Showing posts with label மனித இனத்திற்கெதிரான குற்றம். Show all posts
Showing posts with label மனித இனத்திற்கெதிரான குற்றம். Show all posts

Saturday, 17 November 2018

இஹ்ஸான் ஜாஃப்ரியை படுகொலை செய்த அன்று நடந்தது என்ன?


குஜராத் இனப்படுகொலை 2002
பிப்ரவரி 28 2002 அஹமதாபாத்
குல்பர்க் சொஸைட்டி

காலை 10.30 மணியளவில் வார்டு எண் 19ன் காங்கிரஸ் உறுப்பினர் அம்பலால் நாடியா, வார்டு எண் 20ன் உறுப்பினர் கன்னுலால் சோலங்கி ஆகியோருடன் இஹ்ஸான் ஜாஃப்ரியைக் காண வந்தார் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே. போலீஸ் படையை உடனே அனுப்பி வைப்பதாகவும், அவர் முழுவதுமாகப் பாதுகாக்கப்படுவார் என்றும் அவர்கள் இஹ்ஸான் ஜாஃப்ரியிடம் உறுதியளித்தனர்.

காவல்துறை ஆணையர் சென்ற 5 நிமிடத்தில், அதாவது காலை 10.35 மணியளவில், குல்பர்க் சொஸைட்டிக்கு கொஞ்சம் வெளியே இருந்த ஸாஹிர் பேக்கரியும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பகல் 11.15-11.30 மணியளவில் குல்பர்க் சொஸைட்டியில் கல்வீச்சு தொடங்கியது. 45 நிமிடங்கள் கழித்து, அதாவது பகல் 12.15-12.30 மணியளவில், குல்பர்க் சொஸைட்டியின் பின்பக்கம் உள்ள கட்டடங்களிலிருந்தும், பங்களாக்களிலிருத்தும் கற்கள், அமில பல்புகள், கண்ணாடிக் குப்பிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவை குல்பர்க் சொஸைட்டி மீது வீசப்பட்டன.

பகல் மணி 12.30க்கும்.12.45க்கும் இடைப்பட்ட வேளையில், ஒரு முஸ்லிமல்லாதவருக்குச் சொந்தமான பங்களாவின் மொட்டை மாடியிலிருந்து கற்களும், பெரும் பாறாங்கற்களும் எறியப்பட்டன. குல்பர்க் சொஸைட்டியின் குடியிருப்பு வளாகங்கள் இதனால் பெருத்த சேதமடைந்தன. இந்த வளாகங்கள் சேதமடையாமல் இருந்திருந்தால் முஸ்லிம்கள் ஒருவேளை தங்களைக் காத்திருக்கலாம்.

பெரும் பெரும் கற்கள், அமில பல்புகள், எரியும் துணிப் பந்துகள் ஆகியவை மதியம் 1-1.15 மணி வரை வீசப்பட்டுக் கொண்டே இருந்தன. மதியம் ஒரு மணியளவில், அந்த சொஸைட்டியில் வசிக்கும் யூசுஃப் என்பவர் வன்முறையாளர்களிடம் பிடிபட்டார். கயவர்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டி, தீ வைத்துக் கொளுத்தினர்.

குடியிருப்பில் வசிப்பவர்களிடையே பீதி அதிகமானது. இந்தச் சமயத்தில் இஹ்ஸான் ஜாஃப்ரியின் வீட்டில் 80 நபர்கள் இருந்தனர்.

பிற்பகல் 2.30-2.45 மணியளவில், "குசி ஜாவோ"(உள்ளே செல்லுங்கள்) என்ற கத்தல்களுக்கிடையே, திடீரென்று சொஸைட்டியின்பின்பக்கம், இருப்புப் பாதைக்கு அருகிலுள்ள கதவு உடைக்கப்பட்டது.

பிற்பகல் மணி 2.30க்கும் 2.45க்குமிடையில், வன்முறைக் கும்பலின் குறியான இஹ்சான் ஜாஃப்ரி அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வரப்பட்டார். அவர் மிகவும் சிரத்தை  எடுத்துக் கட்டிய அவரது வீட்டின் முன்பு, 45 நிமிடங்களாக, அவர் மிகக் கொடுமையாக துண்டு துண்டாக வெட்டப்பட்டார். இறுதியில் அவரது தலையும் வெட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்துச் செல்வப்பட்டார் "வந்தே மாதரம் ", "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வலியுறுத்தப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார். அவரது விரல்களைத் துண்டு துண்டாக வெட்டிய பின், அந்தப் பகுதி முழுவதும் அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டும் வந்தார். அடுத்ததாக அவரது கரங்களும், கால்களும் வெட்டப்பட்டன.

அதன்பின், கூர்மையான ஒரு கருவியை அவரது கழுத்தில் மாட்டி, இழுத்துச் சென்றது அந்தக் கொலைகாரக் கும்பல். பின்னர், அவர் தீயில் வீசப்பட்டார்.

பொதுச் சேவையிலேயே தன் வாழ் அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு நேர்ந்த கொடூர முடிவு இது. இந்தத் தாக்குதலில், இஹ்சான் ஜாஃப்ரியுடன் அவரது மூன்று சகோதரர்களும், இரண்டு மருமகன்களும் கொல்லப்பட்டனர்.

-oOo-

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்புக்காக சொஸைட்டிக்கு வந்தனர். குல்பர்க் சொஸைட்டிக்கு பின்பக்கம் ஒரு இருப்புப்பாதை செல்கிறது. அதற்கு அப்புறமுள்ள பணியாளர்கள் குடியிருப்புகளிலிருந்து 5000-6000 பேர் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் வந்தது. ஐக்ரூப் சிங் ராஜ்புட் என்பவன்தான் இந்தக் கும்பலுக்குத் தலைமையேற்று வந்தான்.

பாஜக அஹமதாபாத் முனிசிபாலிட்டியில் பெரும்பான்மை பலத்துடன் இருந்தபொழுது, இவன் துணை மேயராக இருந்தான். இந்தக் கும்பலிடமிருந்தும் கல்லெறிதல் தொடங்கியது.

ஆக, குல்பர்க் சொஸைட்டியின் அனைத்துத் திசைகளிலிருந்தும் கல்மழை பொழிந்தது.

இதற்கிடையில் ஜாஃப்ரி 200 தடவைகளுக்கு மேல் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார். காவல்துறை ஆணையர் பாண்டே, காந்தி நகரிலுள்ள அமர்சிங் சௌத்ரி, நரேஷ் ராவல், முதலமைச்சர், உள்துறை அமைச்சர் என்று பலரையும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஒரு நேரடி சாட்சி சொல்கிறார்: “பிற்பகல் 2.30 மணியளவில் கதவருகில் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்த ஜாஃப்ரி ஸாஹிபை 4 பேர் வெளியே இழுத்து வந்தனர். அந்த நால்வர் பெயர்கள் வருமாறு: சமன்புராவில் கேபிள் ஆப்பரேட்டராக இருக்கும் நாராயன் கப்ரா,
“பாயாஜி" ரமேஷ் சோட்டி, ராஜஸ்தான் மளிகைக் கடை உரிமையாளரின் மகன் மனிஷ் ஜெய்ன், சம்பாபென் என்பவரின் மகன் கிருஷ்ணா.(காவல்துறையின் புலன் விசாரணைகளின்போது நேரடி சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களிலும் இந்த நால்வரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.)

“ஜாஃப்ரி ஸாஹிபை வெளியே இழுத்து வரும்பொழுதே ஒரு வாளால் அவரை மூன்று துண்டுகளாக வெட்டினர். ஜாஃப்ரி ஸாஹிபை தீ வைத்துக் கொளுத்திய பிறகு, அந்த வன்முறைக் கும்பல் டயர்களை எரிக்கத் தொடங்கியது. அந்தக் கும்பல் ஜாஃப்ரி ஸாஹிப் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் உடைத்து, எல்லா புறங்களிலும் தீ வைத்தது. உள்ளே 35 குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அனைத்தும் கைகளைக் கூப்பியபடி கெஞ்சிக் கூத்தாடின. ஆனால் அக்குழந்தைகளால் வெளியே வர முடியாது. பிற்பகல் 3.15 மணியளவில் ஜாஃப்ரியின் வீடு முழுவதும் புகைமண்டலமாக நிரம்பியது. பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த அனைவரும் மூச்சு விட முடியாமல் திணறினர்.

வெளியே வந்தால் பாதுகாப்பு தருவோம் என்று சொல்லப்பட்டதன் பேரில் சில பெண்கள் வெளியே வந்தனர். இந்தக் குழுமத்தின் முன் வாக்குமூலம் அளித்த நேரடி சாட்சிகள், கையில் வாளுடன் வந்த தினேஷ் பிரபுதாஸ் ஷர்மா என்பவன் யூஸுஃப் என்பவரைக் கொல்வதை நேரில் கண்டனர்.

ஒரு நேரடி சாட்சியின் மகளின் ஆடைகளை லாதியா என்பவன் கிழித்தெறிந்தான். பின்னர் அந்தப் பெண்ணைக் கற்பழித்து கொலை செய்தான். ஏற்கனவே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட லாலா மோகன்சிங் தர்பார் என்பவன் வேறொரு பெண்ணைக் கொன்றான்.

மாலை 4.45 மணியளவில், ஒரு சிறிய தோட்டத்தில் சிறு அறையில் ஒளிந்திருந்த ஒரு நேரடி சட்சிக்கு "ஓடு... ஓடு..." என்ற சப்தங்கள் கேட்டன. போலீஸ் வத்திருக்கும் என்று அந்த நேரடி சாட்சி யூகித்துக் கொண்டார்.

மூச்சு முட்டலில் திணறிக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றுமாறு இந்த நேரடி சாட்சி காவல்துறை ஆணையர் டான்டனிடம் கோனார். ஆனால் அவர் அவர்களைக் காப்பாற்ற தயங்கினார்.

இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஜாஃப்ரியின் வீட்டிலிருந்த தொட்டிகளும், தோட்டத்திலும், அடுத்த வீடுகளிலுமிருந்த தொட்டிகளும் முதலில் காலி செய்யப்பட்டு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஆக்கினார்கள் கயவர்கள். இதனால் தீயை அணைக்க முடியாமல் ஆக்கினார்கள்.

தீ படு வேகமாகப் பரவியது. ஆனால் அந்தக் காவல்துறை துணை ஆணையாளர் டான்டன் உயிர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

போலீஸ் வந்து அரை மணி நேரம் கழித்து, அதாவது மாலை 5.15 மணியளவில், ஜாஃப்ரியின் விட்டிலிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. தப்பிக்க முடியாமல் உள்ளேயே சிக்கியிருந்த அனைவரும் இறந்தனர். பெண்களும், குழந்தைகளும் எரிந்து சாம்பலாயினர் குர்பர்க் சொஸைட்டியில் நடந்த படுகொலைகளுக்கு முழு உடந்தையாக இருந்த குஜராத் அரசின், அதன் காவல்துறையின் பாதகத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

முதல்வர் (மோடி), உள்துறை அமைச்சர், காவல்துறை ஆணையர் என்று அனைவரையும் ஜாஃப்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இந்தத் தாக்குதல் 7 மணி நேரம் நீடித்தது. 5 மணி நேரம் மிகக் கொடூரமான கொலைவெறி தாண்டவமாடியது.

சமன்புராவிலுள்ள குல்பர்க் சொஸைட்டி அமைதாபாத் நகரில் இதயப் பகுதியில் இருக்கிறது. மாநிலத்தில் வேறு எங்கோ தூர தொலைவில் இது இல்லை.

(“மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Monday, 27 February 2017

ஒரு நீதிபதியின் கதி...!



2002ம் ஆண்டு பிப்ரவரி 27ல் தொடங்கிய கொடூரமான குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை முடிந்து இன்றோடு 15 வருடங்கள் ஆகின்றன. சாதாரண முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெற்ற கொடூரங்கள் ஒரு புறம். பதவியிலிருந்த முஸ்லிம் நீதிபதிகளுக்கும் அதே நிலைதான் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

பிப்ரவரி 28ம் தேதி மாலை 4 மணியளவில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி காதிரி அவர்களின் வீட்டைச் சுற்றிலும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. ஃபாசிசக் கயவர்கள் கொள்ளையடிப்பிலும், தீ வைப்பிலும் ஈடுட்டுக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் இல்லாத இரண்டு போலீஸ் காவலர்கள் மட்டுமே அவரது வீட்டைச் சுற்றிலும் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

நீதிபதி காதிரியின் தாயாருக்கு 85 வயதாகிறது. அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர். மேலும் அவருடைய மனைவி, கல்லூரிக்குச் செல்லும் இரு மகள்கள் என்று அவரது குடும்பத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்களே.

அப்போது இராஜஸ்தான் தலைமை நீதிபதி ஏ.பி. ராவனி நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். நிலைமை மோசமாக இருந்ததை அறிந்த நீதிபதி ராவனி ஓய்வு பெற்ற ஒரு துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு நீதிபதி காதிரியின் வீட்டுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

ஒரு மணி நேரம் கழித்து நீதிபதி ராவனி மீண்டும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொண்டார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பங்களாக்கள் அமைந்துள்ள அருகிலுள்ள துலியாகோட் பகுதியில் கொள்ளையடிப்புகளும், தீ வைத்தல்களும் நடப்பதாக நீதிபதி காதிரி அவரிடம் கூறினார்.

அதன் பிறகு நீதிபதி ராவனி பலமுறை முயற்சி செய்தும் நீதிபதி காதிரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கவலையுற்ற அவர் மறுநாள் (மார்ச் 1) காலை குஜராத் நீதிமன்றத்தின் புரோடோகால் அதிகாரியைத் தொடர்பு கொண்டார். நீதிபதி காதிரி தன் குடும்பத்தாருடன் பின்னிரவில் அருகிலுள்ள நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டார் என்று அவர் கூறினார்.

காலை 11.30 மணியளவில் நீதிபதி காதிரி நீதிபதி ராவனியைத் தொடர்பு கொண்டார். தலைமை நீதிபதியும், இதர நீதிபதிகளும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தன் குடும்பத்தாருடன் நீதிபதி வகேலாவின் பங்களாவுக்குச் சென்று விட்டதாக கூறினார். வாஸ்த்ராபூரிலுள்ள நீதிபதிகள் பங்களாவுக்கு தன்னை மாறிச் செல்லும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

பணியிலிருக்கும் ஒரு நீதிபதியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து மாறி இருக்கச் சொல்லும் அளவுக்கு பாதுகாப்பின் லட்சணம் இருக்கிறது என்றால் அது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும், அரசியல் நிர்ணயச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்றும் நீதிபதி ராவனி மிக்க வருத்தத்துடன் கூறினார்.

இன்னொரு அதிர்ச்சியான செய்தியை நீதிபதி ராவனி அறிந்தார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், எம்.ஆர்.டி.பி.யின் முன்னாள் தலைவருமான நீதிபதி திவேச்சா அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரது வீடு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்த நீதிபதி திவேச்சா மூலம் அறிந்து நொறுங்கிப் போனார் நீதிபதி ராவனி.

நீதிபதி காதிரியின் வீட்டின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் படை வன்முறைக் கும்பலின் அளவை நோக்கும்போது மிகக் குறைவானது என்றும், வீட்டிலிருந்து மாறியிருப்பதே புத்திசாலித்தனம் என்றும் இராணுவ உளவுத்துறையினர் நீதிபதி காதிரியிடம் கூறினர்.

அவர் பாதுகாப்புக்கு உள்ளூர் போலீசை நம்பியிருக்க வேண்டாம் என்றும், இராணுவ விருந்தினர் மாளிகையில் வந்து தங்கும்படியும், அது அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதால் பாதுகாப்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதி காதிரியிடம் நீதிபதி ராவனி இவ்வாறு கூறினார்: “சகோதரரே, களத்திலுள்ள யதார்த்தம் என்னவெனில் சட்டத்தின் தத்துவம் என்பது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. நாம் தைரியசாலிகளாக இருக்கலாம். ஆனால் நாம் நாட்டின் எல்லையில் போராடும் படைவீரர்கள் இல்லை. அங்கேதான் ஓர் அங்குலம் பின்வாங்கினாலும் அது கோழைத்தனமாகக் கருதப்படும். இப்பொழுது இங்குள்ள சூழ்நிலைக்கு நீங்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாறுவதே புத்திசாலித்தனம்.”

இந்தச் சமயத்தில் அந்தக் குடும்பத்திற்கு உறவினர்களின் உதவியும், ஆதரவும் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் அவர்கள் உறவினர்களை அண்ட முடியாத கொடுமையான சூழ்நிலை. இராணுவத்தினர் உடல் ரீதியாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கலாம். ஆனால் மனோரீதியான தைரியத்தையும், ஆதரவையும் அவர்களால் தர இயலாது.

இறுதியில் மாலை 4 மணியளவில் இராணுவப் பாதுகாப்புடன் நீதிபதி காதிரி தன் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு அவருடைய சகோதரியின் கணவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

உயிருக்கு அஞ்சிய பல முஸ்லிம் வழக்கறிஞர்கள் நீதிபதி ராவனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து தருமாறு கெஞ்சினர். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த தனது செல்வாக்கு அங்கே செல்லாக்காசு என்றுணர்ந்த அவர், தனது இயலாமையை அவர்களிடம் தெரிவித்தார்.

குஜராத் இனப்படுகொலை முழுவதையும் நேரடிக் களத்திற்கே சென்று பதிவு செய்த அக்கறையுள்ள குடிமக்களின் குழுமத்திடம் நீதிபதி ராவனி மேற்கண்ட நிகழ்வுகள் குறித்து நேரடி சாட்சி பகர்ந்தார். மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமும் இந்நிகழ்வுகள் குறித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

இருந்தும் என்ன பயன்? ஒரு விளைவும் ஏற்படவில்லை. மொத்த இனப்படுகொலையையும் நடத்த விட்டு கள்ள மவுனம் சாதித்த அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று பிரதமர். இதுதான் இன்றைய இந்தியா!

இந்தியாவில் சிறுபான்மை மக்கள் ஃபாசிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று சில செயல்களில் ஈடுபடுவதோ, உணர்ச்சி வயப்பட்டு துள்ளுவதோ, கவர்ச்சிப் பேச்சாளர்களிடம் மயங்கி அவர்கள் பின்னால் செல்வதோ தீர்வாகாது.

ஒரு தலைமையின் கீழ் மக்களை ஒருங்கிணைத்து, பலப்படுத்தி, இலக்கை நிர்ணயித்து, திட்டங்களைத் தீட்டி, அதனை சன்னம் சன்னமாக நிறைவேற்றும் நீண்ட பயணத்தை மேற்கொண்டாலொழிய இது சாத்தியமாகாது.

(இலக்கியச்சோலை வெளியீடான “மனித இனத்திற்கெதிரான குற்றம்” நூலிலிருந்து...)

Sunday, 20 October 2013

மனித இனத்திற்கெதிரான குற்றம் - பேரா. அ. மார்கஸ் அவர்களின் அணிந்துரை



அணிந்துரையின் சுருக்கம்

2500 பேர் கொல்லப்பட்டு, இரண்டுட லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்ட குஜராத் கொடூரம் குறித்த முழுமையான தரவுகளும், விவரங்களும் இப்போது ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்பட்டு விட்டன.

2002 பிப்ரவரி இறுதியில் தொடங்கிய அந்த இன அழிப்பு அடுத்த சில நாட்களில் எங்கெங்கு, எவ்வெவ்வாறு நடைபெற்றன, எவ்வளவு பேர் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கொன்று எரிக்கப்பட்டனர், அவர்களின் விவரங்கள், எவ்வாறு அந்தக் கொடூரம் நிகழ்ந்தது, யார் அவற்றைத் தலைமை தாங்கி நடத்தியது, இன்று அவ்வழக்குகள் தொடர்பான நிலை என்ன, கொலையாளிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் முதலான எல்லா விவரங்களும் இப்போது நம்மிடமுள்ளன.

இந்தக் கொடூருங்கள் அம்பலப்படுத்தப்பட்டதிலும், ஆவணப்படுத்தப்பட்டதிலும் மனித உரிமையாளர்கக, ஆங்கில ஊடகங்கள் ஆகியவற்றின் பங்கு இங்கே நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டிய ஒன்று. சக மனிதர்களின் துயரம் கண்டு கசியும் மனங்கள், கசிவதோடு நில்லாமல், உயிரையும் பணயம் வைத்து நியாயம் கோரி இறுதி வரை நிற்கும் திட உள்ளங்கள் இன்றும் உள்ளன என்பதொன்றே நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

இந்தக் கொடூரங்கள் பத்திரிகைகளில் வரத் தொடங்கி அடுத்த கணமே இன்னும் எரிந்து முடிந்திராத குஜராத்திற்கு விரைந்து உண்மைகளை உலகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டின சுமார் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உண்மையறியும் குழுக்கள்.

மும்பையிலிருந்து செயல்படக்கூடிய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் என்னும் ஃபாசிச எதிப்பு அமைப்பு வெளியிட்டு வரும் இருமாத இதழாகிய கம்யூனலிசம் காம்பட் என்கிற முக்கிய இதழ் ‘இன அழிப்பு - குஜராத் 2002’ என்னும் சிறப்பிதழை (மார்ச் - ஏப்ரல் 2002) உடனடியாகக் கொணர்ந்தது.

டபுள் டெம்மி அளவில் 150 பக்கங்களில் வெளிவந்த அந்த இதழ் கலவரம் நடந்த பகுதிகள், கொல்லப்பட்டோர் விவரங்கள், அழிக்கப்பட்ட சொத்துகள், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயர்கள், தப்பிப் பிழைத்தோரின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அன்றைக்குக் கிடைத்த தகவல்கள் வரை தொகுத்து ஆவணப்படுத்தியிருந்தது. அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த சுமார் 40 வண்ணப் படங்களைப் பார்ப்பதற்கு மன உறுதி வேண்டியிருந்தது.

.................

கடமையைச் செய்யத் தவறி கலவரக்காரர்களுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் இன்று உயர் பதவிகளில், நேர்மையாக இருந்தவர்கள் ஓரங்கட்டப்பட்ட நிலை, தங்களை அழித்தவர்கள் இன்று தங்கள் முன் தலைவர்களாக வெற்றி நடை போடுவதைப் பார்க்கும் பாதிக்கப்பட்ட மனம் எப்படி உணரும்?

மரண வியாபாரி நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஜெயலலிதாவின் விருந்தினராக வர இருக்கும் சூழலில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூலை வெளியிட்டுள்ள இலக்கியச்சோலை வெளியீட்டகம் இதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் மிக்க ஏராளமான நூற்களை வெளியிட்டுள்ளது.

மொழிபெயர்த்துள்ள எம்.எஸ். அப்துல் ஹமீது, “வேர்கள்” உள்ளிட்ட புகழ்பெற்ற நூற்களை மொழிபெயர்த்த அனுபவம் மிக்கவர். நிரடலற்ற இயல்பான நடையில் இதைப் பெயர்த்துள்ளார். ஃபாசிசத்தின் கோர முகத்தை அடையாளம் காண விரும்புவோருக்கு உதவக் கூடிய முக்கிய ஆவணமாக  இது அமைந்துள்ளது.

இந்தக கொடுமைகளை ஊரறிய, உலகறியச் செய்த மனித உரிமைப் போராளிகள் என்றென்றும் நமது நன்றிக்குரியவர்கள்.

அ. மார்க்ஸ்


நூல்         : மனித இனத்திற்கெதிரான குற்றம் - குஜராத் இனப்படுகொலை 2002 (Crime Against Humanity - Gujarat Genocide 2002)
மூலம்    : அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal)
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை   : ரூ. 100
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
                                                        25, பேரக்ஸ் சாலை
                                                        பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com