”துரோகி” என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதன் முன்னுரையை வாசிக்கும்போது அது நிகழ்காலத்தின் வரலாறு, அதுவும் அமெரிக்க இராணுவ வீரனின் சுயபுராணம் என்பதை அறியும்போது உடனே வாசிக்க வேண்டும் என ஆவல் தோன்றும். பக்கங்களைப் புரட்டப் புரட்ட கீழே வைக்க இயலாத அளவுக்கு ஒரே வாசிப்பில் முடிக்க வேண்டிய புத்தகம் இது.
தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நாமும் அருகில் நின்று காணுவதைப்போன்ற ஓர் உணர்வு. அவனின் சுக துக்கங்கள் நம்மை ஆட்கொள்ள வைக்கின்றன. அப்படியொரு நடை.
சரி நூலுக்குள் வருவோம்!
சராசரி அமெரிக்க இளைஞனான டெர்ரி ஹோல்ட் புரூக்ஸ் ”இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை புரிய வேண்டும்” என்ற கனவுகளுடன் இராணுவத்தில் சேர்கின்றான். இராணுவத்தில் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப் பக்குவம் வருகின்றது அவனுக்கு.
அவன் இராணுவப் பணியில் சேர்ந்தபொழுது அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சமயம் அது. எங்கு நோக்கினும் அது பற்றிய செய்திகளே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அச்செய்திகளில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் மிகைத்திருப்பதை உணர்கின்றான் புரூக்ஸ். ஓர் இனம்புரியாத சோகம் அவனது மனதில் படர்கின்றது. தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவனது சக இராணுவத்தினரிடமிருந்தே எதிர்ப்புகளும் வசவுகளும் வருவதைக் கண்டு அதிர்வுறுகின்றான். ஒரு கட்டத்தில் மனதில்பட்ட நடுநிலை கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றான் புரூக்ஸ்.
கூடுதல் பணி நியமனத்திற்காக மேற்கொண்டு பயிற்சிகள் வழங்கும்போதுதான் அங்கு நாட்டுப்பற்றை விட முஸ்லிம் எதிர்ப்புணர்வே பயிற்சியாகவும் செயல்முறை விளக்கமாகவும் அளிக்கப்படுவதைக் கண்டு மனதில் சில நெருடல்கள் ஏற்படுவதை உணர்கின்றான்.
பணி ஆணைக்காக அரசு அலுவகத்தில் ”அவர்களுக்கு தேவையானதை அவசரமாக நாம் செய்துகொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிக நிதானமாகத்தான் செய்து கொடுப்பார்கள்” என்று அமெரிக்க அரசுத்துறை நிர்வாகத்தின் வேகத்தை விளக்கும்போது இந்தியாவை ஞாபகப்படுத்துகின்றார்.
ஒருவழியாக கூடுதல் பயிற்சியெல்லாம் முடிந்தபின் அவர் செல்ல வேண்டியது குவாண்டனாமோ சிறைச்சாலைக்கு என்ற பணிநியமன ஆணை கிடைக்கின்றது.
அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை பற்றி நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது அது அமெரிக்காவின் எங்கோ மூலையில் அமைந்துள்ள ஒரு பயங்கர சித்ரவதைக் கூடம் என்றே தோன்றியிருக்கும். ஆனால் குவாண்டனாமோ சிறை அமெரிக்காவிற்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய கியூபாவின் தீவில் உள்ளது என்ற ஆச்சரியமிக்க உண்மை என்பது இப்புத்தகத்தின் வழியே அறிய முடிகின்றது.
கியூபா என்பது பச்சைப் பசேல் என்ற அழகிய தீவு. அதில் குவாண்டனாமோ என்பது மட்டும் சுட்டெரிக்கும் மணலும் மணல் சார்ந்த பாலைவனத் தீவு ஆகும். அந்தத் தீவில் பூனை அளவில் உள்ள பெருச்சாளி, உடும்பு, பெரிய பல்லி, தட்டு அகலத்தில் சிலந்தி என்று ஆபத்தான விலங்குகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தன. இவற்றின் நடுவில்தான் அந்தச் சிறைக்கொட்டடி அமைந்திருக்கின்றது.
குவாண்டனாமோவிற்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, சிறைக்கொட்டடியில் அடைத்திருக்கும் கைதிகளில் பெரும்பாலும் அப்பாவிகள் என்று. அதிலும் கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள்!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர இடிப்பிற்குக் காரணமானவர்களை விசாரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சிறைக்கொட்டடி. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சில நாடுகளிலிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட அப்பாவி கைதிகளும் அடக்கம்.
புரூக்ஸிற்கு கொடுக்கப்பட்ட பணி என்பது சிறைக் கைதிகளைக் கவனிப்பது, விசாரணைக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்வது, கைதிகளிடையே பிரச்னை ஏற்பட்டால் அவர்களைக் கடுமையாகத் தாக்குவது, மிக மோசமாகத் திட்டுவது போன்றவைதான்.
இராணுவ வீரர்களின் உணவுக்கூடங்களில் எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியில் இரத்த வேட்கையைத் தூண்டும் பாடல்களும், அமெரிக்க பலத்தைப் பறைசாற்றும் படங்களும், இரத்தம் சொட்டுவது மாதிரி எழுத்துகளின் எழுத்துருக்களும் அமைந்திருக்கும். ‘பழிவாங்கு’ என்ற சொற்களே ஒளிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். இராணுவ வீரர்களின் பழிவாங்கும் எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் இவை.
அங்குள்ள கைதிகளை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தொடர்ந்து தூங்க விடாமல் இடையிடையே விழிக்க வைத்து கொடுமைப்படுத்துவது, கைதிகள் எதிர்த்தால் அவர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிப்பது, அவர்களின் தாடிகளைச் சிரைப்பது எனச் சித்திரவதைகளில் பல்வேறு முறைகளைக் கையாண்டனர்.
கைதிகளிடம் அத்துமீறி நடப்பதைக் கண்டு புரூக்ஸின் மனம் துடிக்கின்றது. அதன் விளைவாக புரூக்ஸ் கைதிகளுடன் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான், அவர்கள் சொல்வதைக் கேட்கின்றான். இதற்கு கைமாறாக கைதிகளிடமிருந்து கிடைத்தது அல்குர்ஆன்!
அதனைப் படிக்கின்றான். மனதில் சலசலப்புகள் ஏற்படுவதை உணர்கின்றான். ”தீய செயல்களின் ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டு வரும்போது இறை உதவியின் கதவுகள் ஒவ்வென்றாய் திறக்கின்றன” என்ற அனுபவத்தைப் பகிர்கின்றான். (அதனைப் படிக்கும்போது நம் கண்களிலும் கண்ணீர் கசியும்).
இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. அதனைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தான், சிறையின் சூழல் அதற்கு தகுந்தாற்போலில்லை என்ற காரணத்தினால்.
ஒரு கட்டத்தில் இனியும் காலம் தாழ்த்தாது சிறையிலேயே இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, அவன் மிகவும் மதிக்கும் கைதியான அஹ்மத் அர்ரஷாதியின் முன்னிலையில் கலிமாவை மொழிந்து இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறான். சிறையிலேயே அதனை நடைமுறையும் படுத்துகின்றான் புரூக்ஸ்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை இவ்வாறு வர்ணிக்கின்றான் புரூக்ஸ்: ”இதுவரை நான் காணாமற் போயிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கின்றேன் என்று எனக்குத் தெரிகிறது. நான் பயணிக்க எனக்கென்று ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கின்றது”.
ஆனால் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதன் மூலமும், அவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும் சக இராணுவ வீரர்களிடமிருந்து அவனுக்குக் கிடைத்த பெயர் ”துரோகி”!
பின்னர் குவாண்டனாமோவிலிருந்து பணி முடிந்து அமெரிக்காவிற்குத் திரும்ப அழைக்கப்படுகின்றான். அமெரிக்கா வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குவாண்டனாமோவில் நடக்கும் அநீதங்களால் மனம் வெதும்பி அங்கு நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு அறிவிக்க முடிவு செய்கிறான் புரூக்ஸ்.
அதனால் ஏற்பட்ட விளைவுகளை நூலின் இறுதி அத்தியாயத்தில் விளக்கியுள்ளான் புரூக்ஸ்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காயல் பன்னூலாசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள். ஒரே வாசிப்பில் முடிக்க வைக்கும் நடை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment