Tuesday, 7 July 2026

பள்ளிகளில் விளையாட்டுக்கான முக்கியத்துவம்! - M.S. செய்யது மரியம்

 ஓடி விளையாடு பாப்பா...

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...

கூடி விளையாடு பாப்பா....

என்று அன்றே விளையாட்டின் முக்கியத்துவம் அறிந்து பாரதியார் பாடினார்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் உள்ள விளையாட்டு எப்படி  என்றால், அது ஒரு இடத்தில் இருந்தபடியே கண்களுக்கும் கைவிரல்களுக்கும் மட்டுமே அசைவு கொடுத்து (screenல்) மட்டுமே விளையாடும் விளையாட்டாகத்தான் உள்ளது.

சிறு வயதில் பிள்ளைகளுக்கு நிலா... காக்கை.. பூனை... என்று காட்டி வீட்டின் பின்புறம் உலாவ விட்டு சாப்பாடு கொடுத்தது அந்தக் காலம்.

இப்போதுள்ள தாய்மார்கள், பிள்ளைகளுக்கு அலைபேசியில் விளையாட்டையோ பாட்டையோ போட்டுக் காட்டி தானும் அசையாமல், பிள்ளைகளையும் அசையாப் பொருட்களாக வளர்த்து வருவது இந்தக் காலம்.

இது கண்களுக்கும், மூளைக்கும் கெடுதலை ஏற்படுத்தி, மூளை வளர்ச்சி (Mental Devolepment) இல்லாமல் ஆகக்கூடிய ஒரு பெரிய பிரச்சினையாக ஆகிறது.

அன்றைய காலக் கட்டத்தில் நாம் ஆடி, ஓடி விளையாடிய விளையாட்டுகள் எல்லாம் இன்று காணாமலேயே போய் விட்டன.

சோம்பேறித்தனமானவர்களாகவும், மனவளர்ச்சி குன்றியவர்களாகவும் பருத்த உடலுடையவர்களாகவும், தெம்பில்லாதவர்களாகவும்தான் பிள்ளைகளை இன்று அதிகமாகப் பார்க்க முடிகிறது.

மனிதனின் உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளும் சீராகச் செயல்பட விளையாட்டு அவசியமான ஒன்றாக இருக்கின்றது. எனவேதான் உடல் நலனும் விளையாட்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று சொல்கின்ற "உலக சுகாதார அமைப்பு" குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக விளையாட்டுப் போட்டிகளை நடத்த முயன்று வருகிறது.

நீரிழிவு நோய், உடல் பருமன் போன்றவை வராமல் தடுக்க குழந்தைகளுக்கு விளையாட்டு அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மனவலிமை, தன்னம்பிக்கை, தோல்விகளைத் தாங்கும் மனப்பக்குவம் போன்றவற்றை அடையவும், வெற்றிப் பாதைகளை அடையவும் குழந்தைகள் விளையாடுவது கட்டாயத் தேவை என்று உடற்பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அறிவுக்கு கல்வி எப்படி தேவையோ அது போல உடல்நலனுக்கு விளையாட்டு முக்கியம் என்பதை உணர்ந்து பள்ளிகளில் குழந்தைகளைக் கட்டாயம் விளையாட வைக்க வேண்டும்.

இன்றைய புதிய தலைமுறை மாணவர்களிடம் குறைந்து கொண்டு வரும் பல்வேறு விதமான பலன்களை விளையாட்டும், உடற்பயிற்சியும் பெற்றுத் தருகின்றன.

நம் குழந்தைகளின் வாழ்வோடு விளையாட்டு இணைந்திருக்கும்போதுதான்,  அவர்களுடைய பல திறமைகள் வெளிவருகின்றன. அதனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைக்கின்றன. உடலும் உள்ளமும் தூய்மையடைகின்றன.

போட்டி மனப்பான்மை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல், சவால்களை எதிர்கொள்ளுதல், தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெறுதல் போன்ற பண்புகள், மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்க விளையாட்டு வழி வகை செய்கிறது.

இவையெல்லாம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அவர்கள் குழுவாகச் சேர்ந்து விளையாடும்போதுதான் கிடைக்க வாய்ப்பாகிறது.

அவர்களின் மனநலமும் சிறப்பாக ஆவதால், தேர்வுக்காக தங்களை ஆயப்படுத்திக் கொள்ளுதல், பெற்றோரை மதித்தல், வீட்டு வேலைகளைச் செய்து கொடுத்தல், சிறியவர்களோடு அன்பாகப் பழகுதல் போன்ற பல நல்ல பண்புகளைப் பெறுகின்றனர்.

படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் மாணவனை விட படிப்போடு விளையாட்டிலும் ஈடுபாடு உள்ள மாணவன் எல்லா விதத்திலும் சிறப்பாகச் செயல்படுவான்.

அவனுக்கு மேடைப் பேச்சு எளிதாக வரும். தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக அவன் அழைக்கப்பட்டால் அவன் அதனைத் தைரியமாக ஏற்றுக்கொண்டு திறமையாக செய்து முடிப்பான்.

ஏனென்றால் அவன் பல இடங்களுக்குச் சென்று முன் பின் தெரியாதவர்களோடு குழுவாக விளையாடி வெற்றி பெறவோ, தோற்கவோ செய்திருப்பான். விளையாட்டின் விதிமுறைகளை, ஒழுங்குமுறைகளை மதித்து, நேரத்தைத் தவற விடாமல் இலக்கை அடைந்திருப்பான்.

இதனால் அவன் பணிவு, தன்னடக்கம், தலைமைக்குக் கட்டுப்படுதல், பிறரின் அறிவுரை கேட்டு மதித்தல் போன்ற நல்ல பண்புகளைக் கற்றுக் கொண்டிருப்பான். விளையாட்டில் அவன் தலைவரின் (Captain) சொல்லைக் கேட்டு மதித்து நடந்தே பழகியிருப்பான்.

வகுப்பறையில் கிடைக்காத ஏராளமான விடயங்கள் விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு வாகாய் கிடைக்கும்.

தற்கொலை செய்து கொள்ளும் மனிதர்கள் பெரும்பாலும் விளையாட்டு மைதானம் போகாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் பலமுறை தோற்று அடுத்த முறை வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டு போக மாட்டார்கள். எந்தக் கல்வியிலும் கிடைக்காத இந்தப் பண்பு விளையாட்டில் மட்டும்தான் கிடைக்கிறது.

குழந்தைகளைப் பள்ளிகளில் ஏதாவது விளையாட்டுப் போட்டிகளில் கட்டாயம் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் தானாக வரும்.

இதன் மூலம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு நாம் செலவழிக்கும் செலவுகளும், நேரங்களும் பலனளிக்கும். ஏனென்றால் அவர்கள் இந்தப் பள்ளி விளையாட்டுகளிலேயே இவையனைத்தையும் பெரும்பாலும் கற்று முடித்திருப்பார்கள்.

இதனால் பல சிக்கல்கள் தீரும். அவர்களுடைய வாழ்க்கையில் நேரந்தவறாமை (Time Punctuality), நேர்மறை சிந்தனை போன்ற நற்பண்புகள் நடைமுறைக்கு வரும்.

எந்தக் கெட்டப் பழக்கத்திற்கும் அவர்கள் அடிமையாக மாட்டார்கள். சரியான நேரத்தில் சாப்பிடுவார்கள். உரிய நேரத்தில் உறங்குவார்கள்.

இன்று "நீல திமிங்கலம்" (Blue Whale) என்று ஒரு புதிய விளையாட்டு மக்களிடையே தவழ்ந்து வருகிறது. குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அந்த விளையாட்டில் பல இளைஞர்கள் மூழ்கி, கோழைகளாக ஆகி, தன் உயிரையே மாய்க்கும் அளவிற்கு அபாயச் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது போன்ற வீணான, வாழ்க்கையை நாசமாக்குகின்ற, உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளை இஸ்லாம் தடை செய்துள்ளது.

விளையாட்டு கூட அது வாழ்க்கைக்கு உயிரோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விளையாட்டும் உயிரினங்களைச் சேதப்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் கூறுகிறது.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அம்பு எறிதல், குதிரைப் பந்தயம், ஓட்டப் பந்தயம் போன்ற வீர விளையாட்டுகளை விளையாடும்படி ஆர்வமூட்டினார்கள். எந்த விளையாட்டு நம் வாழ்க்கைக்குப் பலனளிக்காதோ அந்த விளையாட்டை இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

இஸ்லாம் மார்க்கம் உடலை ஆரோக்கியமாக வைக்கவும், தீமைகளையும், தீயவர்களையும் துணிவுடன் தட்டிக் கேட்கவும் கூடிய ஓர் ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்கத்தான் ஊக்கப்படுத்துகிறது.

ஓய்வு எப்படி ஒரு மனிதனுக்கு தேவையோ அதே போல, மன அழுத்தம் நீங்க உடற்பயிற்சி தேவையாக இருக்கின்றது.

பலவீனமான முஃமினை விட பலமான முஃமினே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரத்தம், சிராய்ப்பு, வலி போன்ற எந்தக் கஷ்டத்தையுமே சந்திக்காத மனிதன் பிறருடைய வலியையோ, காயத்தையோ, வேதனையையோ அறியாதவனாக ஆகிறான்.

இந்தியாவின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொண்டு வந்த ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் (Major Dhyan Chand) பிறந்த நாளை, "தேசிய விளையாட்டு தினமாக" இந்தியா கொண்டாடி மகிழ்கிறது.

ஒலிம்பிக் விளையாட்டில் தமது அசாத்திய திறமையால், இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்காக, அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்படுகிறது.

விளையாட்டின் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டும், விளையாட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும், விளையாட்டை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுசரிக்கப்படுவதுதான் இந்த விளையாட்டு தினம்.

இன்று மருத்துவமனைகள் அதிகமாகி விட்டன. விளையாட்டு மைதானங்கள் குறைந்து விட்டன.

பள்ளிகளில் விளையாட்டுக்கான ஆர்வம் குறைந்துக்கொண்டு போவதற்குக் காரணம் படிப்பில் நமது பள்ளியின் பெயர் முதலாவதாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான்.

விளையாட்டுடன் படிப்பிலும் ஆர்வம் செலுத்தும் மாணவன், படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறான்.

“சாதாரண ஒரு மனிதன் 6 மணி நேரம் செய்கிற வேலையை விளையாட்டு வீரனான மனிதன் (Sportsman) 2 மணி நேரத்தில் செய்து முடித்து விடுவான்” என்கிறார்கள்.

அவனுக்கு இருக்கும் உடல் வலிமை, மனவலிமை எல்லாமே உயர்வாக இருக்கும். எப்போதும் அவர்கள் வளைந்து கொடுப்பவர்களாக (flexibility) இருப்பார்கள்.

எனவே, விளையாட்டின் அருமையை நாடு முழுவதும் பரப்பி, ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை வார்த்தெடுப்போம்!

Friday, 26 June 2026

போதைப்பொருட்களின் பேராபத்து

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக அருளிய இந்த மகத்தான ஷரீஅத்தை, அவர்களுக்கான பேரருளாகவே ஏற்படுத்தியுள்ளான்.

அதன் மூலம் அவர்களின்:

  • மார்க்கம்

  • உயிர்

  • அறிவு

  • செல்வம்

  • மானம்

ஆகிய ஐந்து அடிப்படை அம்சங்களையும் பாதுகாக்கின்றான்.

இவற்றையெல்லாம் சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்றுதான் போதைப்பொருள்!

அது உயிரைக் குடிக்கும் நஞ்சு. சமூகத்தைச் சீரழிக்கும் சாபக்கேடு.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒருவர், படிப்படியாக அழிவின் பாதையில் தள்ளப்படுகிறார். இறுதியில் அவர் சமூகத்தாலும் மறக்கப்பட்டு, தன்னையும் இழந்தவராக ஆகிவிடுகிறார்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا ۝ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا

"நீங்கள் உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த கருணையுடையவன். எவன் அநியாயமாகவும் அத்துமீறியும் அவ்வாறு செய்கிறானோ, அவனை நாம் நிச்சயமாக நரக நெருப்பில் புகுத்துவோம்." (அல்குர்ஆன் 4:29–30)

இந்த வசனம், அல்லாஹ் தடை செய்தவற்றை உட்கொண்டு தன்னைத் தானே அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கடுமையான எச்சரிக்கை.

இதனை வள்ளல் நபி ﷺ அவர்கள் மேலும் வலியுறுத்தி கூறினார்கள்:

مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ؛ فَسُمُّهُ بِيَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ، خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا

"எவர் நஞ்சைக் குடித்து தன்னைத் தானே கொன்று கொள்கிறாரோ, அவர் அந்த நஞ்சைத் தமது கையில் வைத்தபடியே நரக நெருப்பில் தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பார்." (முஸ்னத் அஹ்மத், திர்மிதி)

போதைப்பொருட்கள், மனிதனை அழிக்கும் மிகக் கொடிய நஞ்சுகள்.

எவ்வளவு ஆச்சரியமான நிலை!

ஒருவன் தனது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் செலவிடத் தயங்குகிறான். ஆனால், தன்னை அழிக்கும் போதைப்பொருளுக்காக தனது செல்வத்தை மனமுவந்து செலவிடுகிறான்.

நாளை மறுமையில் அல்லாஹ் அவனிடம் கேட்கும்போது அவன் என்ன பதில் கூறுவான்?

عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ... وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَ أَنْفَقَهُ؟

"அவன் தனது ஆயுளை எவ்வாறு கழித்தான்? தனது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எதில் செலவிட்டான்?" (திர்மிதி)

அந்தக் கேள்விகளுக்கான பதிலை அவன் தயாராக வைத்திருக்கிறானா?

அல்லாஹ் மனிதனுக்குப் பெருமையாக வழங்கிய அறிவொளியை, அவனே தன் கைகளால் அணைத்துக்கொள்ள எவ்வாறு மனம் ஒப்புகிறது?

தாபிஈ;fகளின் தலைசிறந்த அறிஞரான ஹஸன் அல்-பஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:

"அறிவை விலைக்கு வாங்க முடியும் என்றிருந்தால், அதைப் பெற மக்கள் தங்களுக்குள் கடுமையாகப் போட்டியிட்டிருப்பார்கள். அப்படியிருக்க, தனது செல்வத்தைச் செலவழித்து அந்த அறிவையே சீரழித்துக்கொள்பவனின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது!"

ஒருவன் எவ்வாறு தனது உள்ளத்தின் கடிவாளத்தை போதைப்பொருட்களிடம் ஒப்படைத்து, நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக மாற சம்மதிக்கிறான்?

 அவன்,

لَا يَعْرِفُ مَعْرُوفًا، وَلَا يُنْكِرُ مُنْكَرًا، إِلَّا مَا أُشْرِبَ مِنْ هَوَاهُ

"தனது மனஇச்சைக்கு ஒத்தவற்றைத் தவிர, நன்மையை நன்மையென அறியாதவனாகவும், தீமையைத் தீமையென வெறுக்காதவனாகவும் ஆகிவிடுகிறான்." (முஸ்லிம்)

போதைப்பொருட்கள் மனிதனை முற்றிலும் ஆட்கொண்டு, அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் அவனை மறக்கச் செய்கின்றன.

அவை அவனது குடும்பத்தின் மீது துன்பத்தையும் வேதனையையும் சுமத்துகின்றன. மகிழ்ச்சியின் இடத்தில் கவலையையும், அன்பின் இடத்தில் பகைமையையும் வெறுப்பையும் உருவாக்குகின்றன.

இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ

"மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் விதைக்கவும், அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுக்கவும்தான் ஷைத்தான் விரும்புகிறான்." (அல்குர்ஆன் 5:91)

பகுத்தறிவு உடையவன், தன்னைத்தானே அழிவுக்கு உட்படுத்த மாட்டான்; தனது நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டான்; தனது செல்வத்தை வீணடிக்க மாட்டான்; தனது பிள்ளைகளைப் புறக்கணிக்க மாட்டான்; தனது குடும்பத்தைச் சீர்குலைக்க மாட்டான்.

குறிப்பாக நபி ﷺ அவர்கள் கூறிய இந்த எச்சரிக்கையை கேட்ட பிறகு:

كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ

"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களைப் புறக்கணிப்பதே அவனுக்குப் பெரும் பாவமாகப் போதுமானது." (அபூ தாவூத்)

குடும்பம் என்பது பாதுகாப்பு அரணும், அமைதியின் புகலிடமும் ஆகும்.

பிள்ளைகள் தங்கள் வீட்டில் முன்மாதிரியான பெற்றோர்களையும், இதயத்தை நிரப்பும் அன்பையும், அறிவை வளர்க்கும் பயனுள்ள உரையாடல்களையும் காணாவிட்டால், அவர்கள் தீய நண்பர்களின் சகவாசத்தை நாடத் தொடங்குவார்கள்.

இதனால்தான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ

"ஒருவன் தனது நெருங்கிய நண்பனின் வழியிலேயே (மார்க்கம், பண்பு, வாழ்க்கைமுறை) இருப்பான்." (அபூ தாவூத்)

எனவே, உங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்ளுங்கள்.

அவர்களின் நடத்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள்.

அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேளுங்கள்.

அவர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துங்கள்.

அவர்களுக்கு நல்ல கல்வியையும் நற்பண்புகளையும் அளித்து, நேர்வழியில் வளர்க்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்.

அவர்கள் உங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட அமானிதம் (இறைநம்பிக்கை ஒப்படைப்பு); நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு.

நோய் வந்த பின் சிகிச்சை செய்வதை விட, அது வராமல் தடுப்பதே சிறந்தது.

Sunday, 21 June 2026

வீரமரணத்தை விரும்பிய வீரமறவர்கள்!

அண்ணலாரின் அருமைத் தோழர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுது தங்கள் ஈமானைப் புதுப்பித்துக்கொள்வர்.

அவர்கள் வீரமரணம் அடைவதில் அலாதி ஆர்வம் கொண்டிருந்தனர். இதனை இறைமறை இவ்வாறு இயம்புகிறது:

مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டனர். அவர்களில் சிலர் (வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தனர். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (சூரா அல் அஹ்ஸாப் 33:23)

அனஸ் பின் நள்ரு (ரழி) என்ற நபித்தோழருக்கு பத்ருப் போரில் பங்கெடுக்க முடியாமற்போனது. அவருக்கு அது குறித்த கவலை எப்பொழுதும் இருந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் போரில் பங்கெடுக்க அடுத்த வாய்ப்பு வந்தது. வீராவேசத்துடன் உஹதுப் போரில் கலந்துகொண்டார்.

போர்க்களத்தில் அவர் விரைவாக சென்று கொண்டிருந்ததைக் கண்ட ஸஅத் பின் மாலிக் (ரழி) அவரிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்.

அதற்கு அனஸ் பின் நள்ரு (ரழி) இவ்வாறு பதிலளித்தார்: “சுவனத்தின் வாடையை நுகர்வதற்காக! அதனை உஹதின் அடியிலேயே நான் காண்கிறேன்.”

வீரம் பொங்க வீறு கொண்டு போர்க்களத்தில் உட்புகுந்தவர், எதிரிகளைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். எதிரிகளின் வெட்டுப் பட்டு வீரமரணம் அடைந்தார்.

போர் முடிந்த பின்னர், நபித்தோழர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்களைத் தேடியபொழுது இவரை யாரென்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு உடல் முழுவதும் வெட்டுப் பட்டுக் கிடந்தார்.

அவருடைய சகோதரிதான் இறுதியில் அவரைக் கண்டுபிடித்தார். அவருடைய கை விரல்களைக் கொண்டு அவரை அடையாளம் கண்டு, நபித்தோழர்களிடம் அறிவித்தார்.

இவர் தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் இறக்கப்பட்டது. இவரைப் போன்று நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரழி) உட்பட 70 நபித்தோழர்கள் உஹதுப் போரில் வீரமரணம் எய்தினார்கள்.

இந்த அருட்பேறு கிடைக்காத வேறு சிலர் அதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதனைத்தான் அல்லாஹ் அவ்வசனத்தின் பிற்பகுதியில் வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை என்று குறிப்பிடுகிறான்.


Friday, 19 June 2026

மூத்தோரைக் கவனித்தலும், பெரியோரைப் பேணுதலும்!

நம்மைப் படைத்த இறைவன் முதியவர்களைக் கண்ணியப்படுத்துவதை மிக உன்னதமான பண்புகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்கள் முதியவராக இருந்த தன் தந்தையை நபியவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி அவர்கள் அவரைப் பார்த்தபோது, "அவர்களை வீட்டிலேயே நீங்கள் விட்டிருக்கக் கூடாதா? நானே அவர்களைக் காண அங்கு வந்திருப்பேனே!" என்று கூறினார்கள். (அஹ்மத்)

இந்த முன்மாதிரி எவ்வளவு மகத்தானது! இதில், முதியவர்களை மதிக்கவும், கண்ணியப்படுத்தவும், உபசரிக்கவும் நபி அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

"உங்களில் சிறந்தவர் யார் என்றால், எவருக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டு, அவருடைய செயல்களும் அழகியதாக அமைந்ததோ அவரே ஆவார்." (அஹ்மத்)

இறைவனிடம் வயதானவர்களுக்கு இத்தகைய அந்தஸ்து இருக்கும்போது, அவர்களைக் கண்ணியப்படுத்துவது என்பது கண்ணியமும் உயர்வும் மிக்க அல்லாஹ்வை மகிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். நபி அவர்கள் கூறினார்கள்:

"முதிர்ந்த வயதுடைய ஒரு முஸ்லிமைக் கண்ணியப்படுத்துவது, அல்லாஹ்வை மகிமைப்படுத்துவதன் ஒரு பகுதியாகும்." (அபூ தாவூத்)

எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் முதியவர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதோ, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கண்ணியத்தையும் மரியாதையையும் குறைத்து மதிப்பிடுவதோ தகாது. நபி அவர்கள் கூறினார்கள்:

"சிறியவர்களிடம் இரக்கம் காட்டாதவரும், பெரியவர்களின் உரிமைகளை அறிந்துகொள்ளாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்." (அபூ தாவூத்)

மேலும், அல்லாஹ் அவர்களுக்குள் பரக்கத்தை (அபிவிருத்தியை) வைத்திருக்கும்போது நாம் அவர்களை எவ்வாறு மதிக்காமல் இருக்க முடியும்? நமது அன்பிற்குரிய நபி அவர்கள் கூறினார்கள்:

"அபிவிருத்தி (பரக்கத்) உங்களிடமுள்ள முதியவர்களுடன்தான் இருக்கிறது. (இப்னு ஹிப்பான்)

எனவே, அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் அவர்களை நீங்கள் இழப்பதற்கு முன்பாக அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் அவர்களின் அடக்கத்தலங்களுக்கு அருகில் மட்டுமே அமரக்கூடிய ஒரு நாள் வருவதற்கு முன்பு அவர்களோடு அமர்ந்து பேசுங்கள். அவர்களின் வாழ்க்கை தோழமையுடனும் நிம்மதியுடனும் நிறைவதற்கு, உங்கள் குடும்பங்களிலும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலும் அவர்களுக்கு முதன்மையான இடத்தைக் கொடுங்கள்.

அவர்களின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் கைபேசிகள் அவர்களிடமிருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப அனுமதிக்காதீர்கள். அவர்கள் பேசும்பொழுது இடையில் நீங்கள் பேசாதீர்கள் அல்லது அவர்களின் பேச்சைத் துண்டிக்காதீர்கள்.

ஒரு கூட்டத்திலிருந்த மிகச் சிறியவர் பேசத் தொடங்கியபோது, நபி அவர்கள், "பெரியவரைப் பேச விடுங்கள், பெரியவரைப் பேச விடுங்கள்" என்று கூறிய வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள். (புகாரீ, முஸ்லிம்)

அதாவது, வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை கொடுத்து, அவரை முதலில் பேச விடுங்கள்; இது பெரியவர்களை மதிப்பதற்கான அழகிய ஒழுக்கமும் வழிகாட்டுதலும் ஆகும்.

இதே அணுகுமுறையைத்தான் நபித்தோழர்களும் தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இதோ சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

"நான் நபி அவர்களிடம் (ஹதீஸ்களை) மனனம் செய்யும் சிறுவனாக இருந்தேன். ஆனால், என்னை விட வயதில் மூத்தவர்கள் அங்கிருந்த காரணத்தினால் மட்டுமே நான் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டேன்."(முஸ்லிம்)

உங்கள் முதியவர்களின் மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குச் சிரமமான வழிபாட்டு முறைகளை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அல்லாஹ் அவர்களுக்குச் சலுகைகளை வழங்கி, அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ற சட்டங்களை இறக்கியுள்ளான்.

"மேலும், (வயோதிகம் போன்றவற்றால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக (ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்)." (குர்ஆன் 2:184)

உங்கள் பெரியவர்களிடம் மென்மையாகப் பேசுங்கள். மனிதர்களுக்கு வயது கூடும்போது, அவர்களின் உள்ளங்கள் மிகவும் மென்மையாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியதாகவும் மாறுகின்றன. எனவே, ஒரு பார்வையின் மூலமாகவோ அல்லது கடுமையான வார்த்தையின் மூலமாகவோ அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள்.

உங்களைப் படைத்தவனின் கட்டளையைச் சிந்தித்துப் பாருங்கள்:

"அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உங்களிடம் முதுமையை அடைந்துவிட்டால், அவர்களை நோக்கி 'சீ' (என்று வெறுப்பை உமிழும் வார்த்தையைக்கூட) சொல்லாதீர்கள்; அவர்களை அதட்டாதீர்கள்; மேலும் அவர்களிடம் கண்ணியமான வார்த்தையையே பேசுங்கள்." (குர்ஆன் 17:23)

முதியவர்களைக் கண்ணியப்படுத்துவது என்பது அவர்களின் ஞானத்தையும், அனுபவத்தையும் அங்கீகரிப்பதாகும்; இதிலிருந்துதான் அடுத்தடுத்த தலைமுறையினர் தொடர்ந்து பயனடைகின்றனர்.

அவர்கள் வழிகாட்டுதல், ஆலோசனை போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கின்றனர். நமது சமூகத்தின் நினைவாற்றலாகவும், (சமூகத்தைக்) கட்டியெழுப்பிய கரங்களாகவும், எந்தவொரு கைம்மாறையோ நன்றியையோ எதிர்பார்க்காமல் தங்களை அர்ப்பணித்த ஆன்மாக்களாகவும் திகழ்கின்றனர்.

நிறைவான நன்றியுணர்வு, கவனிப்பு, அக்கறை, அழகிய முறையில் நடத்துதல் ஆகியவை அவர்கள் நமக்குச் செய்தவற்றுக்கு நாம் செய்யும் கைம்மாறாகும்.

முதியவர்களை மதிப்பது ஒரு மார்க்கக் கடமை மட்டுமல்ல, அது நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் என்பதையும் நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்போம். கண்ணியமிக்க நபிகளார் இவ்வாறு கூறினார்கள்:

"உங்களுக்கு எவரேனும் ஒரு நன்மை செய்தால், அவருக்கு நீங்கள் பிரதிபலன் செய்யுங்கள்." (அபூ தாவூத்)

நம்மை வளர்ப்பதற்கும், இந்தச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த நம்முடைய பெற்றோர் செய்த நன்மையை விடப் பெரிய நன்மை வேறு என்ன இருக்க முடியும்?

நபியவர்களின் ஹிஜ்ரத்தும், அருமைத்தோழர்களின் அளப்பரிய அன்பும்!

அருள்மிக்க ஹிஜ்ரத் பயணம் தனது இலக்கை அடைந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நுழைந்தார்கள். அந்த நாளைப் பற்றி நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

"அந்நகரில் உள்ள அனைத்தும் ஒளிமயமாகிப் போனது." (திர்மிதீ)

நபித்தோழர்கள் தங்களுடைய உண்மையான அன்பால் அண்ணலாரைச் சூழ்ந்திருந்தனர். அதைப் பார்த்த ஒருவர் கூறினார்:

"முஹம்மத் (ஸல்) அவர்களை அவர்களின் தோழர்கள் நேசித்தது போன்ற அன்பை வேறு யாரும் யார் மீதும் கொண்டதை நான் கண்டதில்லை." (ஸீரத் இப்னு ஹிஷாம்)

இவ்வாறு ஹிஜ்ரத், உண்மையான அன்பின் இயல்பை வெளிப்படுத்தியது. அது பின்பற்றுதலையும், இறைநம்பிக்கையையும், தியாகத்தையும் உருவாக்கும் அன்பாகும். அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், தங்கள் செல்வத்தையும் தம் அன்புக்குரிய நபி (ஸல்) அவர்களின் சேவைக்காக அர்ப்பணித்தார்கள்.

இந்த ஹிஜ்ரத் ஆழமான ஈமானியப் பாடங்களையும் உயர்ந்த ஆன்மீக அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பாகும். அந்த அன்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் மிக அழகாக வெளிப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பற்றித் தெரிவித்தபோது, அபூபக்கர் (ரலி) அவர்கள் உடனே கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! உங்கள் துணை எனக்குக் கிடைக்குமா?"

அதற்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

"உமக்கே அந்தத் துணை." (புகாரீ)

பின்னர் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆனந்தத்தில் ஒருவர் அழ முடியும் என்பதை நான் அறிந்ததில்லை. அந்நாளில் அபூபக்கர் (ரலி) அவர்கள் மகிழ்ச்சியால் அழுவதைக் கண்டபோதுதான் அதை அறிந்தேன்." (முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்)

இது எத்தகைய அன்பு?

அது ஆபத்துகள் நிறைந்த பயணம் என்பதை அவர் அறிந்திருந்தார். இருந்தாலும் அவருடைய கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பின.

அதையும் விட ஆச்சரியமானது என்னவென்றால், அவர் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டதை விட கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்:

"சில நேரங்களில் எனக்கு முன்னாலும், சில நேரங்களில் எனக்குப் பின்னாலும் தாங்கள் நடப்பதற்குக் காரணம் என்ன?"

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"நம்மைத் துரத்தி வருபவர்களை நினைக்கும்போது உங்கள் பின்னால் நடக்கிறேன். முன்னால் மறைந்திருக்கும் ஆபத்தை நினைக்கும்போது உங்கள் முன்னால் நடக்கிறேன்."

அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்:

"அபூபக்கரே! ஏதேனும் தீங்கு நேர வேண்டியிருந்தால், அது எனக்கு நேர்வதை விட உங்களுக்கு நேர வேண்டும் என்று விரும்புவீரா?"

அதற்கு அவர் பதிலளித்தார்:

"ஆம். உங்களை உண்மையுடன் அனுப்பிய இறைவன் மீது ஆணையாக!"

அவர்கள் குகையை அடைந்தபோது அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இங்கேயே இருங்கள். நான் முதலில் குகையைச் சோதித்துப் பாதுகாப்பானதா என்று பார்த்து விடுகிறேன்." (முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

அதாவது, உங்களுக்காக அதைப் பாதுகாப்பானதாக மாற்றும் வரை.

பின்னர் ஆபத்து நெருங்கியபோது, நபி (ஸல்) அவர்களுக்காக அஞ்சிய அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"அவர்களில் யாராவது தமது காலடிக்குக் கீழே பார்த்தால் நம்மைக் கண்டுவிடுவார்கள்."

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அபூபக்கரே! மூன்றாவதாக அல்லாஹ் இருக்கும்பொழுது இருவரைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" (புகாரீ, முஸ்லிம்)

இதுபற்றியே அல்லாஹ் கூறுகிறான்:

"நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தான். நிராகரிப்போர் அவரை வெளியேற்றியபோது, அவர் இருவரில் ஒருவராக இருந்தார். இருவரும் குகையில் இருந்தபோது அவர் தன் தோழரிடம், 'கவலைப்படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்' என்று கூறினார். அப்போது அல்லாஹ் தனது அமைதியை அவர்கள் மீது இறக்கி, நீங்கள் காணாத படைகளால் அவர்களுக்கு உதவி செய்தான்." (அல்குர்ஆன் 9:40)

அதன் பின்னர் அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"முழு இரவும் நாங்கள் பயணம் செய்தோம். நண்பகல் வெப்பம் வந்தபோது, நிழல் தரும் ஒரு பெரிய பாறையைக் கண்டோம். அப்போது நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! சிறிது ஓய்வெடுங்கள்.'"

இந்த அன்பின் மகத்துவத்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

முழு இரவும் அவர் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தார். பிறகு அவர் தனக்காக ஓய்வைத் தேர்ந்தெடுத்தாரா?

இல்லை.

மாறாக அவர் கூறுகிறார்:

"நான் வெளியே சென்றேன். அப்போது ஒரு மேய்ப்பனைச் சந்தித்தேன். 'எனக்காக பால் கறந்து தருவாயா?' என்று கேட்டேன். அவன் 'சரி' என்றான். பின்னர் அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் அருந்தினார்கள். அவர்கள் அருந்துவதைப் பார்த்து நான் திருப்தி அடைந்தேன்." (புகாரீ, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்; அபூபக்கர் (ரலி) அவர்கள் மனநிறைவு அடைந்தார்கள். ஏனெனில் உண்மையான நேசன், தான் நேசிப்பவரின் நிம்மதியிலும் நலத்திலும்தான் மகிழ்ச்சியைக் காண்கிறான்.

இதுவே நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பாகும். அது நெஞ்சங்களை நேர்மையாலும் அர்ப்பணிப்பாலும் நிரப்பி, கீழ்ப்படிதல், விசுவாசம் மற்றும் உண்மையான பின்பற்றுதலை உருவாக்கியது.

Tuesday, 24 March 2026

‘துரோகி’ - நூலாய்வு ஆக்கம்: அமீர் சுல்தான் (சஊதி அரபிய்யாவில் பணியாற்றும் பொறியியல் பட்டதாரி; இலக்கிய ஆர்வலர்)


”துரோகி” என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கின்றது. அதன் முன்னுரையை வாசிக்கும்போது அது நிகழ்காலத்தின் வரலாறு, அதுவும் அமெரிக்க இராணுவ வீரனின் சுயபுராணம் என்பதை அறியும்போது உடனே வாசிக்க வேண்டும் என ஆவல் தோன்றும். பக்கங்களைப் புரட்டப் புரட்ட கீழே வைக்க இயலாத அளவுக்கு ஒரே வாசிப்பில் முடிக்க வேண்டிய புத்தகம் இது.
தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களோடு நம்மையும் அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். நாமும் அருகில் நின்று காணுவதைப்போன்ற ஓர் உணர்வு. அவனின் சுக துக்கங்கள் நம்மை ஆட்கொள்ள வைக்கின்றன. அப்படியொரு நடை.
சரி நூலுக்குள் வருவோம்!
சராசரி அமெரிக்க இளைஞனான டெர்ரி ஹோல்ட் புரூக்ஸ் ”இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை புரிய வேண்டும்” என்ற கனவுகளுடன் இராணுவத்தில் சேர்கின்றான். இராணுவத்தில் கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சிகளுக்குப் பின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற மனப் பக்குவம் வருகின்றது அவனுக்கு.
அவன் இராணுவப் பணியில் சேர்ந்தபொழுது அமெரிக்காவைப் புரட்டிப் போட்ட இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சமயம் அது. எங்கு நோக்கினும் அது பற்றிய செய்திகளே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அச்செய்திகளில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் மிகைத்திருப்பதை உணர்கின்றான் புரூக்ஸ். ஓர் இனம்புரியாத சோகம் அவனது மனதில் படர்கின்றது. தன் மனதில் பட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் போது அவனது சக இராணுவத்தினரிடமிருந்தே எதிர்ப்புகளும் வசவுகளும் வருவதைக் கண்டு அதிர்வுறுகின்றான். ஒரு கட்டத்தில் மனதில்பட்ட நடுநிலை கருத்துகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றான் புரூக்ஸ்.
கூடுதல் பணி நியமனத்திற்காக மேற்கொண்டு பயிற்சிகள் வழங்கும்போதுதான் அங்கு நாட்டுப்பற்றை விட முஸ்லிம் எதிர்ப்புணர்வே பயிற்சியாகவும் செயல்முறை விளக்கமாகவும் அளிக்கப்படுவதைக் கண்டு மனதில் சில நெருடல்கள் ஏற்படுவதை உணர்கின்றான்.
பணி ஆணைக்காக அரசு அலுவகத்தில் ”அவர்களுக்கு தேவையானதை அவசரமாக நாம் செய்துகொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் மிக நிதானமாகத்தான் செய்து கொடுப்பார்கள்” என்று அமெரிக்க அரசுத்துறை நிர்வாகத்தின் வேகத்தை விளக்கும்போது இந்தியாவை ஞாபகப்படுத்துகின்றார்.
ஒருவழியாக கூடுதல் பயிற்சியெல்லாம் முடிந்தபின் அவர் செல்ல வேண்டியது குவாண்டனாமோ சிறைச்சாலைக்கு என்ற பணிநியமன ஆணை கிடைக்கின்றது.
அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை பற்றி நாம் செய்தித்தாள்களில் வாசிக்கும்போது அது அமெரிக்காவின் எங்கோ மூலையில் அமைந்துள்ள ஒரு பயங்கர சித்ரவதைக் கூடம் என்றே தோன்றியிருக்கும். ஆனால் குவாண்டனாமோ சிறை அமெரிக்காவிற்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய கியூபாவின் தீவில் உள்ளது என்ற ஆச்சரியமிக்க உண்மை என்பது இப்புத்தகத்தின் வழியே அறிய முடிகின்றது.
கியூபா என்பது பச்சைப் பசேல் என்ற அழகிய தீவு. அதில் குவாண்டனாமோ என்பது மட்டும் சுட்டெரிக்கும் மணலும் மணல் சார்ந்த பாலைவனத் தீவு ஆகும். அந்தத் தீவில் பூனை அளவில் உள்ள பெருச்சாளி, உடும்பு, பெரிய பல்லி, தட்டு அகலத்தில் சிலந்தி என்று ஆபத்தான விலங்குகளும், பூச்சிகளும் நிறைந்திருந்தன. இவற்றின் நடுவில்தான் அந்தச் சிறைக்கொட்டடி அமைந்திருக்கின்றது.
குவாண்டனாமோவிற்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது, சிறைக்கொட்டடியில் அடைத்திருக்கும் கைதிகளில் பெரும்பாலும் அப்பாவிகள் என்று. அதிலும் கைதிகள் அனைவரும் முஸ்லிம்கள்!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர இடிப்பிற்குக் காரணமானவர்களை விசாரிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டதுதான் இந்தச் சிறைக்கொட்டடி. இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால் சில நாடுகளிலிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட அப்பாவி கைதிகளும் அடக்கம்.
புரூக்ஸிற்கு கொடுக்கப்பட்ட பணி என்பது சிறைக் கைதிகளைக் கவனிப்பது, விசாரணைக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்வது, கைதிகளிடையே பிரச்னை ஏற்பட்டால் அவர்களைக் கடுமையாகத் தாக்குவது, மிக மோசமாகத் திட்டுவது போன்றவைதான்.
இராணுவ வீரர்களின் உணவுக்கூடங்களில் எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டியில் இரத்த வேட்கையைத் தூண்டும் பாடல்களும், அமெரிக்க பலத்தைப் பறைசாற்றும் படங்களும், இரத்தம் சொட்டுவது மாதிரி எழுத்துகளின் எழுத்துருக்களும் அமைந்திருக்கும். ‘பழிவாங்கு’ என்ற சொற்களே ஒளிப்படமாக ஓடிக்கொண்டிருக்கும். இராணுவ வீரர்களின் பழிவாங்கும் எண்ணங்களை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் இவை.
அங்குள்ள கைதிகளை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, தொடர்ந்து தூங்க விடாமல் இடையிடையே விழிக்க வைத்து கொடுமைப்படுத்துவது, கைதிகள் எதிர்த்தால் அவர்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடிப்பது, அவர்களின் தாடிகளைச் சிரைப்பது எனச் சித்திரவதைகளில் பல்வேறு முறைகளைக் கையாண்டனர்.
கைதிகளிடம் அத்துமீறி நடப்பதைக் கண்டு புரூக்ஸின் மனம் துடிக்கின்றது. அதன் விளைவாக புரூக்ஸ் கைதிகளுடன் மிகவும் நல்ல முறையில் நடந்துகொள்கிறான், அவர்கள் சொல்வதைக் கேட்கின்றான். இதற்கு கைமாறாக கைதிகளிடமிருந்து கிடைத்தது அல்குர்ஆன்!
அதனைப் படிக்கின்றான். மனதில் சலசலப்புகள் ஏற்படுவதை உணர்கின்றான். ”தீய செயல்களின் ஒவ்வொரு கதவாக அடைத்துக் கொண்டு வரும்போது இறை உதவியின் கதவுகள் ஒவ்வென்றாய் திறக்கின்றன” என்ற அனுபவத்தைப் பகிர்கின்றான். (அதனைப் படிக்கும்போது நம் கண்களிலும் கண்ணீர் கசியும்).
இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகின்றது. அதனைத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தான், சிறையின் சூழல் அதற்கு தகுந்தாற்போலில்லை என்ற காரணத்தினால்.
ஒரு கட்டத்தில் இனியும் காலம் தாழ்த்தாது சிறையிலேயே இஸ்லாமை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து, அவன் மிகவும் மதிக்கும் கைதியான அஹ்மத் அர்ரஷாதியின் முன்னிலையில் கலிமாவை மொழிந்து இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறான். சிறையிலேயே அதனை நடைமுறையும் படுத்துகின்றான் புரூக்ஸ்.
இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை இவ்வாறு வர்ணிக்கின்றான் புரூக்ஸ்: ”இதுவரை நான் காணாமற் போயிருந்தேன். ஆனால் இப்பொழுது நான் எங்கிருக்கின்றேன் என்று எனக்குத் தெரிகிறது. நான் பயணிக்க எனக்கென்று ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கின்றது”.
ஆனால் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதன் மூலமும், அவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவும் சக இராணுவ வீரர்களிடமிருந்து அவனுக்குக் கிடைத்த பெயர் ”துரோகி”!
பின்னர் குவாண்டனாமோவிலிருந்து பணி முடிந்து அமெரிக்காவிற்குத் திரும்ப அழைக்கப்படுகின்றான். அமெரிக்கா வந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் குவாண்டனாமோவில் நடக்கும் அநீதங்களால் மனம் வெதும்பி அங்கு நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு அறிவிக்க முடிவு செய்கிறான் புரூக்ஸ்.
அதனால் ஏற்பட்ட விளைவுகளை நூலின் இறுதி அத்தியாயத்தில் விளக்கியுள்ளான் புரூக்ஸ்.
இந்நூலை அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் காயல் பன்னூலாசிரியர் சகோதரர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள். ஒரே வாசிப்பில் முடிக்க வைக்கும் நடை. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Tuesday, 14 November 2023

புனிதத் தலமான அல் அக்ஸா மஸ்ஜிதின் முக்கியத்துவம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் சூரா பனீ இஸ்ராயீல் என்ற அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا‌ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் பரக்கத் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

முதல் இறையில்லமான கஅபத்துல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக பூமியில் கட்டப்பட்ட இரண்டாவது இறையில்லம்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்ற பைத்துல் முகத்தஸ்.

எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மூன்று மஸ்ஜித்களுக்கு நன்மையை நாடிப் பயணம் செய்யலாம். ஒன்று – மஸ்ஜிதுல் ஹராம். இரண்டாவது – மஸ்ஜிதுந் நபவி. மூன்றாவது – மஸ்ஜிதுல் அக்ஸா.”

மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுபவருக்கு ஒரு லட்சம் மடங்கு நன்மைகள் கிடைக்கும். மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில் தொழுபவருக்கு ஆயிரம் மடங்கு நன்மைகள் கிடைக்கும். ஜெரூசலமிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுபவருக்கு 500 மடங்கு நன்மைகள் கிடைக்கும்.”

முஸ்லிம்களின் முதல் கிப்லாவாக பைத்துல் முகத்தஸ் திகழ்ந்தது!

ஆம்! முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு 16 அல்லது 17 மாதங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே தொழுது வந்தார்கள்.

அண்ணலார் அவர்கள் ஒரு முறை மதீனாவிலுள்ள ஒரு மஸ்ஜிதில் அஸ்ர் தொழுது கொண்டிருந்த பொழுது அல்லாஹ்வின் கட்டளைப் படி தனது முகத்தை கஅபத்துல்லாஹ்வை நோக்கித் திருப்பினார்கள்.

இதனை இறைமறையில் அல் பகரா அத்தியாயத்தில் 144ஆவது வசனத்தில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:

قَدْ نَرٰى تَقَلُّبَ وَجْهِكَ فِى السَّمَآءِ‌‌ۚ فَلَـنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضٰٮهَا‌

فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَكُمْ شَطْرَهٗ ‌ؕ

(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.

இதனால் அந்த மஸ்ஜிதுக்கு “மஸ்ஜிதுல் கிப்லத்தைன்” என்று பெயர் வந்தது. அதாவது, இரண்டு கிப்லாக்களைச் சந்தித்த மஸ்ஜித் என்று பொருள்.

இவ்வாறுதான் மஸ்ஜிதுல் அக்ஸா முஸ்லிம்களுக்குப் புனிதத் தலமானது.

மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு மாநபிகளார் நடத்திய ஒரு பயணத்தின் மூலம் அடுத்த கண்ணியம் கிடைத்தது. அதுதான் “இஸ்ரா“ பயணம்!

அதாவது, மதீனாவிலிருந்து பைத்துல் முகத்தஸுக்குச் சென்ற பயணத்திற்குத்தான் இஸ்ரா பயணம் என்று பெயர்.

அதன் பிறகு நடந்ததுதான் மிஃராஜ் பயணம்.

ஆம்! வல்ல இறைவன் தனது வலிமையைப் பறை சாற்றும் முகமாக தன் நேசத்திற்குரிய இறைத்தூதர் அவர்களை ஒரே இரவில் விண்ணுலகுக்கு அழைத்து, பின்னர் தொழுகையை அன்பளிப்பாக அளித்து அந்த இரவிலேயே திருப்பி அனுப்பிய அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய பயணம்தான் மிஃராஜ் பயணம்.

வானவர்களின் தலைவர் ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை ‘புராக்’ என்ற வாகனத்தில் முதலில் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்றார்.

இதனைத்தான் நான் முதலில் குறிப்பிட்ட பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

அடுத்து அல்லாஹ் “அதன் சுற்றெல்லைகளை பரக்கத் செய்திருக்கின்றோம் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.

ஆம்! அல்லாஹ்வின் வாக்கு பொய்யாகாது. அல்லாஹ் அதனை பரக்கத் ஆக்கியே வைத்திருக்கின்றான்.

பலரும் எண்ணுவது போன்று பைத்துல் முகத்தஸ் என்பது ஒரே ஒரு மஸ்ஜிதன்று. அது சுமார் 27 ஏக்கர் சுற்றளவு கொண்ட ஒரு புனிதப் பகுதி. இதனுள் ஐந்து மஸ்ஜித்கள் இருக்கின்றன.

பைத்துல் முகத்தஸ் என்றதும் பரவலாக நாம் பார்க்கின்ற ஒரு படமுள்ள மஸ்ஜிதுக்குப் பெயர் “குப்பத் அல் ஸிஹ்ரா’‘. இதனை ஆங்கிலத்தில் Dome of the Rock என்றழைப்பார்கள்.

நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரிலுள்ள ஒரு மஸ்ஜிதும் இங்கே உள்ளது. விண்ணுலகப் பயணம் மேற்கொள்வதற்கு முன் முத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இன்னொரு கண்ணியத்தையும் அளித்தான். அதுதான் அல் அக்ஸாவில் அவர்கள் அத்தனை நபிமார்களுக்கும் தொழ வைத்தது!

ஆம்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கே 1,24,000 நபிமார்களுக்கும் தலைமையேற்று தொழுகையை நடத்தினார்கள்.

பைத்துல் முகத்தஸ் வளாகத்தில் தூய நபிகளார் தொழ வைத்த இடம் என்று சொல்லப்படுகிற மிஹ்ராப் இன்றும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஹஸ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அண்ணலாரை ஏற்றிச் சென்ற புராக் வாகனத்கைக் கட்டிப் போட்டார்கள் என்று சொல்லப்படுகின்ற இடத்தையும் அங்கே செல்பவர்கள் காணலாம்.

அல் அக்ஸா ஸ்ஜித் பழைய ஜெரூசலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது காலப்போக்கில் பலமுறை அழிக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அல் அக்ஸா மஸ்ஜித் கண்டிப்பாக முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும். இது ஏந்தல் நபிகளாரின் ஏற்றமிகு முன்றிவிப்பாகும். இதனை புஃகாரீ ஹதீஸ் கிரந்தத்தில் அவ்ஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழியின் மூலம் நாம் அறியலாம். அவர் கூறுகிறார்:

தபூக் போரின் போது நபிவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், ‘மறுமை ஏற்படுவதற்கு முன்னர் ஆறு (முக்கிய) நிகழ்வுகள் ஏற்படும். அவற்றை எண்ணிக் கொள் என்று கூறிவிட்டு, எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி எனக் கூறினார்கள்.”

ஏந்தல் நபிகளாரின் ஏற்றமிகு இந்த முன்னறிவிப்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்தேறியது.

ஆம்! இரண்டாம் கலீஃபா  உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி 16ம் ஆண்டு, அதாவது கி.பி. 636ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றினர்.

இந்த முன்னறிவிப்பு தூய நபிகளாரின் தூதுத்துவத்தின் உண்மைத் தன்மையையும், பைதுல் முகத்தஸ் முஸ்லிம்களது கையில் இருக்க வேண்டிய மஸ்ஜித் என்பதையும் உறுதி செய்கின்றது.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்திற்குப் பிறகு 11ஆம் நூற்றாண்டின் இறுதி வரை அது முஸ்லிம்களின் வசமே இருந்தது. அது பிறகு எதிரிகளின் கைகளில் சிக்கியது. சிலுவைப் போரின்பொழுது சிலுவைக்காரர்கள் அதனைக் கைப்பற்றி சுமார் 88 ஆண்டுகள் அவர்கள் வசம் வைத்திருந்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் அல் அக்ஸாவை மீட்டெடுக்க மாபெரும் வீரர் ஒருவர் உருவானார். அவர்தான் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி!

சிலுவைக்காரர்களின் கைகளில் கட்டுண்டு கிடந்த நம்முடைய புனித பூமிகளை மீட்டெடுப்பதையே ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். அதே சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார்.

"மஸ்ஜிதுல் அக்ஸா சிலுவைக்காரர்களின் பிடியில் இருக்க நான் எப்படி சிரிக்க முடியும்? நான் எப்படி உணவையும் பானங்களையும் சுவைக்க முடியும்?" என்று அவர் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

இறுதியில் அவர் தனது இலட்சியத்தை அடைந்தார்!

ஆம்! கிபி 1187ல் நடந்த ஹத்தீன் போரில் அவர் சிலுவைக்காரர்களைத் தோற்கடித்து மாபெரும் வெற்றி கண்டு குத்ஸை மீட்டெடுத்தார்.

இதனால் 88 ஆண்டுகளாக இஸ்லாமிய எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் வசமானது.

88 ஆண்டுகள் சிலுவைக்காரர்களிடமிருந்த புனித பைத்துல் முகத்தஸை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து உலக முஸ்லிம்களின் உள்ளங்கவர்ந்த உலக நாயகன் ஆனார் ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி.

அதன் பிறகு உதுமானிய கிலாஃபத் ஆட்சி முழுவதும் அது முஸ்லிம்களின் கைகளிலேயே இருந்தது.

1924ஆம் ஆண்டு கடைசி கலீஃபா அப்துல் ஹமீது அவர்கள் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றப்படும் வரை அது முஸ்லிம்களின் வசமே இருந்தது. கிலாஃபத் ஆட்சி உடைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு ஒரு தலைமை இல்லாமல் ஆன பிறகே அதனை எதிரிகள் கைப்பற்றினர்.

இன்று யூதர்களின் கைகளில் சிக்கிக் கிடக்கும் பைத்துல் முகத்தஸையும் ஃபலஸ்தீனையும் மீட்டெடுப்பதற்கு ஸலாஹுத்தீன் அய்யூபிகள் தேவைப்படுகிறார்கள். அல் அக்ஸா மஸ்ஜிதை இஸ்ரேலியர்களிடமிருந்து மீட்டெடுப்பது ஃபலஸ்தீன மக்களுக்கு மட்டும் கடமை இல்லை. அது ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுடைய கடமை!

உலக முடிவின் போது நிச்சயமாக மஸ்ஜிதுல் அக்ஸாவும், ஃபலஸ்தீன் புனித பூமியும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தே தீரும். இது குறித்தும் நபி صلى الله عليه وسلم  அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

பலஸ்தீன பூமியில் வைத்துத்தான் ஈஸா நபியால் தஜ்ஜால் அழிக்கப்படுவான். தஜ்ஜாலுடன் சேர்ந்து சத்தியத்திற்கு எதிராகப் போராடிய யூதர்கள் முஸ்லிம் போராளிகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்  இவ்வாறு கூறினார்கள்:

முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் செய்வார்கள். யூதர்கள் கற்களுக்கும் மரங்களுக்கும் பின்னால் மறைந்திருப்பார்கள். அந்தக் கற்களும் மரங்களும் முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். வந்து அவனைக் கொன்று விடு எனக் கூறும் நாள் வரும் வரை உலகம் அழியாது என நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.”

முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தில் இடம் பெற்றுள்ள இந்த நபிமொழியை அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்.

அந்த மகத்தான நாள் வரும் வரை யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலும் முறுகலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முஸ்லிம்கள் சந்திக்கும் இழப்புகள் ஷஹாதத் எனும் வீர மரணமாகவே அமையும்.

அந்த நல்ல நாள் வரும் வரை இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் சில நேரங்களில் முஸ்லிம்களும் சில நேரங்களில் எதிரிகளும் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்கலாம்.

ஆனால் இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!