகப் பாதுகாக்கப்படுவார் என்றும் அவர்கள் இஹ்ஸான் ஜாஃப்ரியிடம் உறுதியளித்தனர்.

காவல்துறை ஆணையர் சென்ற 5 நிமிடத்தில், அதாவது காலை 10.35 மணியளவில், குல்பர்க் சொஸைட்டிக்கு கொஞ்சம் வெளியே இருந்த ஸாஹிர் பேக்கரியும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பகல் 11.15-11.30 மணியளவில் குல்பர்க் சொஸைட்டியில் கல்வீச்சு தொடங்கியது. 45 நிமிடங்கள் கழித்து, அதாவது பகல் 12.15-12.30 மணியளவில், குல்பர்க் சொஸைட்டியின் பின்பக்கம் உள்ள கட்டடங்களிலிருந்தும், பங்களாக்களிலிருத்தும் கற்கள், அமில பல்புகள், கண்ணாடிக் குப்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை குல்பர்க் சொஸைட்டி மீது வீசப்பட்டன.

பகல் மணி 12.30க்கும்.12.45க்கும் இடைப்பட்ட வேளையில், ஒரு முஸ்லிமல்லாதவருக்குச் சொந்தமான பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து கற்களும், பெரும் பாறாங்கற்களும் எறியப்பட்டன. குல்பர்க் சொஸைட்டியின் குடியிருப்பு வளாகங்கள் இதனால் பெருத்த சேதமடைந்தன. இந்த வளாகங்கள் சேதமடையாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் ஒருவேளை தங்களைக் காத்திருக்கலாம்.

பெரும் பெரும் கற்கள், அமில பல்புகள், எரியும் துணிப் பந்துகள் ஆகியவை மதியம் 1-1.15 மணி வரை வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. மதியம் ஒரு மணியளவில், அந்த சொஸைட்டியில் வசிக்கும் யூசுஃப் என்பவர் வன்முறையாளர்களிடம் பிடிபட்டார். கயவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டி, தீ வைத்துக் கொளுத்தினர்.

குடியிருப்பில் வசிப்பவர்களிடையே பீதி அதிகமானது. இந்தச் சமயத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் 80 நபர்கள் இருந்தனர்.

பிற்பகல் 2.30-2.45 மணியளவில், "குசி ஜாவோ"(உள்ளே செல்லுங்கள்) என்ற கத்தல்களுக்கிடையே, திடீரென்று சொஸைட்டியின்பின்பக்கம், இருப்புப் பாதைக்கு அருகிலுள்ள கதவு உடைக்கப்பட்டது.

பிற்பகல் மணி 2.30க்கும் 2.45க்குமிடையில், வன்முறைக் கும்பலின் குறியான இஹ்சான் ஜாஃப்ரி அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் மிகவும் சிரத்தை  எடுத்துக் கட்டிய அவரது வீட்டின் முன்பு, 45 நிமிடங்களாக, அவர் மிகக் கொடுமையாக துண்டு துண்டாக வெட்டப்பட்டார். இறுதியில் அவரது தலையும் வெட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வப்பட்டார் "வந்தே மாதரம் ", "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரது விரல்களைத் துண்டு துண்டாக வெட்டிய பின், அந்தப் பகுதி முழுவதும் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டும் வந்தார். அடுத்ததாக அவரது கரங்களும், கால்களும் வெட்டப்பட்டன.

அதன்பின், கூர்மையான ஒரு கருவியை அவரது கழுத்தில் மாட்டி, இழுத்துச் சென்றது அந்தக் கொலைகாரக் கும்பல். பின்னர், அவர் தீயில் வீசப்பட்டார்.

பொதுச் சேவையிலேயே தன் வாழ் அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு நேர்ந்த கொடூர முடிவு இது. இந்தத் தாக்குதலில், இஹ்சான் ஜாஃப்ரியுடன் அவரது மூன்று சகோதரர்களும், இரண்டு மருமகன்களும் கொல்லப்பட்டனர்.

-oOo-

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக சொஸைட்டிக்கு வந்தனர். குல்பர்க் சொஸைட்டிக்கு பின்பக்கம் ஒரு இருப்புப்பாதை செல்கிறது. அதற்கு அப்புறமுள்ள பணியாளர்கள் குடியிருப்புகளிலிருந்து 5000-6000 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் வந்தது. ஐக்ரூப் சிங் ராஜ்புட் என்பவன்தான் இந்தக் கும்பலுக்குத் தலைமையேற்று வந்தான்.

பாஜக அஹமதாபாத் முனிசிபாலிட்டியில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தபொழுது, இவன் துணை மேயராக இருந்தான். இந்தக் கும்பலிடமிருந்தும் கல்லெறிதல் தொடங்கியது.

ஆக, குல்பர்க் சொஸைட்டியின் அனைத்துத் திசைகளிலிருந்தும் கல்மழை பொழிந்தது.

இதற்கிடையில் ஜாஃப்ரி 200 தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். காவல்துறை ஆணையர் பாண்டே, காந்தி நகரிலுள்ள அமர்சிங் சௌத்ரி, நரேஷ் ராவல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று பலரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஒரு நேரடி சாட்சி சொல்கிறார்: “பிற்பகல் 2.30 மணியளவில் கதவருகில் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்த ஜாஃப்ரி ஸாஹிபை 4 பேர் வெளியே இழுத்து வந்தனர். அந்த நால்வர் பெயர்கள் வருமாறு: சமன்புராவில் கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் நாராயன் கப்ரா,
“பாயாஜி" ரமேஷ் சோட்டி, ராஜஸ்தான் மளிகைக் கடை உரிமையாளரின் மகன் மனிஷ் ஜெய்ன், சம்பாபென் என்பவரின் மகன் கிருஷ்ணா.(காவல்துறையின் புலன் விசாரணைகளின்போது நேரடி சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களிலும் இந்த நால்வரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.)

“ஜாஃப்ரி ஸாஹிபை வெளியே இழுத்து வரும்பொழுதே ஒரு வாளால் அவரை மூன்று துண்டுகளாக வெட்டினர். ஜாஃப்ரி ஸாஹிபை தீ வைத்துக் கொளுத்திய பிறகு, அந்த வன்முறைக் கும்பல் டயர்களை எரிக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல் ஜாஃப்ரி ஸாஹிப் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் உடைத்து, எல்லா புறங்களிலும் தீ வைத்தது. உள்ளே 35 குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக் கூத்தாடின. ஆனால் அக்குழந்தைகளால் வெளியே வர முடியாது. பிற்பகல் 3.15 மணியளவில் ஜாஃப்ரியின் வீடு முழுவதும் புகைமண்டலமாக நிரம்பியது. பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த அனைவரும் மூச்சு விட முடியாமல் திணறினர்.

வெளியே வந்தால் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லப்பட்டதன் பேரில் சில பெண்கள் வெளியே வந்தனர். இந்தக் குழுமத்தின் முன் வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சிகள், கையில் வாளுடன் வந்த தினேஷ் பிரபுதாஸ் ஷர்மா என்பவன் யூஸுஃப் என்பவரைக் கொல்வதை நேரில் கண்டனர்.

ஒரு நேரடி சாட்சியின் மகளின் ஆடைகளை லாதியா என்பவன் கிழித்தெறிந்தான். பின்னர் அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தான். ஏற்கனவே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட லாலா மோகன்சிங் தர்பார் என்பவன் வேறொரு பெண்ணைக் கொன்றான்.

மாலை 4.45 மணியளவில், ஒரு சிறிய தோட்டத்தில் சிறு அறையில் ஒளிந்திருந்த ஒரு நேரடி சட்சிக்கு "ஓடு... ஓடு..." என்ற சப்தங்கள் கேட்டன. போலீஸ் வத்திருக்கும் என்று அந்த நேரடி சாட்சி யூகித்துக் கொண்டார்.

மூச்சு முட்டலில் திணறிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றுமாறு இந்த நேரடி சாட்சி காவல்துறை ஆணையர் டான்டனிடம் கோனார். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்ற தயங்கினார்.

இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜாஃப்ரியின் வீட்டிலிருந்த தொட்டிகளும், தோட்டத்திலும், அடுத்த வீடுகளிலுமிருந்த தொட்டிகளும் முதலில் காலி செய்யப்பட்டு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஆக்கினார்கள் கயவர்கள். இதனால் தீயை அணைக்க முடியாமல் ஆக்கினார்கள்.

தீ படு வேகமாகப் பரவியது. ஆனால் அந்தக் காவல்துறை துணை ஆணையாளர் டான்டன் உயிர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

போலீஸ் வந்து அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 5.15 மணியளவில், ஜாஃப்ரியின் விட்டிலிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியிருந்த அனைவரும் இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாயினர் குர்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்த குஜராத் அரசின், அதன் காவல்துறையின் பாதகத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

முதல்வர் (மோடி), உள்துறை அமைச்சர், காவல்துறை ஆணையர் என்று அனைவரையும் ஜாஃப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தத் தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. 5 மணி நேரம் மிகக் கொடூரமான கொலைவெறி தாண்டவமாடியது.

சமன்புராவிலுள்ள குல்பர்க் சொஸைட்டி அமைதாபாத் நகரில் இதயப் பகுதியில் இருக்கிறது. மாநிலத்தில் வேறு எங்கோ தூர தொலைவில் இது இல்லை.

(“மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Tuesday, 16 October 2018

சிரியா திமஷ்கின் கிழக்கு வாசல் (இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்)


சிரியா திமஷ்கின் (டமஸ்கஸ்) கிழக்கு வாசல்...
இதன் வழியாகத்தான் கி.பி. 635-ம் ஆண்டு
‘அல்லாஹ்வின் போர்வாள்’ காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் டமஸ்கஸ் நகருக்குள் வெற்றியாளராக நுழைந்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரவிருக்கும் எனது மொழிபெயர்ப்பான "இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்" (ஃபத்ஹுஷ் ஷாம்) என்ற நூலில் இந்த சரித்திர வெற்றி நிகழ்வு விரிவான வீர வரலாற்றுக் காவியமாக இடம் பெறுகிறது.
இது ஓர் ‘இலக்கியச்சோலை’ வெளியீடு!

Saturday, 25 August 2018

காழ்ப்புணர்வைக் குறைக்கும் கால்பந்து நட்சத்திரம்!


முஹம்மத் ஸலாஹ்... இன்று கால்பந்து உலகம் முழுவதும் எதிரொலிக்கும் மந்திரப் பெயர் இதுதான். எகிப்து நாட்டைச் சார்ந்த முஹம்மத் ஸலாஹின் நாமம் சொந்த நாட்டின் மூலை முடுக்குகளிலும், உணவு விடுதிகளிலும், தெரு வீதிகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஆம்! கால்பந்துக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதல்லவா… 25 வயதாகும் முஹம்மத் ஸலாஹ் இன்று உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திர வீரர். இவர் மைதானத்தில் இறங்கினால் “முஹம்மத் ஸலாஹ்… முஹம்மத் ஸலாஹ்” என்ற முழக்கத்தில் மொத்த அரங்கமும் அதிர்கிறது. ஆவேசமாக அவரை வரவேற்கிறது.

எகிப்து நாட்டு கால்பந்து அணியில் பங்கு பெற்றுள்ள முக்கிய வீரர்தான் முஹம்மத் ஸலாஹ். எதிர்வரும் 201ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு எகிப்து தேர்வாகி விட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த நட்சத்திர வீரர் என்றால் அது மிகையல்ல.

இவர் ஐரோப்பாவின் லிவர்பூல் கால்பந்து கிளப்பில் சேர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அதுதான் இப்பொழுது உலக கால்பந்து ரசிகர்களையே இவர் பக்கம் ஈர்த்துள்ளது.

இவர் ஆடுகளத்தில் காண்பிக்கும் ஆவேசமும், மின்னல் வேக ஓட்டமும், நுணுக்கமான விளையாட்டுத் திறனும், மைக்ரோ நொடியில் கிடைக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி கோல் போடும் அழகும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி விடுகிறது. அவர் கோல் போட்டதும் ஒட்டுமொத்த அரங்கத்தினரும் தங்களையறியாமலேயே மெய்சிலிர்த்து எழுந்து நிற்கின்றனர். ஆவேசமாக அவருக்கு வாழ்த்துகளைப் பங்களிக்கின்றனர்.
கோல் போட்டதும் ரசிகர்கள் அருகில் ஓடிச் சென்று அவர்களை வாரியணைக்கும் விதமாக இரு கரங்களையும் விரித்து அவர்களின் வாழ்த்துகளை வாஞ்சையுடன் ஏற்றுக் கொள்கிறார் ஸலாஹ். அவர்களின் அன்பு மழையில் நனைந்து சிறிது நேரம் அசையாமல் நிற்கிறார்.

அவரின் சக அணியினரின் வாழ்த்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஸலாஹ் மெதுவாக மைதானத்தின் நடுவட்டத்திற்கு வருகிறார். இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி பிரார்த்திக்கிறார். அப்பொழுது ஒட்டுமொத்த மைதானமும் அவரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது. பின்னர் அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து, பூமியில் தன் நெற்றியைப் பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார். அங்கேதான் முஹம்மத் ஸலாஹ் தன் இறைநம்பிக்கையை வெகு ஆழமாக வெளிப்படுத்துகிறார்.



சாஷ்டாங்கத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுந்ததும் மீண்டும் ரசிகர்களிடமிருந்து பழைய ஆரவாரம் மைதானத்தை ஆட்கொள்கிறது. மீண்டும் ரசிகர்கள் அவரை வாழ்த்திப் பாடத் தொடங்குகின்றனர்.
முஹம்மத் ஸலாஹ் விளையாடும் மைதானங்களில் எல்லாம் இந்தக் காட்சி நிரந்தரமாகி விட்டது. மைதானத்தில் இறங்கி ஆட்டம் தொடங்கும் முன்பும் இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி அவர் பிரார்த்திக்கிறார். பின்னர் ஒவ்வொரு கோலுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பூமியில் நெற்றி பதித்து சாஷ்டாங்கத்தில் வீழ்கிறார்.

இஸ்லாமில் தொழுகையில் ஸஜ்தா என்ற சாஷ்டாங்கம் இருக்கிறது என்பதை நாமறிவோம். தொழுகைக்கு வெளியே மகிழ்ச்சியான கட்டங்களில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் சாஷ்டாங்கம் இருக்கிறது. அந்த சாஷ்டாங்கத்தில் வீழ்ந்துதான் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலுக்குப் பிறகும் தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்.

புகழின் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டிருந்தாலும் அந்தப் புகழுக்குக் காரணமான, புகழைத் தந்துகொண்டிருக்கும் இறைவனை மறவாமல் நன்றி செலுத்தும் பாங்கைப் பார்க்கும்பொழுது உண்மையிலேயே உடலெல்லாம் புல்லரித்துத்தான் போகிறது.

ஐரோப்பிய கால்பந்து நட்சத்திர வீரராக மிளிரும் முஹம்மத் ஸலாஹ் லிவர்பூலில் முதல் சீசனில் இதுவரை 49 கால்பந்துப் போட்டிகளில் விளையாடி 43 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தின் இந்த ஆண்டுக்கான ஆட்ட நாயகனாக முஹம்மத் ஸலாஹ் ஆவதற்கு அவரது அணியின் சக வீரர்களும் ஓட்டளித்திருக்கிறார்கள். கால்பந்து எழுத்தாளர்கள் சங்கமும் (Football Writers’ Association) ஓட்டளித்திருக்கிறது.
ஒவ்வொரு போட்டி முடியும்பொழுதும் அவரது நட்சத்திர அந்தஸ்து கூடிக்கொண்டே போகிறது. அவர் தன் இறைநம்பிக்கையை இப்படிப் பொதுத்தளத்தில் வெளிப்படுத்துவது அவரை சமூக, கலாச்சாரத்தின் முக்கிய பிரமுகராக மாற்றியிருக்கிறது.

முஹம்மத் ஸலாஹ் இன்று பிரிட்டனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இஸ்லாமோஃபோபியா என்னும் இஸ்லாம் குறித்த அச்சமும், வெறுப்பும் பிரிட்டனில் புரையோடிப் போயுள்ள காலகட்டம் இது. சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் படி இஸ்லாமிற்கெதிரான ஒரு வெறுப்பு சூழ்நிலை எங்கும் நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில்தான் வடக்கு ஆப்பிரிக்காவைச் சார்ந்த ஒரு முஸ்லிம் பிரிட்டனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது மட்டுமல்ல, கொண்டாடப்பட்டும் கொண்டிருக்கிறார்.

அவர் இஸ்லாமிய மாண்புகளை உள்ளடக்கியவர் என்றும், இறைநம்பிக்கையை இறுகப் பற்றிப் பிடிப்பவர் என்றும் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் பிரிட்டனின் துணைப் பொதுச் செயலாளர் மிக்தாத் வெர்சி கூறுகிறார். “அவரிடம் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அணியின் கதாநாயகன் அவரே. மொத்த லிவர்பூலும் உண்மையிலேயே மனம் விரும்பி அவரைச் சூழ்ந்து அணிவகுத்து நிற்கிறது. இஸ்லாமோஃபோபியாவுக்கு அவர்தான் தீர்வு என்று சொல்ல மாட்டேன். ஆனால் அது இல்லாமலாவதற்கு இவர் முக்கிய பங்கு வகிக்க முடியும்” என்று அவர் கூறுகிறார்.

எகிப்தில் இன்று முஹம்மத் ஸலாஹ் ஒரு தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறார். அது கடந்த வருடம் அக்டோபரில் நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசி நிமிடத்தில் அவர் அடித்த பினால்டி கிக்கில் விழுந்த கோல் மூலம் உறுதியானது. அதன் மூலம் எகிப்து அணி எதிர்வரும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கிறது. 1990க்குப் பிறகு இப்பொழுதுதான் எகிப்து கால்பந்து அணி உலகக் கோப்பை போட்டிக்குள் நுழைகிறது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்வு நடந்த எகிப்தின் அலெக்ஸாந்திரியா நகரிலுள்ள மைதானம் முழுவதும் அன்று ரசிகர்கள் ஸலாஹ்வைத் தங்கள் தோள்களில் சுமந்து வலம் வந்து கொண்டாடினார்கள்.

எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எண்ணற்ற சுவர்கள் இன்று ஸலாஹ்வின் படத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. கெய்ரோவில் ஸலாஹ்வின் உருவப்பட சுவர் சித்திரம் உள்ள ஓர் உணவு விடுதி இன்று சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் எகிப்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடவில்லை என்றாலும் அவர் போட்டியிடுவதற்கு கணிசமான ஆதரவைப் பெற்றிருந்தார் என்கிற அளவுக்கு அவர் புகழ் உயர்ந்து நிற்கிறது.

பிரிமியர் லீகும், ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளும் எப்பொழுதும் எகிப்தில் மிகவும் பிரபலம். இன்று ஆயிரக்கணக்கானோர் கெய்ரோவின் தேநீர் கடைகளிலும், ஷிஷா பார்களிலும் லிவர்பூல் கால்பந்துப் போட்டிகளைக் காண்பதற்காக ஆர்வமாக ஒன்று கூடுகிறார்கள். அதற்குக் காரணம் முஹம்மத் ஸலாஹ்!

ஸலாஹ்வின் புகழ் அவர் கால்பந்து நட்சத்திர வீரர் என்பதால் மட்டுமல்ல. வாரி வழங்குவதில் பாரி வள்ளலாக திகழ்கிறார் என்பதும் ஒரு காரணம். “அவர் தொடர்ச்சியாக நற்காரியங்களுக்கு பொருளாதார உதவி செய்து வருகிறார். அவர் பிறந்த ஊருக்கும் நிறைய செய்து வருகிறார்” என்று அவரின் பயிற்சியாளர் ஸயீத் அல் ஷிஷ்னி கூறுகிறார். இந்த ஸயீத் அல் ஷிஷ்னிதான் ஸலாஹின் திறமையை அவர் குழந்தையாக இருக்கும்பொழுது கண்டுபிடித்தவர். அவரது சொந்தக் கிராமமான நைல் நதி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நக்ரிக் என்ற கிராமத்தில் முஹம்மத் ஸலாஹை குழந்தைப் பருவத்திலேயே ஒரு நட்சத்திர கால்பந்து வீரராகக் கண்டார் ஸயீத் அல் ஷிஷ்னி.

நக்ரிக்கிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு ஸலாஹ் ஒரு டயாலிஸிஸ் இயந்திரம் கொடையளித்துள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிலம் கொடையளித்துள்ளார். பொது விளையாட்டு மையம் ஒன்றைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். ஒரு கல்விக் கூடத்தையும், ஒரு மஸ்ஜிதையும் புதுப்பித்துக் கொடுத்துள்ளார். எகிப்தின் வலுவற்ற பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள முதலீட்டு நிதிக்கு பணம் கொடுத்துள்ளார். இப்படி ஸலாஹின் நன்கொடைகள் நாடு முழுவதும் விரிகின்றன.

கடந்த ஏப்ரலில் போதை மருந்துப் பழக்கத்திற்கெதிராக அரசு நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சார காணொளியில் பங்குபெற்று அதற்கு ஆதரவு தெரிவித்தார். அந்தக் காணொளி வெளிவந்த மூன்று நாட்களுக்குள் போதை மருந்துப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்து விட்டது என்று எகிப்தின் சமூக ஒற்றுமை அமைச்சகம் அறிவித்துள்ளது.
“ஒரு முஸ்லிமல்லாத நாட்டில், இஸ்லாமோஃபோபியா வளர்ந்து வரும் ஒரு நாட்டில் அதைப் பற்றி கிஞ்சிற்றும் அஞ்சாமல் முழங்காலில் அமர்ந்து நெற்றியை பூமியில் பதித்து இவர் வணங்குவதை எகிப்திய மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாக அதனைக் கருதுகிறார்கள்” என்று எகிப்தின் கால்பந்து விமர்சகர் அஹமத் அட்டா கூறுகிறார்.

அதேபோன்று இங்கிலாந்தில் லிவர்பூல் பகுதியில் வசிக்கும் சிரிய, யமனிய, வங்க தேச முஸ்லிம்களும் உணர்கிறார்கள். லிவர்பூலில் உட்பகுதியில் அமைந்திருக்கும் டாக்ஸ்டெத் என்ற நகரத்திலுள்ள அல் மஸ்ரா மஸ்ஜிதின் இமாம் அபூ உஸாமா அத்தஹபி, “முஸ்லிம்கள் ஓர் அழுத்தத்தில் உள்ளார்கள்” என்கிறார்.

சமீபத்திய ஆண்டுகளில், முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புப் பிரச்சாரங்களும், குற்றங்களும் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளன என்று அங்குள்ள காவல்துறை புள்ளிவிவரங்கள் அறிவிக்கின்றன. 2015ல் பாரிஸ் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்புகள், 2016ல் லண்டனில் நடந்த குண்டுவெடிப்புகள் ஆகியவற்றின் விளைவாக இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்தல்கள் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 47 சதவீதம் அதிகரித்திருந்தன என்று டெல் மாமா என்ற நிறுவனத்தின் அறிக்கை அறிவிக்கிறது. 2012 முதல் 2016 வரையுள்ள கணக்கைப் பார்த்தால் இது 75 சதவீதம் அதிகரித்திருக்கின்றது என்று அங்குள்ள காவல்துறை பதிவுகள் பறைசாற்றுகின்றன.

“ஸலாஹ் அந்த அழுத்தத்தைக் குறைத்துள்ளார்” என்று அல் மஸ்ரா மஸ்ஜித் இமாம் அத்தஹபி கூறுகிறார். “ஒவ்வொரு முஸ்லிமும் அவரால் பெருமிதம் கொள்கின்றனர்” என்று லிவர்பூலில் உள்ள அல் ரஹ்மா மஸ்ஜிதின் அருகில் மளிகைக் கடை வைத்திருக்கும் அலீ அடென் கூறுகிறார். “சில நேரங்களில் நாங்கள் இங்கே இரண்டாந்தர குடிமக்களாக உணர வைக்கப்படுவோம். இந்தச் சூழ்நிலையில் மத்திய கிழக்கிலிருந்து ஒரு முஸ்லிம் எங்கள் நகரத்திற்கு வந்து புகழ் பெறுகிறார் என்பது பெருமிதமே” என்கிறார் அவர்.
“முஸ்லிம் சமூகத்திற்கும், லிவர்பூல் நகரத்திற்கும் ஒரு நல்லிணக்கப் பாலமாக அவர் விளங்க முடியும்” என்று இமாம் அத்தஹபி கூறுகிறார்.
“அவர் தரையில் வீழ்ந்து ஸுஜூது செய்வதால் அவர் அடிக்கும் ஒவ்வொரு கோலும் முஸ்லிம்களின் மேல் படிந்துள்ள கறையை நீக்குகிறது” என்று முன்னாள் கால்பந்து வீரர் அன்வருத்தீன் கூறுகிறார்.

ஸலாஹைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள ஒரு பாடலில், “அவர் இன்னும் சில கோல்கள் போடுவாரானால், நானும் முஸ்லிமாகி விடுவேன்” என்ற வரிகள் வருகின்றன.

இதுதான் ஒரு முஸ்லிமின் இலட்சியமாக இருக்க வேண்டும். தன் சொல்லால், செயலால் அவன் வெளிப்படுத்துபவை காண்போரை இஸ்லாமின் பால் ஈர்க்க வேண்டும். முஹம்மத் ஸலாஹ் தனக்குக் கிடைத்துள்ள இந்தப் பேரையும், புகழையும் இப்பொழுது போல் எப்பொழுதும் இதே போன்று மற்றவர்களை இஸ்லாமின் பால் ஈர்ப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.

MSAH

புதிய விடியல்

Saturday, 5 May 2018

கொடையளிப்பதன் முக்கியத்துவம்!


கொடை என்பது தேவையுடையோருக்கு பணம் அளிப்பது மட்டுமல்ல. உங்கள் குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக, சமுதாயத்திற்காக உங்களையே கொடுப்பதுதான் உண்மையான நன்கொடை. 

அதாவது இந்தப் பூமியில் ஆக்கபூர்வமான சக்தியாக உங்கள் நன்கொடை அமைய வேண்டும். நாம் செல்லுமிடமெல்லாம் நல்லவற்றைப் பரப்புவது, நேர்மையை வெளிப்படுத்துவது, நம்மிடருந்து அதிகபட்சமாக என்னவெல்லாம் அளிக்க முடியுமோ அவையனைத்தையும் வழங்குவது. அதாவது, நம் இதயத்தைக் கொடுப்பது, புன்னகை புரிவது, நல்ல வார்த்தைகள் கூறுவது - இவைதான் நன்கொடைகள்.

உண்மையில் தொடர்ச்சியாக கொடையளிப்பவர்கள்தான் தங்களைத் தாங்களே தேவையுடையவர்களாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவை? அல்லாஹ்வின் கருணையும், அவனது மன்னிப்பும்! பிறர் துன்பங்களை நீக்க வேண்டும் என்று அவர்கள் அவசியப்படுகிறார்கள். அதன் மூலம் மறுமை நாளில் அல்லாஹ் தங்களின் துன்பங்களை நீக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுவர்க்கத்தின் விலை

சுவர்க்கத்தினுள் நுழைவதற்குரிய விலையே நீங்கள்தான். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெறும் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கிறீர்கள்.
உங்கள் ஆன்மாவின் ஆழத்திலிருந்து அடுத்தவருக்கு அன்பைப் பொழியுங்கள். பிறரிடம் நம்பிக்கையை விதையுங்கள். பிறருக்காக பிரார்த்தனை புரியுங்கள். உங்கள் குழந்தைகளிடமும், வாழ்க்கைத் துணையுடனும், நீக்ஙள் நேசிக்கும் ஒருவருடனும் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு தருணம் என்பது பிறர் மதிப்புமிக்கதாகக் கருதும் நேரம் என்பதாகும்.

யாராவது உங்களிடம் உதவி கோரினால், நீங்கள் தளர்வாக இருந்தாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். யாராவது உங்களிடம் பண உதவி கோரினால், நீங்கள் பணக்காரராக இல்லாவிட்டாலும் “இல்லை” என்று கூறாதீர்கள். உங்கள் சமுதாயத்தை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவதற்கு உங்கள் திறமையையும், அறிவையும் பயன்படுத்துங்கள். நீங்கள் தனித்துவமிக்கவர்கள். எங்கோ யாரோ உங்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களுக்காக சமைத்திடுங்கள். உங்கள் அண்டை வீட்டாருக்கு உணவைப் பாத்திரத்தில் வைத்து கொடுங்கள். கொடுத்த பாத்திரத்தைத் திரும்பக் கேட்காதீர்கள்.

நன்மைக்காகப் போராடும் பாதையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயிர் உங்களுடையது அல்ல; அது அல்லாஹ்வுக்குச் சொந்தமானது.

கொடுத்துக் கொடுத்துக் களைத்துப் போய் விட்டீர்கள் என்றால், உங்கள் கண்களின் கீழுள்ள வளையங்கள் கருத்துப் போய்விட்டன என்றால், பணிச் சுமையின் காரணமாக உங்கள் தோள்கள் துவண்டு வளைந்து விட்டதென்றால், உங்கள் ஆன்மாவை ஊக்கப்படுத்துவதற்கும், உங்கள் உடலை வலுப்படுத்துவதற்கும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் உற்சாகமாக எழுந்து அதிகம் அதிகம் கொடையளியுங்கள்.
வெகு விரைவிலேயே நீண்ட தூக்கத்துக்கும், நிரந்தர ஓய்வுக்கும் நேரம் வந்து விடும்!

உங்களுக்கென்று பொருட்களைச் சேகரித்து குவித்துக் கொண்டே இருக்காதீர்கள். ஏனெனில் இறுதி நாளில், “எவ்வளவு சேகரித்து வைத்துள்ளாய்?” என்று உங்களிடம் கேட்கப்படாது. மாறாக, “எவ்வளவு கொடையளித்தாய்?” என்றுதான் கேட்கப்படும்.

“அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான் என்றால், அது ஒருபொழுதும் உங்களை அழிப்பதற்காக அல்ல. உங்களுக்கு பெரிய அளவிலுள்ள அன்பளிப்புகளை அளிப்பதற்காகவே உங்கள் கைவசமுள்ள சிலவற்றை அவன் எடுத்துக்கொண்டு, உங்கள் கரங்களை அவன் வெறுமையாக்குகிறான்.” (இப்னு அல் கய்யூம்)

Source: "A Temporary Gift: Reflections on Love, Loss, and Healing" By Asmaa Hussein